(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, நவம்பர் 16, 1944, பக்கங்கள் 889-92)

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): திரு.துணைத் தலைவர் அவர்களே, பின்கண்டவாறு முன்மொழிகிறேன்:

“1936 ஆம் வருட ஊதிய வழங்கீடு சட்டத்தை மேலும் திருத்தும் இந்த மசோதா பின்வருவோர் அடங்கிய தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு விடப்படுகிறது: சேத் யூசுப் அப்துல்லா ஹரூன், திரு.முகமது ஹூசேன் சௌதுரி, திரு.லால்சந்த் நாவல்ராய், திரு.ஏ.சி.இன்ஸ்கிப், சர் வித்தல் என்.சந்தவர்கர், திரு.என்.எம்.ஜோஷி, டாக்டர் சர் ரத்தன்ஜி தின்ஷா தலால், திரு.டி.எஸ்.ஜோஷி மற்றும் இம்மசோதாவை முன்மொழிபவர். குழுவின் எந்த ஒரு கூட்டமும் சட்டபூர்வமானதாகக் கருதப்படுவதற்கு அக்கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருப்பது அவசியம்.

ambedkar in meeting

            ஐயா, 1936ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஊதிய வழங்கீடு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதே இம்மசோவின் நோக்கம். இந்தச் சட்டம் இயற்றப்பட்டபோது இது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கையாகவே கருதப்பட்டது; ஏனென்றால் இந்தச் சட்டத்திற்கான மசோதாவை நாங்கள் தயாரித்தபோது இது சம்பந்தமாக நாங்கள் பின்பற்றுதற்குரிய சட்டம் ஏதும் நடைமுறையில் இருக்கவில்லை. ஆனால் இந்தச் சட்டம் குறித்த ஏழு ஆண்டு அனுபவம் இப்போது எங்களுக்கு இருக்கிறது. இச்சட்டம் செயல்பட்டு வந்த இந்த ஏழு ஆண்டுகளில், அதில் பல குறைபாடுகள் இருப்பது எங்களுக்குத் தெரியவந்திருக்கிறது. ஊதிய வழங்கிடுச் சட்டத்தை மேம்படுத்த வேண்டுமானால், 30 அல்லது 40 திருத்தங்கள் செய்வது அவசியம் என்று எங்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. பல்வேறு தரப்பினரும் பரிந்துரைத்துள்ள எல்லாத் திருத்தங்களையும் பரிசீலிக்க தற்போது அவகாசமில்லை என்பதை இந்திய அரசாங்கம் உணர்ந்திருக்கிறது; எனவே, உறுப்பினர்கள் எடுத்துக்காட்டியுள்ள அனைத்து குறைபாடுகளையும் களைந்து சட்டத்தை மேம்படுத்துவதில் ஈடுபடும் எண்ணம் ஏதும் இப்போது அரசாங்கத்துக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனினும் சட்டத்திலுள்ள குறைபாடுகளில் சிலவற்றை அகற்றுவது நிர்வாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசாங்கம் கருதுகிறது; இந்தக் குறைபாடுகளைக் களையாவிட்டால் சட்டத்தை சரிவர செயல்படுத்துவதும், எந்த நோக்கத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதும் சாத்தியமில்லாமல் போகும்; அத்தகைய முக்கிய குறைபாடுகளை அகற்றுவதற்காகவே இந்தத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது.

