அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
யானைகளுக்கும் திமிங்கலங்களுக்கும் ஏன் புற்றுநோய் வருவதில்லை? மருத்துவத்தின் மிகப் பெரிய புதிர்களில் ஒன்றிற்கு விடை காண விஞ்ஞானிகள் முயல்கின்றனர். இது பற்றிய புரிதல் மனித புற்றுநோய் சிகிச்சையில் பெரிதும் உதவும். சில உயிரினங்கள் புற்றுநோய் வராமல் வாழும் போது வேறு சிலவற்றிற்கு புற்றுநோய்க் கட்டிகள் வந்து குறைவான ஆயுளுடன் வாழ்கின்றன.
100 முதல் 200 ஆண்டுகள் வரை வாழும் இயல்புடைய அம்பு தலை திமிங்கலங்கள் (Bowhead whales) உட்பட திமிங்கலங்கள் மிகக் குறைந்த அளவிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் நாய், பூனைகளில் இதுவே அவற்றின் அகால மரணத்திற்கு முதன்மைக் காரணமாக உள்ளது. நரிகள், சிறுத்தைகள் புற்றுநோயின்றி வாழும்போது ஆடுகளும், மான்களும் இதனால் உயிரிழக்கின்றன. எலி, சுண்டெலிகளுக்கு இந்நோய் வருகிறது.
மனித உயிர் பறிக்கும் புற்றுநோய்
ஆண்டிற்கு 10 மில்லியன் பேரின் உயிர் பறிக்கும் புற்றுநோய் மனித உடல்நலத்திற்கு இன்று பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பெரிய உடலமைப்புடன் வாழும் திமிங்கலம், யானை போன்றவை எண்ணற்ற உடற்செல்களைப் பெற்றுள்ளன. இந்த செல்கள் ஒவ்வொன்றும் தூண்டப்பட்டு புற்றுநோய்க் கட்டிகளாக மாறலாம். அவ்வாறு நிகழ்ந்தால் இவை உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ வேண்டியிருக்கும். ஆனால் இவற்றிற்கு புற்றுநோய் வருவதில்லை.
இது பற்றிய கருத்தை முதல்முதலாக இங்கிலாந்து நாட்டின் புள்ளியியல் நிபுணர் ரிச்சர்டு பீட்டோ (Richard Peto) வெளியிட்டார். இதனால் இக்கோட்பாடு பீட்டோவின் முரண்பாடு (Peto’s paradox) என்று அழைக்கப்படுகிறது. இது பற்றி கேம்ப்ரிட்ஜ் வெல்கம் சாங்கர் (Wellcome Sanger) ஆய்வுக்கழக விஞ்ஞானிகள் லண்டன் விலங்கியல் சங்கம் (Zoological Society London ZSL) உள்ளிட்ட பல ஆய்வுக்கழக நிபுணர்களுடன் இணைந்து ஆராய்ந்தனர்.
புற்றுநோய் செல் ஆய்வு
உடல் செல்லில் உள்ள டி.என்.ஏ தொடர்ச்சியாக திடீர் மாற்றங்களுக்கு உட்பட்டு கட்டுக்கடங்காத முறையில் பிளவுபட்டு பெருக்கமடைவதே புற்றுநோய் எனப்படுகிறது. உடலின் எதிர்ப்பாற்றல் இதைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைகிறது என்று ஆய்வுக்குழுவின் தலைவர் அலெக்ஸ் காகன் (Alex Cagan) கூறுகிறார். அதிக செல்களைக் கொண்டுள்ள விலங்குகள் புற்றுநோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
நிறமிகளைப் பயன்படுத்தி நுண்ணோக்கியின் மூலம் ஆராய்ந்தபோது புற்றுநோய் செல்கள் இரண்டு பரிமான அளவில் (2d) நீல நிற உட்கருவுடனும், சைட்டோப்ளாசம் சிவப்பு நிறத்திலும், டி என் ஏ லென்ஸ்மீட்டரைப் (foci) பயன்படுத்தி ஆராய்ந்தபோது பச்சை நிறத்திலும் இருப்பது தெரிய வந்தது.
