வேண்டாம்

கொடும் இரவுகளில் புனையப்பட்ட

பிணக்கதைகளிலிருந்து

ஒரு பூ பூக்குமென்றோ

அதன் நடனமிடும் விழிகளில்

சூரியன் உதிக்குமென்றோ

யாருமே நம்பவேண்டாம்

 

வாழ்வு குறித்த மெல்லிய கவிதையில்

புனைவுக்காலக் கதையாடல்கள்

வளர்ந்த போதுதான் நான் புரிந்தேன்

எந்த முகத்தின் வசீகரத்திலும்

உண்மை முகம் இல்லை என்பதை

 

புனைவுக்காலச் சொற்கள் முழுவதிலும்

எனது கண்ணீரும் குருதியும்

 

சாவின் இழைகளைப் பின்னியபடி

என் மீதான நிறங்களை

உரித்தெடுத்த நீங்களே

ஓரிரவில் என் நிர்வாணத்திற்காக

கண்ணீர் பெருக்கினீர்கள்

 

சூரியனின் ஒளியாய்

குருதி வழிந்தபோதும்

கனவுகளில் தேள்கள் குற்றி

வலியெடுத்த போதும்

கருகாத உங்கள் புன்னகையை

மலக் குழியினுள்ளோ

நாறும் கழிவோடையினுள்ளோ

கொட்டித் தீருங்கள்

 

நான் நிர்வாணமாக மட்டும் இருக்கிறேன்

உங்களின் புனைவுக் காலத்தில்

 

என் நிர்வாணம்

உங்களது நிர்வாணத்தின்

அடியிலிருந்தே துளிர்த்தது

நான் நிர்வாணமாக மட்டுமே இருக்கிறேன்

சித்தாந்தன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.