“பறிக்கப்பட்ட உரிமைகளை, அவ்வாறு பறித்தவர்களின் மனசாட்சியை நோக்கி விடுக்கப்படும் வேண்டுகோள்கள் மூலம் கண்டிப்பாக மீட்டெடுக்க முடியாது. மாறாக, இடையறாத போராட்டத்தின் மூலமாக மட்டுமே மீட்டெடுக்க முடியும்.''

– டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

ஏப்ரல் 14, 2008 அன்று இந்தியா முழுவதும் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த தெர்தாக் திபோர் என்பவரிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அவர் எனக்கு அறிமுகமற்றவர். “பள்ளிகளா, கழிவறைகளா, கோயில்களா?'' என்ற எனது கட்டுரையை இணையத்தில் படித்துவிட்டு அதைப் பாராட்டி அவர் எழுதியிருந்தார். எனது கட்டுரையில், “ஒவ்வொரு தெரு முனையிலும் நாம் கோயில்களை கட்டியுள்ளோம். ஆனால் அந்த அளவிற்கு கழிவறைகளையோ, பள்ளிகளை÷யா கட்டவில்லை'' என ஆதங்கப்பட்டிருந்தேன். தான் ஒரு சமூகவியலாளர் என்றும், ஹங்கேரி நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்றும் குறிப்பிட்டிருந்த திபோர், தற்பொழுது ரோமா சமூகத்திற்காகப் பணியாற்றிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ரோமா சமூகத்தினர், "ஜிப்சிக்கள்' என்று இழிவாக அய்ரோப்பா முழுவதிலும் அழைக்கப்படுகின்றனர். 

பின்னர் தொடர்ந்த மின்னஞ்சல் உரையாடல்கள் ஊடாக, ரோமா சமூகத்தினர் ஹங்கேரியில் சந்திக்கின்ற சிக்கல்களையும் அவர்களது வாழ்க்கை குறித்தும் நான் படிப்படியாக அறிந்து கொண்டேன். அதே நேரத்தில், இந்தியாவில் உள்ள தலித்துகளின் நிலை குறித்து அவருக்கு நான் விளக்கி வந்தேன். 

எனக்கு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டிய செய்தி என்னவெனில், தெர்தாக் திபோர், தானும் மற்றொரு ரோமா தலைவரான ஆர்சொஸ் ஜெனோஸ் ஆகிய இருவரும், எவ்வாறு டாக்டர் அம்பேத்கரின் சமூக மாற்றத்திற்கான கொள்கைகளும், தலித்துகளிடையே அவர் மேற்கொண்ட பணிகளும் தங்களுக்குப் பெரும் உந்து சக்தியாக இருக்கிறது என்பதையும், ரோமா சமூகத்தினரின் சம உரிமைக்கானப் போராட்டத்தில் – அம்பேத்கரின் சிந்தனைகளையும் வழிமுறைகளையும் செயல்படுத்த தாங்கள் முயல்வதாகவும் கூறியதுதான்! எப்படி, ஏன் அம்பேத்கர்? திபோர் தற்செயலாக அம்பேத்கர் பற்றிய ஒரு நூலை பாரிசில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அது அவருக்கு புதியதொரு உலகத்தை திறந்து காட்டியது. தலித்துகள் இந்தியாவில் சந்திக்கும் வேற்றுமைக்கும், ரோமாக்கள் அய்ரோப்பாவில் சந்திக்கும் வேற்றுமைக்குமான ஒற்றுமைகளை அவரால் உடனடியாக உணர முடிந்தது. 

ரோமாக்கள் கருத்த நிறமுள்ள அய்ரோப்பிய நாடோடிக் குழுவினராகக் கருதப்படுகின்றனர். வட இந்தியாவிலிருந்து வந்திருக்கக் கூடியவர்களாகக் கருதப்படும் இவர்கள் உலகெங்கிலும் ஏறத்தாழ ஒரு கோடியே 20 லட்சம் பேர் இருக்கிறார்கள். அய்ரோப்பாவில் மட்டும் 80 லட்சம் மக்களாக இருக்கும் இவர்கள், அய்ரோப்பாவின் ஆகப் பெரிய சிறுபான்மைக் குழுவாக இருக்கின்றனர். வெள்ளை அய்ரோப்பியர்களால் தொடர்ந்து எதிர்க்கப்பட்டும், மறுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும், முத்திரை குத்தப்பட்டும் வந்த வரலாற்றினைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஹங்கேரியின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவிகிதத்தினராக உள்ளனர். 