            ஐயா, மசோதாவை இனி ஷரத்துவாரியாகப் பார்ப்போம். “ஊதியங்கள்” என்னும் சொல்லின் பொருள் வரையறையில் சில திருத்தங்கள் செய்வது மசோதாவின் 2 ஆவது ஷரத்தின் நோக்கமாகும். “ஊதியங்கள்” என்னும் சொல்லுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருக்கும் கருத்துகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திக் கூறி அவையினரை அலுப்படையச் செய்ய நான் விரும்பவில்லை. எனினும் சில முக்கியமான குறைபாடுகளை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுவது உசிதமாக இருக்கும். ஒரு தொழிலாளி தான் சம்பாதிக்கும் ஊதியத்தை மட்டுமன்றி, உண்மையில் தனது உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய ஊதியத்தையும் குறிக்கும் வகையில் “ஊதியங்கள்” என்பதற்கான இப்போதைய விளக்கம் அமைந்திருக்கிறது எனப் பம்பாய் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் முந்திய சட்டத்தின் நோக்கம் இதுவல்ல. இந்த விளக்கம் சம்பந்தமாக இன்னொரு குறைபாடும் கூறப்பட்டது: அதாவது உற்பத்தி அடிப்படையில் வேலைக்கமர்த்தப்படும் ஒரு தொழிலாளி அவனது உற்பத்திக்குச் சம்பந்தமில்லாமல் ஊதியம் கோர இந்த விளக்கம் அவனை அனுமதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. வேலை நேர அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளியையும் உற்பத்தி அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளியையும் வேறுபடுத்திக் காட்டத் தவறுவதால் இந்த விளக்கத்தில் பெரும் குழுப்பம் நிலவுகிறது என்று குறிப்பிடப்பட்டது. விளக்கத்தில் தற்போது இடம் பெற்றிருக்கும் சில சொற்கள் மிகையானவையாக உள்ளன; அங்கு அவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை; இதனால் குழப்பம்தான் மிஞ்சுகிறது என்று சில வட்டாரங்களில் வாதிக்கப்படுகின்றன. “வழங்கப்படக்கூடிய மேலே கூறிய இயல்புடைய போனஸ்கள் அல்லது கூடுதல் ஊதியம் முதலியவை இதில் அடங்கும் என்னும் சொற்களை இவ்வகையில் இங்கு குறிப்பிடலாம். இந்த விளக்கத்தின் முந்திய பகுதியில் ஏற்கெனவே இடம் பெற்றிருப்பதைவிட அதிகமான அர்த்தத்தை இந்தச் சொற்கள் தந்துவிடவில்லை என்று கூறப்படுகிறது. யுத்தத்தின் காரணமாக அகவிலைப்படி தோன்றுவதற்கு முன்னர் வேண்டுமானால் “ஊதியங்கள்” என்பதற்கு அளிக்கப்பட்ட விளக்கம் சரியானதாகவும், போதுமானதாகவும் இருக்கலாம், ஆனால் இன்று இந்த விளக்கம் போதுமானதாக இருக்க முடியாது. ஏனென்றால் அகவிலைப்படி என்பது ஊதியத்தின் ஒரு பகுதி அல்ல என்று ஒரு தொழிலதிபர் குதர்க்க வாதம் செய்வதற்கு இது வழிவகை செய்கிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

            இப்போது, திருத்தப்பட்ட மசோதாவில் நாங்கள் தந்திருக்கும் விளக்கம் இந்த அனைத்துச் சிக்கல்களையும் அகற்றுகிறது. இந்த விளக்கம் எளிதாக, புரியக்கூடியதாக இருப்பதாகவும் தோன்றுகிறது திருத்தப்பட்ட மசோதாவின் நகல் இந்த மூல சட்டத்துக்கு அடிப்படையாக உள்ள நம்பிக்கை வைக்கவில்லை என்பதை அவைக்கு கூறியாக வேண்டும் நாங்கள் முன்வைத்துள்ள விளக்கம் முற்ற முடிவான தென்றோ, மாற்ற முடியாததென்றோ நாங்கள் கருதவில்லை. தெரிவுக் குழு உறுப்பினர்கள் இதைவிடச் சிறந்ததொரு விளக்கத்தைப் பரிந்துரைப்பார்களேயானால், திருத்த மசோதாவில் தற்போது இடம்பெற்றுள்ள விளக்கத்தை மேற்கொண்டும் திருத்துவதற்கு என் தரப்பிலிருந்து நிச்சயமாக எந்த ஆட்சேபமும் வராது.