ஜாக்பாட்
செல்களை லாட்டரி சீட்டு போலக் கருதினால் எந்த அளவிற்கு நம்மிடம் அதிக சீட்டுகள் இருக்கின்றனவோ அந்த அளவு நமக்கு ஜாக்பாட் அடிப்பதற்கும் வாய்ப்பு அதிகம். இங்கு ஜாக்பாட் என்பது புற்றுநோய் என்ற பரிசே என்று விலங்கியல் சங்க தொற்றுநோயியலாளர் சைமன் ச்பிரோ (Simon Spiro) கூறுகிறார். இதன்படி பார்த்தால் சில வகை திமிங்கலங்கள் ஒரு வயதிற்கு முன்பே இறந்துவிட வேண்டும்.
ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. மனிதர்கள் டிரில்லியன் செல்களை மட்டுமே பெற்றிருக்கின்றனர். ஆனால் திமிங்கலங்களில் இது போல நான்கு மடங்கு செல்கள் உள்ளன. இதன்படி பார்த்தால் இந்த விலங்குகளுக்கு மனிதர்களை விட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகம்.
யானைகள் முதல் எலிகள் வரை
யானைகள் சராசரியாக 70 ஆண்டுகள் வாழ்கின்றன. ஆனால் ஏராளமான திடீர் மாற்றங்களுக்கு ஆளாக்கப்பட வாய்ப்புள்ள அவை புற்றுநோயால் பாதிக்கப்படுவதில்லை.
இப்புதிருக்கு விடை காண விஞ்ஞானிகள் லண்டன் விலங்குக் காட்சி சாலையில் இயற்கையாக உயிரிழந்த சிங்கங்கள், புலிகள், ஒட்டகச்சிவிங்கிகள், வரி வால் லிமர் வகைக் குரங்குகள் (ring tailed lemurs), மரநாய்கள் (ferrets) மற்றும் வேறு ஒரு மையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சியை உண்ணும் அளவு வலுவுள்ள பல் அமைப்பை உடைய 30 ஆண்டுகள் வரை வாழும் மோல் எலிகள் (naked mole rats) போன்ற விலங்குகளை ஆராய்ந்தனர். ஆனால் இவை நோயால் பாதிக்கப்படுவதில்லை.
திடீர் மாற்றங்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு விலங்கின் உடலில் இருந்தும் விஞ்ஞானிகள் குடல் க்ரிப்ட் (intestinal crypt) செல்களைப் பிரித்து அவற்றின் மரபணு வரிசையை ஆராய்ந்தனர். இவை குருத்தணு செல்களால் நிரந்தரமாக மாற்றமடைபவை. இவை மரபணு வரிசையை ஒப்பிட உதவுகின்றன. இதைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் நிகழும் திடீர்மாற்றங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.
இந்த எண்ணிக்கை விலங்கினத்திற்கு ஏற்ப மாறியது. நீண்டநாள் வாழும் விலங்குகளில் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது. குறைந்த நாள் வாழும் உயிரினங்களில் திடீர் மாற்றங்கள் வேகமாக நடைபெறுகின்றன. மனிதர்களில் ஆண்டிற்கு 47 திடீர் மாற்றங்கள் நிகழ்கின்றன. எலிகளில் இது 800. மனிதனின் சராசரி ஆயுட்காலம் 83.6 ஆண்டுகள். எலியின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள்.
திடீர் மாற்றங்களின் வேகம்
ஆனால் இவ்விலங்குகளின் ஆயுட்காலம் முடிந்தபின் 3200 திடீர் மாற்றங்கள் நடைபெற்றன. இது எல்லா விலங்குகளிலும் ஒரே அளவாக இருந்தது விஞ்ஞானிகளை வியப்படையச் செய்தது. இதற்கு முதுமையடைதல் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. டி.என்.ஏ. மரபணுவில் நடைபெறும் திடீர் மாற்றங்களை நீண்ட நாள் வாழும் விலங்குகள் எவ்வாறு மெதுவாக நடத்துகின்றன என்பது பற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்று காகன் கூறுகிறார்.
வேலைக்கார எறும்புகளும் ராணி எறும்புகளும்
ஆயுட்காலத்திற்கும் திடீர் மாற்றங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி குறைந்த மற்றும் நடுத்தர வாழ்நாள் உள்ள விலங்குகளில் குறிப்பாக பாலூட்டிகளில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டுள்ளது. இவை தாவரங்கள், பூச்சிகள் மற்றும் ஊர்வனவற்றில் நடத்தப்படவுள்ளது. சமூக வாழ்க்கை நடத்தும் எறும்புகளில் வேலைக்கார எறும்புகள் மற்றும் ராணி எறும்புகள் ஒரே மாதிரியான மரபணு வரிசையைப் பெற்றுள்ளன.
