கடல்வாழ் பாலூட்டி விலங்குகளான சீல்களில் (Seal) சில, உண்ணும் உணவில் கலந்திருக்கும் நஞ்சை சமாளித்து உயிர் வாழும் திறன் பெற்றுள்ளன. இந்தத் திறன்  பற்றிய ஆய்வு மனிதர்களுக்கான மருத்துவத்தில் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஹ்ஃவான் ஃபெர்னாண்டஸ் மிருது உரோமம் உள்ள சீல்கள் (Juan Fernandez fur seal) மிக ஆபத்தான காட்மியம் உள்ளிட்ட உலோகத்தை உணவுடன் சேர்த்து உண்கின்றன என்றாலும் அவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

மனிதனின் செயல்களால் பூமியில் இருந்தே அழிந்து விட்டன என்று கருதப்பட்ட இந்த உயிரினம் இப்போது சூழலில் கலந்திருக்கும் மிக மோசமான உலோக நச்சுகளை சமாளித்து வாழ்கின்றன. ஆர்த்தோஸ்பேலஸ் பிலிப்பியை (Arctocephalus Philippii) என்ற விலங்கியல் பெயர் கொண்ட இவை உலகின் மிகத் தனிமைப்பட்ட இடங்களில் வாழ்பவை.

இவை காட்மியம், பாதரசம் போன்ற நச்சு உலோக மாசுகளை உண்டு ஆபத்தில்லாமல் உயிர் வாழ்கின்றன. பிலிப்பியை என்ற இந்த இனம் உலகின் இரண்டாவது மிகச்சிறிய மிருது உரோம சீல் வகையைச் சேர்ந்த இனம். இவை சிலி நாட்டின் கரையில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹ்வான் ஃபெர்னாண்டஸ் வளைகுடா மற்றும் அதற்கு அருகில் இருக்கும் ஒரு சில பசுபிக் கடல் தீவுகளில் மட்டுமே வாழ்கின்றன.Juan Fernández fur sealsஇங்கு இவற்றின் வாழிடத்தை அலெக்சாண்டர் செல்கர்க் (Alexander Selkirk) என்ற கடற்பயணி 1704-1709 ஆண்டுகளுக்கு இடையில் கடலில் மூழ்கி ஆராய்ந்து அறிந்தார். இந்நிகழ்வு டானியல் டிஃபோ (Daniel Defoe) என்பவரால் ராபின்சன் க்ரூஸோ (Robinson Cruso) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. இதனால் இந்த வளைகுடாப் பகுதியின் முக்கியத்தீவு ராபின்சன் க்ரூஸோ என்று பெயரிடப்பட்டது.

ஆனால் அதன் பிறகு இந்த விலங்குகள் மிகத் தீவிரமாக அவற்றின் உரோமம் மற்றும் இறைச்சிக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டன. இப்பகுதியில் இருந்த நான்கு மில்லியன் உயிரினங்கள் கொல்லப்பட்டன. இதனால் 19ம் நூற்றாண்டில் இவை இப்பகுதியில் இருந்து முற்றிலுமாக அழிந்து போயின. 1960களில் இவற்றின் சிறிய காலனி இத்தீவுப்பகுதியின் ஒரு குகைக்குள் மீண்டும் கண்டுபிடிக்கப்படும்வரை இவற்றின் இனம் அழிந்து விட்டது என்றே கருதப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட உயிரினம்

இதன் பின்னர் இவை பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக அறிவிக்கப்பட்டன. மீண்டும் இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. மிக சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இப்போது இத்தீவின் பாறைகள் நிறைந்த கடற்கரைப் பகுதியில் இவற்றின் எண்ணிக்கை 80,000.

வளர்ச்சியடைந்த சீல்கள் கடலில் வாழ்கின்றன. நவம்பர் டிசம்பர் மாதங்களில் குட்டிகள் மிருதுவான கறுப்பு நிற உரோமத்துடன் பிறக்கின்றன. பிறகு இந்த நிறம் சில ஆண்டுகளில் மங்கி பழுப்பு நிறமாக மாறுகிறது. இந்த உயிரினங்கள் பற்றி விஞ்ஞானிகள் சமீப காலத்தில் ஆராயத் தொடங்கும் முன்புவரை இவை பற்றி மிகக் குறைவான விவரங்களே அறியப்பட்டன. இத்தகைய ஆய்வுகளின்போதே நஞ்சு உண்டாலும் பாதிக்கப்படாத இவற்றின் அதிசயிக்க வைக்கும் ஆற்றல் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் மலம் ஆராயப்பட்டபோது அதில் மிக அதிக அளவு காட்மியம், பாதரசம் மற்றும் பிற நச்சு உலோக மாசுக்கள் இருப்பது தெரியவந்தது. இது மிகுந்த வியப்பை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு. காட்மியம், பாலூட்டிகளுக்கு நச்சுத் தன்மையை தரக் கூடியது. ஆனால் இந்த சீல்கள் இந்த நஞ்சை எவ்வாறு செரிக்கின்றன என்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக உள்ளது.

