சாதிய மதவெறி சக்திகளால் கண்டனத்திற்குள்ளாக்கப்பட்ட எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவுத் தெரிவித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் (த.மு.எ.க.ச.), தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் சார்பில், இன்று (20.01.2015) காலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thiruma nallakannu maniarasan

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் இரா. நல்லக்கண்னு உரையாற்றினார். த.மு.எ.க.ச. கலைஞர்கள், கருத்துரிமைக்கு ஆதரவான பாடல்களை எழுச்சியுடன் பாடினர்.

ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ.நெடுமாறன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், எஸ்.டி.பி.ஐ. பொதுச் செயலாளர் திரு. தெகலான் பாகவி, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் திரு. கலி. பூங்குன்றன, எழுத்தாளர் சூரியதீபன், எழுத்தாளர் அருணன், தோழர் தியாகு (த.தே.வி.இ.) உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். எழுத்தாளர் இரா.தெ.முத்து நிகழ்வை நெறிப்படுத்தினார். கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில், ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் அறிமுகவுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், கலந்து கொண்டு பேசிய தலைவர் தோழர் பெ.மணியரசன் பின்வருமாறு பேசினார்:

“எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை அச்சுறுத்திய ஆரியப் பார்ப்பனிய பா.ச.க. வன்முறைக் கும்பல்களை – கருத்துரிமைப் பறிப்பாளர்களர்களைக் கண்டித்து நடைபெறுகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தத் தோழர்களுக்கு முதலில் எனது பாராட்டுகள்!

அவருக்கு ஆதரவாக, இங்கு சென்னையிலும், தில்லியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. உலகெங்கிலிருமிருந்து இணைய தளங்களின் வழியே, ஆதரவுக் குரல்கள் வெளிப்படுகின்றன. எனவே, இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, எழுத்தாளர் பெருமாள் முருகன், தான் எழுதப்போவதில்லை என அறிவித்த முடிவை திரும்பப் பெற வேண்டும். பழையபடி எழுத வர வேண்டும். இந்த ஆதரவுக்குரல்களை கணக்கில் கொண்டு, மேலும் துணிச்சலாக எழுத வர வேண்டும்.

கணவன் மனைவிக்கு அப்பாற்பட்டு வெளியில் பாலுறவு வைத்துக் கொள்வது பல காலமாக இருந்துள்ளது. கேரளாவில், அதிகாரம் படைத்த நம்பூதிரிகளின் வாயிலாக குழந்தைகள் பெற்ற, நாயர் குடும்பங்கள் இருந்தன. டி.எம். நாயர் அவர்களேகூட ஒருமுறை, சென்னை எழும்பூர் ஸ்பர்டாஸ் சாலையில் பேசும்போது, “எனது உடம்பில் ஓடுகின்ற இந்த இரத்தம் என் தந்தைக்குச் சொந்தமானது என்று உறுதியாகக் கூற முடியாது. ஒரு நம்பூதிரிக்குச் சொந்தமானதாக இருக்கலாம்” என்று கூறியிருக்கிறார். அந்தளவிற்கு, சமூகக் கொடுமைகள் ஒருகாலத்தில் இருந்தன. அதற்காக, அந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்திவிட முடியுமா? அந்த நாயர்கள் முன்னேறவில்லையா? சுயமரியாதை உள்ள வாழ்வு வாழவில்லையா?

காவிரிப்பூம்பட்டினத்தில் இயற்பகை என்ற ஒரு வணிகர். அவர் பெரும் வள்ளல். யார் எதைக் கேட்டாலும் தன்னிடம் உள்ளதைக் கொடுத்து வந்தார். ஒருநாள் ஒரு பார்ப்பனர், இயற்பகையின் மனைவியைத் தானமாகக் கேட்டார். இயற்பனத் தன் மனைவியைத் தானமாகக் கொடுத்து விட்டார். பார்ப்பனர் வடிவில் வந்தவர் சிவபெருமான் என்கிறார் சேக்கிழார்.

இயற்பனைத் தன் மனைவியைப் பார்ப்பனர்க்குக் கொடுத்ததையும் – அப்பெண்ணை அப்பார்ப்பனர் அழைத்துக் கொண்டு போவதையும் பார்த்த ஊர் மக்கள், பார்ப்பனரைத் தடுத்துப் பெண்ணை மீட்க முயல்கின்றனர். இயற்பனை வாள் கொண்டு ஊர்மக்களை வெட்டிச் சாய்க்கிறார். பல கொலைகள் விழுகின்றன. இக்கதை சேக்கிழாரின் பெரிய புராணத்தில் வருகிறது. அதற்காகப் பெரிய புராணத்தைத் தடை செய்யச் சொல்ல முடியுமா? அந்நூலை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இலக்கியங்களில் அந்தந்த காலகட்டத்தில் பதியப்படும் கருத்துகள், அச்சமூகத்தில் வழக்கத்தில் இருந்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதற்காக, அந்த இலக்கியத்தையே எரித்துவிட வேண்டும் என்பதில் என்ன ஞாயம் இருக்கிறது?

