சுய நினைவு இழந்து ஒருவர் நீண்ட நேரம் இருந்தால் அவரை கோமா நிலையில் உள்ளார் எனலாம். இதனை தூக்கம், உறக்க மருந்துகளின் மூலம் ஏற்படும் நினைவின்மை போன்றவற்றிலிருந்து பிரித்தறிய வேண்டும்.

       இன்று இளைஞர்களிடம் ஏற்படும் கோமாவிற்குக் காரணம் போதை மருந்துப் பழக்கமாகும். பதற்றத்தைக் குறைக்கும் மருந்துகள், சோர்வு நீக்கிகள், உற்சாகம் ஊட்டிகள், தூக்க மாத்திரைகள், மனநோய்க்கான மருந்துகள், வலி நிவாரணிகள் நோயாளிகளின் இன்னல்களைக் குறைக்கவே கொடுக்கப்படுகின்றன. இத்தகைய மருந்துகள் மனித சமுதாயத்திற்கு மருத்துவ உலகம் அளித்த வரப்பிரசாதம். இவற்றை இளைஞர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். காரணம் இன்றைய இளைய தலைமுறையால் வாழ்வின் யதார்த்த நிலையை எதிர் கொண்டு சமாளிக்க இயலாமைதான். தங்களின் துயரத்தை வெளிகாட்ட, இய லாமையை பறைசாற்ற, பெரியவர்களையும், பிறரையும் பழிவாங்க அளவுக்கு அதிகமாக மருந்துகளை உட் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கோமாவை வரவழைத் துக் கொண்டு விடுகின்றனர்.

       இரண்டாவது காரணம் விபத்துகளில் தலையில் காயமடைவது. மண்டை ஓடு உடைந்து, எலும்பு முறிந்து, மூளையில் சிதைவு ஏற்படும் போது ‘கன்டூஷன்’ ஏற்பட்டு நினைவிழப்பு தோன்றலாம். தலைக்காயத்தால் ஏற்படும் தற் காலிக நினைவிழப்பை ‘கன்டூஷன்’ காரணமாக ஏற்படுவதாகக் கருதலாம். மூளையில் ஏற்படும் சிதைவுகள், காயங்கள் போலியான வேறுவகை அறிகுறிகளைத் தோற்றுவித்து நம்மை ஏமாற்றி விடும். இதற்கு இரண்டு உதாரணங்களைக் கூறுகிறேன். ஒரு இளைஞர் அண்ணா சாலையில் ஒரு முச்சந்தியில் உள்ள சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தவுடன் தன் பைக்கை நிறுத்தி விட்டார். ஆனால் அவர் பின்னே வேகமாக வந்த பஸ் சிக்ன லுக்கு கவலைப்படாமல் செல்ல நினைத்ததால், இவர் மீது மோதியது. தூக்கி எறியப்பட்டார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தலையை தடவிக்கொண்டு விழுந்து வந்து, பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்றார். பின்பு ஒரு ஆட்டோவை பிடித்து வீட்டிற்குச் சென்றார். ஒரு மணி நேரத்தில் கோமா நிலை ஏற்பட்டது.

       மற்றொருவருக்கு பக்கவாதம் என நினைத்து Burr Hole செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார். தலை மண்டை ஓட்டில் துளை போடப் போகிறார்களே என்ற பயத்தில் அவர் சொல்லாமல் மருத்துவ மனையிலிருந்துத் தப்பித்து சென்று விட்டார். வீட்டிற்குப் போனவர் தன் மனைவியிடம், தான் இறக்கப்போவது உறுதி. எனவே இன்று எனக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடு. கடை யிலிருந்து கோழி பிரி யாணி வாங்கி சாப்பி டலாம் என்று கூறி விட்டு, குளித்துவிட்டு சோபாவில் உட்கார்ந் தார். பக்க வாதம் பறந்து போனது. இது ஒரு வகை மனத்தளர்ச் சியின் பரிமாண வெளிப்பாடு. மனமும், மூளையும் செய்யும் சித்து விளையாட்டு கள் மருத்துவர்களுக்கு ஒரு பெரும் சவாலா கவே உள்ளன. மூளை யில் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் கோளாறுகளினால், குறிப்பாக, ஸ்ட்ரோக், த்ரோம்போசிஸ், ஹெமரேஜ், எம்பாலிசம் போன்ற வற்றால் கோமா தோன்றலாம்.

