வாசலில்
தேங்கி விட்ட சேற்றில்
செந்தாமரை
விதைத்துப் போனது
எதிர்வீட்டுப் பெண்ணின்
பாதங்கள்....
---
இன்னும் கொஞ்ச நேரம்
என்று மார்புக்குள் முகம்
புதைத்து
நீ தூங்குவதில்
முடிகிறது
இந்த தீபாளியும்....
---
நீ வெடித்த பட்டாசுகளின்
ஞாபக வெளிச்சங்களாய்
உன் செல்ல பயங்கள்...
----
எல்லா மழைக்கும்
உன் கூந்தல் குடையாகிறது
நனைந்தும் நனையாமல்
மழலை நடை எனது....
---
குளித்து முடித்து ஈரம்
சொட்ட சொட்ட
நீ வீட்டுக்குள் அலைவதில்
தொடங்குகிறது
ஞாயிறின் பின் மதியம்...
- கவிஜி