தங்கள் உடலின் செரிமான உறுப்புகள் வழியாக இவற்றை சீல்கள் செல்ல அனுமதித்தாலும் அதனால் இந்த உயிரினங்கள் எந்த பாதிப்பும் அடையாமல் உயிர் வாழ்கின்றன என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சூழல் பாதுகாப்பு ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கான்ஸ்டண்ச டோரோ-வால்டிவிசோ (Constanza Toro-Valdivieso) கூறுகிறார்.

இந்த உயிரினங்கள் இந்த நஞ்சுகளை எங்கிருந்து பெறுகின்றன என்பதும் ஆய்வாளர்களை வியப்படையச் செய்தது. இத்தீவில் உள்ள மண் மற்றும் சுற்றியுள்ள நீரில் இருக்கும் காட்மியத்தின் அளவு மிகக்குறைவு. இது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது உணவின் மூலமே சீல்கள் இந்த நஞ்சுகளைப் பெறுகின்றன என்று கண்டறியப்பட்டது.

பெருவட்ட கடல் நீர்ச்சுழற்சி

அண்டார்க்டிக் மிருது உரோம சீல் போன்ற சில சீல் இனங்கள் அவை வாழும் பகுதியைச் சுற்றி இருக்கும் நீரில் உள்ள மிதவை உயிரினங்களையே (krill) உண்கின்றன. ஆனால் இந்த சீல்கள் ஏராளமான ஸ்குவிட் (Squid) மற்றும் இதர மீன்களை உட்கொள்கின்றன. பெண் சீல்கள் 500 கிலோமீட்டர் வரை கடலில் பயணம் செய்து தங்கள் இரையை வேட்டையாடுகின்றன. இதற்காக இவை தெற்கு பசுபிக் பெருவட்ட கடல் நீரோட்ட சுழற்சியை (Gyre) கடந்து செல்கின்றன.

பெருவட்ட கடல் நீரோட்டச் சுழற்சி என்பது அதிவிரைவாகச் சுழலும் கடல் நீரோட்டம். இச்சுழற்சியில் சகலவிதமான கழிவுகளும் சிக்கிக் கொள்கின்றன. இங்கிருந்தே சீல்கள் காட்மியம் போன்ற நஞ்சுகளை உணவின் மூலம் பெறுகின்றன என்று கருதப்படுகிறது. அதிவேகமாகச் சுழலும் கடல் நீரோட்டத்தில் மனிதன் உருவாக்கும் காட்மியம், பாலிமரால் ஆன பொருட்கள் அடித்து வரப்படுகின்றன. இவற்றை ஸ்குவிட் மற்றும் மீன்கள் உணவுடன் உண்கின்றன. இவற்றிடம் இருந்து சீல்களின் உணவில் இந்த நஞ்சுகள் சேர்கின்றன என்று நம்பப்படுகிறது.

பல ஆண்டுகளாக இந்த வகை உயிரினங்கள் பற்றி ஆராய்ந்து வரும் வால்டிவிசோ அடங்கிய விஞ்ஞானிகள் குழுவின் இந்த ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் Royal Society open science என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற பாலூட்டிகளுக்கு நஞ்சாக இருக்கும் காட்மியம் போன்றவற்றை இந்த உயிரினங்கள் எவ்வாறு செரிமானமடையச் செய்து அதிக பாதிப்பு இல்லாமல் வாழ்கின்றன என்பது பற்றி தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இவற்றின் மலம் தவிர இயற்கையாக உயிரிழந்த இவற்றின் எலும்புகளிலும் நச்சு மாசுகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் எலும்புகளில் காணப்படும் அதிகப்படியான சிலிகான் காட்மியம் போன்ற நஞ்சுகளை சமாளிக்க இவற்றிற்கு உதவலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது நம் மருத்துவத் துறையில் முக்கியப் பயன்களைத் தரக் கூடியது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மனிதன் அறியாத பல அதிசயங்கள்

நஞ்சை சமாளிக்கும் இதன் பண்பு இதன் உடலில் இருக்கும் மரபணுக்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். அல்லது முற்றிலும் மனிதன் அறியாத வேறு காரணத்தால் இவ்வாறு நிகழலாம். இது பற்றி வரும் ஆண்டுகளில் தீவிரமாக ஆராயப்படும் என்று வால்டிவிசோ கூறுகிறார். மனித குலம் அதிகம் அறியாத இந்த உயிரினங்கள் இதுவரை நாம் அறியாத பல அதிசயிக்க வைக்கும் அறிவியல் உண்மைகளை நமக்கு வெளிப்படுத்தலாம்.

