கீற்றில் தேட...

கனியும் நானும் எப்படி நண்பர்களானோம் என்று நினைவில் இல்லை. ஆனால் எப்போதுமே சண்டை போட்டது கிடையாது என்பது நினைவின் தாலாட்டு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த சந்திப்பு நடக்கிறது. சந்திப்புகளை அழகாக்குவது நீண்ட இடைவெளிகளே. இதயத்தில் இனம் புரியாத நிலப்பரப்பு வசந்தம் கொள்வது போல.. இலையுதிர் கால இசை தூரத்தில் கசிவது போல.

திட்டமிட்ட சந்திப்புகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு சாத்தியமாவதில்லை. சாத்தியமாதலைப் பற்றிய நினைப்பும் வருவதில்லை. இது எங்கோ சூழ்ந்த மேகம் எங்கேயோ மழையாய் பொழிவது போல... ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். அருகில் வந்து அணைத்துக் கொண்டான்.

எப்பிடி இருக்க.. எங்க இருக்க.. என்ன பண்ற...

அதே பழைய கேள்விகள். ஆனாலும் அதில் ஒரு நெருக்கம் உணர்ந்தேன். பின்ன... ரொம்ப நெருங்கிய நண்பன் ஆச்சே. பிறகு ஏன் இத்தனை இடைவெளி என்றால்... வாழ்வின் பிடியில் நண்பர்கள் தூரங்களாகி போகிறார்கள். வீடு சுவர்கள் எழுப்பி கூடு கட்டி விடுகிறது.

உரிமையாக கோபித்துக் கொண்டான். சரி என்று அன்று அங்கேயே இருப்பதாக முடிவாயிற்று. முகம் முழுக்க அதே மூர்க்கத்தனமான புன்னகை.

நால்பாதை பிரியும் இடத்தில் ஒரு அய்யனார் சிலை இருக்கும். அங்குதான் நாங்கள் எப்போதும் அமர்ந்து கதை அடிப்பது... பீர் குடிப்பது... குசலம் பேசுவது... கட்டம் கட்டுவது எல்லாம். எல்லா வேலைகளிலும் அய்யனார் எங்களோடு கூட்டணியில் இருந்தார் என்றே நம்பினோம். அங்கே அழைத்து சென்றான். கியர் இல்லாத வண்டியில் கிளி போல பறந்தோம்.

இன்னும் அதே சிலை.... அப்பிடியே இருக்குடா என்றேன். வியப்பு என் விழிகளில். அண்ணார்ந்து பார்க்கையில்... "என்ன ஆளையே காணோம்" என்று அய்யனார் கேட்பது போலவே இருந்தது. புது பெயிண்ட் புது கத்தி என எல்லாம் அய்யா வேலைதான் என்று உதடு பிதுக்கி புருவம் தூக்கி கழுத்தை சாய்த்து பெருமை காட்டிக் கொண்டான் கனி. அந்தப் பெருமையில் ஒரு சிறுவனின் சித்திர அழகு இருந்தது. நிலவு இசை கூட்ட இரவு றெக்கை கட்டி அலைகிறது.

வண்டியின் வயிற்றுக்குள் இருந்து பக்கார்டி பாட்டிலை எடுத்தான். வெள்ளையன். எலுமிச்சை வாசத்தில் சும்மா பூந்து விளையாடுவானே. அவனுக்கு என் பார்வை புரிந்து விட்டது. பீர் குடிச்சதெல்லாம் ஒரு காலம். இப்போ பீரும் சுத்தமா இல்ல. நமக்கு அது பத்தறதுமில்ல. அதான். உனக்கு இது ஓகே தான என்றான். சடுதியில் அவன் கண்களில் சிறு மினுக்கல். உடலில் ஒரு உற்சாகம்.

நினைவுகள் என்னை எப்போதோ குடிக்க தொடங்கி விட்டன. இப்போது பக்கார்டியாக இருந்தால் என்ன... பட்டையாக இருந்தால் என்ன. எல்லாமே அந்த போதைக்கு சைட் டிஷ் தான். சிரித்தேன். மனதுக்குள் என்னவோ சிணுங்கல்.

