ஒரு முழுமையான நாத்திகரான பெரியார், சோவியத் ரஷ்யாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அங்கிருந்த கம்யூனிச முறையிலான அரசு குறித்து ஆய்வு செய்தார். 1932 இல் பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர் திரு. லான்ஸ்பெரி அவர்களுடன் இணைந்து, லண்டனின் "லேக் பார்க்'கில் 50 ஆயிரம் பேர் பங்கேற்ற ஒரு மாபெரும் பேரணியில் உரையாற்றினார். பின்னர் இந்தியாவிலிருந்தபோது தென்னிந்தியாவின் மூத்த கம்யூனிச தலைவரான சிங்காரவேலருடன் இணைந்து, புகழ் பெற்ற ஈரோடு சோசலிச திட்டத்தை தயாரித்தார். இருப்பினும் பிரிட்டிஷ் அதிகாரத்திடமிருந்து வந்த கடுமையான அச்சுறுத்தல் காரணமாக, தொடக்கத்தில் அவர் அதை பரப்புரை செய்யவில்லை. அவர் தமிழ்நாட்டில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது! ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக அதை அவர் இயங்கு நிலைக்கு கொண்டு செல்லவில்லை.

 periyar_404நலிவுற்றோரின் இயற்கையான துணைவராகிய பெரியார், மக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்களில் பெரிதும் ஈடுபட்டு வந்த பின்னணியோடு – சமத்துவம் மற்றும் சோசலிசத்தின் முன்னோடியாக இருந்தார். மனதின் ஆழத்தில் அவர் ஒரு மார்க்சியவாதியாகவும் இருந்தார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பார்ப்பனிய செயல்பாடுகளும் அவர்கள் மார்க்சியத்தை நடைமுறைப்படுத்திய முறையும், அவர்களின் சாதி பாகுபாடும் அவரை அவர்களுடன் இணைய அனுமதிக்கவில்லை. சோவியத் குடியரசின் சோசலிச கட்டமைப்பு மற்றும் அதன் இயங்குதன்மை குறித்து பெரியார் பெரிதும் பாராட்டி வந்தார். சோவியத் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய பிறகு ஈ.வெ.ரா. பெரியார், இந்தியாவில் உள்ள சாதியத்தின் சமூக, பொருளாதார கட்டமைப்பிற்கும், பிற நாடுகளில் உள்ள வகுப்பு போராட்டங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து, கீழ்க்கண்டவாறு அறிவித்தார் :

“கம்யூனிசம் பொது உரிமைகளிலிருந்து மாறுபட்டது. கம்யூனிசம் என்றால் சமபங்கு. பொது உரிமை என்பது, பொதுமையில் அனுபவிப்பதை குறிக்கிறது. இந்த நாட்டில் பார்ப்பனர்கள் சாதியை உருவாக்கியுள்ளனர். இந்த கீழ் சாதி மக்களுக்கு பொது உரிமையில்லை...''

“...கம்யூனிச சிந்தாந்தம் கற்றுக் கொடுப்பது என்னவெனில், பொதுவுடைமை/பொதுவுரிமை இல்லாத நாட்டில் கம்யூனிசத்திற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதே. பொதுவுரிமை இல்லாத நாட்டில் கம்யூனிசத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், கம்யூனிசத்தின் பலன்களை ஏற்கனவே அதிக உரிமைகளைப் பெற்று வந்தவர்களே அனுபவிப்பதற்கு மட்டுமே வழிவகுக்கும். இதுதான் கம்யூனிச சித்தாந்தத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.''

பெரியார் கற்றுக் கொண்டும், பரப்புரை செய்ததுமான அந்தப் பாடம் நடைமுறையில் உண்மையாகி இருக்கிறது. பார்ப்பன கம்யூனிஸ்டுகளின் (மநுவாதி) தலைமையில் இயங்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தக்கூடிய உழைக்கும் மக்கள் – பாட்டாளிகள் ஆகியோருக்கான இயக்கத்தின் நடைமுறை வெளிப்பாடு என்பது, பெரியாரின் ஆய்வினை முழு உண்மையாக்கி இருக்கிறது. ஏற்கனவே கோயில் மற்றும் தெய்வீக கருத்துகளின் வழியாக அனைத்து சலுகைகளையும் மொத்த உரிமையாகக் கொண்ட பார்ப்பனர்கள் – மார்க்சியத்தின் பெயரால் வங்காளம், திரிபுரா மற்றும் கேரளாவில் நடைபெற்ற இயக்கங்களின் அதிகபட்ச பயனை அனுபவித்து வருகின்றனர். அடிமைகளை உருவாக்கியவர்களே அந்த அடிமைகளின் பெயரைச் சொல்லி, சலுகைகளை அனுபவிக்கின்றனர். அவர்கள் உருவாக்கிய இந்த சாதிய அமைப்பால் பலியானவர்கள், தற்போது மேலும் பலியாக்கப்பட்டுள்ளனர்.