            இனி அடுத்த 3ஆவது ஷரத்துக்கு வருவோம். இப்போதைய பிரிவு 5இல் இந்த ஷரத்து இரண்டு திருத்தங்களைச் செய்கிறது. இந்தப் பிரிவு 5 ஊதியங்கள் அளிக்க வேண்டிய காலத்தை நிர்ணயிக்கும் பிரிவாகும்; ஊதியங்கள் வழங்கும் காலத்தை நிர்ணயிக்கும் பொருட்டு இப்பிரிவு தொழிற்சாலைகளை இரு வகைப் பிரிவுகளாகப் பிரிக்கிறது முதலாவது வகைப் பிரிவில் 1000க்கும் குறைவான தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகள் அடங்கும். இரண்டாவது வகைப் பிரிவில் 1000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு வகைப்பிரிவு செய்யப்பட்ட பிறகு, முதலாவது வகைப்பிரிவைச் சேர்ந்த தொழிற்சாலைகளில் 7 நாட்களுக்குள்ளும் இரண்டாவது வகைப் பிரிவைச் சேர்ந்த தொழிற்சாலைகளில் 10 நாட்களுக்குள்ளும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று இந்தப் பிரிவு நிர்ணயிக்கிறது. நடைமுறையில் இந்தப் பிரிவின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது சிரமமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்வது அப்படி ஒன்றும் கடினமல்ல. தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே தொழிற்சாலைகள் வகை பிரிக்கப்பட்டிருக்கின்றன. தொழிலாளர்களின் எண்ணிக்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதையும், அது அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது என்பதையும் இந்த அவை அறியும். உதாரணமாக, தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தாலே முதல் வகைப் பிரிவு இரண்டாவது வகைப் பிரிவாக தானாகவே மாறி விடுகிறது; அதே போன்று தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் இரண்டாவது வகைப் பிரிவு முதல் வகைப் பிரிவாகிவிடுகிறது. இவ்வாறு வேறுபடுத்தும் கோட்பாடு நியாயமானதோ, நிர்வாக சாத்தியமானதோ அல்ல என்று கருதப்படுகிறது. இது மிகவும் சரியான கருத்து என்றே நானும் நினைக்கிறேன். எனவே, இந்த வேறுபாட்டை அகற்றுவதே இந்தத் திருத்தத்தின் நோக்கம்; இதனால் தொழிற்சாலைகளை இருவகைப் பிரிவுகளாகப் பிரிக்கும் கோட்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்; இதற்குப் பதிலாக எல்லாத் தொழிற்சாலைகளையும் ஒன்றாகப் பாவிக்கும் பொதுக் கோட்பாடு கடைப்பிடிக்கப்படும்; தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வாறு இருப்பினும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும் ஊதியம் பத்து தினங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்ற பொது விதி பின்பற்றப்படும். 3வது ஷரத்து முன்வைக்கும் இரண்டாவது திருத்தமும் மிகவும் அவசியமானது என்பதை அவை காண வேண்டும். பணியிலிருந்து நீக்கப்படும் தொழிலாளிக்கு ஊதியம் வழங்குவதற்கு பிரிவு 5 வகை செய்கிறது. இப்போதுள்ளபடி இந்தப் பிரிவு வேலையிலிருந்து நீக்கப்படும் தொழிலாளிக்கு இரண்டாவது வேலை நாளன்று ஊதியம் வழங்கப்படும் என்று கூறுகிறது. இப்போது, ஐயா, ஊதிய வழங்கீடுச் சட்டம் நாள் முழுவதும் இயங்கும் நிரந்தரத் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றால், இப்போதுள்ளபடி இந்தப் பிரிவினால் சிக்கல் ஏதும் ஏற்படாது. ஆனால் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இயங்கும் தொழிற்சாலைகளில் எழக்கூடிய சிக்கல் முற்றிலும் எதார்த்தமானது; இது எப்படி என்று பார்ப்போம்; தொழிற்சாலையின் கடைசி வேலை நாளன்று ஒரு தொழிலாளி வேலையிலிருந்து நீக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்; அப்போது என்ன நிகழ்கிறது தெரியுமா? இந்தத் தொழிற்சாலை குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இயங்கக்கூடியது ஆதலால், இதற்குப் பிறகு அது மூடப்பட்டு விடுகிறது; அப்போது நீண்டகால இடைவேளைக்குப் பிறகுதான் இரண்டாவது வேலைநாள் வரும்; இத்தகைய நிலைமையில் அந்தப் பரிதாபத்துக்குரிய தொழிலாளியின் கதியைப் பற்றிக் கற்பனை செய்துபார்ப்பது அப்படி ஒன்றும் கடினமல்ல. எனவே, இந்த மசோதாவில் தெரிவித்துள்ளபடி இந்தப் பிரிவில் மாற்றம் செய்யவில்லை என்றால், குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இயங்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளி வேலை நீக்கம் செய்யப்படும்போது அவன் ஊதியம் பெறுவது காலவரையின்றித் தள்ளிப்போகும். ஆதலால் இந்தத் திருத்த மசோதா மூலம் நாங்கள் செய்திருப்பதெல்லாம், ‘வேலை’ என்ற சொல்லை நீக்கிவிட்டு, ‘இரண்டாவது’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘மூன்றாவது’ என்ற சொல்லைச் சேர்த்திருப்பதுதான். இதன் மூலம், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இயங்கும் தொழிற்சாலையிலும் சரி, நிரந்தரமாக இயங்கிவரும் தொழிற்சாலையிலும் சரி வேலையிலிருந்து நீக்கப்படும் ஒவ்வொரு தொழிலாளியும் ஏழாவது நாளில் தனது ஊதியத்தைப் பெறுவான்; குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இயங்கும் தொழிற்சாலையில் இதுவரை நடைபெற்றுவந்தது போன்று தனது ஊதியத்தை பெறுவதற்கு அவன் காத்திருக்க வேண்டியதில்லை.

