எதார்த்தவாதி : ஐயா! தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால், எப்பொழுது எழுதப்பட்டது.

periyar 336போதகர் : பழய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.

எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சில விடங்களில் தெய்வத்துக்குப் பயப்படாதவர்கள் தானே?

போதகர் : இல்லை சார்; எப்பொழுதும் தெய்வத்துக்குப் பயப்படுகிறவர்கள்தான்.

எதா : நல்லது, அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே ?

போத : ஆம், வாஸ்தவந்தான். ஆனால் அவனை (ரை) சில ஆராட்சியாளர் தன் தகப்பனின் மறுமனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்.

எதா : அதைப் பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகியிருக்கலாம்.

போத : அப்படியானால் (ஆபிராம்) ஆப்பிரகாமைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய தென்ன?

எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்கதரிசி தானே?

போத : ஆம் வாஸ்தவந்தான். ஆதியாகமம் 2-ம் அதிகாரம் 7ம் வசனத்தில் (கடவுளே) தேவனே... அவன் ஒரு தீர்க்கதரிசி... என்பதாய்ச் சொல்லி யிருக்கிறார்.

எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ம் அதிகாரம் 11ம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும்..... பொருள்படப் பேசியதைத் தாங்கள் வாசித்ததுண்டா?

போத : அ ஆ ஆம் வாசித்ததுண்டு. ஆனால், அவன் மனைவி ச.ஆ. சாராள் அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.

எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?

போத : சார் அது பழைய ஏர்ப்பாட்டில் உள்ளது. புதிய ஏர்ப்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.

எதா : சரி ஐயா, நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர்களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது.

போத: தெய்வமில்லாத காலமிது என்பதாய் முனுமுனுத்துக் கொண்டு நழுவி விடுகிறார் .

எதா : பைபிள் காலத்தில் தெய்வப் பயமில்லாத இடமிருந்தது. இப்பொழுது காலம் வந்துவிட்டது என்பது உங்கள் அநுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலை யில்லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும் என்பது எங்கள் துணிபு.

(குடி அரசு - உரையாடல் - 05.04.1931)

Pin It