நீங்கள் நிச்சயமாக சத்தியாகிரகத்தில் ஈடுபடக் கூடாது, இயக்கத்தை உருவாக்கக் கூடாது, பேனா மூலம் மட்டுமே அனுதாபத்தை வெளிக்காட்ட வேண்டும் என்ற இந்த வாசகங்கள் சத்தியாகிரகத்தின் நாயகன் தேசப்பிதா மகாத்மாகாந்தியால் எழுதப்பட்டது. காந்தி ஏன் இப்படி யாருக்காக எழுதினார் என்றால் கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் என்ற கிறிஸ்தவர் தன்னை போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டதால்தான் காந்தி இப்படி எழுதியுள்ளார். ஆனால் இந்த ஜார்ஜ் ஜோசப் தீண்டாமை என்பது மதத்தின் உள்பிரச்சனை அல்ல, அரசியல் உரிமைக்கான மறுப்பு என்று கூறி தொடர்ந்து போராடியுள்ளார்.


1887ம் ஆண்டு கேரளாவின் செங்கானூரில் பிறந்த ஜார்ஜ்ஜோசப் என்ற கிறிஸ்தவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும், பிரிட்டினில் பாரிஸ்டர் படிப்பும் முடித்து கேரளத்திற்கு திரும்பியபோது பிரிட்டிஷ் அரசாங்கம் பல உயர் பதவிகளைத் தர இருந்த நிலையில் தந்தையாரின் வற்புறுத்தலையும் மீறி பிரிட்டிஷாரின் பதவிகளை ஏற்க மறுத்தவர். அவரின் திருமணமும் பிரிட்டிஷ் அரசில் உயர்பதவி வகித்த குடும்பத்தில் தான் நடந்தேறியது. அப்போதும் அவர் பிரிட்டிஷாரின் பதவிகளை ஏற்க மறுத்துள்ளார். கிறிஸ்தவராக பிறந்தாலும் காந்தியின் எதிர்ப்பையும் மீறி வைக்கம் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியவர். தனது மகளுக்கு மாயா என புத்த மதப் பெயரை வைத்து அனைத்து மதத்தினரை மதிப்பவராக இருந்தவர். பின்னர் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடலாம் என தமிழகத்திற்கு வந்தவருக்கு சென்னை போதிய ஒத்துழைப்பை தராத நிலையில் மதுரையில் தனது வழக்கறிஞர் தொழிலை தொடங்கத் திட்டமிட்டு மதுரையில் 1909களில் குடியேறியவர், வழக்கின்போது குறுக்கு விசாரனைகளில் சிறந்து விளங்கினார்.

1918களில் மதுரைப் பகுதிகளில் பிரமலைக்கள்ளர் சமூகத்தினரைக் குறிவைத்து பிரிட்டிஷார் குற்றப்பரம்பரை சட்டத்தை அமுல்படுத்தி சித்திரவதைப்படுத்தி வந்தபோது, வழக்கின் கொடுமைகளை சம்பந்தப்பட்டவர்களே சரிவர உணர முடியாத காலத்தில் எதிர்ப்பு தெரிவித்து பலரின் வழக்கை தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டவர். எப்போதும் தனது சட்டையில் ரோசாப்பூவை ஜார்ஜ் இடம்பெறச் செய்திருந்த நிலையில் கள்ளர் சமூக மக்கள் அவரை ரோசாப்பூதுரை என்று செல்லமாக அழைத்து வந்துள்ளனர். பின்னாளில் இவரைப் பார்த்தே ஜவஹர்லால் நேரு சட்டையில் ரோசாப்பூவை சேர்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் தொழிலாளர்களின் மீது அதிக அக்கறை கொண்டதால் 1918ம் ஆண்டு மதுரை தொழிலாளர் சங்கத்தின் மூலம் கூலி உயர்வு, வேலை நேரக் குறைப்பு ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டதுடன் வழக்கினையும் நடத்தியுள்ளார். அதேநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கினை எதிர்த்து வாதாடி வெற்றிபெற்றார். (அப்போது மதுரை நீதிமன்றத்தில் வழக்கின் விசாரனையைக் காண அதிகளவில் தொழிலாளர்கள் கூடிய நிலையில் போலீசார் கூட்டத்தை கலைப்பதாகக் கூறி 2 தொழிலாளர்களை துப்பாக்கி சூட்டின் மூலம் கொன்றனர்.)