புன்னகைத்துக் கொண்டே முதல் ரவுண்டை ஊற்றினான். சோடா கலந்தான். பக்கத்தில் சுக்கா கறி துண்டுகளை பிரித்து வைத்தான். சுடச் சுட பிரித்த இலையில் எண்ணை மினுங்க... பார்ப்பதற்கே காரம் சாரமாக இருந்தது. ஆர்வ துள்ளலில் ஒரு துண்டெடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். ப்ச்..... ஜிவ்வென இருந்தது சுவை. குவிந்திருந்த பொட்டலம் அப்படியே விரிவது ஒரு இறைச்சி பூ மொட்டு விடுவது போல... அப்படி ஒரு சிந்தனை அப்போது வருவதை தவிர்க்க முடியவில்லை.

ரெண்டு துண்டு கறியை எடுத்து அய்யனாருக்கு வைத்து விட்டான். அப்படியே அவரின் பக்கார்டி பங்கையும் படைத்தான். என்னைக்கு தலைய விட்டுட்டு சாப்ட்ருக்கோம் என்றபடியே சியர்ஸ் சொல்லி படபடவென குடித்தான். நான் அய்யனாரை பார்த்தேன். என்னவோ மாதிரி இருந்தது. சபைக்கு வந்துட்டா எல்லாரும் ஒன்னுதான்... அடி அடி என்று கண் சிமிட்டுவது போலவே உணர்ந்தேன். சியர்ஸை தொண்டைக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு மடமடவென நானும் அடித்தேன்.

என்னவோ சட்டென சூழ்ந்த அமைதி எங்களை அப்படியே ஒரு தியானத்துக்குள் இழுப்பது போல இருந்தது. தலை முகத்தில ரெம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் கலை வந்திருக்கு என்றான்... வாயைத் துடைத்துக் கொண்டே. குரலில் இப்போது தெளிவு.

நான் அமர்ந்தபடியே மேல் நோக்கி பார்த்தேன். இப்போது பார்க்க பயமா இருப்பது போல ஒரு தோற்ற மயக்கம். குனிந்து கொண்டேன்.

சாமி எப்பவுமே நம்ம கூட இருக்கற ஆளுயா. அவருக்கு மனுசங்க மிருகங்கனு எந்த பாகுபாடும் இல்ல. நாமதான் கடவுள்னு பிரிச்சு சுவத்துக்குள்ள வெச்சு பூட்டி வெச்சர்றோம் என்றான்.

என்னடா ஒம்பதாம் கிளாஸ் பெயிலானவ இப்பிடிலாம் பேசறான்னு பாக்கறியா. பேச்சுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்குனு கேக்கறேன்... என்றான்.

எனக்கு திக்கென இருந்தது. என்ன முத ரவுண்டுக்கே ரவுண்ட் கட்டுவான் போல. நல்லா பேசறடா என்றேன்.

அப்படியே அடுத்த ரவுண்டை போட்டோம்.

ஊரில் எங்களுக்கு பொதுவாக பழக்கமுள்ள ஆட்களைப் பற்றி பேசிக்கொண்டே வந்தோம். நான் கேட்க கேட்க கனி குஷி ஆகி விட்டான். யாரு... அந்த கோமதியா... அவ... கவுந்தப்பாடிக்காரன் கூட ஓடி போய்ட்டாடா.. இப்ப மூணு பொம்பள புள்ளைங்க.

சட்டென ஒரு மவுனம். சந்தடி சாக்கில் கோமதிக்கு அஞ்சாங்கல்லு போட்டியில் ஜெயித்து முத்தமிட்ட காட்சி வந்து விட்டு போனது. ஓடிப் போற அளவுக்கு அவளுக்கு தைரியம் இருந்துச்சா. நினைவைக் களைத்தான் கனி. நீ பார்த்த கோமதி இல்லடா அவ. அதுக்கப்புறம் வெண்மதி மாதிரி மாறிட்டா. எனக்கே லவ் லெட்டர் குடுக்க தோணுச்சுனா பாத்துக்கயேன்.

கடந்த கால ஆச்சரியங்களில் ஆனந்தம் கொள்ளும் போது ஆகாயம் அருகில் வந்து விடுகிறது.

பந்தல் போடுவானே பிரேமு... என்று எங்கெங்கோ சுழன்ற பேச்சு பிரேமிடம் வந்து நின்றது.