மார்க்சியத் தத்துவம் என்பது தற்கொலை செய்து கொள்வதற்கோ, தன்னைத் தானே அழித்துக் கொள்வதற்கோ அல்ல. தன்னுடைய சலுகைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கோ, வகுப்பு நீக்கம் செய்வதற்கோவான போராட்டத்தைத் தொடங்க – ஒருவருக்கு அது கற்றுக் கொடுக்கவோ, பயிற்சி அளிக்கவோ இல்லை. இருத்தலுக்கான போராட்டத்திற்கான நோக்கம் என்பது – உயிரியல் உள்ளுணர்வின்படி, மேலான சலுகைகளைக் கொண்ட நிலையை அடையவும், கூடுதலாகப் பெறவுமே. எந்த உயிரினமும் தான் அனுபவிக்கக் கூடிய மேலான நிலையை சிறிதளவேனும் இழக்கப் போராடுவதில்லை. அவை ஒரு நேர்மையான போராட்டத்தையே ஊக்குவிக்கின்றன. அதன் நோக்கம் கூடுதலாகப் பெறுவது அல்லது இழந்த உரிமைகளை மீள் பெறுவது மட்டுமே. அது எதிர்மறையான போராட்டம் அல்ல.

கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கை மிகத் தெளிவாக அறிவிக்கிறது. சமூகத்தின் உற்பத்திப் பொருட்களை உரிமையாக்கிக் கொள்வதற்கான அதிகாரத்தை, எந்தவொரு மனிதருக்கும் கம்யூனிசம் மறுக்கவில்லை. அது மறுப்பதெல்லாம், அவ்வாறு உரிமையாக்குவதற்காக பிறரின் உழைப்பை சுரண்டுவதையே ஆகும். அது இழந்த உரிமைகளை திரும்பப் பெறுவதற்கான நிலைத்த புரட்சிகர நடவடிக்கைகளின் கருத்தியல். அதிகாரத்தின் பீடத்தை கைக்கொள்ள அல்லது பெற இயலாதவர்கள் நடத்தும் போர். இப்போராட்டம் உளப்பூர்வமானது. ஏனெனில், அது அடிமைப்படுத்துவதற்கான எழுச்சி அல்ல; அல்லது எந்த தனி நபரையோ, வகுப்பினரையோ சுரண்டவோ, மறுக்கவோவான போராட்டமும் அல்ல.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற தத்துவங்களின் அடிப்படையில் ஓர் அரசையும், ஒரு சமூகத்தையும் நிர்மாணிப்பதற்கான தொடர்ச்சியான போராட்ட தத்துவத்தின் வெளிப்பாடு. ஆக, கம்யூனிசத்தின் சாரம் என்பது அன்பு. அன்பு என்பது மனிதர்களின் இணைந்த போக்கிற்கான வெளிப்பாடு. மறுபுறத்தில், பார்ப்பனியத்தின் அடிப்படையானது, வெறுப்பு, தனிமைப்படுத்துதல் மற்றும் மறுத்தலின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் பார்ப்பனர்கள் தங்களின் வீழ்ச்சியை நோக்கமாகக் கொண்ட தத்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்? தங்களின் இயற்கையான மற்றும் வகுப்பு எதிரியான உழைக்கும் மக்களின் நலனிற்காகப் பாடுபடும் "நன் மக்களாக' அவர்கள் ஏன் ஆனார்கள்?

இந்திய சமூக – பொருளாதார அமைப்பில், தலித்துகள்தான் (பழங்குடியினர், தீண்டத்தகாதோர் மற்றும் சூத்திரர்களோடு, ஒரு குறிப்பிட்ட பகுதி சிறுபான்மையினர்) உழைக்கும் வகுப்பினராக இருக்கின்றனர். அவர்கள்தான் உழவு, குடிசைத் தொழில், தொழிற்சாலைகள் அல்லது பிற அமைப்பு சாரா உற்பத்தி அல்லது பணிகள் என அனைத்துத் துறைகளிலும் குறைவான சம்பளத்தில் அல்லது சம்பளமே இல்லாத உழைக்கும் கூட்டத்தினராக இருக்கின்றனர். அவர்களின் உயர்நிலை முதலாளிகளின் மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் மினுக்க வைக்க, அவர்களின் கூடுதல் உழைப்பு சுரண்டப்படுகிறது. அவர்கள் மிகப் பெரும்பான்மையினராகவும் (பகுஜன்), சமூகத்தின் அடித்தட்டினராகவும் இருக்கின்றனர். அவர்கள்தான் பார்ப்பனிய சமூக அமைப்பில் இலவச உழைப்பாளிகளாக அல்லது தெய்வீக அடிமைகளாக (தெய்வீகத் தன்மையால் அல்லது ஆன்மீக சட்டத்தால் உருவாக்கப்பட்ட அடிமைகள்) இருக்கின்றனர்.