ஜார்ஜ் மதுரையிலிருந்து கொண்டே கேரளத்தில் நடைபெற்ற பல போராட்டங்களுக்கு தலைமையேற்று நடத்தினார். பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நிலையில் இந்திய விடுதலைப்போராட்டக்களத்திலும் இறங்கினார். பாலகங்காதர திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் ஹோம்ரூல் இயக்கத்தில் மாணவர்கள் சேரக் கூடாது என்று சட்டம் இயற்றியபோது துணிச்சலுடன் அதை எதிர்த்துப் போராடினார். அப்போது தான் சுயநிர்ணயக் கொள்கையில் இந்தியாவின் கருத்தைத் தெரிவிக்கும் ஹோம்ரூல் இயக்கத்தின் குழுவில் இடம்பெறுமளவிற்கு விடுதலைப் போராட்டத்தின் உயர்ந்த இடத்திற்குச் சென்றார். கேரளம், தமிழ்நாடு என இருமாநிலங்களின் போராட்டக் களத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய நிலையில் தான் காந்தியின் நட்பும், தோழமையும் அதிகமாகியுள்ளது ஜார்ஜ் ஜோசப்புக்கு. 1919ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ரௌலட் சட்ட எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் தமிழில் வ.உ.சியும், தெலுங்கில் ஹரிலோத்தமராவும் பேச, ஆங்கிலத்தில் ஜார்ஜ்ஜோசப் பேசியுள்ளார். மிகப்பெரிய அளவில் கூட்டத்தை திரட்டியுள்ளார். 1920களில் கிலாபத் இயக்கத்தில் இந்தியா முழுதும் சிறுபான்மைத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய பணியைச் செய்துள்ளார்.


மோதிலால் நேருவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜார்ஜ் ஜோசப் மோதிலாலின் மூத்தமகள் விஜயலட்சுமி - சையத்ஹூசேன் காதல் விவகாரத்தில் தலையிட்டு சமாதானப்படுத்தும் அளவுக்கு மோதிலாலின் குடும்பத்தினருடன் நல்ல உறவில் இருந்துள்ளார்.


அதேநேரம் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் முழுமையாக ஈடுபடுத்திய நிலையில் மோதிலால் நேருவின் “தி இண்டிபென்டன்ட்”, காந்தியின் “யங் இந்தியா”, “தி சவுத் இந்தியன் மெயில்”, “சத்தியார் கிரதி” என்ற கையெழுத்து இதழ் , “தேச பக்தன்” போன்ற பல சுதந்திர போராட்ட கால இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் இருந்து சீரிய புரட்சிக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவும் அவர் தவறவில்லை. தான் எழுதிய கட்டுரைக்காக மன்னிப்பு கேட்க மறுத்து 18 மாதம் சிறை தண்டனையையும் அனுபவித்தவர்.
 

ஆனால் எந்த ஒருவிசயமாக இருந்தாலும் துணிச்சலுடன் தனது கருத்தை தெரிவிப்பவராக இருந்ததனால் பல நேரங்களிலும் எதிர்க் கருத்து கொண்டு காங்கிரசிலிருந்து வெளியேறி மீண்டும் சேர்ந்துள்ளார். ஒரு முறை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியபோது காந்தி வருந்தி கடிதம் எழுதியுள்ளார். நேருவின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு நிலை மற்றும் விதிகளை உருவாக்கிட அமைக்கப்பட்ட பல குழுக்களிலும் ஜார்ஜ்ஜோசப் இடம்பெற்றவர். காந்தி அந்நியப் பொருட்களை வாங்கக் கூடாது என்றபோது அதில் மாறுபட்ட கருத்தினைக் கொண்டிருந்த ஜார்ஜ், கதர்த் துணி வாங்க அதிக செலவாகும், அதனால் உள்ளுர்த் தயாரிப்பான காக்கியை வாங்கலாம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். காந்தி எப்போது மதுரை வந்தாலும் இவரது வீட்டிலேயே தங்கியுள்ளார்.