** ** **

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/apr/29/seals-mystery-ability-to-tolerate-toxic-metal-could-aid-medical-research-say-scientists?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

நாகாலாந்தில் வோர்க்கா (Wokha) மாவட்டத்தில் உள்ள பாங்டி (Pangti) கிராமம். நாகரீக வசதிகள் எவையும் நுழையாத ஆதிவாசிகளின் நாடு. அங்கே ஆண்டுதோறும் அரங்கேறும் ஆகாய அதிசயத்தின் கதைதான் இது. இலட்சக்கணக்கான அமுர் வல்லூறு (Amur falcon) பறவைகள் கூட்டம் கூட்டமாக இங்கே பறந்து வருகின்றன. அவற்றை ஆதிவாசிகள் சுவையான பறவை இறைச்சிக்காக போட்டி போட்டுக் கொண்டு வேட்டையாடி ஒரு பறவையை பத்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்றனர்.

வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தொலைதூர மாவட்டங்களில் இருந்து இறைச்சி வாங்க ஏராளமானோர் வந்தனர். ஆண்டுக்கணக்கில் நடந்து வந்த பறவை வேட்டை, விற்பனை பற்றி மிகத் தாமதமாகவே வெளியுலகம் அறிந்து கொண்டது. இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுசேர்ந்து வேட்டையை எதிர்த்து 2012ல் குரல் எழுப்பினர். மெல்ல மெல்ல இது பலன் தரத் தொடங்கியது. உலகம் அறிந்திராத ஒரு கிராமம் மெல்ல மெல்ல பறவைகள் பாதுகாப்பின் சொர்க்கபூமியாக மாறியது. புதிய வரலாறு எழுதப்பட்டது.

இது உலகம் முழுவதும் பரவியது. பறவை வேட்டை தடை செய்யப்பட்டது. நாகர்கள் சினந்து எழுந்தனர். அம்பையும் வில்லையும் ஏந்தி போராடத் தயாராயினர். கிராமம் போராட்டக்களமானது. ஆனால் வனத்துறையினரும், மாநில அரசும் நிலைமையை உணர்ந்து செயல்பட்டனர். பல சூழல் அமைப்பினரும், மாணவர்களும், இளைஞர்களும் களத்தில் குதித்தனர். ஆதிவாசிகளை வனப் பாதுகாப்பிற்காக செயல்பட உற்சாகப்படுத்தினர். சிறிதுசிறிதாக அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தைக் கண்டறிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன.pangti villageஆதிவாசிகளின் கோபம் அடங்கியது. இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுசேர்ந்து ஓர் இயக்கமாக செயல்படத் தொடங்கியதுடன் மக்கள் மனம் மாறினர்.

பாங்டியில் மலைப்பகுதிகளில் எங்கும் காணப்படும் அமுர் வல்லூறு என்ற இந்த சின்னஞ்சிறிய பறவையை இன்று இங்கு வாழும் கிராம மக்கள் எவரும் வேட்டையாடுவது இல்லை. கிராம மக்களின் நலவாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த பல தன்னார்வ நிறுவனங்கள் உதவின.

கிராமம் பறவைகள் பாதுகாப்பில் உலகப் புகழ் பெறத் தொடங்கியது. இது கிராம மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. இந்தியாவிற்கு உள்ளேயிருந்தும் வெளியில் இருந்தும் பல தன்னார்வ நிறுவனங்கள் வரத் தொடங்கியதுடன் கிராமத்தின் முகச்சாயல் மெல்ல மாறியது. கிராம கவுன்சிலர் ஆர் ஷிரி அவர்களின் ஆலோசனையின்படி கிராம மக்கள் செயல்பட்டனர். கிராம மக்களின் நலவாழ்விற்கு முன்னுரிமை தரப்பட்டது. பறவை பாதுகாப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அமுர் வல்லூறு என்னும் அதிசயம்

பறவை ஆர்வலர்களுக்கு என்றும் ஒரு அதிசயமாக இருக்கும் அமுர் வல்லூறுகள் அக்டோபர் மாதத்தில் மங்கோலியா, சைபீரியாவில் இருந்து லட்சக்கணக்கில் நாகாலாந்திற்கு வருகின்றன. ஒன்றரை மாதம் வரை அவை இந்த கிராமத்தில் தங்குகின்றன. பத்து இனங்களைச் சேர்ந்த சிறிய மற்றும் பெரிய பிராணிகளே இவற்றின் முக்கிய உணவு. இடைவேளைக்குப் பிறகு இவை மகாராஷ்டிரா வழியாக இந்தியப் பெருங்கடலைக் கடந்து தென்னாப்பிரிக்காவை நோக்கி பறக்கின்றன.

