முகம் மறைக்கும் அளவிற்கு பெருகிவிட்ட
இந்த இருளை
ஒரு கைப்பிடி அள்ளி விழுங்குகிறேன்
உருவமற்றவனாகிறேன்
உருவமற்ற இலகுவில்
ஒற்றை இறகாய்
மிதந்து போய்க்கொண்டிருப்பது
அத்தனை சுகமாய் இருக்கிறது
துயரத்தின் அடர்த்தியற்ற வெளிதனில்
மிதப்பதற்கு சிறகுகள் தேவையில்லை
இருளே தேவை என்று
உணரும் கணத்தில்
உற்பத்தியாகின்றன
எனக்குள் கடவுளின் செல்கள்
வழிந்தோடும் குருதி நின்ற பின்பு
அறையப்பட்ட ஆணிகள்
கழன்று விழுகின்றன பூவாக
சிறகுகளாகின்றன சிலுவைகள்
உயிர் மெய் சிலிர்க்கச் செய்யும்
இந்த குளிர்காற்றின் தீண்டலில்
பவனிவரும் கடவுளைக் கண்டு
புன்னகைக்கிறேன்
எதுவுமே கேட்கத் தோன்றாமல்
- தங்கேஸ்