சகோதரர்களே!

நானும் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளை* அவர்களும் இப் பத்திரிகை நடத்துவதைப்பற்றி பலநாள் ஆழ்ந்து யோசித்து இப்பொழுதுதான் நடத்தத் துணிந்தோம்.

இப்பத்திரிகையை ஆரம்பிக்கும் நோக்கம்:

தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடையுணர்த்துவதற்கேயாம். ஏனைய பத்திரிகைகள் பலவிருந்தும், அவைகள் தங்களது மனசாட்சிக்குத் தோன்றிய உண்மையான அபிப்பிராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவைகளைப் போலல்லாமல் பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்பதே எமது நோக்கம். இப் பத்திரிகாலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்றப் பத்திரிகைகளிடமுள்ள குறை யாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்.

(குடி அரசு - சொற்பொழிவு - 02.05.1925)

Pin It