மங்கோலியா, சைபீரியாவில் இருந்து நாகாலாந்து வழியாக தென்னாப்பிரிக்காவை சென்றடையும்போது இவை 30,000 கிலோமீட்டர் தொலைவிற்குப் பறந்திருக்கும். மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்காவில் இருந்து நாகாலாந்து வழியாக இவை புறப்பட்ட இடத்தைச் சென்றடைகின்றன. அதிக தூரம் பறக்கும் வலசைப் பறவைகளில் இதுவும் ஒன்று. பருந்து இனத்தைச் சேர்ந்தது என்றாலும் பார்ப்பதற்கு ஒரு புறாவின் அளவே உள்ள இவற்றின் கால்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இவை வலசை செல்லும் காலத்தில் எங்கும் இடை நிற்காமல் தொடர்ந்து பறக்கும் ஆற்றல் பெற்றவை.

உயிர் பறிக்கும் வலைகள்

பறவை பறக்கும் வழியெங்கும் பெரிய வலைகளைக் கட்டியே கிராம மக்கள் இதை வேட்டையாடினர். மரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட லேசான வெள்ளை நிறத்தில் உள்ள நீளமான வலைகளை பறக்கும்போது பறவைகளால் பார்க்க முடியாது. வலையில் அகப்படும் அவற்றை கிராமவாசிகள் பிடித்து கால்களைக் கட்டி ஒரு தாங்கியில் தொங்கவிடுவர்.

ஒரு நாளில் ஆதிவாசித் தலைவர் பரிந்துரை செய்யும் ஒரு சிலர் வலை கட்ட அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்த நாட்கள் மற்றவர்களின் முறை. இவ்வாறு ஒன்றரை மாதத்திற்குள் கிராமவாசிகள் அனைவருக்கும் பறவையைப் பிடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நாகாலாந்து வன உயிரி உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை இயக்குனர் பானோ ஹராலு வேட்டைக்கு எதிராகப் போராடியவர்களில் முக்கியமானவர். தூர்தர்ஷனின் செய்தியாளராக பணி புரிந்துள்ள இவர் நாகாலாந்து ஆங்கிலச் செய்தித்தாள்களில் செயல்பட்டு வந்தார்.

இயற்கை நாகாஸ் (Natural Nagas) என்ற அமைப்பின் தலைவர் ஸ்டீவ், கிராம கவுன்சில் தலைவர் ஆர் ஷிரி, வனத்துறையின் தலைமை பாதுகாவலர் லோகேஸ்வர ராவ் ஆகியோர் விழிப்புணர்வு இயக்கத்திற்கு தலைமை வகித்தனர். கிராம மக்களை உற்சாகப்படுத்த ஸ்காட்லாந்து வங்கி (Bank of Scotland) விருதுகளை வழங்கியது. 2017ல் பானோ ஹராலு நாரீ சக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதே ஆண்டு சிறந்த அறிவியல் திரைப்படத்திற்கான விருது சினோ இகோஷு (Sino Yhoshu) இயக்கிய பாங்டி கதை (The Pangti story) என்ற திரைப்படத்திற்குக் கிடைத்தது. வேட்டைக்காரர்களாக இருந்த நாகர்களின் கிராமம் எவ்வாறு பறவைகளின் காவல் பூமியாக மாறியது என்பதே திரைப்படத்தின் மையக்கதை.

பாங்டி இன்று உலகப் பறவை சுற்றுலா வரைபடத்தில்

இப்போது அக்டோபரில் உலகில் பல பகுதிகளில் இருந்தும் பறவை ஆர்வலர்கள் இங்கு வருகின்றனர். இது சூழல் சுற்றுலா வளர வழிவகுத்தது. இது கிராம மக்களின் வருமான மார்க்கமாக மாறியது. அமெரிக்க பறவையியலாளர் ச்காட் வீடன்சால் (Scott Wiedensaul) எழுதியுள்ள இறக்கைகளின் உலகம் (A World of the wing) என்ற புகழ்பெற்ற நூலில் பாங்டி கிராமவாசிகள் பறவைகள் பாதுகாப்பிற்காக நடத்திய ஆத்மார்த்தமான முயற்சிகளும், பானோ ஹராலுவின் தளராத போராட்டங்களும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