ஆனால் ராணி எறும்புகள் 30 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. வேலைக்கார எறும்புகள் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. வேலைக்கார எறும்புகளை விட ராணி எறும்புகள் டி.என்.ஏ. பழுதுகளை திறம்பட செயல்படுத்துவது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
புதிய மாற்றங்கள் ஏற்படுமா?
புற்றுநோய் ஆய்வுகளில் குறைந்த ஆண்டுகள் மட்டுமே வாழும் எலிகள் மற்றும் அவற்றின் மாதிரிகளே பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் அதன் முடிவுகள் சிறந்தவையாக இருக்காது. இனி வருங்காலத்தில் நீண்ட ஆயுட்காலம் உடைய விலங்குகளைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் எதிர்ப்பாற்றல் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் மாற்றங்கள் நடைபெறும் வேகம், முதுமை மற்றும் கட்டிகள் இவற்றிற்கு இடையில் உள்ள தொடர்பு புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. முதுமையால் உருவாகும் மோசமான பாதிப்புகளைக் குறைப்பதற்கும் இந்த ஆய்வுகள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
** ** **
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகம் முழுவதும் காணப்படும் நீர்நாய்கள் இன்று இன அழிவின் விளிம்பில் உள்ளன. உலகில் மொத்தம் உள்ள 13 இனங்களில் இந்தியாவில் யுரேசியன் நீர்நாய் (Eurasian otter-lutra lutra), மென்தோல் நீர்நாய் (smooth coated otter-lutra perspicillata) மற்றும் சிறிய நகமுள்ள நீர்நாய் (small clawed otter-aonyx cinereus) என்ற மூன்று இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மென்தோல் மற்றும் சிறிய நகமுள்ள இனங்கள் எதிர்காலத்தில் அழியும் ஆபத்தில் உள்ளன.
பல நூற்றாண்டுகளாக உரோமத்திற்காக இவை வேட்டையாடப்படுகின்றன. இந்தியாவில் கில்ஹாரா, பதியா போன்ற சில நாடோடி இன மக்கள் இவற்றை இறைச்சிக்காக வேட்டையாடுகின்றனர். கள்ளச்சந்தைகளில் நீர்நாய்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. குறிப்பாக தெற்காசியாவில் இவை பெருமளவில் திருட்டுத்தனமாக கடத்தப்படுகின்றன. இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து இவை தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நிலத்திலும் நீரிலும் வாழும் நீர்நாய்கள்
உலகில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மடகாஸ்கர் போன்ற இடங்கள் தவிர மற்ற பகுதிகளில் இவை காணப்படுகின்றன. பாதி நேரம் கரையிலும், பாதி நேரம் நீரிலும் வாழ்வதால் இவை பாதிநீர்வாழ் பாலூட்டிகள் (semi aquatic mammals) என்று அழைக்கப்படுகின்றன. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை இவற்றின் இனப்பெருக்க காலம். கரைப்பகுதியில் இணைசேர்கின்றன. உலகில் உள்ள 13 இனங்களில் இரண்டு இனங்கள் மட்டும் கடலில் வாழ்கின்றன.
சுற்றுப்புறச் சூழலுடன் இவை ஒத்து வாழ்கின்றன. சிறிய கால்கள், வலிமையான கழுத்து போன்றவை இவற்றின் சிறப்புப் பண்புகள். நீரில் திசையை மாற்றிப் பயணிக்க வால்கள் உதவுகின்றன.
இவற்றின் பொதுவான சராசரி உடல் எடை 3 கிலோகிராம். மிகப் பெரிய நீர்நாய்களின் சராசரி எடை 26 கிலோகிராம். ஆனால், கடல் நீர்நாய்களின் சராசரி எடை 45 கிலோகிராம்.
நன்னீரில் வாழும் இனங்கள் வட மற்றும் தென்னமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் காணப்படுகின்றன. நண்டு, தவளை, மீன் போன்றவை இவற்றின் முக்கிய உணவு. இத்தகைய உணவுகள் சுலபமாகக் கிடைக்கும் இடங்களில் நீர்நாய்கள் தங்கள் வாழிடத்தை அமைத்துக் கொள்கின்றன. சுலபமாகக் கிடைப்பதை நன்னீர் நாய்கள் உணவாக உட்கொள்கின்றன. இரை பிடித்தபிறகு நீர் அல்லது நிலத்திற்கு எடுத்துச் சென்று உண்கின்றன. நீர்நிலைகளில் ஆழம் குறைவாக உள்ள பகுதிகளில் இவை சுலபமாக இரை தேடுகின்றன.