thiruma nedumaran nallakannu

குந்திதேவிக்கு கர்ணன் எப்படி பிறந்தான்? அண்மையில், மும்பையில் ரிலையன்சு மருத்துவமனைத் திறப்பு விழாவில் பேசிய, இந்தியப் பிரதமர் மோடி, கர்ணன் அந்த காலத்திலேயே, வெளியில் கருவாகி பிறந்தவர் என்றார். குந்தியின் கர்ப்பப்பையில் கருவாக இல்லாமல் Stem Cell முறையில் பிறந்தவர் கர்ணன் என்று தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. கும்பல்களே, உங்கள் மீதல்லவா காறி உமிழ வேண்டும்? மோடியை தலைவராக ஏற்றுள்ள நீங்கள், பெருமாள் முருகன் எழுதியதை எதிர்க்க உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? சூத்திரர்கள் தாசி மக்கள் என்று குறிப்பிட்ட பார்ப்பனிய சக்திகளுக்கு, திருச்செங்கோடு திருவிழா பாலுறவு பற்றிப் பேச என்னத் தகுதி இருக்கிறது?

இந்துத்துவா என்பது வெறும் மதவாதம் அல்ல. அது, ஆரிய இனவாதம்! பார்ப்பனிய மேலாதிக்கத்தைத் திணிக்கும், வர்ணாசிரம வாதம். ஐரோப்பிய தாராளவாதத்தைத் திணிப்பது, இந்துத்துவா! அதனைத் தமிழகத்தில் வளர்த்தெடுக்க, இங்குள்ள கருணாக்கள் உதவியுடன் பார்ப்பனிய சக்திகள் வருகின்றன.

எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக, நான் பேசுவதில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. காரணம், எனக்கு, எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்து மீது விமர்சனங்கள் உள்ளன. மாற்றுக் கருத்துகள் உள்ளன. அவரது படைப்பிலக்கிய பாணி குறித்ததே எனது விமர்சனம்! ஆனால், அந்த பாணியில் எழுதுவதற்கு எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு முழு உரிமையுண்டு. அவரது, கருத்துரிமைக்கு நாங்கள் ஆதரவாக நிற்கிறோம்!

இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், எல்லோரும் கருத்துருவாக்கம் செய்யும் இடத்தில் இருக்கிறீர்கள். எனவே, கருத்துரிமைக்கு ஆதரவான கருத்து நிலைகளை உருவாக்குங்கள் எனக் கூறி, இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்! நன்றி! வணக்கம்!”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

முன்னதாக, எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையில் தலைவர்கள் அனைவரும் கையெழுத்திட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், திரளான எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் தோழர் நா.வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், மகளிர் ஆயம் தோழர் ம.இலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments

2 comments

2
தமிழ் வேந்தன்
கடவுள் மாறுவதில்லை. ஆனால், சமூகமும், நம்பிக்கைகளும் மாறிக்கொண்டே இருக்கும். பழைய கால சமூக வழக்கங்களை எடுத்துக்கொண்டு தற்போது உள்ள நெறிகளோடு ஒப்பிட்டு எழுதுவது அபத்தம். அந்த காலத்தில் இவ்வாறு நெறிமுறையில்லாமல் பேசுபவர்களை கழுவிலேற்றி கொல்வர். அந்த சட்டத்தை இப்போது செயல்படுத்தினால், இவர்கள் அனைவரையும் கழுவிலேற்றி கொல்ல வேண்டும். நம் தேசம் எங்கே போகிறது. இன்று ஒரு சமூகம் செய்யும் செயல்களை அப்படியே படம் எடுத்து போட முடியவில்லை. ஔரங்கசீப் செய்ததை கண்காட்சியாக வைக்க வில்லை. ஆனால் இவர்கள் கண்டபடி எழுதுவார்களா ?
Rakesh
பெ.மணியரசன் avargal eIvalvu pesara neenga yen ilangai tamillargal kollapadumpothu intha Dravida iyakam enna seithathu.. illai intha tamil eluthalar sangam enna seithathu... yen neengal ayal naduku sellavillaya ...1000 andu palamai vaintha kovil viseshangalai eppadi neengal keli seiyalam..Intha mathiri kevalamana padaipu ungalin pattanar yum poi kelungal.. yen ippadi pin patrinargal endru.. Velai illatha atkal than intha velai seikirargal.. Enaku therintha varai Perumal murugesan achita ella puthakathaiyum vittru theerthirupar... neengal yen kavalai kolgirigal avarin ethirkala mudivai neengal yen tadukirigal.. Tamil patri pesukirigale .. Siddar galum irunthanar.. appo siddha maruthuvam poi yanatha. .avargal Siva perumanai poojika villaya.. neengalum unga dravitam mum .. Intha polapukku vera velai parkalam...oru mathathai kevala paduthum seiyal ungalai neengale asingam paduthi kolvathu.. yen Muslim mathathai pattri "charlie hebdo" cartoon varainthu nabigal nayagathai pattri kevalamaga sithharithu kondu irukirargal .. atharku yen oru Dravidarum kural kuduka mattingrigal.. poi vetla periyvangala kootitu vanga..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.