மனமுவந்து மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் உலகில் எந்த நரகமும் அழகு பூமியாக மாறும் என்பதற்கு ஒருகாலத்தில் வேட்டை கிராமமாக இருந்து இன்று பறவைகளின் கிராமமாக மாறியுள்ள பாங்டி கிராமம் ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/travel/features/how-a-nagaland-village-turned-from-hunting-ground-to-safe-haven-for-amur-falcon-1.8313069

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

யானை, நீர் நாய், திமிங்கலங்களுக்கு இடையில் என்ன ஒற்றுமை இருக்கிறது? தாங்கள் வாழும் சூழல் மண்டலத்தில் இவை அனைத்தும் கார்பன் சேமிப்பை அதிகரிக்க உதவுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. யானைகள் விதைகளைப் பரப்புகின்றன. குறைவான உயரத்தில் வளரும் தாவரங்களைக் காலில் போட்டு மிதிக்கின்றன. உயரமான மரங்கள் வளர உதவுகின்றன.

கடல் நீர் நாய்கள் கடல் முள் எலிகளை (Sea urchins) உண்கின்றன. இதனால் கடற்பாசிகள் (kelp) செழித்து வளர்கின்றன. திமிங்கலங்கள் ஆழ்கடலில் உணவை உண்டு சுவாசிக்கவும், ஓய்வெடுக்கவும் அவை கடல் மேற்பரப்பிற்கு வரும்போது சத்துகளை வெளிவிடுகின்றன. மிதவை உயிரினங்கள் (phytoplanktons) அதிக அளவில் உருவாக இது தூண்டுதலாக அமைகிறது.

இந்த உயிரினங்கள் மட்டும் அல்ல, பல உயிரினங்கள் அவை வாழும் சூழலில் அதிக அளவில் கார்பனைச் சேகரிக்க உதவுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இது உதவுகிறது. ஆப்ரிக்கா டன்ஜானியாவில் மாரா (Mara) மற்றும் அருஷா (Arusha) பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள செரங்கெட்டி (Serengeti) சூழல் மண்டலத்தில் வாழ்ந்த காட்டெருமைகளின் (wildebeest) எண்ணிக்கை நோய்த்தொற்றால் குறைந்தது.whale 397காட்டுத்தீ

புற்கள் கட்டுப்பாடில்லாமல் பெருகி முளைத்தன. அடிக்கடி காட்டுதீ சம்பவங்கள் அதிகமாக இது காரணமானது. திறம்பட்ட நோய் மேலாண்மை மூலம் எருமைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. காட்டுத்தீ சம்பவங்கள் குறைந்தன. ஏற்பட்ட தீ விபத்துகளையும் சுலபமாக கையாள முடிந்தது. கார்பன் உமிழும் இடமாக இருந்த இப்பகுதி இதனால் கார்பனை சேகரிக்கும் இடமாக மாறியது.

இந்த ஆய்வுக்கட்டுரை நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. விலங்குகள் உணவு உண்ணுதல், இடம் பெயர்தல், மிதித்தல், குழி தோண்டுதல், மலம் கழித்தல் மற்றும் வாழிடங்களை அமைத்தல் போன்றவற்றினால் அவை வாழும் சூழல் மண்டலங்கள் திறம்பட கார்பனை சேகரிக்கும் இடங்களாக மாறுகின்றன. 0.3% கார்பனை மட்டுமே உலகின் மொத்த உயிர்ப்பொருளில் (biomass) வனவிலங்குகள் கொண்டுள்ளன என்றாலும் குறிப்பிட்ட சூழல் மண்டலத்தில் இவற்றால் சேகரிக்கப்படும் கார்பனின் அளவு 15% முதல் 200% வரை உள்ளது.

இயற்கையின் வழியில்

காலநிலை மாற்றத்தின் கெடுதிகளை சமாளிக்க இயற்கை வழிகளே உதவும் என்று சமீபகாலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வைக் குறைப்பது மட்டும் போதாது. வளிமண்டலத்தில் இருந்து கார்பனை அகற்ற இயற்கையின் அளவில்லாத இந்த ஆற்றலையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்று லண்டன் விலங்கியல் சங்கத்தின் (Zoological Society of London ZSL) தலைமை செயல் அலுவலர் மாத்யூ குட் (Matthew Gould) கூறுகிறார்.

