கோயமுத்தூர் முனிசிபாலிட்டியின் சென்ற வருடத்திய நிர்வாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. அவ்வறிக்கையிலிருந்து பொதுவாக கோயமுத்தூர் முனிசிபாலிட்டியின் நிர்வாகம் ஒழுங்காய் நடைபெற்றிருப்பதாகவே காணப்படுகிறது. ரோடுகள் நன்றாயிருப்பதாகக் கலைக்டர் அபிப்பிராயப்பட்டிருக்கிறார். கல்வி விஷயத்தில் கல்வி கற்க வேண்டிய சிறுவர்களில் 100-க்கு 99 பேர் வீதம் வாசிக்கின்றார்களென்றும் பள்ளிக்கூடங்களில் சிறுவர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும் நூல் நூற்கவும் நெய்யவும், கற்றுக்கொடுக்கப்படுகின்றதென்றும், ஆயுள்வேத வைத்தியசாலை மிகவும் உபயோகப்பட்டு வருகின்றதென்றும், அதில் இவ்வருடத்தில் 20,000 பேர்களுக்கு மேலாக நோயாளிகள் உதவிபெற்றிருக்கின்றார்களென்றும், பிளேக் நோய் சென்ற வருடம் கோயமுத்தூருக்குள் வராமலே தடுக்கப்பட்டிருக்கின்றதென்றும், காலறா முதலிய தொத்து வியாதிகளும் முன்னைய வருடங்களைவிட மிகக் குறைவாய் இருந்திருக்கின்றதென்றும், முனிசிபல் செல்வ நிலை ஒழுங்காய் இருக்கின்றதென்றும், சப் கமிட்டியார்கள் ஊக்கத்துடன் வேலை செய்திருக்கின்றார்களென்றும், கவுன்சிலர்களும் சேர்மனும் ஒற்றுமையாயிருப்பதால் கவுன்சிலில் சமாதானம் ஏற்பட்டிருக்கின்றதென்று கலைக்டர் எழுதியிருக்கின்றாரென்றும் மற்றும் பல விஷயங்களும் குறிப்பிட்டிருக்கிறது.


இதற்காக சேர்மென் ஸ்ரீமான் ஊ.ளு. இரத்தினசபாபதி முதலியாருக்கு கோயமுத்தூர் வாசிகள் மிகுதியும் நன்றி பாராட்டக்கடமைப்பட்டவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஈரோடு முனிசிபாலிட்டியில் இருக்கிறவர்கள் இதைப்பார்த்து பொறாமைப்படாமலும், வெட்கப்படாமலுமிருக்க முடியாது. கோயமுத்தூர் சேர்மனைப்போல உள்ளுர்வாசியாகவும், உள்ளுர் க்ஷமத்தில் அக்கரை ஏற்படவேண்டியவர்களாகவும் உள்ள ஒரு சேர்மன் ஈரோட்டுக்கும் ஏற்பட்டால் ஓர் காலத்தில் இது போல் சந்தோஷப்படக்கூடும். இது சமயம் வீணாக ஆசைப்படுவதில் பிரயோஜனமில்லை.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 10.01.1926)

Pin It