நிலையில்லா உலகும்
நிக்காத பணமும்
எங்களுக்கா மாரியம்மா
ஏழைக்குதான் காளியம்மா!

கடன் வாங்கி விதைச்சு புட்டோம்
கதிரறுக்க காசில்ல
வட்டி கடை காரனுக்கு
வருசம்பூரா பணமிருக்கே!

நிலையில்லா..............

அறுத்த நெல்லை குறைவாக
வந்த விலைக்கு வித்துபுட்டு
விதைநெல்ல வச்சுறுக்கோம்
மாசி மாதம் பொங்கவைக்க!

நிலையில்லா..............

விடியலில எந்திருச்சு
விவசாயம் பாக்கபோனோம்
விடியலத்தான் காணலியே -வாழ்க்கை
இருள் மட்டும் மாறலையே

நிலையில்லா..............

ஏர்புடிச்ச கைகளுக்கு
ஏனிந்த பாரபட்சம்
வேர்புடிச்ச மரத்துக்கு
வேணுமா கல்லடிதான்

நிலையில்லா..............

ஆயிரம் கண்ணுனக்கு
உள்ளதுன்னு சொன்னாங்க
ஆயிரத்தில் ஒன்ன தொறந்து நீ பார்த்தாக்க -அந்த
ஒரு கண்ணு அழுத கண்ணீர்
உலகத்தை நிறைச்சிடுமே!

நிலையில்லா..............

தியாகு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.