இந்த ஆய்வுக்கட்டுரை சூழல் சீர்கேடுகளை இயற்கை வழியில் தீர்வு காண்பதை வலியுறுத்துகிறது. மனிதனால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத இயற்கை தீர்வை நோக்கி செயல்படுகிறது. கார்பனைக் கைப்பற்றுவதற்கு உதவும் செயல்முறைகளை (Carbon Capture Systems CCS), புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்றாலும், இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் நிரூபிக்கப்பட்ட பலன் தரும் முறைகளை புறக்கணிக்கக் கூடாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு இயற்கையை மதித்து நடக்க நாம் முதலில் கற்க வேண்டும். கார்பன் சேமிப்பிற்கு உதவாத ஒற்றைப்பயிர் முறையைக் கைவிட வேண்டும். வனவிலங்குகளின் வாழிடங்களைத் துண்டாடுவதை நிறுத்த வேண்டும். கார்பன் சேமிப்பிற்கான தீர்வு இயற்கையில் தாவரங்களிடம் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாசிகள், சதுப்புநிலக் காடுகள், கடற்புற்களை மீட்க வேண்டும்.

பனிக்கண்டத்தில் வனவிலங்குகளின் கூட்டம்

ஆர்க்டிக் பகுதியில் அளவற்ற கார்பன் உறைபனிப் பாறைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் விலங்குகளின் கூட்டம் பனி உருவாகாமல் இருக்க, மண் உறைநிலையில் இருக்க உதவுகின்றன. கலைமான், காட்டுக் குதிரைகள், அமெரிக்க துருவப் பகுதியில் வாழும் கஸ்தூரி மணம் உடைய எருது போன்ற விலங்குகள் (musk ox), காட்டெருமைகள் போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

இயற்கைக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் சூழலைப் பாதுகாக்க அது உதவும். மேம்பட்ட சூழலில் வனவிலங்குகளின் எண்ணிக்கை விரைவாகப் பெருகும். உள்ளூர் மக்கள் ஒத்துழைப்புடன் இதற்கான பணிகள் நடைபெற வேண்டும். இங்கிலாந்தில் செம்பருந்து (red kites), நேபாளம் மற்றும் இந்தியாவில் புலிகள் போன்ற வனவிலங்கு மீட்பின் வெற்றிக்கதைகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆய்வுகள் லண்டன் விலங்கியல் சங்கத்தின் ஆதரவில் நடத்தப்பட்டன. விலங்குகள் இயற்கை வழியில் கார்பனை சேகரிக்க உதவும். மக்களுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கும் உறவைப் புதிப்பிக்க வேண்டும். இதன் மூலம் மனித வனவிலங்கு மோதலை தவிர்க்க முடியும். உள்ளூர் மக்களிடம் இயற்கையுடனான உறவு புதிப்பிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் பலவன் (Palawan) தீவில் மக்களே முன்வந்து எறும்புத்தின்னிகளுக்காக (pangolins) சரணாலயம் ஒண்றை அமைத்து நடத்தி வருகின்றனர்.

வனவிலங்குகள் வாழும் உலகில்

இந்த அணுகுமுறையே இங்கிலாந்து கடலோரப் பகுதியில் அழியும் நிலையில் இருந்த ஏஞ்சல் சுறாக்களை (Angel shark) பாதுகாக்க உதவும் திட்டங்களை செயல்படுத்த மக்களுக்கு உதவியது. வனவிலங்குகள் வாழும் உலகில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இயற்கை உதவும் என்பதற்கு டன்ஜானியா செரங்கெட்டி சூழல்மண்டலம் சிறந்த எடுத்துக்காட்டு.

மனித குலத்தின் எதிர்காலம் வனவிலங்குகளின் நலவாழ்வுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் தாவர விலங்குகளே நமக்கு உதவும் இயற்கையின் ஆயுதங்கள். நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால் இந்த உயிரினங்களை நாம் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/commentisfree/2023/apr/19/elephants-otters-whales-nature-climate-breakdown-carbon-ecosystems?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

இதுவரை மனிதன் ஆழ்கடலில் அறியாத இடத்தில் ஒரு அதிசய உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய நத்தை மீன் (Snailfish) வகை சூடொலிபாரிஸ் (Pseudoliparis) இனத்தைச் சேர்ந்தது. 2022ல் தொடங்கிய இந்த ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் நடத்தப்பட்ட இரண்டு மாத ஆழ்கடல் ஆய்வின்போது விஞ்ஞானிகள் பயன்படுத்திய தானியங்கி வாகனங்களின் புகைப்படக் கருவியில் இந்த மீனின் படங்கள் பதிவாகியுள்ளது. 8000 மீட்டருக்குக் கீழ் ஆழ்கடலில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