மச்சா அவன் செத்துட்டான்டா... என்றான். வாய்க்கு கொண்டு சென்ற பக்கார்டி போத்தலை அனிச்சை அப்படியே பின்னிழுத்தது. கை காற்றில் சில நொடி திசை அற்றது. அதிர்ச்சியில் அவனையே பார்த்தேன்.

ஆமடா... ஒழுங்கு மரியாதையா... இங்கயே பந்தல் போட்டுட்டு இருந்திருக்கலாமா. பெரிய டுபாய்க்காரன்காரன் மாதிரி வெளிநாடு போனான். அதுவும் கட்டட வேலை. மலர் குந்தானிய நினைச்சிட்டே நின்றுருப்பான் போல... முப்பதாவது மாடிலருந்து கீழே விழுந்து சிதறிட்டான். நாப்பது நாளுக்கப்புறம்தான் பாடியே இங்க வந்துச்சு.

அவனை இதே நால்பாதையில் வைத்து ஒரு நாள் புளியங்கொட்டையை கர்சீப்பில் கட்டி மண்டையிலேயே அடித்து வெளுத்தது நினைவில் விசிறிக் கொண்டு வந்து விழுந்தது. எனக்கு பின்னால் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்துக் கொண்டேன். இரவு இப்போது இன்னும் கூடுதலாக கூடியிருப்பது போல தோன்றியது.

இப்போதெல்லாம் பேய் பிசாசு நம்பிக்கை இல்லை தான். ஆனாலும் உள்ளே ஒரு தூரத்து கடக் முடக் சைக்கிள் சத்தம் எழத்தான் செய்தது.

என்னடா அமைதியாய்ட்ட.. அவன் பண்ணின வேலைக்கெல்லாம்... இப்பிடிதான் சாகனுன்டா. நக்கல் நையாண்டினு கேலி பேசியே வீணா போனவன்தான. மத்தவங்கள குறை சொல்லிட்டே திரிஞ்சான்ல.. இந்தா நம்மாளுகிட்ட எத்தனவாட்டி வேண்டிருப்போம்... அதான் வேரோட அறுத்தெரிஞ்சிட்டாப்டி. தேங்க்ஸ் தலைவரே...

கனியின் முகத்தில் இப்போது பிரேமின் சாயல். அய்யோ என்றிருந்தது.

அட.. இன்னும் உனக்கு இந்த பேய் பயம் போகலயா... அட என்ன மச்சான் நீ.. அடுத்த ரவுண்டை ஊற்றினான்.

வேற பேசுவோம் என்று அவனே பேச்சை மாற்றினான். இந்த திவாகரன நாபகம் இருக்கா. அட அவனும்... இதே வேலையதான பண்ணிட்டு திரிஞ்சான். போட்டு கொடுக்கறது.. மாதிரி மாத்தி பத்த வெச்சி விடறது... மட்டு மரியாதை இல்லாம எல்லாரையும் கிண்டல் பண்றது... அவுங்கப்பா வெள்ள வேட்டிய கட்டிட்டு மீசையை முறுக்கிட்டு ..... மாதிரி வீதிக்குள்ள நடப்பானே...

ஆ எனக்கு தெரிந்து விட்டது... அட சகுனி.... நினைவுக்குள் சகுனி திவாகரன் அந்த தவளை நடையில் தெரிந்தான். அவனுக்கு என்னாச்சு என்பது போல என் நெற்றி சுருங்கியது. காது ஏற்கனவே பக்கார்டி ஹீட்டில் சூடு கொண்டிருந்தது. என்னார்வம் கோப்பைக்குள் மஞ்சள் நதியாக சுழன்றது.

அவன் மெண்டல் ஆகிட்டான். ராத்திரில ஈனுட்டே ஊர சுத்துவான். பல சமயத்துல ட்ரெஸ் அவுத்து போட்ருவான். மூஞ்சி உர்ருனு இருக்கும். ஆனா சிரிப்பு சத்தம் தொண்டைக்குள்ளருந்து வரும். ஆளே பயங்கரமா ஆகிட்டான். கொஞ்ச நாள் கிறுக்கு ஆஸ்பத்திரில வெச்சிருந்தாங்க. இப்ப வீட்ல கட்டி போட்ருக்காங்க.

நான் அமைதியாகிவிட்டேன். நிலவில் என் பார்வை தேங்கிவிட்டது.