பொதுவாக கூச்ச சுபாவமுடைய இவை மிகக் குறைந்த தூரமுடைய, மிக விரைவாக சென்று சேரக்கூடிய அருகில் இருக்கும் பகுதிகளையே பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கின்றன. பாறை இடுக்குகள், நிலத்தில் காணப்படும் குழிகள், தாவரங்கள் அடர்த்தியாக இருக்கும் இடங்களில் ஓய்வெடுக்கின்றன. குட்டிகள் மற்ற விலங்குகளுக்கு சுலபமாக இரையாகின்றன. வளர்ந்த நீர்நாய்கள் ஊண் உண்ணிகளுக்கு இரையாகின்றன. வெப்பம் அதிகமுள்ள பிரதேசங்களில் முதலை போன்றவை இவற்றின் முக்கிய எதிரிகள்.
மனிதக் குறுக்கீடுகள்
என்றாலும் வாகனங்கள் இடிப்பது, மீன் வலைகளில் சிக்கிக் கொள்வது, உரோமத்திற்காகக் கொல்லப்படுவது போன்ற மனிதச் செயல்பாடுகளாலேயே இவை அதிகமாக உயிரிழக்கின்றன. கடற்சூழலுடன் பொருந்தி வாழும் இயல்புடைய கடல் நீர்நாய் (Sea otter) மற்றும் மெரைன் நீர்நாய் (marine otter) ஆகிய இனங்கள் கடலில் வாழ்கின்றன. வட அமெரிக்காவின் பசுபிக் கடற்பகுதியை ஒட்டி காணப்படும் கடல் நீர்நாய்கள் அளவில் பெரியவை. இவற்றை விட அளவில் சிறிய மெரைன் நீர்நாய்கள் பெரு, சிலி பகுதிகளில் காணப்படுகின்றன.
இரை தேட இந்த இரு இனங்களும் முழுமையாக கடலையே சார்ந்துள்ளன. கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் இடங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. கடல் நீர்நாய்கள் கடற்சூழலுடன் முழுமையாக இணைந்து வாழுபவை. இதற்கேற்றவாறு இவற்றின் உடல் அமைந்துள்ளது. கனடா, அமெரிக்காவில் வாழும் வட அமெரிக்க நதி நீர்நாய்கள் (North American river otter) எட்டு நிமிடங்களுக்கு மேல் நீருக்கடியில் மூச்சு விடாமல் இருக்க முடியும். உப்பு நீரை அருந்தி இவை கடலில் அதிக நேரம் செலவழிக்கின்றன.
இவை தனியாகவும் கூட்டமாகவும் காணப்படுகின்றன. அலாஸ்காவின் கடற்கரைப் பகுதியில் 2000 நீர்நாய்கள் அடங்கிய கூட்டங்கள் வாழ்கின்றன. இவற்றின் முக்கிய உணவு நண்டுகள் மற்றும் ஜெல் மீன்கள். பிடித்த இரையை கடலில் வைத்தே உண்கின்றன. கடலில் மல்லாந்து இரையை உண்ணும் இயல்புடையவை. ஜெல் மீன்களின் எண்ணிக்கை குறைய இவையும் ஒரு காரணம். பெண் கடல் நீர்நாய்கள் ஒரு பிரசவத்தில் ஒரு குட்டியை ஈணுகின்றன. குட்டிகள் 6 முதல் 8 மாத வயதை அடையும்வரை தாயைச் சார்ந்தே வாழ்கின்றன.
மெரைன் நீர்நாய்கள்
சுறாக்கள், கொலையாளித் திமிங்கலங்கள் இவற்றை வேட்டையாடுகின்றன. மெரைன் நீர்நாய்கள் நந்நீர்ச் சூழலுடன் வாழும் திறன் பெற்றவை என்றாலும் கடற்சூழலுடன் பொருந்தி வாழ்கின்றன. இவற்றின் சராசரி எடை 3 முதல் 6 கிலோ மட்டுமே. பெரு முதல் சிலி வரையுள்ள கடற்கரைப் பகுதிகள் மற்றும் அர்ஜெண்டினாவின் டியரா டெல் குவேகுவோ போன்ற பகுதிகளில் இவை காணப்படுகின்றன. கடலில் 100 முதல் 150 மீட்டர் வரையுள்ள ஆழமுள்ள பகுதிகளில் இவற்றைக் காணலாம்.
