பிறவியில் உயர்வு தாழ்வு உண்டு என்பதையும், அவற்றில் பிராமணர்களாகிய தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதையும் நிலை நிறுத்த இதுசமயம் நமது நாட்டில் ஆங்காங்கு பிராமண சங்கங்கள் இரகசியமாயும் வெளிப்படையாயும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நமது தேசீய பிராமணர்கள் நம்மிடம் வரும்போது எல்லோரும் சமம் என்று சொல்லிக்கொண்டும், தீண்டாமை, உயர்வு - தாழ்வு இவைகளை ஒழிக்கப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டும் வோட்டுப் பெறுவதும், பிராமண சங்கங்களுக்குப் போய் தீண்டாமையையும் உயர்வு தாழ்வையும் நிலைநிறுத்த அவர்களுக்கு வழி சொல்லிக்கொடுப்பதும் அதற்கநுகூலமாய் நம்முடைய வோட்டு பலன்களை உபயோகப்படுத்துவதுமாக இருக்கிறார்கள். இவற்றை நம்மில் பலர் அறிந்தும் தங்கள் சுயநலத்தை முன்னிட்டு அறியாதவர்போல் நடித்து அவர்களுக்கு வோட்டு வாங்கிக்கொடுத்தும், பிராமண சங்கங்களை ஆதரித்தும் திரிகிறார்கள். இதை அறிய வோட்டர்களுக்கு இன்னமும் யோக்கியதை வரவில்லை என்றால் இந்த வோட்டர்களின் பிரதிநிதிகள் எப்படி நமது நாட்டுக்குப் பிரதிநிதிகளாவார்கள்?

(குடி அரசு - செய்தி விளக்கம் - 28.02.1926)

Pin It