ஊர் பாவம் பொல்லாததுடா.... சொன்னவன் அவனும் அப்படியே அமைதியாக இருந்தான். நினைவுகளின் மத்தியில் நிற்கையில்... ஒரு கட்டத்தில் ஏகப்பட்ட சாலைகள் பிரியும். எந்த வழியில் போவதென்று தெரியாமல் போகும். அப்படித்தான் எங்களுக்கும் இருந்திருக்க வேண்டும்.

முடி வெட்ட காசு வாங்கிட்டு நாங்களே மாத்தி மாத்தி வெட்டிட்டு காசு மிச்சம் பண்ணி சினிமாவுக்கு போனதெல்லாம் நினைவில் கறக் முறக்கென சத்தம் போட்டது. நண்பன் சித்தேஷ் கடையில் உக்காந்து பேசி பேசி அவன் எப்பிடி முடிவெட்றான்னு பார்த்து பார்த்து கத்துக்கிட்ட கலை காலைக்காட்சி பார்க்க உபயோகமானது நினைவில் திரை கட்டியது.

மௌனத்தை கலைக்க ஒரு பேச்சு... பிறகு பேச்சு தொடர ஒரு மௌனம். குடிக்க குடிக்க மனம் இலகுவாகி விடுகிறது. உடலில் ஒன்றுமில்லாத மறதி. நேரம் அற்ற காலத்துக்குள் காலாற ஒரு நடை. கண்களுக்கு அருகே இருக்கும் எல்லாமே நம்பும்படி ஆகி விடுகிறது. பேச்சு டைரக்டர் பிரியன் மேல் போனது.

அவன் இன்னும் மெட்றாஸ்லதான் சுத்திட்டுருக்கான். ஆசை இருக்கு. ஆனா புத்தி வேணும்ல. படம் புடிச்சிட்டுதான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி.. பாதி கிழவன்...இல்ல இல்ல முழு கிழவனாவே ஆகிட்டான்.

அட... அப்பவே அவனுக்கு இருவது வயசுக்கு மேல இருக்குமா.. இப்ப முப்பது வருஷம் ஓடிருச்சு... யோசிச்சுக்கோ...

சித்தத்தில் துடைத்து வைத்த பிரியனின் முகம். நொடிக்கும் குறைவான நேரத்தில் கடந்த காலத்துக்குள் சென்று அமர்ந்து விடும் மனது பால்யத்திலேயே உருண்டு கிடக்குது.

கருப்பசாமி நோம்பிக்கு சிங்கப்பூரான் வீட்டு மாடில உக்காந்து எல்லாரும் பீர் குடிச்சானுங்க. அப்ப பின்னால நின்னு அவனுங்க குடிக்கறதை வேடிக்க பாத்துட்டுருந்தோம் நியாபகம் இருக்கா... ரெண்டு பீர்க்கு பத்து பேர் சுத்தி உக்கார்ந்து இருந்தானுங்கல.

இடையே அந்த சீனையும் சொல்ல தோன்றியது.

அந்த காட்சி அப்படியே வட்டமடித்து எங்கள் இருவரையும் உள்ளிழுத்துக் கொண்டது.

சுற்றிலும் அமர்ந்து பீர் குடித்துக்கொண்டே ..பரோட்டா... நேந்திர சிப்ஸ் என்று நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். நான் நீ விக்கி கொய்யாங்குடி...அப்புறம் வேற யாரு கூட இருந்தா... மூஸா இருந்தானு நினைக்கறேன். தொடைக்கு கைகளை கொடுத்து கழுத்தை உள்ளிழுத்துக் கொண்டு இரண்டு மண்டைக்கு கேப்ல குனிந்து நின்று வேடிக்கை பார்த்த அந்த காட்சிக்கு வண்ணம் தான் எதுவென்று தெரியவில்லை. ஆனால்... அந்தக் காட்சிக்கு வாசமுண்டு. இந்தப் பக்கம் நான்... எதிரே நீ.. அப்புறம் இடையிடையே இவனுங்க. குடிகாரப் பயலுங்க... பேச்சுக்கு கூட ஒரு துண்டு பரோட்டா குடுக்கல...