            இனி அடுத்து, மசோதாவின் 4ஆவது ஷரத்துக்கு வருகிறேன். இந்த சட்டத்தின் 7 ஆவது பிரிவில் சில திருத்தங்களைச் செய்வதே இந்த ஷரத்தின் நோக்கம் என்பதை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் காண்பார்கள். பிரிவு 7 ஒரு தொழிலாளியின் ஊதியத்திலிருந்து எத்தகைய பிடித்தங்களைச் செய்யலாம் என்பதை வகுத்துக் கூறும் பிரிவாகும். இந்தப் பிரிவு இப்போதுள்ளபடி எல்லா நியாயமான பிடித்தங்கள் விஷயத்திலும் கையாளக்கூடியதாக இல்லை என்பதை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் தெரிந்து கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, தனது வைப்பு நிதியுடனும் ஓய்வு உதவித் தொகையுடனும் பணியிலிருந்து விலகிச் செல்லுகின்ற, அதே சமயம், பணியில் நீடித்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய சலுகைகள் இழந்து விடுகின்ற ஒரு தொழிலாளியை இந்த சட்டம் அல்லது பிரிவு கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, உதாரணமாக மிக அவசர, அவசிய சில பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தனது வைப்பு நிதியையும் ஓய்வுதவித் தொகையையும் பெறும் பொருட்டு அவன் வேலையிலிருந்து தானாகவே விலகக்கூடும். பிறகு சிறிது காலம் கழித்து அதே வேலையில் அவன் மீண்டும் சேருகிறான் என்று வைத்துக்கொள்வோம்; அப்போது, தான் முன்னர் பணியிலிருந்து சமயத்தில் அனுபவித்து வந்த அதே சலுகைகளை மீண்டும் பெறுவதற்கு அவன் ஆவலாக இருப்பது இயல்பே; இவ்வாறு இந்த சலுகைகளை மீண்டும் பெறுவது அவன் வைப்பு நிதியையும் ஓய்வு உதவித் தொகையையும் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருக்கிறானா, இல்லையா என்பதைப் பொறுத்திருக்கக்கூடும். இப்படிப்பட்ட நிலைமையில், தொழிலாளி இத்தகைய பிடித்தங்களுக்குத் தயாராக இருந்தாலும் சட்டம் அதை அனுமதிக்கவில்லை. இத்தகைய பிடித்தம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து; ஏனென்றால் அது தொழிலாளியின் நலனுக்கே உகந்ததாக இருக்கும். ஆனால் நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இப்போதுள்ளபடி சட்டத்தில் இதற்கு வழிவகை செய்யப்படவில்லை. தவிரவும், தொழிலாளிக்கு நன்மை பயக்கக் கூடிய வேறு சில பிடித்தங்களும் இருக்கின்றன; இத்தகைய நன்மைகளைப் பெறும் பொருட்டு இப்படிப்பட்ட பிடித்தங்களை தொழிலாளி வரவேற்கவும் கூடும். ஆனால் இங்கும், சட்டம் குறுக்கிடுகிறது; தனக்கு நன்மை செய்யக்கூடியவை என்று கருதும் பிடித்தங்களுக்கு தொழிலாளி தானே முன்வந்து இணங்கினால்கூட சட்டத்தில் அதற்கு இடமில்லை. எனவே, தொழிலாளிக்கு இத்தகைய நன்மைகள் உண்மையிலேயே கிட்டும் வகையில் இப்போது இந்தச் சட்டம் திருத்தப்படுகிறது. பிரிவு 7 இல் இப்போதுள்ளபடி வேறு சில குறைபாடுகளும் உள்ளன. படிப்படியாக பதவி உயர்வும் ஊதிய உயர்வும் பெறும் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டவையாகும் இந்தக் குறைபாடுகள். இது மசோதாவிலுள்ள ஒரு புதிய விஷயமாகும். இது சம்பந்தமாக என்ன வழிவகை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும், இந்தத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு எங்களைத் தூண்டிய சூழ்நிலைகள் யாவை என்பதையும் அவைக்கு விளக்க விரும்புகிறேன். பிரிவு 4இன் துணைப் பிரிவு (3) மூன்று விஷயங்களைப் பற்றியதாகும். முதலாவதாக, பதவி