அழியும் உயிரினங்களின் பட்டியலில் நீர்நாய்கள்
நீர்நாய்களின் பொதுவான ஆயுட்காலம் 4 முதல் 10 ஆண்டுகள். பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) புள்ளிவிவரங்கள்படி பாதிக்கும் மேற்பட்ட இனங்கள் இன அழிவைச் சந்திக்கின்றன. மிகப்பெரிய நீர்நாய், மெரைன் நீர்நாய், தெற்கு நதி நீர்நாய் (Southern river otter), சிறிய நகமுள்ள நீர்நாய் போன்ற இனங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன.
அழிந்து வரும் இந்த அரிய உயிரினங்களை இயற்கையுடன் இணைந்து வாழ விரும்பும் மனிதனால் மட்டுமே காப்பாற்ற முடியும்.
மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/features/importance-of-world-otter-day-and-why-is-it-celebrated-1.8602824
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தீவிற்குள் பாம்புகள் நுழைந்ததால் அழிந்துபோன ஓர் அபூர்வப் பறவையை மீட்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா கேன்சஸில் (Kansas) 3,000 விலங்குகளைக் கொண்ட புகழ் பெற்ற செட்விக் கவுண்டி விலங்குகாட்சி சாலையில் (Sedgwick County Zoo) கப்பல் சரக்குப் பெட்டகத்தில் பார்வைக்கு வித்தியாசமான வாகனத்தைப் போல தோற்றமளிக்கும் பேழைகள் காட்சி தருகின்றன. இப்பேழைகளே விஞ்ஞானிகளுக்கு இந்தப் பறவையினத்தைக் காக்கும் முயற்சியில் உதவும் முக்கிய பொருட்கள்.
பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாம் (Guam) தீவில் தற்செயலாக இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நுழைந்த பழுப்பு நிற மரப் பாம்புகள் (Brown tree snakes) காலப்போக்கில் அங்கு வாழ்ந்து வந்த எண்ணற்ற பறவையினங்கள், பாலூட்டிகள் மற்றும் பல்லியினங்களை முற்றிலுமாக அழித்தன. அழிந்த பறவையினங்களில் குவாம் மீன்கொத்தி (Guam King fisher), குவாம் ரயில் (Guam rail) மற்றும் குவாம் ஈ பிடிப்பான் (Guam fly catcher) ஆகியவை அடங்கும்.
நான்கிலிருந்து ஒன்பது
பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் குவாம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து சிஹெக் (Sihek) என்றும் அழைக்கப்படும் வண்ணமயமான குவாம் மீன்கொத்தியினத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குஞ்சுகளை ஆரோக்கியமாகப் பாதுகாக்க பேழைகள் பயன்படுகின்றன. அமெரிக்காவின் மற்ற விலங்குகாட்சி சாலைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட முட்டைகள் பொரிந்து உருவான நான்கு பறவைகள் இங்கு இப்போது பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் எண்ணிக்கை விரைவில் ஒன்பதாக உயரும் என்று இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள செட்க்விக் கவுண்டி விலங்குகாட்சிசாலை மற்றும் ஸ்மித்சோனியன் உயிரியல் கழக ஆய்வாளர்களுடன் இணைந்து பணியாற்றும் விப்ஸ்னேட் (Whidsnade) விலங்குகாட்சி சாலையின் ஆய்வாளர் க்ளேர் மக்ஸ்வீனி (Claire McSweeney) கூறுகிறார்.
வரும் ஒரு சில ஆண்டுகளுக்கு இத்தகைய செயல்பாடுகள் தொடரும். பறவைகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகமானவுடன் அவை காட்டில் அவற்றின் இயற்கையான வாழிடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். 1970, 1980கள் வரை பழுப்பு நிறப் பாம்புகள் தீவின் உயிரினங்களை அழிக்கும் வேகம் மெதுவாகவே இருந்தது. பிறகே இந்த ஆக்ரமிப்பு உயிரினங்கள் இங்கு மட்டுமே வாழ்ந்த பல உயிரினங்களைக் கொல்ல ஆரம்பித்தது.