       மூன்றாவது முக்கிய காரணம் நீரிழிவுக் கோமா. மெல்லத் தாக்கும் இந்நோய், வாந்தி யோடு தொடங்கும். ஆழமான, நீண்ட ஏக்க மூச்சு தோன்றும். அசிடோன் வாடை அடிக்கும். சிறு நீரில் சர்க்கரையோடு அசிடோனும் காணப்படும். நீரிழிவுக்காரர்கள் (நோயாளி எனக் குறிப்பிட வில்லை) மற்ற நோய்களினால் பாதிக்கப் படும்போது கவனமாக சிகிச்சை பெற வேண்டும். ஏனெனில் காய்ச்சல், தொற்றுநோய்கள், காயங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடும். சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போனாலும், இன்சுலின் காரணமாகவோ அல்லது மருந்துகளின் விளைவாகவோ குறைந்தா லும் கோமா ஏற்படலாம். எனவே இந்த இரண்டு நிலைகளையும் ஹைபர் அல்லது ஹைபோ கிளைசிமிபா என்பதைக் கண்டுபிடித்து தேவை யான சிகிச்சையை அளிக்கவேண்டும்.

       நான்காவது வகை போதை பழக்கத்தால் உண்டாகும் கோமா. பெரும்பாலும் பெருங்குடிக்காரர்களுக்கு உண்டாவது. மூச்சில் குடி நெடியடிக்கும். சாராய நாற்றம் மூலம் காரணத்தை அறியலாம். சாராயம் இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைத்து விடுகிறது. மேலும் இவர்களுக்கு பி வைட்டமின் பற்றாக்குறையும் ஏற்பட்டுவிடும். எனவே குளுக்கோஸ் ட்ரிப்பை ஏற்றுமுன், பி காம்ப்லக்ஸ் ஊசி மருந்தைக் கொடுப்பது நல்லது.

       ஐந்தாவது வகை கோமா, கல்லீரல் செயலற்றுப் போவதால் உண்டாவது. மூளையைப் போலின்றி கல்லீரல் அணுக்கள் புத்துயிர் பெற வல்லன. எனவேதான் மஞ்சள் காமாலை தானே குணமாகிவிடுகிறது. அதன் காரணமாகவே மஞ்சள் காமாலை நோயாளிகள் இதனை அலட்சியம் செய்து விடுகின்றனர். முதல் முறை அல்லது இரண்டு முறை குணமானதுபோல பொய்த் தோற்றம் அளிப்பதால் பலர் பலவிதமான சிகிச்சைகளை அளித்துவிடுகின்றனர். திரும்பத் திரும்ப மஞ்சள் காமாலை தோன்றினால் முறையான சிகிச்சைகளைப் பின்பற்ற வேண்டும். பல வகையான மஞ்சள் காமாலை உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது. நீருபூத்த நெருப்பு என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

       முதலில் கல்லீரல் பெரிதாகி, பின்பு சுருங்கி ‘சிரோசிஸ்’ என்ற நிலைக்கு வந்துவிடும். இந்நிலையில் கல்லீரல் அணுக்கள் சிதைவுற்று அழிந்துவிடும். கல்லீரல் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும். கல்லீரல் இரத்த அழுத்தம் அதிகமாகி விடும். மகோதரம் உண்டாகும். பித்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டுவிடும். தடைபடும் மஞ்சள் காமாலையில் தீவிரம் தெரிவதில்லை. கல்லீரல், சிறுநீரகம் போன்று நம் உடலின் முக்கிய உறுப்பாகும். கழிவுகளை அகற்றும் மகோன்னத மான பணியைச் செய்கின்றது. மேலும் அகச் சூழ்நிலையைக் குறிப்பிட்ட அளவில் நிலை நிறுத்த இவ்வுறுப்புகள் உதவுகின்றன. கல்லீரல் சீர்குலைவு காரணமாக இரத்த வாந்தி ஏற்பட்டு கோமா தோன்றும்.

