யாரும் எழுதாத
கவிதை யொன்றை
கண்டுதரும் எண்ணமுண்டு.
உன்னத தரிசனத்திற்கு
பக்திச் சிரத்தை அவசியம்.
எழுதிக் கொள்ளுங்கள்
யாரும் பேசாதப் பேச்சை
எழுதாத எழுத்தை
பார்க்காத பார்வையை.

உங்கள் உள் அறைகளில்
மண்டிக் கிடக்கும்
குப்பைகளின் மக்கிய வீச்சம்
மண்டையைப் பிராண்டும் முன்
கூட்டிப் பெருக்கி முதலில்
ஸ்தலம் பேணுங்கள்.

தட்டுப்படும் நேர்த்தியான
கலாச்சார வட்டங்களை
துடைத்தெடுத்து
உயரத்தில் மாட்டுங்கள்.
நீதி போதித்தப்
புத்தகங்களையெல்லாம்
துடைத்தெடுத்து
பத்திரப் படுத்திவிடுங்கள்.
பாசத்தையும் பிரியத்தையும்
விசேச காலங்களில் பேணுங்கள்.
.
பொக்கிஷ வார்த்தைகளின்
விரயம் தவிர்க்க
இருப்பை திறக்காதீர்கள்.
கொள்கை முழக்கங்களையும்
லட்சிய வேட்கைகளையும்
கண் இழந்து
யாசிப்பவர்களிடம்
மனமுவந்து தந்துவிடுங்கள்.

எட்டி நடைபோடும் நாளில்
இடிபடும் வண்ணப் பூச்சு
மேவும் அழகே அழகு.
கதவுகள் திறந்தே இருக்கட்டும்
ஒளிக்கீற்று மினுக்கும்
சாளரங்களில் தட்டாது
பக்ஷிகள் படபடக்கும் நித்தம்.

தாஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.