திக்குனு விழுந்த சத்தம் எல்லாரையும் ஸ்தம்பிக்க வைத்தது. மென்றவன் அப்படியே நிறுத்தினான். குடித்தவன் அப்படியே நிறுத்தினான். பேச்சு பாதி பேச்சில் அப்படியே நின்றது. மூச்சு மட்டும் அறைக்குள் கும்மியடித்து போல. பொடனியில் விழுந்த அடியில்... முன்னால் அமர்ந்திருந்த பிரியன்.... கூட்டத்தின் இடது பக்கத்தவனின் தோளில் சரிந்து அவனும் அவன் பக்கத்தில் உள்ளவன் மேல் சரிந்து நல்லவேளை முன்னே சரிந்து பாட்டிலை கவிழ்க்க வில்லை. சமாளித்துக் கொண்டார்கள். வட்ட அமர்வில் சிறு சலசலப்பு. தடுமாற்றம்.

என்ன சொல்லிட்டு போனேன். என்ன பண்ணிட்டு இருக்க... என்று கனியின் சித்தி பிரியன் முதுகோரம் விழுந்து தடுமாறிய அவனை சராமரியாக அடித்து இழுத்து போனது. விஜயகாந்த் ரசிகன் என்பதால் அவரைப் போலவே பங்க் விட்டு நடுவில் நேர் எடுத்திருப்பான் கனி. வாகாக முடி சிக்க.. முழு மூச்சில் இழுத்துப் போனது.

அய்யனார் காலில் பெருமூச்சோடு சாய்ந்து அமர்ந்தான். அவன் முகத்தில் இனம் புரியாத வியர்வை துளிகள். கனியே முனியாகி விட்டான் போல தோன்றியது.

கனத்த அமைதி. எனக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென சட்டென்று தடை பட்டது.

ஊற்றி இருந்த அடுத்த ரவுண்டு அப்படியே எங்கள் முன் ஜோடி போட்டு நின்றிருந்தது. ததும்பல் அற்ற சோம்பல் அதன் சலனமற்ற அமைதியில். கொப்பளித்த சோடாவின் குமிழ்கள் மதுவோடு இணைந்து விட்டதாக நம்புகிறது போல.

பாலைவன பாம்பின் சீற்றமென இருந்தது திடும்மென எழுந்த அவன் பேச்சு.

அப்ப மட்டுமா அடிச்சா. எத்தன நாள் உன்கூட விளையாடிட்டு இருக்கும்போது அடிச்சிருக்கா. மும்மரமா விளையாடிட்டு இருப்பேன்... அடிச்சு இழுத்துட்டு போயி சோறு குழம்பு செய்ய வைப்பா.. தண்ணி எடுக்கணும்... முடியாதுனு சொன்னா அடிதான்... ஒரு நாள் நாம மருதுபாண்டி படம் பார்த்தோம்ல. அப்ப வீட்டுக்கு வந்ததும் உப்புல முட்டி போட்டு நிக்க வெச்சி அடி வெளுத்துட்டா. பெரிய வீதில சும்மா நின்னு உங்ககூட பேசிட்டு இருப்பேன். அங்கயே அடிச்சு துவைச்சு இழுத்துட்டு போவா. உனக்கும்தான் தெரியுமே. எங்கம்மா இவளை சின்ன வயசுல ரெம்ப கொடுமை படுத்திருக்காளாம். அதான்.. என்னை போட்டு படுத்தறான்னு மாகாளி கிழவி சொல்லிருக்கு. எல்லாம் மெண்டல் கேஸுங்க...

மீண்டும் அமைதி அவனிடம். எனக்கு நினைவிருக்கிறது. அவன் மாமா ஈபிலதான் இருந்தாரு.. சோக்கு... பல்பு கம்பினு அப்பப்போ எடுத்துட்டு வந்து கடைல போட்டு என்னை விக்கியெல்லாம் சினிமாவுக்கு கூட்டிட்டு போவான். அன்னைக்கு ராத்திரி அவனுக்கு பூஜை நடக்கும். காலைல கன்னம் வீங்கி முதுகு வீங்கி காது சிவந்து வந்து நிப்பான். ஆனாலும் அது பத்தி எதுவும் பேசாம ஜாலியா பேசிட்டுருப்பான்.

இருவருக்குமே அந்த ஒரு சம்பவம் ஒரே நேரத்தில் நினைவில் தோன்றியது. எங்கள் கண்கள் பளபளவென பார்த்துக் கொண்டன.

