1.
எல்லோரும் சந்தோசமாக
இருக்கும் இடத்தில்
மறைந்துள்ள ஏதோவொரு
சோகம் கண்ணில் படுகிறது.
சோக வீட்டிலும்
ஏதோவொரு உற்சாகம்
மனதினுள் புகுகிறது.
இடம் பொருள் ஏவல்
அறியாது
கவிதை மனம்
அதிகப்படியான
கவலையை நீர்த்துவிடுகிறது.
குறைவான மகிழ்ச்சியை
கெட்டிப்படுத்துகிறது.
குழந்தையும் கவிஞனும்
குணத்தால் ஒன்றென
ஒத்துக்கொள்வது தெய்வக் குற்றமோ??
2.
உங்களைப் போல்
சந்தோசமாய் இருப்பது எப்படியென
பாடிக் கொண்டிருந்த
பறவையிடம் கேட்டேன்.
சந்தோசமாய் இருப்பது எப்படியென
எங்களைப் போலவே
யோசிக்காமல் இரு
என்றவாறே அகன்றது.
- அ.சீனிவாசன்