(சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தெருவில், கொசுக்கள் சேராத வண்ணம் பிளீச்சிங் பவுடரை பிளீச்சிங் பவுடரை பிளாஸ்டிக் கூடையில் கொட்டி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.)

chennai_356அந்தப் பெருநகரத்தின் தெருக்களைப் போல்
அவன் சுத்தமில்லாதவன்
ஆனால் அவற்றை சுத்தம் செய்தவன் அவன்தான்
எவரும் காணச் சகிக்காத அவன் முகத்தை
குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு
வாழ்கிறான்
கனவான்கள் உலவும் வீதிகள் அவனிடம்
ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன
அவனுக்கான வீடென்று எதுவும் இல்லை
கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு
தேடுகிறான்
வீதிகளின் ஓரங்களிலும் முனைகளிலும்
குப்பைகளை வீணென வீசியெறிந்த
அழுகிய தின்பண்டங்களை
அழுக்கடைந்த அவன் உடைகளையோ
அவன் உடலையோ
தூய்மையாக்கிக் கொள்ளும் அந்தத் தருணம்
நிகழாமலேயே பார்த்துக் கொள்கின்றனர்
பொதுமக்கள்
மேலும் இருப்பனவற்றை தெருவில் போட்டு
துன்பங்களின் உயரத்தில் நின்று கதறுகிறது
அவன் வாழ்க்கை
கார்களின் கண்ணாடிகளை ஏற்றிக் கொண்டு
ஜாஸ் இசைக்க வேகமாகச் செல்லும்
அவர்களுக்கு எதுவுமே கேட்பதில்லை
அழுக்கடைந்த அவன் மூச்சுக்காற்று உலவும்
நுரையீரல்களின் வலியை
எவருமே அறிவதில்லை
பரந்த பல்கலைக் கழகங்களில்
ஆய்வு மேடைகளில்
அடர்ந்த அச்சடித்த ஆய்வேடுகளில்
பேசுகின்றனர்
அவனைத்தான்
ஆதிக்குடியென்று
ஆதிவாசியென்று
ஆதித்தமிழனென்று!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.