அப்போதே இதன் தீவிரம் உணரப்பட்டது. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை ஆபத்தான அளவிற்கு குறைவது சூழலியலாளர்களை விழிப்படையச் செய்தது. இந்தப் பாம்புகள் மரமேறுவதில் நிபுணர்கள். நாளின் பெரும்பாலான நேரமும் இவை மரக்கிளைகளின் உச்சியிலேயே குடியிருக்கும். இவை பறவைகள், அவற்றின் முட்டைகள், சிறிய பாலூட்டிகளை உண்டே அழித்தன. இது தீவின் உயிர்ப் பன்மயத்தன்மையை மோசமாகப் பாதித்தது.
மிஞ்சியிருந்தவை
குவாம் தீவின் மீன்கொத்தியினமே கிட்டத்தட்ட அழிந்து போய்விட்ட நிலையில் மிஞ்சியிருந்த 29 பறவைகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இதன் பலனாக பாதுகாக்கப்பட்ட நிலையில் இவற்றின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்தது. இதன் மூலம் கிடைத்த முட்டைகள் செட்விக் காட்சிசாலைக்கு அனுப்பப்பட்டு பொரிக்கப்பட்டு இளம் குஞ்சுகள் வரும் ஆண்டில் காட்டில் விடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இதில் பணிபுரியும் லண்டன் விலங்கியல் சங்க காட்சிசாலையின் (ZSL) சூழலியலாளர் மற்றும் மீன்கொத்தி மீட்புக் குழு உறுப்பினர் ஜான் யூவன் (John Ewen)கூறுகிறார்.
மக்ஸ்வினி மற்றும் அவரது குழுவினரே முட்டைகள் பொரித்து குஞ்சுகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் பணிக்குப் பொறுப்பானவர்கள். இந்த இன மீன்கொத்தியின் முட்டை பெரிதாக இருப்பதில்லை என்பது இதில் ஒரு சிக்கல். குஞ்சுகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. அவற்றின் ஆரோக்கிய நிலை கவனிக்கப்படுகிறது. நோய்களற்ற நிலையில் உள்ளது உறுதி செய்யப்படுகிறது. வனத்திற்கு செல்வதற்குரிய தயார் நிலையை அடையும்வரை இவை பராமரிக்கப்படுகின்றன. வளர்ச்சி அடைந்தவுடன் இவை குவாமிற்கு அனுப்பப்படாது.
பமைரா
குவாமில் இன்னமும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாம்புகள் வாழ்கின்றன. இதனால் ஆய்வாளர்கள் இப்பறவைகளை ஒரு புது வீட்டுக்கு குவாமில் இருந்து 6,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பமைரா (Palmiera) தீவிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். இப்பசுபிக் தீவு இப்பறவைகளுக்கு பாதுகாப்பான இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடம் மீன்கொத்திகளுக்கு எதிரிகள் இல்லாத பகுதி. இங்குள்ள மழைக்காடுகள் பறவைகள் கூடு கட்டத் தேவையான பொருட்களை அளிக்கும். உணவும் உள்ளது.
மீன் உண்ணாத மீன்கொத்திப் பறவை
குவாமில் வாழும் இந்த இனப்பறவைகள் இவற்றின் பிரிட்டிஷ் சொந்தக்காரரைப் போல மீன்களை உண்பதில்லை. பூச்சிகள், பல்லிகளையே உண்கின்றன. அதனால் இப்பறவைகள் பமைரா தீவில் பாதுகாப்புடன் வாழும். இனப்பெருக்கம் செய்ய அவசியமான இணைகளை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. பாம்புகளின் ஆக்ரமிப்புப் பிரச்சனை தீர்க்கப்பட்ட பின் இவற்றின் எண்ணிக்கை போதுமான அளவு உயரும்போது இவற்றின் தாயகமான குவாமிற்கு இவற்றைத் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.
வண்ணமயமான இந்தப் பறவைகள் குவாம் தீவின் நீல நிற வானில் சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் முன்பு போல மீண்டும் பறக்கும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் ஆய்வாளர்கள் காத்திருக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கடலிற்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள கலைச்சிற்பங்கள் மூலம் பவளப் பாறைகளைக் காப்பாற்றும் முயற்சியில் பிஜி தீவு ஈடுபட்டுள்ளது. நாகுலா (Nacula) தீவில் கடலுக்கு அடியில் நிறுவப்பட்டுள்ள கலைச்சிற்பங்கள் ஆழ்கடல் நீரில் மிதந்தபடி காலநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் புதிய பவள உயிரினங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. எழில் கொஞ்சும் நீலக்கடல் நீரும், அழகிய கடற்கரை மணற்பரப்பும், எஃகு சிற்பங்களில் வளர்ந்துள்ள பவள உயிரினங்களுடன் கடலின் தரைப்பகுதியும் காட்சி தருகின்றன.