உயர்வும் ஊதிய உயர்வும் பெறும் அடிபடையில் பணிக்கு அமர்த்தப்படும் ஓர் ஊழியரின் ஊதிய உயர்வை நிறுத்த இது வகை செய்கிறது. இரண்டாவதாக ஓர் ஊழியரை உயர் பதவியிலிருந்து கீழ்ப்பதவிக்குத் தாழ்த்தவும், அதன் மூலம் சம்பளத்தைக் குறைக்கவும் இது அனுமதிக்கிறது. மூன்றாவதாக, ஓர் ஊழியருக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தராமல் இருப்பதற்கு, திறமையில்லை என்று கூறி அவரது ஊதியத்தைக் குறைப்பதற்கும் இது வழிவகுக்கிறது. சிந்து முறைமன்ற ஆணையர் அளித்த ஒரு தீர்ப்பின் காரணமாகவே பிரிவு 4இன் உப பிரிவில் (3) திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமான விவரம் வருமாறு: அந்த ஊழியர் ஓர் இஞ்சின் ஓட்டுநர்; அவர் பதவி இறக்கம் செய்யப்படாமல் அதே பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டாலும், அவரது சம்பளம் குறைக்கப்பட்டது. இதன் பேரில், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடி நீதிமன்றம் சென்றார்; பழைய ‘கிரேடில்’ இருக்கும்போது தனது சம்பளத்தைக் குறைத்தது சட்டவிரோதமானது என்று அவர் வாதாடினார். நீதிபதி இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு, அவரது சம்பளத்தைக் குறைத்தது முறைகேடானது என்று தீர்ப்பளித்தார். ஆனால் அதேசமயம் அவர் வேறொரு கருத்தையும் வெளியிட்டார்: அதாவது ஓர் ஊழியரின் திறமை அவர் வகிக்கும் பதவிக்கும் ‘கிரேடுக்கும்’ ஏற்றதாகவும், தனது கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு உகந்ததாகவும் இல்லை என்று கூறி அவருடன் ஒரு புதிய பணி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு, அதனை அவர் ஏற்றிக் கொள்ளும் பட்சத்தில் அப்போது சம்பள வெட்டு நியாயமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். நீதிபதி கூறிய இந்தப் பரிந்துரையைத்தான் இந்தத் திருத்தத்தின் மூலம் செயல்படுத்த முற்பட்டுள்ளேன்; அதாவது, ஓர் ஊழியர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற திராணியற்றவராக இருக்கும் பட்சத்தில், அவரிடம் “இது வரை அளிக்கப்பட்டு வந்த மாதிரி அதே சம்பளத்தை இனி உங்களுக்குத் தரமாட்டோம், உங்களுக்கு விருப்பமிருந்தால் புதிய அடிப்படையில் தொடர்ந்து பணியாற்றுங்கள், விருப்பமில்லையேல் வேலையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்” என்று இங்கிதமற்ற முறையில் கூற மாட்டோம்; அதற்கு மாறாக அவரை பழைய ‘கிரேடிலே’யே இருக்க அனுமதித்து, சம்பளத்தை மட்டும் குறைப்போம், அதற்கு முன்னதாக ஒரு மாதகால அவகாசம் தந்து ‘நோட்டீஸ்’ அனுப்புவோம். இவ்வாறு சம்பளக்குறைப்பு நடவடிக்கை ‘நோட்டீஸ்’ காலம் வரை தாமதிக்கப்படும்; ‘நோட்டீஸ்’ காலம் முடிவதற்கு முன்னர் புதிய ஏற்பாட்டுக்கு இணங்கத் தான் தயாராக இல்லை என்று தெரிவித்தால் வேலையிலிருந்து அவர் விலகிக் கொள்ளலாம். முறைமன்ற ஆணையரின் தீர்ப்பை பயனற்றதாக்குவதற்கே இந்தத் திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாக சிலர் வாதிக்கக்கூடும் என்பதாலேயே இவற்றை எல்லாம் இங்கு கூறுகிறேன். இவ்வாறு வாதிப்பவர்கள் கூறுவது போல் நான் எதையும் செய்யவில்லை என்பதையும், முறைமன்ற ஆணையரின் தீர்ப்பை அனுசரித்தே திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்பதையும் இந்த அவைக்குக் கூற விரும்புகிறேன்.

