நாடோடியாய்த் திரிந்த மாந்தன் ஓர் இடத்தில் நிலையாக வாழத் தொடங்கியதும் அவனைச் சுற்றி கலைகளும் இன்ப நுகர்வுகளும் வளரத் தொடங்கியது. அவை இசை, ஓவியம், சிற்பம் என நுண்கலையாய் பரிணமித்து தம் கலைத் திறனுக்கு உருவம் கொடுக்க சிற்பக் கலையைத் தேர்ந்தெடுத்தான். ஏனெனில் சிற்பக்கலை ஒன்றுதான்  காலத்தை கடந்து நின்று அவனது புகழ் பரப்பும். மாந்தர், அரசர், விலங்குகளின் சிற்பங்கள் காலப்போக்கில் கவனிப்பாரற்று சிதைந்து போகும். அதுவே கடவுள் சிற்பங்கள் எனின் அவை மக்களின் வழிபாட்டிற்கு உரிய சின்னங்களாக போற்றிப் பாதுகாக்கப்படும். எனவேதான் கோயில்களில் தன்னுடைய கலைத் திறமையை காட்டி பல்வேறு மிக நுண்மையான சிற்பங்களை அமைத்தனர். அரசர்களும், வள்ளல்களும் அவற்றிற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து சிற்பக்கலையை ஊக்குவித்து வளர்த்தனர்.

பழனி பெரிய நாயகி அம்மன் கோயில்

      16ம் நூற்றாண்டில் பல்வேறு கால கட்டங்களில் நாயக்க மன்னர்களால் புணரமைப்பு செய்யப்பட்ட “ஊர்க்கோயில்” “யானைக்கோயில்” எனப்படும் “பெரியநாயகி அம்மன்” கோவில் சிற்பங்கள், காண்போரை பரவசமடையச் செய்து தமிழர்களின் கலை மேன்மையை உலகுக்கு உணர்த்துவதாய் உள்ளது. இந்தச் சிற்பங்கள் இதுவரை உலகுக்கு கவனப்படுத்தப்படாமல் குடத்திலிட்ட விளக்காய் உள்ளன.

palani_periya_kovil_640

நவரங்க மண்டபத்தின் அமைப்பு:

      சிற்பக்கலையின் மேன்மையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள நவரங்க மண்டபம் என்று அழைக்கப்படும் முன் மண்டபத்தில் 12 இராசிகளுக்கு 12 கலைநுட்பம் மிகுந்த மிகப் பெரிய தூண்கள் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றிலும் 27 நட்சத்திரங்களை குறிப்பிடும் 27 தூண்கள் மண்டபத்தின் மேற்கூரையைjjத் தாங்கி நிற்கின்றது. முற்றிலும் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட இம்மண்டபத்தைக் காணக் கண் கோடி வேண்டும். வெறும் கடவுளாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு அதில் உள்ள கலை நுணுக்கமும், நுண்ணிய வேலைப்பாடுகளும் தெரிய முடியாது போகலாம். 

தூண் சிற்பங்கள்:

      மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்தாற் போல் 12 உள்புறத் தூண்கள் அந்தந்த ராசிக்கு உரிய கடவுளர் உருவங்கள் தாங்கி கம்பீரமாக நிற்கின்றது. ஒவ்வொரு தூணிலும் ஒரு புராணக் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேசராசி தூணில் ரிசபக் காளை வாகனத்தில் அமர்ந்து எதிர் தூணில் உக்கிரமாய்க் காட்சி தரும் நரசிம்மரை சாந்தப்படுத்துவது போன்று சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிதுனராசி தூணில் மிதுன ராசிக்கு உரிய ரதியும், மன்மதனும் கரும்பு வில்லோடு காட்சி தருகின்றனர்.

கடகராசிக்காரராகிய முருகக்கடவுள் கோவனத்துடன் தண்டு ஊன்றி நிற்கும் காட்சி முன்னோர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு. இத்தூணில் மேற்குப் பக்கம் அர்த்தனாரீஸ்வரரும், கிழக்குப் பக்கம் பூக்கூடையுடன் முருகன் அடியாரும் உள்ளனர். பூக்கூடை பனை ஓலையால் செய்யப்பட்டது போலவே நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

சிம்மராசிக்கு உரிய தூணில் பத்திரகாளியம்மன் தலைகவிழ்ந்து காட்சியளிக்கின்றாள். அதற்கு நேர் எதிரில்

மகரராசித் தூணில் சிவதாண்டவக் காட்சி அருமையாய் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் கலை நுணுக்கம் காண்போரை வியப்படையச் செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளாது. (காளியம்மை அகந்தை கொண்ட போது அவளுடைய அகந்தையை அடக்க சிவ தாண்டவம் ஆடியதாகப் புராணச் செய்தி)

palani_periya_kovil_620

துலாம் ராசித் தூணில் சூரியன் தேர் பூட்டிய ரதத்தில் செல்வது போன்ற சிற்பமும் சூரியனின் முழு உருவமும் 6 அடி உயரத்தில் கலை நுணுக்கத்துடன் வடித்துள்ளது பண்டைய தமிழ் மக்களின் கலைத் திறத்திற்கு எடுத்துக்காட்டு .