ஒன்பதாவது பெயில் ஆன வருத்தத்தில் கிணத்து மேட்டுல சோகமா உக்காந்துருந்தான். அதே வேகத்தில வந்து குடத்தாலயே நங்கு நங்குன்னு அடிக்க ஆரம்பிச்சிருச்சு. என்ன நினைச்சானோ தெரியல. பக்கத்துல இருந்த வாலிய எடுத்து முதுகுல சாத்தினான். முதல் முறையா திருப்பி அடிச்சிட்டான். அங்கங்க நின்னுட்டிருந்த போய்ட்டிருந்த ஊர்க்காரங்க எல்லாருக்குமே ஆச்சரியம். கண்ணுல கிணறு கொப்புளிச்ச மாதிரி பாத்தாங்க. யாரும் எதுவும் சொல்லல. அவன் செய்கைய அமோதிச்ச மாதிரிதான் இருந்துச்சு. கீழ தடுமாறி விழுந்த சித்தி வயித்துல நெஞ்சுலனு மிதி மிதின்னு மிதிக்க.. அப்புறம் நாங்கள் எல்லாரும் பிடிச்சு இழுத்துட்டு வந்து அமைதி படுத்தினோம்.

அதுக்கப்புறம் கனிகிட்ட யாருமே வம்பு வெச்சிக்கறது இல்ல. நான்கூட வரியா இல்லையடா என்று சத்தம் போட்டு கேட்பேன். அதுக்கப்புறம்.. வரதா இருந்தா வாப்பா.. உன் இஷ்டம் என்று சொல்ல தொடங்கி விட்டேன்.

அவுங்க சித்திக்கு செவ்வாதோஷம். வயசு வேற கூடிருச்சு. கொஞ்சம் பைத்தியமும் தான். அப்புறம் கடலக்காரன் அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போவான். அப்பப்போ சித்திக்கு வலிப்பு வேற வரும்... எல்லாம் சேர்த்து கல்யாணம் தள்ளி தள்ளி போச்சு...

என் நினைப்பில் கல்லெறிந்தான். தெறித்தது பட்டு சிதறிய அவன் கண்ணீர்.

என்னாச்சு கனி.. ஏன்டா அழுவுற.. என்றேன். என் மெல்லிய போதையில் பதற்றம் தத்தளித்தது. என்னாச்சு ஏன்டா என்றேன். அமைதியான குரலில் ஸ்திரம் பாய்ச்சினேன்.

இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்டது அவன் அழுகை. தப்பு பண்ணிட்டேன்டா.. என்ன போட்டு டார்ச்சர் பண்ணதுனால... எங்க சித்திக்கு பைத்தியம்... செவ்வா தோஷம்... கடலகாரன் வீட்டுக்கு வரான். வயசு அதிகம்னு இன்னும் என்னென்னவோ சொல்லி புரளியை கிளப்பினதே நான் தான்டா.. அதுக்கு ஹெல்ப் பண்ணுனது அந்த மெண்டல் பய திவாகரன். பல்பு.. ஒயர்ரு...சோக்குனு எடுத்தெடுத்து குடுப்பேன்...

அவ்வப்போது அவனோடு ரெட்டை பன மரத்துக்கடியே நின்று இவன் பேசிக் கொண்டிருப்பது இப்போது நினைவுக்கு வந்தது.

அதுதான் ஊருக்குள்ள அப்பிடியே பரவி இப்பவர என் சித்திக்கு கல்யாணமே ஆகலடா..

பெரும் பாவத்தை செய்து விட்டதாக அவன் அழுகை குமுறியது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அழுதான்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. யார் மீது தவறு... ஏன் இதெல்லாம் இப்படி நடக்க வேண்டும்.. ஏன் அவுங்க சித்தி அவனை போட்டு அப்படி அடிக்கனும்... எதற்குமே என்னிடம் பதில் இல்லை. தெரிஞ்சு செய்யற இல்ல.. தெரியாம செய்யற எவ்வளோ காரியங்களுக்கு காலத்துகிட்ட பதில் சொல்ல வேண்டி இருக்குல. அவன் துக்கம் என்னையும் ஆட்கொண்டது. கழுத்தில் மேயும் துயரத்தை கண்களில் துளிகளாய் சிமிட்டினேன்.