            உயர் கிரேடிலிருந்து கீழ் கிரேடுக்கு இறக்குதல், ஊதிய உயர்வை நிறுத்திவைத்தல் போன்றவற்றைப் பொறுத்தவரையில் அவை சர்ச்சைக்கு இடமற்ற விஷயங்கள். ஏனென்றால் கீழ் கிரேடிலுள்ள ஓர் ஊழியர் மேல் கிரேடுக்கு உயர்த்தப்பட்டால் அவர் தனது கடமைகளைச் செம்மையுறச் செய்வார் என்று தொழிலதிபர் திருப்தியடைந்தால்தான் அந்த ஊழியருக்குப் பதவி உயர்வு தருவார். இவ்வாறிருக்கும்போது அந்த ஊழியர் பதவி உயர்வு பெறவில்லை என்றால், அவர் ஏற்கெனவே பெற்றிருந்த எதையும் இழந்துவிடவில்லை என்பதால் இதில் மனக்குறைக்கு இடமேதும் இல்லை.

            இதே போன்றதுதான் மேல் கிரேடிலிருந்து கீழ் கிரேடுக்கு தாழ்த்தும் விஷயமும். இதிலும் நியாயமாகக் குறைபட்டுக் கொள்வதற்கு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஓர் ஊழியர் பெருமளவுக்குத் திறமை இழந்து விடும்போது, அவரை அதே கிரேடில் வைத்திருக்க தொழிற்சாலை உரிமையாளர் விரும்பமாட்டார். அந்நிலையில் அவர் பதவி இறக்கம் செய்யப்படுவது நியாயமே. பொறுப்பு குறையும்போது ஊதியமும் குறைவது இயல்பே. இதில் குறைகூறுவதற்கு எதுவுமில்லை.

            மசோதாவின் 5ஆவது ஷரத்தை எடுத்துக் கொள்வோம்; அது மிகவும் எளிமையானது. 8 ஆவது பிரிவின் 7ஆவது துணைப் பிரிவை அது திருத்துகிறது. தொழிற்சாலை உரிமையாளர் விதிக்கும் அபராதம் எப்போது வசூலிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றியது இந்தப் பிரிவு. அபராதம் எப்போது முதல் செலுத்த வேண்டும் என்னும் பிரச்சினை இங்கு எழுகிறது. குற்றம் இழைக்கப்பட்ட நாளிலிருந்தா அல்லது தவறு நேர்ந்த விஷயம் தொழிற்சாலை உரிமையாளருக்குத் தெரியவந்த நாளிலிருந்தா? தவறு நேர்ந்த மறுகணமே அது தொழிற்சாலை உரிமையாளருக்குத் தெரிந்துவிடும் என்று எப்போதுமே எதிர்பார்க்க முடியாது. ஒரு தவறு நேர்ந்ததற்கு நீண்ட காலத்திற்குப் பிறகே அது தொழிற்சாலை உரிமையாளருக்குத் தெரிய வருவதுதான் அடிக்கடி நிகழ்கிறது. எனவே, அபராதம் நடைமுறைக்கு வரும் காலத்தை தவறு இழைக்கப்பட்ட நாளிலிருந்து அல்லாமல் அது தெரியவந்த நாளிலிருந்து நிர்ணயிப்பது அவசியமாகிறது; இந்த ஷரத்தைத் திருத்துவதில் நாங்கள் புதியதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்பதை அவைக்குச் சொல்ல விரும்புகிறேன். கால நிர்ணய விஷயத்தில் சட்டத்தில் பல விதிகள் இருப்பதையும் சில சந்தர்ப்பங்களில் செயல் புரியப்பட்ட நாளிலிருந்தும் வேறு சில சந்தர்ப்பங்களில் அந்த செயல் பற்றித் தெரியவந்த நாளிலிருந்தும் அது நிர்ணயிக்கப்படுகிறது என்பதையும் அவையிலுள்ள வழக்கறிஞர் உறுப்பினர்கள் அறிவார்கள்.

            அடுத்து, 6ஆவது ஷரத்தைப் பொறுத்தவரையில் அது இந்தச் சட்டத்தின் 9 ஆவது பிரிவுக்குத் திருத்தம் கொண்டு வருகிறது. வேலைக்கு வராமலிருப்பவர்கள் விஷயத்தில் சம்பளப்பிடித்தங்கள் செய்வதற்கு பிரிவு 7(2)(பி) அனுமதிக்கிறது. ஆனால் ‘வேலைக்கு வராதிருத்தல்’ என்பதற்கான விளக்கம் துரதிர்ஷ்டவசமாக இந்தச் சட்டத்திலேயே இல்லை. இந்த ஷரத்து இக்குறைபாட்டை அகற்றுகிறது; ‘வேலைக்கு வராது இருத்தல்’ என்பதற்கு விளக்கம் தரப்படாத பிரிவு 9க்கு இது இரண்டாவது விளக்கம் ஒன்றைத் தருகிறது. ஷரத்து 7 பிரிவு 13ஐ திருத்துகிறது; அதுவும் பெயரளவிலேயே இருக்கிறது; அது அடிப்படையான ஷரத்து ஒன்றுமல்ல. மசோதாவின் 4 ஆவது ஷரத்தில் அடங்கியுள்ள புதிய பிடித்தங்களில் இரண்டு பிடித்தங்கள் விஷயத்தில் பிரிவு 13ஐ பயன்படுத்த இது வகை செய்கிறது. மாகாண அரசாங்கம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு இணங்க பிடித்தங்கள் செய்வதை பிரிவு 13 அனுமதிக்கிறது என்பது மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்குத் தெரியும். புதிய திருத்தம் அனுமதிக்கும் புதிய பிடித்தங்களையும் இதே நிபந்தனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

