சமீபத்தில் கோயமுத்தூரில் காட்டிலாகா கல்லூரியில் தேறிய மாணவர்களுக்கு நடந்த பரிசளிப்புக் கொண்டாட்டத்தில் காட்டிலாகா தலைமை அதிகாரியான மிஸ்டர் டயர்மன் என்பவர் பின்வரும் புத்திமதியை மாணவர்களுக்குக் கூறினாராம்:-

“நான் உங்களுக்குச் சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன். காட்டிலாகாவில் குறைந்த சம்பளம் வாங்கும் கீழ்த்தர உத்தியோகஸ்தர்கள் மட்டுமல்லாமல், பெரிய உத்தியோகஸ்தர்களும் யோக்கியமற்ற செயல்களைப் புரிகின்றனர் என்று சொல்லுவதற்காக வருந்துகிறேன். ஒரு ரேஞ்சர் தனது கீழுள்ளவர்கள் வீட்டில் இலவசமாகப் பல மாதங்கள் உணவு உட்கொண்டதுமன்றி, அவர்களுக்குக் கிடைக்கும் அல்ப சம்பளத்திலிருந்து மாதா மாதம் சிறு தொகையும் வசூல் செய்தும் வந்தார். உயர்தர உத்தியோகஸ்தர்கள் இவ்விதமான இழிந்த நிலையில் இருக்கையில் குறைந்த சம்பளம் வாங்கும் கீழ்த்தர உத்தியோகஸ்தர்களைக் குறை கூறுவதில் பயன் உண்டா? ஜனங்கள் நம் இலாகாவைப்பற்றி பேசுவதற்குக்கூட வெட்கப்படுகிறார்கள் என்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இப்பொழுது புதிதாகப் பரீட்சை கொடுத்துப்போகும் நீங்களே இம் முறைகளைப் பரிசுத்தம் செய்தல் வேண்டும்”.

இவ்விதமான செயல்களை அறிந்தே சென்னை சட்டசபையில் ஒரு அங்கத்தினர் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் லஞ்சம் வாங்குவதைக் கண்டிக்க ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று ஓர் தீர்மானம் கொண்டு போன காலத்தில் அரசாங்க நிர்வாக அங்கத்தினர் அவர் மீது பாய்ந்து அப்பிரேரேபனையைத் திருப்பி வாங்கிக் கொள்ளும்படியான விதத்தில் விரட்டி அடித்து விட்டார். சர்க்கார் இலாகாக்களில் இவ்வித ஊழல்களைப் பரிசீலனை செய்து பஞ்சாப் மாகாண அரசாங்கத்தார் யாதாஸ்து வெளியிட்டிருக்கிறார்களே; அதுபடி சென்னையிலும் செய்ய என்ன தடை ஏற்பட்டது?

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.07.1925)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.