ஒரு நெடுமழை நாளில் தான்
நீ தேம்பித் தேம்பி அழுதது
மழையில் நனைந்த இரவு
திரவ வடிவமெடுத்து
தெருவெங்கும் ஓடியது
பிசுபிசுப்பாக
இத்தனை நாட்களுக்குப் பிறகு
சிறுதூறலுக்கு சிலிர்க்கும்
நினைவுகளைப் பார்க்கும் போது தான்
அன்று நீ அழுதது எனக்குப் புரிகிறது
ஒரு நினைவாகி
விடுவதற்குத்தானோ
மனிதர்கள்
கண்ணீர் சிந்துவது என்று தான்
முதலில் நினைத்தேன்
ஆனால் நினைவில்
உயிர்த்தெழுவதற்கு என்று
இப்போது கண்டு கொண்டேன்
ஒரு சின்னஞ்சிறிய மனதால்
எத்தனை சுமக்க முடிகிறது!
கடலை அலையை பொழுதை
மலையை நதியை மணலை
வாழ்வை மரணத்தை என்று
ஒரு சிறிய பிரிவைத் தவிர
- தங்கேஸ்