வெளிர் நீல
வானத்தில்
பெரும் பறத்தலுக்குப் பிறகு
சமன் செய்து கொண்டு
கீழிறங்கி
வானாளவ விரிந்து நிற்கும்
மரத்திற்கு வருகிறது
திசையறிந்த பறவை
பூமிக்கும், வானுக்கும்
ஈரத்தை
அனுப்பிக் கொண்டிருக்கும்
அதன் கிளையில்
வட்டமிட்டு அமர்கிறது
பறவை
கீழே படுத்தபடி
காலதீதத்தை
அகத்தில் நோக்கிக் கொண்டிருக்கிறான்
புதிய சித்தார்த்தன்
தன் திசையிலிருந்து
எடுத்து வந்த செய்தியை
மவுன மொழியில்
கடத்திவிட்டுப் பறக்கிறது
புதிய பாதையில்
- மாரி.கிருஷ்ணமூர்த்தி