அவன் விசும்பிக் கொண்டே இருந்தான். விசும்பல் தானாக நிற்கும் என்று காத்திருந்தேன். என் கண்கள் ஏதேட்சையாக அய்யனார் பக்கம் திரும்ப அய்யனாருக்கு வைத்திருந்த சரக்கைக் காணவில்லை. திடுக்கிட்டேன். திக்கென சற்று பின்வாங்கி நகர்ந்தேன். அவனைப் பார்த்தேன். அவன் விசும்பலில் இருந்து வெளியேறி மெல்ல முகத்தை மேலே தூக்கினான். என் அதிர்வு அவனையும் தொற்ற... திரும்பியிருந்த என் கண்களில் கோட்டில் அவனும் திரும்பினான். அவனுக்கும் அதே திக். இருவருமே ஒருவரை ஒருவர் ஆழமாக பார்த்தோம். அமைதி எங்களைச் சுற்றிலும். இரவு பூச்சிகள்... இன்னும் வேகமாய் கத்தின.

அவன் எழுந்து அந்த காலியான பிளாஸ்டிக் போத்தலை எடுத்து திருப்பி திருப்பி பார்த்தான். இரவின் அமைதிக்குள் இன்னதென சொல்ல இயலாத கனம். பளாரென விழுந்தது ஓர் அறை. தடுமாறி நகர்ந்து நிலைகொண்டு நிமிர்கையில்.. பக்கவாட்டு இருட்டுக்குள் இருந்து அவன் சித்தி வெளியே வந்தது.

சிலைக்கு பின்னிருந்து கையை மட்டும் விட்டு எடுத்து சரக்கை கவிழ்த்திய அதன் செய்கை அவனுக்கு புரிந்து விட்டது. எனக்கும் புரிந்திருந்தது. ஆனால் இன்னுமா அடிக்குது என்பதை எப்படி புரிந்து கொள்வது.

நேரம் என்னாச்சு... இங்க என்ன பண்ணிட்டுருக்க... என்று இன்னொரு அரை. கழுத்தில் கிடந்த துண்டை கொத்தாக பிடித்து இழுத்தது. தலையில் சொட்டை இருந்தாலும்... சட்டென சிறு பையனாக ஆனான் கனி. சித்திக்கு கிழட்டு தட்டி இருந்தது. அது என்னை ஒரு பார்வை... அப்போது பார்க்கும்.. இனி இவன்கூட சேர்ந்த... உனக்கும் இருக்குனு... அந்தப் பார்வையை வீசியது. நிஜமாகவே பயமாக இருந்தது. ஒரு கணம் நானும் சிறுவனானேன். ஒடுங்கிக் கொண்டேன்.

சற்று நின்று திரும்பி கையை நீட்டி அய்யனாருக்கு வைத்திருந்த ரெண்டு துண்டு கறியை எடுத்து வாய்க்குள் போட்டபடி அவனை இழுத்துக் கொண்டு நகர்ந்தது. எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அவன் அப்போது போலவேதான். சித்தி இழுத்து போகையில் நமக்கு எந்த சமிக்ஞையும் கொடுக்க மாட்டான். இப்போதும் கொடுக்க வில்லை. எனக்கு இப்போது நன்றாகவே போதை கூடியது போல நம்பினேன்.

பேய் பயம் இல்லை. இரவு பயம் இல்லை. என் மீதே நான் கொண்ட எந்த பயமும் இல்லை. எதிலிருந்தோ இறங்கி விட்டது போல இருக்கிறது. எங்கிருந்தோ கிடைத்து விட்டது போலிருக்கிறது. நான் அய்யனாரின் கால் அடியில் அப்படியே சரிந்து படுத்து விட்டேன். மடியில் கிடப்பது போல மனம் நம்பியது. நிலவு பக்கத்தில் இருந்தது. மனதுக்குள் ஒரு நிம்மதி. மனதின் மூலையில் சத்தமில்லாமல் தவழ்ந்து கொண்டிருந்த தவிப்பு இப்போது அமைதியாக மூச்சு விட்டது.

நல்லவேளை... நான் கனியிடம் மல்லிகாவைப் பற்றி கேட்கவும் இல்லை. அவன் சொல்லவுமில்லை.

- கவிஜி