புலி நெடுநாளாய் அமர்ந்திருந்தது
அது எழுந்து நடந்தபோது
பொழுது இருட்டிவிட்டது
உறங்க எத்தனிக்கும் என்
காதருகே தன் சுடு மூச்சைவிட்டது
நான் பொய்யாகப் புரண்டு படுக்க
எல்லாரையும் தாண்டி எல்லாவற்றையும் தாண்டி
இடம்பெயர்ந்த அது
என் அருகே படுத்திருக்கும் என் மகளின்
அடிவயிற்றுச் சூடு தனது
முகத்தில் படியவெனப் படுத்துச் சுருண்டது
விடிந்ததும் கண்டேன்
என் மகளையும்
அவளுக்குப் பக்கத்தில்
ஒருபிடி அடுத்த தீவின் மண்ணையும்
- மாலதி மைத்ரி