ஜாதி அகங்காரத்திலும், தாங்கள் தான் எல்லோரையும்விட புத்திசாலிகள் என்னும் ஆணவத்திலும், தாங்கள் தான் எந்தக் காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிக்கக் கூடியவர்கள் என்கின்ற மமதையிலும் பார்ப்பனர்களுக்கு ஈடாக யாரும் இல்லை என்பது நாம் வெகுகாலமாக அநுபவத்தில் அறிந்து பொது ஜனங்களுக்குக் கூறி வரும் விஷயமாகும்.

இந்த அகங்கார புத்தி கொண்டே பார்ப்பனர்கள் இன்று அரசியல் துறை, சமுதாயத் துறை, சமயத் துறை, பாஷைத் துறை, சங்கீதத் துறை, நாடகத் துறை, வைத்தியத் துறை, பத்திரிகைத் துறை, உத்தியோகத் துறை, வியாபாரத் துறை, காப்பி கிளப்புத் துறை ஆகிய எல்லாத் துறைகளிலும் புகுந்து அவைகளில் பார்ப்பனரல்லாதாரை முன்னேற விடாமல் அமிழ்த்தி வருகிறார்கள். இவ்வுண்மை பார்ப்பனர்களாலும், பார்ப்பனர்களின் செல்வாக்காலும் நடத்தப்படும் பத்திரிகைகளில் இன்று நடைபெறும் கட்டுப்பாடான பிரசாரத்தைக் கவனித்து வரும் சுயமரியாதையும், ரோஷமும், பகுத்தறிவும் உள்ள பார்ப்பனரல்லாதார்க்கு விளங்காமற் போகாது.periyar and sivajiஉதாரணமாக, அரசியல் துறையை எடுத்துக் கொண்டால் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி சாஸ்திரியார், பாஷியம் அய்யங்கார் போன்ற பார்ப்பனர்களுக்குத் தேசீயப் பத்திரிகைகளின் மூலம் கொடுக்கப் படும் விளம்பரத்தில் நூற்றில் ஒரு பங்காவது அவர்களுடைய சொற்களின்படி, அவர்களுடைய நோக்கத்திற்கு விரோதமில்லாமல், போடு தோப்புக்கரணம் என்றால் இதோ எண்ணிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் மாதிரியில் நடந்து வரும் பார்ப்பனரல்லாத தோழர்களான முத்துரங்க முதலியார், பக்தவச்சலம், அவனாசிலிங்கம், குமாரசாமிராஜா, சாமி வெங்கடாசலம் போன்றவர்களுக்கு கொடுக்கப்படுகின்றதா என்று பாருங்கள்!

சமயத் துறையில் எடுத்துக் கொண்டால், பார்ப்பனர்களுடைய செல்வாக்கை நிலை நிறுத்துவதற்குப் பாடுபடும் சங்கராச்சாரியார் போன்றவர்களுக்குக் கொடுக்கப்படும் பத்திரிகை விளம்பரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது மற்ற பார்ப்பனரல்லாத மடாதிபதிகளுக்கு அவர்களுடைய பொருளைப் பறித்து உயிர் வாழுகின்ற பார்ப்பனர்களாலோ, அவர்களுடைய பத்திரிகைகளாலோ கொடுக்கப்படுகின்றதா என்று பாருங்கள்.

வக்கீல்களில் எடுத்துக் கொண்டால், தோழர்களான எஸ். சீனிவாசய் யங்கார், ஜெயராமய்யர், வெங்கட்டராம சாஸ்திரியார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், ரங்காச்சாரியார் போன்றவர்களுக்குக் கொடுக்கப் படும் விளம்பரத்தில் பதினாயிரத்தில் ஒரு மடங்காவது தோழர்கள் எதிராஜலு, எஸ். முத்தைய முதலியார், வெங்கிட்டரமணராவ் நாயுடு, ஜியார்ஜ் ஜோசப் போன்ற பார்ப்பனரல்லாத வக்கீல்களுக்குக் கொடுக்கப் படுகிறதா என்று பாருங்கள்.