அம்பேத்கரைப் பற்றி அறிந்த பிறகு, திபோரும் ஜெனோசும் 2005 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் மகாராட்டிரத்திற்கு வந்திருக்கின்றனர். இந்தியாவின் தலித்துகளுடனும், அம்பேத்கரின் அதிகாரப்படுத்தும் செயல் திட்டத்துடனும் தங்களுக்கு ஆழமான தொடர்பு இருப்பதாக உணர்ந்தனர். ஹங்கேரி திரும்பியவுடன், 2007இல் "ஜெய் பீம்' குழுவினை அமைத்தனர். பவுத்தத்தைத் தழுவினர். அதோடு டாக்டர் அம்பேத்கர் பெயரில் ரோமா குழந்தைகளுக்கென சஜோகாசா, ஓஸ்த் மற்றும் ஹெகிமென் ஆகிய இடங்களில் 3 மேல்நிலைப் பள்ளிகளை திறந்தனர். ஜெய் பீம் குழுவின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக, இந்தியாவிலிருந்து இளம் தலித் செயற்பாட்டாளர்களை ஹங்கேரிக்கு வரவழைத்து, ரோமா சமூகத்தினருடன் பழகுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்துவதை வைத்திருக்கின்றனர். அண்மையில் அப்படியான ஒரு 3 நபர் குழுவில் நானும் சென்றிருந்தேன். சஜோகாசா கிராமத்தில் ரோமா சமூகத்தினருடன் ஏறத்தாழ ஒரு மாதம் வாழ்ந்திருந்தேன்.

சஜோகாசா மிஸ்கோலேயில் இருந்து வடகிழக்கில் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் அழகிய கிராமம். 3,300 பேரை கொண்ட அக்கிராமத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ரோமா சமூகத்தினர். ரோமாக்களில் பெரும்பான்மையினர், ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான ஓர் இடத்திலேயே வாழ்கின்றனர். அவர்கள் வாழ்கின்ற பகுதியில் குழாய் நீர் இல்லை. தெரு விளக்கு இல்லை. கழிவு நீர் வடிகால் இல்லை. சில மீட்டர்கள் தொலைவில் அருகில் உள்ள ரோமாக்கள் அல்லாதவர்கள் குடியிருக்கும் தெருக்களில், இந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் ரோமாக்கள் அனைவரும் அருகில் உள்ள சுரங்கத்தில் வேலை செய்து வந்தனர்.  

ஆனால் தற்பொழுது அனேகமாக அனைவருமே வேலையின்றி உள்ளனர். அரசாங்கங்கள் அளிக்கும் கனிவுத் தொகையில் வாழ்கின்றனர். நாங்கள் தங்கியிருந்த காலத்தில், இந்தியாவில் தலித்துகள் அனுபவிக்கும் அதே அளவிற்கு ரோமாக்களும் அன்றாடம் வேற்றுமைகளை அனுபவிக்கின்றனர் என்பதை நாங்கள் உணர முடிந்தது. சஜோகாசாவில் 3 கிறித்துவ கோயில்கள் உள்ளன. ஆனால் ஒரு ரோமா கூட அவற்றில் ஒன்றிற்கும் செல்வதாகத் தெரியவில்லை. இந்தியாவில் இந்து கோயில்களுக்குள் தலித்துகள் நுழைவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டிருந்தும், நடைமுறையில் தடை செய்யப்பட்டிருப்பதை இது நினைவூட்டியது. 

ஹங்கேரி ரோமாக்களின் கல்விக்கு உள்ள பெரிய தடை என்னவெனில், ரோமா குழந்தைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தனி வகுப்புகளில் அமர கட்டாயப்படுத்தப்படுகின்றனர். எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற பாழடைந்த கட்டடங்களில், அவர்களுக்கு தனியாக வகுப்புகள் – பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, ஹங்கேரி குழந்தைகள் அனைத்து வசதிகளும் நிறைந்த பொதுப் பள்ளிகளில் பயில்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட ரோமா மாணவர்களுக்கு தனிக் குவளைகளும் தட்டுக்களும் இருந்ததாக திபோர் கூறுகிறார்.

தொடர்ந்து மானுட நிலையிலிருந்து கீழிறக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும், ஒதுக்கப்பட்டும், வேறுபடுத்தப்பட்டுமே ரோமா குழந்தைகள் வளர்கின்றனர். அவர்கள் மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் என்று தனியான பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். எந்த அளவுக்கு எனில், இப்படியான சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 90 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இப்படியான தரம் பிரித்தல் பள்ளிகளோடு நிற்கவில்லை. 2003 ஆம் ஆண்டு "அய்ரோப்பிய ரோமா உரிமை மய்யம்' ஹங்கேரியில் மேற்கொண்ட கள ஆய்வில், "ஜிப்சி அறைகள்' என்று அழைக்கப்பட்ட தனியான பிரசவ அறைகள் குறித்து 44 வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.  