       சிறுநீரகம் பழுதுபட்டு, யூரிமியா காரணமாக கோமா ஏற்படலாம். சிறுநீரகங்கள் செயலிழக்கப் பல காரணங்கள் உள்ளன. நெப்ரைட்டிஸ், இரத்தக் கொதிப்பால் பாதிப்பு, சிறுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, புராஸ்டேட் வீக்கம், பாலிசிஸ்டிக் கிட்னி மற்றும் நாள்பட்ட நீரிழிவு காரணமாக சிறுநீரகம் செயல்படாமல் போகும். படிப்படியாக சோகை, களைப்பு, அசதி, வாந்தி, விக்கல், விழித்திரை அழற்சி, இரத்தக் கொதிப்பு, இரத்தத்தில் யூரியா, கிரியாடினின் அளவு அதிகரிப்பு, சிறுநீரில் கிரியாடின் அளவு மாற்றம் போன்ற அறிகுறிகள் தோன்றும். முதலில் சிறுநீர் வெளியேற்றம் அதிகமாகி, பின்பு சிறுநீரே போகாத நிலை ஏற்படும். யூரியா சேர்வதால் ரத்தம் விஷத் தன்மையை அடைந்து மூளையின் செயல்பாட்டை ஸ்தம்பிக்க வைக்கிறது.

       கோமா சில சமயங்களில் தைராய்டு பற்றாக்குறையின் காரணமாக மிக்úஸôடிமா ஏற்பட்டு உண்டாகும். தைராய்டு எனும் நாளமில்லா சுரப்பி மிகவும் முக்கியமான பணியைச் செய்கிறது. இது கூடினாலும், குறைந்தாலும் தொல்லை ஏற்படும். மிக்úஸôடிமா ஏற்படக் காரணம் தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவது, ஹசமோட்டா வியாதி, தைராய்டு சிதைவு போன்றவையாகும். உடல் எடை கூடுவது, குண்டாவது, தோலில் சொர சொரப்பு, முகத்திலும் கால்களிலும் நீர் தேங்கி வீக்கமாக இருப்பது, முடி உதிர்வது, நாடித்துடிப்பு மெதுவாக அடிப்பது, எளிதில் அசதியாவது, சுறுசுறுப்பின்மை, மலச்சிக்கல் நுண்ணறிவு குறைவு போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும். கோமா பின்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

       ஹைபோதெர்மியா எனும் உடலின் வெப்பம் குறைந்து விட்ட நிலையில் கோமா ஏற்படலாம். குளிர்காலங்களில் வயோதிகர்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகும். சாதாரண தர்மா மீட்டரில் குறைந்த அளவு 35C(95F) வரைதான் இருக்கும். ஆனால் இவர்களின் வெப்பநிலை அதற்கும் கீழ் போய்விடும். அடிப்படை வசதியான உணவு, உடை, உறைவிடம் போதுமானதாக இல்லாத போது மருந்துகளை அதிகமாக உட்கொள்ளும் போதும், வெறுப்புடன் இருக்கும்போது உடலின் வெப்பம் குறையலாம். எனவே இவர்களை வெதுவெதுப்பான அறையில் படுக்கவைத்து, நன்கு போர்வையால் போர்த்தி வைக்கவேண்டும். உடலிலுள்ள நீர்சத்து குறைந்து விடுவதால் மெல்ல டெக்ஸ்ட்ரோஸ் நாள ஊசி மூலம் தரலாம். வேகமாக வெப்பத்தை உண்டாக்கும் முயற்சிகள் ஆபத்தை அறுவடை செய்யும்.

       கோமாவில் உள்ளவர்களை கவனிக்க தனிப்பயிற்சி பெற்ற நர்ஸ்களை அமர்த்த வேண்டும். மேலும் காரணம் அறிந்து சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)

Comments

1 comment

1
s.i.muthu,chennai 82
The article about the reasons for coma was much informative and useful .Thank you for your service.
s.i.muthu , chennai 82

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.