ஒவ்வொரு வருடமும்...
எந்த மாற்றமும் இல்லாமல்...
நடத்தப்படுகின்றன..
ஊர் திருவிழாக்கள்.
முகத்திலும் முதுகிலுமாய்...
வேல் குத்தியபடி...
அங்குமிங்கும் ஆடும் மனிதர்களை...
மிரண்டு போய் பார்க்கின்றன குழந்தைகள்.
அடிக்கும் உடுக்கையொலி..
கூடக் கூட...
கூச்சல் போட்டபடி..
ஆடத் தொடங்குகின்றனர்..
சில பெண்கள்.
தன் மரணத்திற்குத்தான்
என்று தெரியாமலே
தலையாட்டி
சம்மதம் சொல்கிறது ஆடு...
ஓங்கி இறக்கிய
அரிவாளின் வேகத்தில்...
உடல் விட்டு தனியே...
உருண்டோடுகிறது தலை.
பீய்ச்சியடிக்கும்
இரத்தம் பார்த்ததும்...
பூரண திருப்தியாய்..
கூச்சலிடுகிறது கூட்டம்.
" இதெல்லாம் அவசியம்தானா"...
தயங்கியபடி கேட்கும் என்னிடம்...
"சாமி குத்தமாயிடும்ல..
எல்லாம் அவருக்காகத்தான்.."
என்று அவர்கள் கைகாட்டும் திசையில்....
குலைநடுங்கிப் போய்...
கருவறைக்குள்...
பதுங்கியிருக்கிறார்...
கடவுள்.
- சசிதரன் தேவேந்திரன்
SS
senthil ganesh shenbagamoorthy
Good