கட்சியைவிட்டு விலகியிருந்த நிலையிலும் மதுரை வந்த காந்தி இவரது வீட்டில் தான் ஓய்வெடுத்துள்ளார். குறிப்பாக காந்தி அரை நிர்வாண ஆடைக்கு மாறியபோது அருகிலிருந்து ஏழை மக்களின் நிலையையும் இவரே எடுத்துரைத்துள்ளார். 1929ல் மதுரை நகர சபைத் தேர்தலில் ஜார்ஜ் போட்டியிட்டபோது உள்ளுர் காங்கிரஸ்காரர்களே இவரைத் தோற்கடித்த வரலாறும் உண்டு.

 1937ம் ஆண்டு சென்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் காப்பீட்டு சட்டம், முஸ்லீம் சரியத் சட்டம் உள்ளிட்ட பல மசோதாக்களின் மீது அதிகளவில் விவாதங்களில் கலந்து கொண்டு தனது கருத்தினை பதிவு செய்தவர். இப்படியாக கேரளாவில் பிறந்தாலும் தமிழகத்தை மையமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட ஜார்ஜ்ஜோசப்பை வ.ராமசாமி அய்யங்கார் வெகுவாகப் புகழ்ந்துள்ளதுடன் ராஜாஜி, பெரியார், வ.உ.சி, திரு.வி.க, என்.எஸ்.கே உள்ளிட்ட 12 தமிழ்ப் பெரியார்களில் ஜார்ஜ்ஜோசப்புக்கும் இடம் அளித்து பெருமைப்படுத்தியுள்ளார். இப்படி பல்வேறு புகழுக்கும், பெருமைகளுக்கும் சொந்தக்காரரான ஜார்ஜ்ஜோசப், இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டுகளின் தியாகங்களும், வீரமும் மறைக்கப்பட்டதைப் போன்ற நிலையே இவருக்கும் நேர்ந்தது. காங்கிரஸ் கட்சியினரே இவரது வளர்ச்சியையும், உண்மையையும் விரும்பவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் தீவிர அரசியல் பணியில் இருந்து விலகி கிறிஸ்தவத்தில் தனது கவனத்தை செலுத்திய நிலையில் இந்திய விடுதலையைக் காணாது 1938ம் ஆண்டு மார்ச் 5 ம் தேதி சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனையில் காலமானார்.

மதுரை புது நல்லமுத்துப் பிள்ளை ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டு இன்றும் கள்ளர் சமூக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் கக்கன் உள்துறை அமைச்சராக இருந்தபோது ரோசாப்பூதுரைக்கு மார்பளவு சிலையை யானைக்கல் பகுதியில் அமைத்து கவுரப்படுத்தியுள்ளார். இந்திய விடுதலைப்போரில் பெரும் பங்கு வகித்தவரும், காந்தி, நேரு போன்ற தலைவர்களுடன் நேரடித் தொடர்பில் முன்னின்றவருமான ஜார்ஜ்ஜோசப்பின் வரலாறு இன்றுள்ள இளம் தலைமுறையினருக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது புகழ் அகிலம் அனைத்தும் சென்றிடும் வகையில் அவரது நினைவுநாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்திடுவோம்..

-  மு.ஆனந்தகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
suresh
puratchikara thamil veerarkalin varalurukal ippadithaan marakkappattullathu

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.