முதல் வெளிநாட்டு ஊடுருவாளர்களான ஆரியப் பார்ப்பனர்களால் கி.மு. 1600 – 1500 காலகட்டத்தில் இந்தியா கைப்பற்றப்பட்டபோது, இவர்கள்தான் தங்கள் நிலத்திலிருந்து விரட்டப்பட்டு, இயற்கையான அடிமைகளாக, சூத்திரர்களாக நிலை இறக்கப்பட்ட இலவச உற்பத்தியாளர்கள். ரிக் வேதம், சூத்திரர்களையும் தீண்டத்தகாதவர்களையும் “இரண்டு கால் மிருகங்கள் – "நிரிபசு' என்று குறிக்கிறது. இந்தியாவின் தொல்குடி மக்களான இவர்கள், வெளிநாட்டு ஆரிய வெற்றியாளர்களின் பொது சொத்தாகிப் போயினர். அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கென குறிப்பான முதலாளியோ, உரிமையாளரோ இல்லை.

karl_marx_373அய்ரோப்பா அல்லது இங்கிலாந்தின் வரலாற்றிளன் சுவட்டிலிருந்து கூர்மையாக வேறுபட்டு, இந்திய பூர்வகுடிகள் தங்கள் சொந்த மண்ணின் மீதான உரிமைகள் பறிக்கப்பட்டதோடு, அவர்களை அடிமைப்படுத்தியவர்களின் மனித கால்நடைகளாக நிரந்தரமாக மாற்றப்பட்டனர். அய்ரோப்பாவில், காட்டுமிராண்டி வாழ்க்கையின் மேல் நிலையில், பராமரிப்புக்கும் அதிகப்படியான மனித உழைப்பினால், கால்நடை பராமரிப்பு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அடிமைகள் மனித கால்நடைகளாக நடத்தப்பட்டனர். இந்நிலைக்கு முன், வெற்றி பெற்ற பழங்குடியின குழுக்கள், தங்களிடம் தோற்ற குழுவின் உறுப்பினர்கள் அனைவரையும் முற்றிலுமாக அழித்தொழித்து விடுவர். என்றபோதும், அய்ரோப்பிய சமூகத்தின் இந்த மனித கால்நடைகள், தெய்வீக அடிமைகள் என்ற பெயரில் ஒரு தனித்துவமான மனித இனமாக மாற்றப்படவில்லை. கொடூரமான ஆரிய வெற்றியாளர்களோ, நாகரிகமடைந்த இந்தியர்களை, காட்டுமிராண்டி வாழ்க்கையில் மேல் நிலைக்கு தள்ளி விட்டுவிட்டனர். மனித இனத்தை மனித கால்நடைகளாக அல்லது இரண்டு கால் மிருகங்களாக கீழிறக்கிவிட்டனர்.

தங்கள் நில உரிமையிலிருந்து விரட்டப்பட்ட பெரும்பகுதி மக்கள் மனித நிலையிலிருந்து இறக்கப்பட்டு, மனித கால்நடைகள் என்ற தனி மனித இனமாக அறிவிக்கப்பட்டனர். பிறர் சூத்திரர்கள் போன்று அடிமைகளாயினர். தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த தங்கள் உழைப்பை விற்பதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. இவ்வாறு உற்பத்தியாளர்கள் அல்லது உழைக்கும் வர்க்கத்தினர், சமூகத்தின் சொத்து மற்றும் உற்பத்தி முறைகளின் மீது பொது உரிமையை இழக்கும்படியும், வர்க்கப் போராட்டத்தில் இணைய தவறும்படியும், பல்வேறு இனங்களாகப் பிரிக்கப்பட்டனர். இரு வெவ்வேறு இனங்களிடையே நடைபெறும் சுரண்டலானது, வர்க்கப் போராட்டத்தை உருவாக்காது. ஏனெனில், உற்பத்தி முறைகள் மீது எவ்வித பொது உரிமையும் இருப்பதில்லை. இதனால் மனித ஆர்வங்கள் மரத்துப் போக செய்யப்பட்டன. இதன் விளைவு, வர்க்கப் போராட்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டது.

