எல்லோரும் வாழுதற்கே இறையை வேண்டி
இனிதாக நாளொன்றை தொடங்க வேண்டும்
நல்லோரும் வல்லோராய் நிலத்தில் வாழ
நியாயத்தைப் பேசுகின்ற நேயம் வேண்டும்
இல்லாமை கல்லாமை இல்லா திருக்க
உள்ளதையும் பகிர்கின்ற உள்ளம் வேண்டும்.
நில்லாமல் சுற்றுகின்ற பூமி தன்னில்
நேரத்தை மதிப்பிட்டே வாழ வேண்டும்.

ஆண்டுகளும் ஓடுவதையே அறிந்திருந்தும்
ஆன்மத்தை அறியாமல் வாழ்ந்திருந்தோம்
நீண்டதல்ல இவ்வாயுள் நினைவில் கொண்டால்
நல்லதையே செய்கின்ற எண்ணம் வருமே!
தாண்டுகிற தடையாவும் உலகை வெல்ல
தன்மனத்தை வென்றிடவும் தெரிய வேண்டும்.
வேண்டுகிற யாதொன்றும் தவறா என்றால்
.விளைவுகளின் அறுவடையில் வைத்திருக்கும்.

ஆதத்தின் சந்ததிகள் அனைவர் மீதும்
அருளையே பொழிதற்கு இறையை வேண்டி
வேதத்தின் பேர்சொல்லி வேட்டு வைக்கும்
விளங்காத மனிதரெல்லாம் விலங்கு என்போம்.
பேதத்தால் மனிதரையே பிரித்து வைக்கும்
புண்மனத்தார் எவரையுமே பேய்கள் என்போம்
நீதத்தை கூறுவைக்கும் இவரைத் துரத்தி
நலங்காணும் உலகத்தை நனவு செய்வோம்.

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

இப்னு ஹம்துன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.