            கடைசி ஷரத்து மேல்முறையீடு செய்யும் உரிமையை ஒழுங்குபடுத்தும் 17ஆவது பிரிவில் திருத்தம் செய்கிறது. இப்போதுள்ளபடி இந்தப் பிரிவு வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு ஊழியருக்கு மேல்முறையீடு செய்யும் உரிமையை வழங்குகிறது; இந்தக் குறிப்பிட்ட சட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பிலுள்ள நிர்வாக அதிகாரியான கண்காணிப்பாளருக்கு இந்த உரிமையை அது அளிக்கவில்லை. அனைவரது நலன்களுக்காவும், குறிப்பாக ஊழியர்களின் நலன்களுக்காகவும் கண்காணிப்பாளருக்கும் மேல் முறையீடு செய்யும் உரிமை வழங்கப்படுவது அவசியம் என்பது உணரப்பட்டுள்ளது.

            ஐயா, இவைதாம் மசோதாவின் ஷரத்துகள். இவை சர்ச்சைக்கு இடமற்றவை என்று கருதுகிறேன். எனவே என் தீர்மானத்தை அவை ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன்.

            ஐயா, தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

            திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): தீர்மானம் முன்மொழியப்படுகிறது:

            “1936 ஆம் வருட ஊதிய வழங்கீடு சட்டத்தை மேலும் திருத்தும் இந்த மசோதா பின்வருவோர் அடங்கிய தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு விடப்படுகிறது; சேத் யூசுப் அப்துல்லா ஹரூன், திரு.முகமது ஹூசேன் சௌதுரி, திரு.லால்சந்த் நாவல்ராய், திரு.ஏ.சி. இன்ஸ்கிப், சர் வித்தல் என்.சந்தவர்கர், திரு.என்.எம்.ஜோஷி, டாக்டர் சர் ரத்தன்ஜி தின்ஷா தலால், திரு.டி.எஸ்.ஜோஷி மற்றும் இம்மசோதாவை முன்மொழிபவர். குழுவின் எந்த ஒரு கூட்டமும் சட்டபூர்வமானதாகக் கருதப்படுவதற்கு அக்கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் பிரசன்னமாக இருப்பது அவசியம்.

*           *           *

            திரு.என்.எம்.ஜோஷி: ………………..ஐயா, மாண்புமிகு உறுப்பினர் வேறு சில திருத்தங்களையும் பிரரேபித்திருக்கிறார்; அவற்றில் ஒன்று வேலைக்கு வராமல் இருந்தால் சில பிடித்தங்களைப் பிடிப்பது சம்பந்தப்பட்டது.

            1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: வேலைக்கு வராமலிருத்தல் என்பதற்கான விளக்கத்தை மட்டுமே நான் தந்துள்ளேன். பிடித்தங்கள் எதையும் நான் அனுமதிக்கவில்லை: அவை ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகின்றன.

(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, 16, நவம்பர் 1944, பக்கங்கள் 896.)

            திரு.என்.எம்.ஜோஷி: அதை நான் அறிவேன். மாண்புமிகு உறுப்பினர் மிகவும் சாமர்த்தியசாலி. வேலைக்கு வராமலிருத்தல் என்பதன் விளக்கத்தை அவர் மாற்றி விட்டார். இதன் விளைவாக சில பிடித்தங்கள் அனுமதிக்கப்படுகின்றன. பழைய சட்டம் வேலைக்கு வராமலிருப்பது சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் பிடித்தங்களை அனுமதிக்கிறது. எவ்வளவு நேரம் இழக்கப்பட்டதோ அல்லது எவ்வளவு வேலை செய்யப்படவில்லையோ அந்த அளவுக்குத்தான் பிடித்தங்கள் இருந்தன. ஆனால் இப்போது கொண்டுவரப் பட்டிருக்கும் திருத்தம் ஏற்கப்படுமானால் தொழிற்சாலை உரிமையாளர் தொழிலாளர் மீது இரட்டை அபராதம் விதிப்பது சாத்தியமாகக் கூடும் என்று அஞ்சுகிறேன்.