இந்த சூழலில், மநுவாதி பார்ப்பனர்கள் மார்க்சியத்தின் பக்கம் திரும்பியது என்பது, மார்க்சியத்தை கடத்தி, சமஸ்கிருதமயமாக்கல் எனும் நடவடிக்கையின் மூலம் அத்தத்துவத்தை இந்துமயமாக்குவதே ஆகும். சமஸ்கிருதமயமாக்கல் என்பது, ஒரு தத்துவத்தை அல்லது கருத்தியலை இந்துமயமாக்குவது அல்லது சாதியின் வடிவத்தில் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதே ஆகும். இந்த செயலானது, உழைக்கும் வர்க்கத்தினரின் ஆயுதத்தைப் பிடுங்கி, அதை உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிராகவே பயன்படுத்துவதாகும்.

உலகளாவிய அமைப்புகளை சேர்ந்த கம்யூனிஸ்டுகள், இந்தியாவின் உண்மையான உழைக்கும் வர்க்கத்தினருடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தார்கள் எனில், 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தொடங்கப்பட்டு, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டம் வரை தொடர்ந்த தீண்டத்தகாதோரின் பலமிக்க அரசியல் இயக்கமானது, மிக முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்களின் கைகளை அடைவதற்கு முன் கம்யூனிசத்தை கடத்துவது என்பது, இந்தியாவின் ஆளும் சாதிகள் மற்றும் வகுப்பினருக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது. 1920 அக்டோபர் தொடங்கி, பார்ப்பனியத் தலைவர்கள் மார்க்சியத்தை இரு வேறு நிலைகளை இணைப்பதன் மூலம் – தங்கள் சொந்த நலன்களை காப்பதற்கே பயன்படுத்தினர்.

1.உழைக்கும் மக்களின் புரட்சி ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக பிரிட்டிஷ் அதிகாரத்தை மிரட்டி, அதன் மூலம் தங்கள் கைகளில் விரைவாக அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு பேரம் பேசினர். 2. வங்காளத்தின் குருசந்த் தாக்கூர், மகாராட்டிரத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் மற்றும் தமிழ் நாட்டின் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோரின் சீரிய தலைமையின் கீழ் வெகுவாக வளர்ந்து வந்த உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கங்களை திசை திருப்பி, பிளவுபடுத்தி, சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தியாவின் ஆளும் வகுப்பினர் இதில் வெற்றியும் பெற்றனர். மார்க்சியத்தின் பெயரால், அவர்கள் முன்னிறுத்தியது பார்ப்பனியமே. காரல் மார்க்ஸ் பார்ப்பனர்களின் திறனை அறிந்து வைத்திருந்தார். ஒரு கடிதத்தில் அவர் பின்வருமாறு எழுதினார் : “இந்தியாவை வெற்றிகரமாக ஆக்கிரமித்த அராபியர்கள், துருக்கியர்கள், தாத்தர்கள், முகலாயர்கள் ஆகியோர் வெகு விரைவிலேயே இந்துமயமாயினர். வரலாற்றின் நிரந்தர சட்டத்தின்படி, கொடூரமான ஆக்கிரமிப்பாளர்கள், தங்களின் கீழுள்ள மக்களின் உயர் நிலையில் இருப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டனர்.''

உற்பத்தி வகுப்பினர் மார்க்சியத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பே, மநுவாதி தலைவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள முன் வந்தனர். அவர்கள் உடனடியாக அதனை கடத்தி, மார்க்சியத் தையும் இந்துமயமாக்கினர். இந்த முறை கொடூரமான ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, ஆனால் அய்ரோப்பாவிலிருந்து வந்த அறிவியல் சமூகவியல் தத்துவம் இந்துமயமாகியது. இந்து மதம், ஒரு சமத்துவமற்ற மதம். வெறுப்பு, பயங்கரவாதம், சுரண்டல், கொள்ளை ஆகியவற்றின் ஆதரவோடு ஒடுக்குமுறையின் முன்னோடியாகத் திகழும் இந்து மதம், தனது ஆற்றல் மிக்க எதிரிகள் அனைத்தையும் கடத்தி ஆரியமயமாக்குவதன் மூலமே பல்லாண்டு காலமாக நிலைத்து வருகிறது. இத்திட்டமே "உள்வாங்குதல்' என்றழைக்கப்படுகிறது. 

- எஸ்.கே.பிஸ்வாஸ்

தமிழில் : பூங்குழலி

Pin It