இதுபோலவே உத்தியோகங்களிலும் சர்.கே. சீனிவாச அய்யங்கார், வீ. கிருஷ்ணசாமி அய்யங்கார், சர்.சி.பி. ராமசாமி அய்யர் போன்றவர்கள் இருந்த காலத்தில் அவர்களை பார்ப்பனர்கள் என்பதற்காக எவ்வளவு பிரபலப்படுத்தினார்கள் என்பதையும், பிறகு அந்த ஸ்தானங்களில் பார்ப்பனரல்லாதவர்கள் வந்தவுடன் அவர்களை எவ்வளவு தூற்றுகிறார்கள் என்பதையும் தேசீயத்தைக் கொண்டாடும் பத்திரிகைகளைக் கவனிப்போர் தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் சங்கீத விஷயத்தை எடுத்துக் கொண்டால் அவ்வகையில் தமிழ்நாட்டில் ஒரு பார்ப்பனரல்லாதார்கூட கெட்டிக்காரர்களாக இல்லை என்று பாமரர்கள் நினைக்கும்படியும், சங்கீதத்திற்கென்றுதான் பார்ப்பனர்களே பிறந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் மாதிரியிலும், இன்று பார்ப்பனப் பத்திரிகைகள் பிரசாரம் பண்ணி வருவதை யாரும் அறியாமல் இல்லை. கழுதைக்கும் கேடு கெட்ட முறையில் பாட்டுப் பாடும் பிச்சைக்காரப் பார்ப்பனர்களை யெல்லாம் பெரிய சங்கீத சாகித்ய சிகாமணிகள் என்றும், சங்கீத கலா விற்பன்னர்களென்றும், சங்கீத சரப பூஜியர்கள் என்றும், சங்கீத வித்வ ரத்நாகர பூஷணங்கள் என்றும் விளம்பரம் பண்ணி, அவர்களுடைய படம் போட்டு, அவர்களைப் பற்றிப் புத்தகங்கள் பிரசுரித்து, அவர்களுக்குப் பண முடிப்பும் கொடுத்து பிரபலப்படுத்தி வைப்பதையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

உண்மையான நல்ல சங்கீத ஞானமுள்ள பார்ப்பனர்களையெல்லாம் எடுத்து விழுங்கி ஏப்பம்விடத் தகுந்த திறமையுடைய பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான்கள் எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களுடைய பெயர்கள்கூட பொது ஜனங்களுக்குத் தெரியாமல் இருக்கும்படியும், பார்ப்பனர்களுக்கே பேரும் புகழும் சம்பாதனையும் ஏற்படும்படியும் இந்த பார்ப்பனர்கள் கட்டுப்பாடாகத் தங்கள் பத்திரிகைகளில் பிரசாரம் பண்ணி வருவதை நாம் அறிந்தே வருகின்றோம்.

இன்று தமிழ் பாஷை விஷயத்தில் உழைப்பவர்களும், அதில் தேர்ந்த விற்பன்னர்களும் பார்ப்பனரல்லாத மக்களிலேயே ஏராளமாக நிரம்பி இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாததல்ல. தோழர்களான சுவாமி வேதாசலம், எஸ்.சோமசுந்தர பாரதியார், திரு.வி. கலியாணசுந்தர முதலியார், கா. நமசிவாய முதலியார் போன்ற எவ்வளவோ சிறந்த புலவர்கள் இருந்தும் அவர்களையெல்லாம் இந்தப் பார்ப்பனர்கள் மனதினால் நினைப்பதுகூடப் பாவமென்று நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் தோழர்கள் உ.வே.சாமிநாதய்யர், ராகவையங்கார், ராமாநுஜாச்சாரியார் போன்ற பார்ப்பனர்களுக்கே தமிழ் பாஷையின் பெயரினால் பெரிய விளம்பரமும் அவர்களால் தான் தமிழ் பாஷையே நிலைத்திருக்கிறது என்ற பிரசாரமும் செய்து வருகிறார்கள்.