            1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நீங்கள் கூறுவது சரியல்ல.

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, 16, நவம்பர் 1944, பக்கங்கள் 896.)

            திரு.என்.எம்.ஜோஷி: நல்லது. இது குறித்து உரிய சமயத்தில் விவாதிப்போம். இப்போது பின்வருமாறுதான் நடைபெறும்: ஓர் ஊழியர் ஒரு மணிநேரம் வேலைக்கு வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். அந்த ஒரு மணிநேரம் அவன் வேலை செய்யவில்லை. எனவே, அவன் செய்த வேலைக்கு ஏற்ப கூலி தரப்படும்போது அவனது ஊதியம் நேரக்கணக்கில் அல்லாமல் வேலையின் அளவுக்குத்தான் தரப்படும். இவ்வாறு அவன் குறைந்த ஊதியம் பெறுவது மட்டுமல்ல, இந்தத் திருத்தம் செய்யப்படும்போது அவனது ஊதியங்கள் மேலும் குறையும்.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இல்லை, இல்லை.

*           *           *

            2மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: திரு.துணைத் தலைவர் அவர்களே, விவாதத்தை மேலும் நீடிக்க விடாமல் குறுக்க உதவுமானால் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

*           *           *

(3.மேற்படி பக்கம் 902)

            3மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, ஏற்கெனவே நான் குறிப்பிட்டது போல், என் நண்பர் திரு.ஜோஷி முன்மொழிந்த திருத்தத்தை ஏற்கத் தயாராக இருக்கிறேன். இத்தகைய நிலைமையில் நான் எத்தகைய உரையும் நிகழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. நான் சொல்ல விரும்புவதெல்லாம் மசோதாவை சுற்றுக்கு விடுவதற்கு வலுவான அடிப்படை இருப்பதாக நான் கருதவில்லை என்பதுதான். நான் சற்று முன்னர் கூறியது போன்று நான் முன்வைத்துள்ள திருத்தங்கள் யாவும் நிர்வாகம் சம்பந்தப்பட்டவை; அதாவது சட்டத்தைச் செயல்படுத்துவதில் எதிர்ப்படும் குறைபாடுகளை, சிக்கல்களைக் களைவதை நோக்கமாகக் கொண்டவை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தெரிவுக்குழுவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய உறுப்பினர்களின் புரிவுணர்வுக்கு அப்பாற்பட்ட எதையும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள திருத்தங்களில் நான் காணவில்லை. மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் திரு.ஜோஷி தம்முடைய திறமையில் போதிய நம்பிக்கை வைக்காதது எனக்கு வியப்பாக இருக்கிறது. மசோதாவைச் சுற்றுக்கு விடும்படி என்னிடம் கூறுகிறார்கள்; சரி, அப்படியே மசோதாவை நான் சுற்றுக்கு விட்டால், தங்கள் தரப்பில் வாதாடுவதற்கு திரு.ஜோஷியையும் மதிப்பிற்குரிய என் நண்பர் திரு.லால்சந்த் நாவல்ராயையும் தவிர தொழிலாளர் வர்க்கத்தினர் வேறு எவர் உதவியை நாடுவார்கள். இவர்கள் இருவரது பிரதிநிதித்துவத் தன்மையைக் கருதியும், இவர்களது ஆழ்ந்த அனுபவத்தையும் அறிவாற்றலையும் மனத்திற் கொண்டும் அவர்களைத் தெரிவுக் குழுவில் சேர்ப்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனினும் சர்ச்சைக்கு இடமற்றவை என்று நான் கருதும் விஷயங்களைக் கையாள்வதில் தங்களுக்குள்ள திறமையில் அவர்களுக்கு நம்பிக்கை உணர்வு இல்லை என்றால், இந்தத் திருத்தத்தைச் சுற்றுக்குவிட நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன்.

            திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): ஆக இப்போது:

            “1945 பிப்ரவரி 28ஆம் தேதிக்குள்ளாக பொதுமக்களின் அபிப்பிராயத்தை அறிவதற்காக மசோதா சுற்றுக்குவிடப்படுகிறது”.

            தீர்மானம் ஏற்கப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It