1. யார் ஜெயித்தது?

கவுரவர் போரில் இறந்தனர்.
பாண்டவர் போருக்குப் பின்னர் இறந்தனர்.
அட யார் தான் ஜெயித்தது, கிருஷ்ணா!?

2. நடைபாதை

மதியம் சாப்பிட்டவன் செரிக்க
இரவு பசிக்க வேண்டுமென ஓடியவன்.
இருவரையும் இலகுவாகத் தாண்டிச் செல்ல
காலையிலிருந்தே பசியோடு
சுருண்டு கிடந்தான் இன்னொருவன்.

3. தாய்ப்பசி

பசிக்கிறதென அழுத குழந்தைக்குப்
பொம்மையைக் கொடுத்தவள் —
கொஞ்ச நேரத்தில் தானும்
அந்த விளையாட்டில் இணைந்தாள்.

4. பசி – பணம்

பணத்தோடு பணம் சேரட்டும்,
பணக்காரன் பணக்காரனோடு சேரட்டும்,
ஏழை ஏழையோடு சேரட்டும் —
பசி ஏன் எப்போதும் பசியோடே சேர வேண்டும்?

5. மியாவ்

பரிசோதிக்கும் போதே
திடீரென இறந்தது குட்டிப் பூனை.
"Sudden cardiac arrest" என்றேன்.
தாய்ப்பூனையின் மியாவ்
நன்றாகப் புரிந்தது.
ஆனால் மனிதனின் புலம்பல்
சுத்தமாய்ப் புரியவில்லை.

- அ.சீனிவாசன்