சில வருஷங்களுக்கு முன், சமஸ்கிருதத்தில் உள்ள வியாச பாரதத்தை தமிழில் மொழி பெயர்த்தார் என்பதைச் சாக்கிட்டு கும்பகோணம் பண்டிதரான ராமாநுஜாச்சாரியார் அவர்களுக்குப் பத்திரிகைகளின் மூலம் பெரிய விளம்பரமும் பணமுடிப்பும் சேகரித்துக் கொடுத்தார்கள். ஜனங்களுக்கு மூடநம்பிக்கைகளையும் வருணாச்சிரம தருமங்களையும் சாதி வித்தியா சத்தையும் போதிக்கும் பாரதத்தை வெளியிட்டதற்காக இவ்வளவு பிரமாதப் படுத்திய இந்தப் பார்ப்பனர்களின் நோக்கம் என்னவாயிருக்க வேண்டும் என்பதே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்த வாரத்தில் சென்னையில், மகா மகோபாத்தியாயர் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் எண்பத்தோராம் வருஷம் பிறந்த நாட் கொண்டாட்டம் சம்மந்தமாகப் பார்ப்பனர்கள் கட்டுப்படாகச் செய்த விளம்பரத்தையும், பிரசாரத்தையும், முயற்சியையும் கவனித்தால் இதன் உண்மையை கடுகளவு புத்தியுள்ள பார்ப்பனரல்லாதாரும் மானமிருந்தால் தெரிந்து கொள்வார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை.

டாக்டர் சாமிநாத அய்யர் அவர்கள், அவருக்கு முன்னிருந்த சில புலவர்களாலும், சென்னைச் சர்வகலா சங்கத்தாராலும், சில புத்தகங்களின் மூல பாடங்களும், சில புத்தகங்களின் ஒவ்வொரு பகுதியும் உரைகளும் வெளியிடப்பட்டிருந்த சங்க இலக்கியங்களையும், முழுப்பாகமும் வெளியிடப்படாமலேயிருந்த சில புத்தகங்களையும், பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாரின் துணை கொண்டு தேடிப் பிடித்து ராமநாதபுரம் அரசர், திருவாவடுதுறை மடத்தார் போன்றவர்களின் உதவி பெற்று அவைகளை அச்சிட்டு வெளிப்படுத்தி, அதன் மூலம் பிரயாசைப்பட்டதற்கு ஏற்ற பொருள் லாபமும் பெற்றிருந்தாலுங்கூட, விடா முயற்சியுடன் தமிழ்ப் புத்தகங்களை, அதிலும் பழய சங்க இலக்கியங்கள் என்பன பலவற்றை ஒழுங்கான முறையில் சீர்திருத்தி வெளியிட்டமைக்காகத் தமிழபிமானிகள் அவருக்கு நன்றி பாராட்ட வேண்டும் என்பதை நாமும் மனப்பூர்வமாக ஆதரிக்கின்றோம்.

ஆனால் நேற்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் போன்ற அரசியல் பார்ப்பனர் முதல் தமிழ் என்னும் வார்த்தையை உச்சரித்தாலே "சூத்திர பாஷை"யைச் சொன்ன பாவம் வந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற உஞ்சிவிருத்திக்கார வைதீகப் பார்ப்பனர் வரை எல்லோரும், டாக்டர் அய்யர் அவர்களைப் பற்றி வானமளாவப் புகழ்ந்து, மகா மகோபாத்தியாயர், தக்ஷிணாத்ய கலாநிதி, டாக்டர் என ஏற்கனவே அவருக்குக் கிடைத்திருக்கும் பட்டங்களைப் பாராட்டியதோடு, "தமிழ் வியாசர்" என்னும் புதியதொரு பட்டத்தையும் சூட்டுவதாகப் பத்திரிகைகளில் விளம்பரம் பண்ணினார்கள். இவருடைய புகழ்ச்சிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பத்திரிகைகளில் அநுபந்தங்களும், புகழ் மாலைகளும் வெளியிட்டார்கள். சென்னையில் உள்ள பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பனர்களின் வால்பிடித்துத் திரியும் தேசீயக் கூச்சல் போடும் பத்திரிகைகளும் நாலைந்து தினங்கள் சர்வம் சாமிநாதய்யர் மயமாகவே விளங்கும்படி செய்தார்கள். இவ்வாறு செய்தமைக்காக நாம் பொறாமையோ, துவேஷமோ, வயிற்றெரிச்சலோ ஒரு சிறிதும் அடையவில்லை. பார்ப்பனர் களால் "சூத்திர பாஷை" என்று அலட்சியம் செய்யப்படுகின்ற தமிழ் பாஷையின் மூலம் ஒரு பிராமணர் கௌரவிக்கப்பட்டதற்காகச் சந்தோஷமே அடைகிறோம்.

