கட்டுடலிற் சட்டை மாட்டி - விட்டுக்
கத்திரித்த முடி சீவிப்
பட்டுச் சிறாய்இடை அணிந்தே - கையில்
பந்தடி கோலினை ஏந்திச்
சிட்டுப் பறந்தது போலே - எனை
விட்டுப் பிரிந்தனர் தோழி!
ஒட்டுற வற்றிட வில்லை - எனில்
உயிர்துடித்திட லானேன்.
வடக்குத் தெருவெளி தன்னில் - அவர்
மற்றுள தோழர்க ளோடும்
எடுத்ததன் பந்தடி கோலால் - பந்தை
எதிர்த்தடித் தேவிளை யாடிக்
கடத்திடும் ஒவ்வொரு நொடியும் - சாக்
காட்டின் துறைப்படி அன்றோ
கொடுப்பதைப் பார்மிகத் துன்பம் - இக்
குளிர்நறுந் தென்றலும் என்றாள்.
"வளர்ப்பு மயில்களின் ஆடல் -தோட்ட
மரங்கள், மலர்க்கிளை கூட்டம்.
கிளிக்குப் பழந்தரும் கொடிகள் - தென்னங்
கீற்று நடுக்குலைக் காய்கள்
அளித்த எழில்கண் டிருந்தாய் - உன்
அருகினில் இன்பவெள் ளத்தில்
குளிர்ந்த இரண்டு புறாக்கள் - காதல்
கொணர்ந்தன உன்றன் நினைவில்"
தோழி இவ்வா றுரைக்குங்கால் - அந்தத்
தோகையின் காதலன் வந்தான்.
"நாழிகை ஆவதன் முன்னே - நீவிர்
நண்ணிய தென்ன இங்கே" என்றாள்.
"தாழ்குழலே! அந்தப் பந்து - கைக்குத்
தப்பிஎன் தோளினைத் தாக்கி
வீழ்ந்தது; வந்ததுன் இன்ப
மேனி நினை" வென்று சொன்னான்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்