தென்மேற்கு ஜப்பானில் இஸு-ஒகஸ்வாரா பள்ளத்தில் (IZu-Ogasawara trench) கடலின் 8336 மீட்டர் ஆழத்தில் இந்த உயிரினம் வாழ்வது தெரிய வந்துள்ளது. இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு சுடொலிபாரிஸ் பெலியிவி (Pseudoliparis belyaevi) இனத்தைச் சேர்ந்த வேறு இரண்டு மீன்களின் புகைப்படமும் ஆழ்கடல் வாகனத்தின் புகைப்படக் கருவியில் பதிவாகியிருப்பது தெரிய வந்தது. இவை ஜப்பானின் அதே பகுதியில் 8022 மீட்டர் ஆழத்தில் நீந்திக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.deepest fish in japanபத்தாண்டு ஆய்வுத் திட்டம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் மைண்டரூ (Minderoo) பல்கலைக்கழகத்தின் ஆழ்கடல் ஆய்வுப் பிரிவு விஞ்ஞானிகள் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர்.

8000 மீட்டர் ஆழமுள்ள ஜப்பான் கடற்பகுதி, 9300 மீட்டர் ஆழமுடைய இஸு-ஒகஸ்வாரா பள்ளம் மற்றும் 7300 மீட்டர் ஆழமுடைய யுக்கியு (Ryukyu) பள்ளம் ஆகிய பகுதிகளில் வாழும் ஆழ்கடல் மீனினங்கள் பற்றி அறிய இந்த ஆய்வுகள் நடந்தன. உலகில் ஆழ்கடலில் வாழும் மீனினங்கள் பற்றி அறிய நடைபெற்று வரும் பத்தாண்டு கால ஆய்வின் ஒரு பகுதியாக இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆளில்லா ஆழ்கடல் மிதவை லேண்டர் (landers) வாகனங்கள் மற்றும் அவற்றில் பொருத்தப்பட்ட அதி நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய, மீன்களைத் தன்பால் ஈர்க்கும் தன்மையுடைய தூண்டில் கேமராக்களை (baited cameras) பயன்படுத்தி விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆழ்கடல் பள்ளங்களின் ஆழமான பகுதிகளில் இக்கருவிகள் மிதக்க விடப்பட்டன.

உலகில் இதுவரை தேங்கிய நீர் முதல் கடலின் ஆழமான பகுதிகள் வரை 4000 நத்தை மீன் இனங்கள் வாழ்வதாக அறியப்பட்டுள்ளது. இந்த வகையைச் சேர்ந்த சில மீனினங்கள் பெற்றுள்ள சிறப்புத் தகவமைப்பின் மூலம் இதே பேரினத்தைச் சேர்ந்த மற்ற நத்தை மீன்களைக் காட்டிலும் ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இவை வாழ்கின்றன என்று இந்த ஆய்வுப்பயணத் திட்டத்தின் தலைவர் மற்றும் மைண்டரூ ஆழ்கடல் ஆய்வுப்பிரிவின் (UWAD) நிறுவனர் பேராசிரியர் ஆலன் ஜெமிசன் (Prof Alan Jamieson) கூறியுள்ளார்.

8000 மீட்டர் ஆழத்தில் வாழும் உயிரினத்தின் உடலமைப்பு எப்படி இருக்கும்?

மேற்பரப்பில் இருப்பதை விட கடலின் எட்டாயிரம் மீட்டர் ஆழத்தில் அழுத்தம் எட்டு மடங்கு அதிகமாக இருக்கும். உலகின் மிக ஆழமான கடற்பகுதியில் வாழும் இந்த மீனின் படத்தில் இருந்து அது கரணைகள் போன்ற காப்பு புடைப்புகளுடன் கூடிய, முண்டுமுடிச்சுகள் உள்ள, வளைந்து நெளிந்த அமைப்புடன் (gnarly) கறுத்த நிறத்தில் பெரிய பற்கள் போன்ற பகுதியையும் சிறிய கண்களையும் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது என்று ஆலன் கூறியுள்ளார்.

இதன் கறுப்பு நிறத்திற்கும் இது வாழும் ஆழ்கடற்பகுதிக்கும் தொடர்பில்லை என்று கருதப்படுகிறது. அடிக்கடி காண முடிவதில்லை என்பதால் இது போன்ற ஆழ்கடல் உயிரினங்களின் சிறப்புத் தகவமைப்புகளை ஆராய்வது கடினமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவற்றின் உடலில் நீச்சல் சிறுநீர்ப் பைகள் (swim bladders) காணப்படுவதில்லை. இது இவை மிக ஆழமான கடலில் வாழ உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

உயர் அழுத்தம் உள்ள பகுதிகளில் உடலில் வாயுக்குழி (gas cavity) போன்ற உடற்பகுதியைப் பெற்றிருப்பது மிகக் கடினம். இந்த மீன்கள் செதில்கள் அற்றவை. இதற்குப் பதில் இவை கூழ்மத் தன்மையுடைய அடுக்கைப் பெற்றுள்ளன. இது மீனின் உடற்செயலியக்கத்திற்கு உதவுகிறது என்று ஆலன் கருதுகிறார்.