பார்ப்பனர்கள், டாக்டர் சாமிநாதய்யர் விஷயத்தில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டதன் அந்தரங்க நோக்கம் என்ன என்பதை பார்ப்பனரல்லாதார் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி வெளிப்படுத்த விரும்பியே இவ்விஷயங்களை எழுத முன் வந்தோம்.

உண்மையில் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் பாஷையின் மேலும், தமிழ் அபிவிருத்தியிலும் ஆசையுடையவர்களானால் இந்த டாக்டர் அய்யர் அவர்களை இன்று பார்ப்பனர்கள் கவுரவம் பண்ணுவதற்குக் காரணமாக இருந்த, அவருடைய ஆசிரியரான காலஞ்சென்ற மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றியோ, கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்த காலஞ்சென்ற தியாகராஜச் செட்டியார் அவர்களைப் பற்றியோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது. ஆனால் இவர்களைப் பற்றிப் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ளும்படி செய்யவோ, இவர்கள் அய்யர் அவர்களுக்குச் செய்த நன்றியை எடுத்துக் காட்டவோ எந்தப் பார்ப்பனரும், எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும் முன்வரவில்லை.

அன்றியும் தமிழைப் படிப்பாரும், ஆதரிப்பாரும், படிப்பாருக்கு உதவியளிப்பாரும், இல்லாதிருந்த காலத்தில் மதுரையில் தமிழ்ச்சங்கத்தை ஏற்படுத்தி, அதன் பயனையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அடையும்படி செய்து அச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவே சாகும் வரையிலும் உழைத்துக் காலஞ்சென்ற பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பற்றி மனதினாலாவது இந்தப் பார்ப்பனர்கள் நினைத்ததுண்டா?

தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங்களையும், மற்றும் பல இலக்கியங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களைப் பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையேனும் பேசுவதுண்டா?

தற்பொழுது கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை வைத்து நிர்வகித்து பெரும்பாலும் தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணம் பண்ணி வரும் தோழர் உமாமகேசுரன் பிள்ளை அவர்களின் முயற்சிகளுக்கு இந்தப் பார்ப்பனர்கள் துணை செய்யாவிட்டாலும்கூட பாதகஞ் செய்யாமல் இருக்க வேண்டும் என்றாவது நினைக்கிறதுண்டா?

உண்மையில் பார்ப்பனர்களுக்குக் கொஞ்சமாவது தமிழ் மொழிக்கும் தமிழ் அபிவிருத்திக்குப் பாடுபட்டவர்களுக்கும், பாடுபடுகின்றவர்களுக்கும் பெருமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அல்லது யாராயிருந்தாலும் பார்ப்பனர்களுக்கே பெருமையும் விளம்பரமும் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதா என்பதை இது வரையிலும் சொல்லி வந்ததைக் கொண்டும் மேலே நாம் எடுத்துக் காட்டியவர்களின் ஊழியத்தைச் சிறிதாவது பாராட்டுவதற்கு முயற்சி எடுக்காததைக் கொண்டும் அறிந்திருக்கலாம்.

இன்னும் பார்ப்பனர்கள், தங்களுடைய விளம்பரத்திற்காக பார்ப்பன ரல்லாதாரை உபயோகித்துக் கொள்ளுவதிலும் வெகு தந்திரமாகவே நடந்து கொள்ளுகிறார்கள் என்பதையும் டாக்டர் சாமிநாதய்யரின் பாராட்டுக் கூட்டத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அய்யரவர்களுக்குக் கொடுப் பதற்காகச் சேகரித்த பண முடிப்புக்கு உதவினவர்களில் நூற்றுக்கு தொண்ணூறுபேர் பார்ப்பனர்களாகவேயிருந்தும் இந்த காரியத்தை ஒரு பார்ப்பனரல்லாதார் தலைமையிலும் ஒரு முஸ்லீம் தலைமையிலுமே நடத்தியிருக்கிறார்கள். மந்திரி கனம் பி.டி. ராஜனவர்கள் பாராட்டுக் கமிட்டித் தலைவராகவும், சர். மகமது உஸ்மான் அவர்கள் பாராட்டுப் பொதுக் கூட்டத் தலைவராகவும் இருக்கும்படி செய்திருக்கிறார்கள். எல்லாக் காரியங்களையும் பார்ப்பனர்களே செய்துவிட்டு இந்த இரண்டு பேரை தலைவர்களாக இருப்பதற்கு மாத்திரம் வைத்துக் கொண்டதன் நோக்கம், தமிழ்நாட்டிலுள்ள முஸ்லீம்கள், பார்ப்பனரல்லாதார்கள் ஆகிய எல்லோரும், டாக்டர் அய்யர் அவர்களைவிடத் தமிழில் பெரியவர்கள் யாரும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளுகிறார்கள் என்பதற்காகவே தான் என்று சொல்வது குற்றமாகுமா?

