(கருவுற்றிருக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் தாகங்கள்...)

Gardenகவிதை ஒன்று வேண்டும் - தமிழ்க்
கவிதை ஒன்று வேண்டும் - நான்
செவிமடுத்து மனம் சிலிர்க்கும் வண்ணமொரு
சின்ன கவிதை வேண்டும்!

சோலை ஒன்று வேண்டும் - அங்கு
தூய தென்றல் வேண்டும் - இளங்
காலை தோறும் தமிழ்ப் பண் முழங்கி எனைக்
கருணை செய்ய வேண்டும்!

இசை ஒலிக்க வேண்டும் - தமிழ்
எனை மயக்க வேண்டும் - புது
விசைபடர்ந்ததென அழகு தமிழ் வரிகள்
வெறி கொடுக்க வேண்டும்!

பாட்டுச் சொல்ல வேண்டும் - இசை
பாய்ந்து செல்ல வேண்டும் - அதைக்
கேட்ட படியெனது கருவில் வளர்மழலை
கிறக்கம் கொள்ள வேண்டும்!

நாத மணிகள் வேண்டும் - அவை
நான்கு புறமும் வேண்டும் - தமிழ்
வேத கிண்கிணி முழங்க, என் வயிற்று
வேங்கை துயில வேண்டும்!

வாத்தியங்கள் வேண்டும் - கவி
வாக்கியங்கள் வேண்டும் - அதில்
ஏத்திவைத்த தமிழ் மெட்டில் எனது சிசு
இசை படிக்க வேண்டும்!

வீணை காண வேண்டும் - அதை
விழுந்து தழுவ வேண்டும் - இசை
ஆணை இடும் தேவி எனது சேய் மகிழ
ஆசி அருள வேண்டும்!

அமுதம் ஊட்ட வேண்டும் - தமிழ்
அமுதும் ஊட்ட வேண்டும் - இனி
எமது மடிதவழும் மழலை கேட்கவொரு
இனிய கவிதை வேண்டும்!

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It