கன்னிராசி தூணில் வாமன அவதாரக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

விருச்சிக ராசித் தூணில் சந்திரன் குதிரை பூட்டிய தேரில் ஏறிச் செல்வது போன்று முழு உருவம் தத்ரூபமாய் வடிவமைக்கப்பட்டுள்ள காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.

நடராஜரும், மீனாட்சியம்மையும் மகர ராசித் தூணிலும் நடராஜர் பாதத்திற்கு கீழ் காரைக்கால் அம்மை பேய் உருவம் கொண்ட காட்சி சிற்பக்கலையின் அழகுக்கு அழகு.

கும்ப ராசிக்கு உரிய தூணில் சுப்பிரமணியர் உருவமும் வள்ளி, தெய்வானை உருவங்களும் கலையழகுடன் செதுக்கப்பட்டுள்ளது.

கல்லிலே கலை வண்ணம் கண்ட தமிழனின் கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாய் உமையொரு பாகன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில்  சக்தியும் , சிவனும் அர்த்தனாரீஸ்வரராக செதுக்கப்பட்டுள்ளது கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

      நடுவில் உள்ள தூண்களில் இக்கோயில் சிற்பங்கள் செதுக்க உதவிய அரசர்கள், அவர்களின் மனைவிமார்கள், மன்னர்களின் தளபதிகள் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. கலைக்கண் கொண்டு நோக்கின் இவர்கள் உண்மையிலேயே நிற்பது போன்ற காட்சி புலப்படுகின்றது.

      வெளிப்பிரகாரத்தில் உள்ள தூண்களில் நுழைவு வாயில் பக்கத்தில் உள்ள தூணில் மீனாட்சியம்மை திருமணக் காட்சியும் அதை தென்திசை அகத்தியர் பார்ப்பது போன்ற காட்சி 30 அடி அளவில் ஆறு தூண்கள் அப்பால் செதுக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலை வடிவமைப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் அறிவியல் தொழில் நுட்பத்திற்கு சான்றாகவும் உள்ளது.

      அரசர்கள் புலியை வேட்டையாடிய காட்சி பல தூண்களில் இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது.

      சனிபகவான் காக்கை வாகனத்தில் அமர்ந்திருக்கும் காட்சி சிறப்பானதாகும்.

      சிவபெருமானின் அடியையும், முடியையும் காண பன்றியாகவும், அன்னமாகவும் சென்ற காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

      இந்த கலை நுணுக்கத்துடன் வெளிநாட்டில் இச்சிற்பங்கள் இருந்திருக்குமேயானால், அவர்கள் இந்தச் சிற்பங்களின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்திருப்பர். எதையும் பக்தி கண்ணோட்டத்துடனே பார்க்கும் நம் மக்கள் அச்சிலைகளில் கடவுளை மட்டும் பார்த்தார்களேயன்றி அதில் உள்ள கலை நுட்பத்தையும், சிற்பியின் கலைத் திறனையும், அரசர்களின் முயற்சியையும் காணவில்லையாதலால் இச்சிற்பக் கலையின் பெருமை உலகோர்க்கு தெரியாமல் போய்விட்டது.

      ஒருசில இடங்களில் ஆண், பெண் உடல் உறவை சித்தரிக்கும் சிற்பங்கள் சிதைக்கப்பட்டு காணப்படுகின்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும். மன்னர்கள் புலியை வேட்டையாடிய காட்சி, காட்டுப் பூனை அன்னப்பறவையை வேட்டையாடிய காட்சி தத்ரூபமாக வடிவமைக்கபட்டுள்ளாது. இக்கோயிலின் நவரங்க மண்டபத்திலும் அர்த்த மண்டபத்தில் எல்லாக் கடவுளர் சிற்பங்களும் உள்ளது.

      இக்கோயில் ஒரே மன்னர்களால் கட்டப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனலாம். அர்த்த மண்டபம் திருமலை மன்னரால் கட்டப்பட்டிருக்கலாம். அர்த்த மண்டப முன்புறத் தூண்களில் ஒரு தூணில் அரசரும் அவரது மனைவிமார்கள் இருவரும் மற்ற இரண்டு தூண்களில் அரசர் மற்றும் அவரது மனைவிமார்கள் செதுக்கப்பட்டுள்ளனர். அரசருக்குப் பக்கத்தில் உள்ள தூணில் அரசரின் குல குருவின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. திருமாலின் அவதார காட்சிகள் பல தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

palani_periya_kovil_1

      திருமால், இந்திரன், பலராமன், அனுமன், நரசிம்மர், வாமனர், வராகம் என பல சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

      அர்த்த மண்டபம் எனப்படும் உள்மண்டபத்தில் 12 அடி உயரத்தில் 84 தூண்களில் பல நுண்ணிய இயற்கை காட்சிகள் வியக்க வைக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.  

      ஒரே கல்லில் முருகனின் வாகனமாகிய மயில், யானை, குதிரைகள் ஆகியவை நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.

      ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு புராணச் செய்தியைக் கூறுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 அடி உயரமுடைய தூண்களின் மேல் யாழிகள் செதுக்கப்பட்டு மேற்கூரையைத் தாங்குவதாக உள்ளது.

கலை நுணுக்கம்:

      இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் கணினி மூலம் வடிவமைக்கப்படும் நுண் இழைகளை அந்தக் காலத்திலேயே கல்லில் செதுக்கியுள்ளது உலகோர் வியக்கும் செய்தியாகும். மயிலின் தோகை போன்ற நுண் அமைப்பு அன்னப்பறவையின் மெல்லிய தூவி, நடனப்பெண்களின் மெல்லிய உடைகள், தலைமுடி கூட மெல்லிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. கடவுளின் உருவங்கள் மட்டும் அல்லாது இயற்கைக் காட்சி சிற்பங்கள் பல தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது எண்ணெய் மற்றும் பூசனைப் பொருள்கள் ஊற்ற்ப்படுவதால் பல சிலைகள் தன் உண்மைத் தன்மையை இழந்து நிற்கின்றது.

      பல இடங்களில் வினாயகப் பெருமானின் உருவங்கள், தனித்தனியாக துர்க்கை பார்வதி, லட்சுமி போன்றவரின் உருவங்கள் மிக மெல்லிய நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது.

      நமது முன்னோர்களின் இந்த அரிய கலைக்கூடம் உலகின் பார்வைக்கு இதுவரை எடுத்துச் செல்லப்படவில்லை. இந்த சிற்பங்களின் மேன்மையையும், கலை நுணுக்கத்தையும் உலகுக்கு எடுத்துக் கூறி தமிழ் மக்களின் நாகரீகமான வாழ்க்கை முறை, அவர்களின் தன்னடக்கத்தாலும், அறியாமையாலும் ஆவணங்களைப் பாதுகாப்பதில் இருந்த மெத்தனத்தாலும் நாம் பல கலைகளை இழந்து விட்டோம். இனியும் இந்நிலை நமக்கு வர வேண்டாம்.

      ஆய்வரங்கங்கள் மூலமாகவும், கட்டுரைகள் மூலமாகவும், இணையம், தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமும் உலகிற்கு எடுத்துக் கூறுதல் அவசியம்.

      இந்த அரிய வரலாற்று கலைக்கூட்டத்தின் பல சிலைகள் சிதைந்தும், சிதைத்தும் கிடக்கின்றன. அவை முறையாக பாதுகாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொல்லியல் துறை மற்றும் சுற்றுலாத் துறை மூலம் இவற்றை பாதுகாக்கவும், உலகமக்களுக்கு எடுத்துக்கூறி அவர்கள் இவற்றை பார்வையிடவும், ஆய்வு செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

      கடவுள் நம்பிக்கை என்பது அவரவரின் விருப்பம். அவரவர் நம்பிக்கையை யாரும் தடுக்க முடியாது. ஆனால் காலத்தை விஞ்சி நிற்கும் இந்த அறிய கலைப் படைப்புகளை பக்தியின் பெயரால் சிதைப்பதும், அவற்றின் தன்மையைக் குறைப்பதும், அவற்றின் மேல் கலப்பட பூசைப் பொருள்களை பூசுவதாலும், கலப்பட எண்ணெய்யைப் பயன்படுத்துவதாலும் அவை சிதைந்து தன் உண்மை தன்மையை இழந்தும் வருகின்றது. இதன் தொன்மை மற்றும் சிறப்புக் கருதி இவற்றைத் தவிர்க்க நம் மக்களுக்கு போதிய பயிற்சியை அளிக்க (AWARENESS) முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு இக்கல்லூரி உயராய்வு மையமும், வரலாற்று துறையும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

-ஆ.நந்திவர்மன் M.A., M.A., M.A., B.Ed., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பழனி.

Comments

4 comments

4
ALAGIRISAMY
Really it is fantastic place to enjoy.
n.tamiloviya
நமது முன்னோர்களின் இந்த அரிய கலைக்கூடம் உலகின் பார்வைக்கு இதுவரை எடுத்துச் செல்லப்படவில்லை. இந்த சிற்பங்களின் மேன்மையையும், கலை நுணுக்கத்தையும் உலகுக்கு எடுத்துக் கூறி தமிழ் மக்களின் நாகரீகமான வாழ்க்கை முறை, அவர்களின் தன்னடக்கத்தாலும், அறியாமையாலும் ஆவணங்களைப் பாதுகாப்பதில் இருந்த மெத்தனத்தாலும் நாம் பல கலைகளை இழந்து விட்டோம். இனியும் இந்நிலை நமக்கு வர வேண்டாம்.என்ற் ஆ.நந்திவர்மன் கூற்றூ உண்மை!! உண்மை!!
pchswaminathan
பழனியின் பெருமையை சிறப்பாக எழுதியதர்க்கு நன்றீ, நந்திவர்மன் sir.
gobinath
Thanks for sharing your experience with us. Can you please tell me the exact location for this temple

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.