தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.

சட்டம் எதற்கு?

அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.

எங்கிருந்து தகவல் பெறலாம்?

மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

என்ன தகவல் பெறலாம்?

அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள். ஆவணங்கள், சுற்றறிக்கைகள். ஆணைகள், ஈமெயில்கள், நோட் பைல் எனப்படும் அலுவலக குறிப்புகள் ஆகியவை பெறலாம். இது தவிர சாலை போடுதல், அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மாதிரிகள் கேட்டுப் பெறலாம்.

எவ்வாறு பெறுவது?

ஒரு தகவல் பெறுவதற்கென தனியான படிவம் ஏதும் கிடையாது. ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் வேண்டிய தகவல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் விவரம்

மத்திய அரசும். தமிழ்நாடு அரசும் தகவல் பெற ரூ.10/- என கட்டணம் நிர்ணயித்துள்ளன. இக்கட்டணத்தை ரொக்கமாகவோ, வரைவேலையாகவோ, நீதிமன்ற கட்டண வில்லை மூலமாகவோ செலுத்தலாம். நகல் பெறுகையில் ஒரு தாளுக்கு ரூ. 2/- எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாரிடம் தகவல் கேட்பது?

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொதுத் தகவல் அலுவலர்களின் மத்திய அரசுக்கான பட்டியல் www.tn.gov.in என்ற தளத்திலும் உள்ளன.

தகவல் ஏன் கேட்கிறோம் என சொல்ல வேண்டுமா?

பிரிவு 6 (2)ன்படி தகவல் கேட்பவர் எதற்காக தகவல் கேட்கப்படுகிறது என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. பதில் அனுப்ப ஒரு தொடர்பு முகவரியைத் தவிர வேறு எந்த விபரத்தையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எவ்வளவு நாட்களில் தகவல் பெறலாம்?

பிரிவு 7 (1)ன் படி ஒரு பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தர வேண்டும். கேட்கப்படும் தகவல் ஒரு நபரின் உயிர்ப்பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி நேரத்தில் தர வேண்டும்.

மேல் முறையீடு

பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம்.

மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம்,

273/378, அண்ணாசாலை, (வானவில் அருகில்),

தேனாம்பேட்டை, சென்னை – 600 018.

போன் : 044-24357580, 24312841, 24312842

தகவல் தராவிட்டால் தண்டனை உண்டா?

பிரிவு 20ன் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள், உரிய நியாயமான காரணங்கள் எதுவுமின்றி தகவல் தர மறுத்தாலோ, தவறான தகவல் அளித்தாலோ அரைகுறையான முழுமையற்ற தகவல்கள் அளித்தாலோ, தகவல்களை அழித்தாலோ பிரிவு 20ன் கீழ் அதிகபட்சமாக ரூ.25,000/- அபராதம் மற்றும் துறை நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.

விதி விலக்குகள் :

பிரிவு 8ன் படி நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கும், சட்டமன்ற, பாராளுமன்ற உரிமைகள் மீறும், வியாபார ரகசியங்கள், வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு வந்த ரகசியங்கள், காவல் துறையின் ரகசிய தகவலாளர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்கள், புலனாய்வில் உள்ள வழக்குகள், அமைச்சரவை கூட்ட குறிப்புகள் போன்றவை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

மேலும் பிரிவு 24ன் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பட்டியலிடப்படும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை நிறுவனங்கள் ஆகியன இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறு இச்சட்டத்தை உபயோகமாய் பயன்படுத்தலாம்?

இச்சட்டத்தை பயன்படுத்திட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிமேம்பாடு நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கேட்கலாம். நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வழங்கப்படும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது எனக் கேட்கலாம். ஊழல் நடைபெறக் கூடும் என்று சந்தேகப்படும் அலுவலகங்களில் தகவல் கேட்கலாம். உங்கள் தெருக்களில் போடப்படும் சாலைகளிலோ அரசு கட்டுமானப் பணிகளிலோ மாதிரிகள் எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம். டெண்டர் விபரங்களைக் கேட்கலாம்.

தகவல் கேட்பவரை மிரட்டினால் என்ன செய்வது?

தகவல் கேட்பவரை மிரட்டுவது சில நேரங்களில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக காவல் துறையினரிடம் தகவல் கேட்கையில் இது போல் நிகழும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நேர்ந்தால், எந்த தகவலை கேட்கையில் மிரட்டல் வந்ததோ, அதே தகவலை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து நண்பர்களையோ உறவினர்களையோ, அதே தகவலை கேட்டு பல விண்ணப்பங்களை அனுப்பச் செய்யுங்கள். இது மிரட்டலை நிச்சயம் நிறுத்தும். இதையும் மீறி மிரட்டல் தொடர்ந்தால் வழக்கறிஞர்களை அணுகவும்.

Comments

11 comments

11
devaneyan
அன்பு தோழர் நந்தன்
வணக்கம்
தொடர்ந்து கீற்று தளம் வாசித்து வருகிறேன், மிக அருமையான தகவல்கள் உள்ளது, நல வாழ்த்துக்கள்
ஒரு சிறு கருத்து சர்தார்ஜி ஜோக்ஸ் , இது சிக்கிய மக்களை கொச்சை படுத்தவே இது, பஞ்சாபியில் இருந்து கொண்டு மதராசி ஜோக்ஸ் எழுதி நம்மை கொச்சை படுத்துவது போல தான், எனவே தங்கள் அருள்கூர்ந்து சர்தார்ஜி ஜோக்ஸ் பகுதியை மாற்றம் செய்யவும்
மிக்க நன்றி
தேவநேயன்
Karthik
You mentioned there is officer in every government office ,suppose if i want to get any information from police department where can i apply?Because now a days the police department are behaving more crucial with public.If anybody will suffer by the police without any reason how can i get a solution against the police?
venkateshon
this is very use full in life
balaji
எனது பெயர் கோ.பாலாஜி நான் தங்கள் அமைப்பில் சேர என்ன செய்ய வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தகவலை வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
கோ.பாலாஜி
sathiyamoorthiy
தகவல் அரியும் உரிமை சட்டத்தின் மாதிரி படிவம் அனுப்புமாரு தங்கலை கேட்டு கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு சதியமுர்த்தி
K.SATHEESHKUMAR
ஐயா வணக்கம்,
நான் எனது தந்தையை கடந்த 30.09.2009 அன்று இழந்து விட்டேன்.
தற்சமயம் நானும் எனது அம்மாவும் எங்களின் வீட்டில் வசித்து வருகிறோம்.ஆனால் எங்கள் வீட்டின் பட்டா எனது பாட்டனார் எங்கோ தொலைத்து விட்டார்.
நான் எங்கள் வீட்டின் பட்டாவினைப் மறுபடியும் பெற முடியுமா?அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
இப்படிக்கு
கு.சதீஷ்குமார்
karthik.A
how to know about my case status in madurai high court
S.PON MADASAMY
ஐயா வணக்கம், நான் இச்சட்டத்தை பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
பூபதி
நான் இச்சட்டத்தை பற்றி தெரிந்து கொண்டேன், மிக்க நன்றி பூபதி
செ.முருகன்
எனது பெயர் செ.முருகன். நான் தங்கள் அமைப்பில் சேர விரும்புகிரேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்ற தகவலை வழங்கும் படி வேண்டுகிறேன்
இப்படிக்கு .
செ.முருகன்.
சதீஷ்
காவல் அதிகாரி பற்றிய தகவல் பெற முடியுமா

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.