periyar kali poongundranபுதுக்கோட்டையில் டவுன் முனிசிபல் சங்கத்தார் முனிசிபாலிடி வரியை வழக்கப்படி ஐந்து வருடங்களுக்கொரு தடவை பரிசீலனை செய்வது போன்ற முறையில் புதிய வரி விதிக்கப்பட்டதின் காரணமாக பொது ஜனங்கள் தங்களுடைய குறைகளை சமஸ்தான தலைமை அதிகாரியாகிய உயர்திரு ராகவையாவிடம் கூட்டமாகச் சென்று சொல்லிக் கொண்டதில் அவர் அளித்த பதில் திருப்தியில்லாமல் போனதின் காரணமாய் ஜனங்கள் ஆத்திரப்பட்டு, பொறுமையிழந்து, பெரிய கலவரம் விளைவித்து விட்டதாகச் செய்தி கிடைத்திருக்கின்றது. அச்செய்திகளில் கலவரத்தின் பயனாய் பலாத்காரங்களும், அடிதடிகளும், உயிர்ச்சேதங்களும், பொருள் நஷ்டமுமேற் பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

அதிகாரிகள் கலவரத்தை யடக்க சக்தியற்றவர்களாகி அவர்களும் நிலைமை தவறி நடந்து கொண்டதாகவும், உயிருக்கு பயந்து ஓடி விட்டதாகவும் தெரிய வருகிறது. அதிகாரிகள் ஓடியொழிந்து கொள்ள நேர்ந்ததை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. கலகம் செய்தவர்கள் வரி போடப்பட்டக் காரணத்தைக் கொண்டு கலகம் செய்தார்களென்றாலும், கலகத்தின் தன்மையும், முக்கியமும் பார்ப்பனர் பேரிலுள்ள ஆத்திரமென்றே காணப் படுகின்றது.

அதாவது அந்த சமஸ்தானத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கமும், அவர்களால் மக்களுக்கேற்பட்டு வந்த குறைகளே கலகத்தை சுலபத்தில் ஆரம்பிக்கச் செய்து விட்டதாய்த் தெரிகிறது. மெயில் பத்திரிகையில் காணப்படும் ரிப்போர்ட்டின் படி பார்த்தால் கலகக்காரர்களில் ஒருசாரார் பார்ப்பன அதிகாரிகளை உதைக்கவும், பார்ப்பனர் வீடுகளைக் கொள்ளையடித்து நாசமாக்கவும், அவர்களது பெண்களை பயமுறுத்தும் வேலையிலுமே ஈடுபட்டிருந்ததாய்த் தெரிய வருகின்றது.

புதுக்கோட்டை சமஸ்தானமானது வெகுகாலமாகவே தென்னிந்தியாவில் பார்ப்பன ஆதிக்கத்தில் தலைசிறந்து விளங்கி வந்திருக்கின்றது. அச்சமஸ்தானத்து பார்ப்பனர்கள் காலநிலை யறிந்து தங்களது நிலைமையைச் சரிபடுத்திக் கொண்டிருப்பார்களே யானால் இக்கலகம் இவ்வளவு கடினமான முறையில் நடைபெற்றிருக்காதென்றே சொல்லுவோம். புதுக்கோட்டை கலகத்தின் தத்துவமானது புதுக்கோட்டையுடன் நின்று விடுமென்றோ, பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதா ரென்கின்ற முறையுடன் தான் நடைபெறுமென்றோ நாம் தீர்மானித்து விடமுடியவில்லை. மற்ற பிரதேசங்களிலும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார், கீழ் ஜாதிக்காரர் - மேல் ஜாதிக்காரர், இந்துக்கள் - முஸ்லீம்கள், முதலாளி - தொழிலாளி, ஜமீன்தரான் - குடியானவன், காங்கிரசுக்காரன் - காங்கிரசல்லாதவன் என்பன போன்ற முறைகளில் நடைபெற்றுத் தான் தீரும். ஏனெனில் மேற்கண்ட மாறுபட்ட பெயர்களின் மூலம் ஒருவரையொருவர் அடக்கி ஆளுவதும், ஏமாற்றி வருவதும் கஷ்டப்படுகின்ற ஜனங்களுக்கு விளக்கமாய் தெரிந்து விட்டதோடு, மக்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சியும் தோன்றிவிட்டது. எந்த உணர்ச்சியையும் மனிதன் அடக்கக் கூடுமானாலும், சுயமரியாதையின் உணர்ச்சியை அடக்கக் கூடுமென்பது மிகவும் சிரமமான காரியமேயாகும். ஏனெனில், மனிதர்களுக்கு உயிரைவிட சுயமரியாதையே பிரதானமென்பதாய்க் கருதுவது மனிதத் தன்மையின் பிறப்புரிமையாயிருப்பதால், அது காக்கப்படும் முறையில் கலவரங்கள் நடைபெற்றுதான் தீரும். அதை இனி எந்த அரசாங்கமோ, எந்த சுயராஜியமோ சுலபத்தில் அடக்கி விட முடியுமெனக் கருதுவது கனவாகத்தான் வந்து முடியும்.

ஆகையால், ஆங்காங்கு மக்களை ஏமாற்றியதன் மூலம் ஆதிக்கத்தில் உள்ள மக்கள் இதை ஒரு முன் எச்சரிக்கையாகக் கொண்டு நடந்து கொள்ள வேண்டுமாய் விரும்புகின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 26.07.1931)

Pin It