சாதனை ஆழத்தில்

கேமராவில் இளம் மீன் ஒன்றின் படமே பதிவாகியுள்ளது. மற்ற ஆழ்கடல் மீன்கள் போல் இல்லாமல் நத்தை மீனினங்களில் வளர்ந்த மீன்களை விட இளம் மீன்களே அதிக ஆழமுடைய பகுதிகளில் காணப்படுகின்றன.

8000+ மீட்டர் ஆழத்திற்கும் அதிகமான பகுதிகளில் மிகச் சிறிய உயிரினங்களே அதிகமாக வாழ்கின்றன. இப்போது இஸு-ஒகஸ்வாரா பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மீன் இதற்கு முன் 2017ல் 8178 மீட்டர் ஆழத்தில் மரியான (Mariana) பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நத்தை மீன் வாழ்ந்த ஆழத்தை விட 158 மீட்டர் அதிக ஆழத்தில் வாழ்கிறது. இது ஒரு சாதனை ஆழம். 2017 ஆய்வையும் ஆலன் ஜெமிசனே நடத்தினார். ஜப்பான் ஆய்வுகள் மரியானா பள்ளத்தில் வாழும் நத்தை மீன் உலகில் மிக ஆழமான கடற்பகுதியில் வாழும் மீனினமாக இருக்காது என்று முன்பு கருதப்பட்டதை உறுதி செய்துள்ளது என்று ஆலன் கூறுகிறார்.

கடலாழத்தில் ஒரு உயிரினத்தின் வாழ்க்கை

ஆழ்கடல் வாழ் உயிரினங்களின் தகவமைப்பிற்கு வெப்பநிலை மற்றும் அழுத்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. குளிர்ச்சி உள்ள பகுதிகளுக்குச் செல்லச் செல்ல தெளிவற்ற தன்மை அதிகமாகிறது. வெதுவெதுப்பான பகுதிகளுக்குச் செல்லச் செல்ல ஆழம் அதிகரிக்கிறது. ஜப்பான் பள்ளம் பசுபிக் பெருங்கடலில் மரியானா பள்ளத்திற்கு வட திசையில் தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு கடல் நீர் மரியானாவை விட சிறிதளவு அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது. இது நீரின் ஆழத்தில் வேறுபாடு ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 8200-8400 மீட்டர் ஆழத்தில் மீனினங்கள் வாழ்வது சாத்தியமற்றது என்று கருதப்பட்டது. மீன்கள் ஆஸ்மலைட் (Osmolyte) என்ற அழுத்தத்தை சமாளிக்கும் தன்மையுடைய திரவத்தை (fluid) பெற்றுள்ளது.

மீன்களுக்கென்று தனி வாசனை ஏற்பட இதுவே காரணம். உயிரி வேதியியல்ரீதியாக மீன்கள் வாழும் ஆழத்திற்கும் இந்த திரவத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. 8200-8400 மீட்டர் ஆழத்தில் வெப்பநிலை வேறுபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. செல்களில் உள்ள இந்த திரவத்தின் அடர்த்தி மேலும் அதிகரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது ஐசஸ்மோசிஸ் (Isosmosis) என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆய்வின்போது 250 முறை ஆழ்கடல் மிதவை வாகனங்கள் பயன்படுத்தப்பப்டன. இந்த ஜப்பான் ஆய்வின்போது கேமராவின் சாளரப்பகுதி குறுகலாக்கப்பட்டது. ஒவ்வொருமுறை வாகனம் கடலின் 8336 மீட்டர் ஆழத்தில் நிறுவப்பட்டபோதும் இந்த மீன்கள் காட்சி தந்தன.

பூமியிலேயே ஆழமான பகுதியில் வாழும் இந்த மீனின் கண்டுபிடிப்பு இயற்கை என்னும் அற்புதக் கலைஞனின் படைப்பில் மனிதன் இன்னும் அறிய வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதையே நினைவுபடுத்துகிறது!

மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2023/apr/03/scientists-find-deepest-fish-ever-recorded-at-8300-metres-underwater-near-japan?

&

Deepest ever fish caught on camera off Japan - https://www.bbc.co.uk/news/science-environment-65148876

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It