தனித்தமைந்த வீட்டிற் புத்தகமும் நானும்
சையோகம் புரிந்ததொரு வேளைதன்னில்,
இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;
இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!
மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்
மகாசோதியிற் கலந்த தெனது நெஞ்சும்!
சனித்ததங்கே புத்துணர்வு! புத்தகங்கள்
தருமுதவி பெரிது! மிகப்பெரிது கண்டீர்!
மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனித தத்வமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்,
இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ணமெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச்சாலை;
புனிதமுற்று மக்கள்புது வாழ்வுவேண்டில்
புத்தக சாலைவேண்டும் நாட்டில்யாண்டும்.
தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச்சாலை
சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்.
தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கி வாசிக்கத் தருதல்வேண்டும்,
அமுதம்போல் செந்தமிழிற் கவிதைநூற்கள்,
அழகியவாம் உறைநடையில் அமைந்த நூற்கள்,
சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலைசேர்
துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.
நாலைந்து வீதிகளுக் கொன்று வீதம்
நல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும்,
நூலெல்லாம் முறையாக ஆங்கமைத்து
நொடிக்குநொடி ஆசிரியர் உதவுகின்ற
கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே
குவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும்.
மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின்
முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்
வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்
மரியாதை காட்டி அவர்க் கிருக்கை தந்தும்,
ஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்
அழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை
நேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்
நினைப்பாலும் வாக்காலும் தேகத்தாலும்
மாசற்றதொண் டிழைப்பீர்! சமுதாயச்சீர்
மறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்