கடல்நீர் வெப்பமடைவதால் அழிந்துவரும் பவளப் பாறைகளைக் காக்க இந்தப் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பஞ்கள் கடலின் உப்புநீரால் அரிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டு கடல்நீரில் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் எவர்சில்வரால் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய 137 சிற்பங்களில் இப்போது முப்பது வகை பவளப்பாறை உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த வடிவங்கள் மாற்றி அமைக்கப்படக் கூடியவை. பவள உயிரினங்களிடம் இருந்து மரபணு பொருட்களை சேகரிக்கும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.
சிற்ப வடிவங்களில் வளரும் உயிரினங்கள்
காலநிலை மாற்றத்தை வெற்றி கொண்டு வாழும் பவள உயிரினங்களை உருவாக்க இது உதவும். உலகின் முதல் சிற்ப வடிவ பவள உயிரினங்களுக்கான வங்கி (Scultpural Coral Bank) என்று வர்ணிக்கப்படும் இந்த சிற்ப அமைப்புகள் லாபநோக்கமில்லாத பவளப் பாறைகளைக் காக்கும் அமைப்பு (Not-for-profit group Counting Coral) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு வாழும் பவளப்பாறைகள் அனைத்தும் தூய்மையானவை. ஆனால் காலம் செல்லச் செல்ல சூழல் சீரழிவால் இவை மெல்ல மெல்ல உயிரிழந்தன. இது தனக்கு அதிர்ச்சி அளித்ததாக இந்நிறுவனத்தின் தோற்றுநர் ஜாலியன் காலியர் (Jolyon Collier) கூறுகிறார்.
2023ன் முதல் பாதியில் வீட்டி லெவு (Viti Levu) என்ற பிஜியின் பெரிய தீவு மற்றும் நாட்டின் சில பகுதிகளில் இந்த உயிரினங்கள் வேகமாக அழிந்து வருகின்றன என்று பவளப் பாறைகளைக் கண்காணிக்கும் அமைப்பு (Coral Reef Watch) மற்றும் பிஜி வானிலை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து எச்சரித்தன.
மக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்த கடல்
பிஜி நாட்டின் 75% மக்கள் கடலோர வாழ்வுடன் பின்னிப் பிணைந்தே வாழ்கின்றனர். கலாச்சாரம், நல வாழ்வு, நாட்டின் அடையாளத்தில் கடல் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. பவளப்பாறைகளின் முக்கியத்துவம் பற்றி பிஜி மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்த வடிவங்கள் ஒரு நூலகம் போல பவளப் பாறைகளின் மரபணு விவரங்களை சேகரித்து இந்த உயிரினங்களுக்கான ஒரு மரபணு வங்கியாக செயல்படுகிறது.
இந்த உயிரினங்களில் இருந்து வருங்காலத்தில் புவி வெப்ப உயர்வு, கடல் நீர் சூடாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றைத் தாங்கி வளரும் சூப்பர் உயிரினங்களை உருவாக்க முடியும். எவர்சில்வர் கூடுகளில் வளர்க்கப்பட்டவற்றில் பல மரபணு வலிமையில்லாத பவளப்பாறை உயிரினங்கள் அழிந்து விட்டன. வெப்ப அலைத்தாக்குதல், சூடான கடல், புயல்கள், மாறும் பருவநிலைகளில் வலுவான உயிரினங்களை நட்டு வளர்ப்பது சவால் நிறைந்ததுதான் என்றாலும் வலிமையான சிற்ப வடிவங்கள் மாறி வரும் சூழலை சமாளிக்க உதவுகின்றன.
பாசிகளால் நீல நிறமாதல், புயல்கள் போன்றவற்றை சமாளித்து வாழும் உயிரினங்கள் வலுவாக வளரும்வரை பவளப்பாறைகள் இந்த அமைப்புகளில் தொடர்ந்து நட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தக் கூடுகளில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை இடைவேளைகளில் கணக்கிடப்படுகிறது. பெரிதாக வளர்ந்தபின் அவை இந்த அமைப்புகளில் இருந்து நீக்கப்படுவதில்லை. மாறாக கூடுகளின் இணைப்புகள் தளர்க்கப்பட்டு வளர்ந்த உயிரினங்கள் நாற்றங்கால்களுக்கு கொண்டு சென்று பராமரிக்கப்படுகின்றன.