முத்திரை குத்துதல் என்பது வெறுப்பின் முக்கிய வெளிப்பாடு. வெள்ளையர்களால் ரோமாக்கள் மீது மிகமோசமான முத்திரைகள் குத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுகின்றனர். ஒரு சராசரி வெள்ளை அய்ரோப்பியரை பொருத்த வரையில் "ஜிப்சிக்கள்' என்றால் நிச்சயமாக ஏமாற்றுபவர்கள், பிச்சைக்காரர்கள், திருடர்கள், பிக்பாக்கெட் அடிப்பவர்கள், நாடோடிகள், அழுக்கான சூழலில் வாழ்பவர்கள், உழைக்கப் பிடிக்காதவர்கள், ரோமாக்கள் பிக்பாக்கெட் அடிக்க வசதியாக தங்களுடைய ஆட்காட்டி விரல்களை வெட்டிக் கொள்வதாக ரோமாக்கள் அல்லாதவர்கள் நம்புகின்றனர். ரோமா குழந்தைகள் நீளமாக மேல் சட்டை அணிவதற்கு காரணமே, வெள்ளையர் வீட்டுக் கோழிகளை திருடிச் செல்வதை மறைக்கத்தான் என்று நம்புகின்றனர். இந்த முன் தீர்மானங்கள் இன்றும் இருக்கின்றன.  

அய்ரோப்பாவில் சுற்றுலாவை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள இணைய தளங்களில், "ஜிப்சிக்கள் பற்றிய அறிவுரைகள்' வழங்கப்பட்டுள்ளன. ஓர் இணைய தளத்தில் "ரோம் நகரில் தனிப்பட்ட பாதுகாப்பு' என்ற தலைப்பில், “ஜிப்சி குழந்தைகள் உங்களை சூழ்ந்து கொள்ளக்கூடும். நீங்கள் ஆச்சரியப்பட்டு நிற்கையில் வெட்கமின்றி அவர்கள் உங்கள் உடைமைகளை திருடத் தொடங்குவார்கள். பின்னர் அவற்றை பெரிய ஜிப்சி பெண்களிடம் அளித்து விடுவார்கள்...'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. ரோமாக்கள் திருடர்கள் என்ற பிம்பம் மிக ஆழமாக பதியப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு எனில், அக்கம்பக்கத்தில் ஏதேனும் குற்றம் நடந்தால் உடனடியாக காவல் துறையினர் இவர்களையே முதலில் வளைத்துப் பிடிக்கின்றனர்.  

ஹங்கேரி நாட்டு வெள்ளையர்கள் இட்டுக்கட்டிய மிக பயங்கரமான கதை ஒன்றை நான் அறிய நேர்ந்தது. அது ரோமா பெண்கள் பற்றியது. கடந்த செப்டம்பரில் வடகிழக்கு ஹங்கேரியைச் சேர்ந்த எடிலெனியின் மேயரான ஓஸ்கர் மொல்னர், குழந்தைகளுக்கான கூடுதல் அரசு வசதிகளைப் பெறுவதற்காக, தன்னுடைய நகரத்தில் உள்ள ரோமா பெண்கள் வயிற்றிலிருக்கும் தங்கள் குழந்தைகளை சேதப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். சம உரிமைக்கான ஆணையம் ஓஸ்கர் மொல்னர் மீது வழக்கு தொடுத்தது. முக்கிய எதிர்க்கட்சியான பிடெஸ்சை சேர்ந்த அவர், ஆணையத்தை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகக் கூறியிருக்கிறார்.  

அக்டோபர் 11, 2009 அன்று ஹங்கேரி தலைநகரான புடாபஸ்ட்டில் உள்ள மாவீரர்கள் சதுக்கத்தில் 1500 ரோமாக்கள் திரண்டு மேயரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதோடு பள்ளிகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள தரப்படுத்துதலை எதிர்த்தும், அன்றாட வாழ்வில் காட்டப்படும் வேற்றுமைகளை எதிர்த்தும் தங்கள் உணர்வுகளைப் பதிவு செய்தனர். அந்த நிகழ்வில் பிடிக்கப்பட்ட ஒரு பதாகையில் இருந்த வாசகம் என்னைக் கவர்ந்தது! “ஒரு குழந்தையின் தலை ஒரு குடம் அல்ல.. நிரப்புவதற்கு... மாறாக அது ஏற்றப்பட வேண்டிய ஒரு விளக்கு''  

ஜெய்பீம் குழுவின் தலைவரான ஜெனொஸ், “நாங்கள் அம்பேத்கரின் பவுத்தத்திற்கு மாறிய பிறகு, மக்கள் எங்களை நோக்கி நீங்கள் எவ்வாறு ஜிப்சிக்களுக்கு பவுத்தத்தை போதிக்கலாம் என கேட்கின்றனர். நாங்கள் செய்வது முற்றிலும் வேறுபட்ட அவர்களுக்கு தெரிவதற்கு காரணம், அய்ரோப்பாவில் பவுத்தம் பெரும்பாலும் நடுத்தர வகுப்பினரின் பொழுது போக்காகவே இருக்கிறது. இருப்பினும் அவர்களுக்கு பதில் சொல்வது எளிது. அவர்கள் எங்கள் இனத்தவருக்கு ஒரு நல்ல கல்வியை அளிக்கவில்லை. ஆனால் நாங்கள் வழங்குகிறோம். யார் என்ன சொன்னாலும் சரி, நாங்கள் எங்கள் பணியை தொடர்ந்து செய்கிறோம்'' என்கிறார்.

நன்றி : "தி இந்து' 22.11.09

தமிழில் : பூங்குழலி 

Pin It