உடலுக்குள்ளேயே உடலைத் தின்று
வளரும் மனம் எனது பாடலின் தூரங்களையும்
அர்த்தங்களையும் அறிந்திருந்தது
ரகசியமாய் நான் வரைந்துவைத்திருந்த
நிர்வாண ஓவியங்களையெல்லாம்
அரித்துத் தின்றுபெருத்தது
காலை முதல் நிலவு திரும்பும் வரையிலான
என் புல்லறுக்கும் அசைவுகளில்
ஒடுங்கி உறங்கியது
உடலைச் கிளைகளாக்கிப் பறவைகள் வந்தமரச்
சிலிர்த்து நெளிந்தது
இன்னுமொரு பாடலுக்காய்த்
திரைகளை அவிழ்க்கும்போது
என் இதயத்திலிருந்து வெளியேறுவேன்
காளான்கள் பூக்கும் மழைஇரவில்
என் தந்தையின் விதைகள் வீழ்ந்த
நிலத்தைக் கண்டடைந்து
ஒரு மரமாய் முளைத்தெழுவேன்
அழுகத் தொடங்கியிருக்கும் என்னுடலில்
துடிதுடித்து அழும் அப்புழு
- குட்டி ரேவதி
கீற்றில் தேட...
நெளியும் பிரதி
- விவரங்கள்
- குட்டி ரேவதி
- பிரிவு: கவிதைகள்