முதலில் வளர்ந்த பவளப்பாறைகள் எவர்சில்வர் வடிவங்களில் விடப்படுகின்றன. அவை ஒவ்வொரு புதிய இணைப்புடன் சேர்க்கப்படும்போது மேலும் மேலும் அடர்த்தியாக வளர்கின்றன. இவற்றிற்கு அவ்வப்போது முடித்திருத்தம் செய்யப்படுவது போல கூடுதல் வளர்ச்சியடைந்தவை அகற்றப்பட்டு ஒருசில ஆண்டுகளுக்கு அப்படியே விடப்படுகின்றன. இதனால் இவற்றின் அடிப்படை மூலக்கூறு அடர்த்தியாகி வலுவடைகிறது. தீவு மக்களுக்கு இத்திட்டம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடலோரத்தில் வலை வீசி மீன் பிடித்த முன் தலைமுறையினர்
முந்தைய தலைமுறையினர் கடலோரத்தில் வலைகளை வீசியே மீன் பிடித்தனர். ஆனால் இப்போது அப்படியில்லை. கடலிற்கு சென்றே மீன் பிடிக்க வேண்டியுள்ளது. இப்புதிய முயற்சியின் மூலம் எங்கள் முன்னோர் வாழ்ந்த காலத்தில் இருந்த செழுமையான பவளப்பாறைகள் நிறைந்த கடல்வளத்தை எங்களால் மீண்டும் பெற முடியும் என்று நம்புவதாக தீவுவாசியும் சூழல் பிரச்சாரகருமான லேபன்னா இவால்யு (Laben Naivalu ) கூறுகிறார்.
தீவு மக்கள் மற்றும் Blue lagoon resort ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கடலுக்கடியில் மிதக்கும் உலோகச் சிற்பஞ்கள் இப்பகுதிக்கு வருவோர் எவரையும் ஒரு நிமிடம் நிnறு, கவனித்து, கண்டு, மகிழ்ந்து, மற்றவரிடம் செய்தியைp பகிரும் வகையில் உள்ளன.
இத்திட்டம் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய ஆழ்கடல் உலகைக் காட்டித் தருகிறது. சிற்ப வடிவங்கள் அமைத்து பவளப்பாறை உயிரினங்களை வளர்க்கும் தனிச்சிறப்பு மிக்க, புதிய சிந்தனையுடன் செயல்படும் இத்திட்டம் சூழல் விழிப்புணர்வை மேம்படுத்தும், பவளப்பாறைகளைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் என்று பிஜி சுற்றுலா வளர்ச்சித்துறை தலைமைச் செயல் அலுவலர் ப்ரண்ட் ஹில் (Brent Hill) கூறுகிறார்.
மரபணு வங்கியின் மூலம் பவளப்பாறை உயிரினங்கள் காப்பாற்றப்படும். இது கடல்சார் சூழல் மண்டலத்தையும் காக்க உதவும். இதன் மூலம் வருங்காலத் தலைமுறையினருக்கு இது குறித்த உணர்வை ஏற்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/world/2023/aug/05/fiji-underwater-sculptures-coral-reef-restoration?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- கரடிகள்
- மண்ணிற்கடியில் ஒளிந்திருக்கும் விலையுயர்ந்த பூஞ்சை
- நுண் பிளாஸ்டிக் உண்ணும் நுண்ணுயிரிகள்
- ஆண் துணையில்லாமல் முட்டையிட்ட உலகின் முதல் கன்னி முதலை
- சிங்க வேட்டை
- தவளைகள் பலவிதம்
- பூமியின் வரைபடத்தில் இல்லாத இடங்கள் தேடி...
- ஆதிவாசி மக்களுக்காக விறகொடிக்கும் யானைகள்
- அழிவில் இருந்து மீண்டு வந்த அரேபியாவின் மான்
- மீன்களுக்கும் உணர்வுகள் உண்டு
- வேட்டையாடும் நாடுகள்
- சிவப்புப் பட்டியல்
- மகரந்த சேர்க்கை குறைபாடும், மனித உயிரிழப்புகளும்
- வலசை என்னும் அதிசயம்
- மகாவா என்ற மகத்தான எலி
- ஜப்பானில் புதிய மலர்
- வனவிலங்குகளும், பயிர் பாதுகாப்பும்
- காளான்கள்
- வண்ணத்துப் பூச்சிகளுடன் ஒரு பயணம்
- முதலில் பீதியை ஏற்படுத்தியவன் பிறகு ஹீரோவான கதை
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.