இந்த மாதிரியே எந்தத் துறையில் எடுத்துக் கொண்டாலும், பார்ப்பனர்களே விளம்பரமும், அதன் மூலம் ஆதிக்கமும், அதன் மூலம் பண லாபமும் பெற்று வருவதையும், எந்தத் துறையிலும் பார்ப்பனரல்லாதார் இழிவுபடுத்தப்பட்டும், அழுத்தப்பட்டும் மதிப்புக் குலைந்து வருவதையும், இவைகளுக்கெல்லாம் தேசீயப் பார்ப்பனர்களே முக்கிய காரணமாயிருந்து வருவதையும் பலகாலமாகப் பார்த்துக் கொண்டேதான் வருகிறோம். பார்ப்பனர்களின் கட்டுப்பாடான சூழ்ச்சியும், செய்கையும் இப்படியிருக்க, இன்னும் பார்ப்பனரல்லாதார்கள் மான ஈனமின்றிப் பார்ப்பனர்களுக்குத் தடுக்குப் போட்டுக் கொண்டும், அவர்கள் சொல்லுக்கு தாளம் போட்டுக் கொண்டும் அவர்கள் வால் பிடித்துத் திரிந்து கொண்டும் இருப்பார்களானால் பார்ப்பனரல்லாதார் சமூகம் எவ்வளவு காலம் ஏமாந்து கிடப்பது, என்ன கெதியடைவது என்று கேட்கின்றோம்.

சில வருஷங்களாக அரசாங்கத்தின் அதிகாரப் பதவிகளில் பார்ப்பனரல்லாதார் இடம் பெற்று வருவதனாலும், பார்ப்பனருக்கு முன் போல அப்பதவிகளில் ஏகபோக உரிமை பெறுவதற்கு இடமில்லாமற் போனதாலும் உத்தியோகப் பார்ப்பனர், அரசியல் பார்ப்பனர், வைதீகப் பார்ப்பனர், சீர்திருத்தக்காரப் பார்ப்பனர், உஞ்சிவிருத்திப் பார்ப்பனர், பத்திரிகைப் பார்ப்பனர் ஆகிய எல்லா பார்ப்பனர்களும் இப்பொழுது ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதாரை ஒரு துறையிலும் தலையெடுக்க வொட்டாமல் செய்ய முயற்சிக்கிறார்கள். இதற்காகவே அவர்கள் காங்கிரஸ் போர்வை, தேசீயப் போர்வை, தீண்டாமை விலக்குப் போர்வை, கிராமப் பிரச்சாரப் போர்வை, சங்கீதப் போர்வை, ஹிந்தி பிரச்சாரப் போர்வை, தமிழ் பாஷைப் போர்வை முதலிய பலவகையான போர்வைகளைப் போர்த்திக் கொண்டு சூழ்ச்சிப் பிரச்சாரம் பண்ணப் புறப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாதார் சமூகமானது மானத்தோடும் சுதந்திரத்தோடும் சுயமரியாதையோடும் வாழ வேண்டுமென்று கருதுகின்ற சுத்த ரத்தமும், பகுத்தறிவும் உள்ள பார்ப்பனரல்லாதார் ஒவ்வொருவரும் இந்தப் பார்ப்பனர்களுடைய சூழ்ச்சிக்கு கொஞ்சமும் ஏமாறாமல் எச்சரிக்கையாய் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

(குடி அரசு தலையங்கம் 10.03.1935)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.