கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பசுமைத் தண்டுகள் தாங்கிய 

வெள்ளைப் பூங்கொத்துகள் இரண்டை

வெம்மையான பின்னிரவில்

வாங்கிக் கொள்ளச் சொல்கிறாள்

கண்ணாடி இறக்கி

தரிசனம் தருபவன்

நீண்ட பேரத்திற்குப் பின்

ஒன்று போதுமென்கிறான்

மனைவியை மகிழ்விக்கப்போகும்

பூக்களுடன் சில்லென்ற

உலகுக்குள் மறைகிறான்

இரண்டையும் விற்கக் கூடிய

சாமர்த்தியமற்றவள்

சாலையோரத்தில் காத்திருக்கும்

கணவன் முன் தயங்குகிறாள்

அவன் கைவீச்சில் தெறிக்கும்

அவள் உதட்டு இரத்தம்

வெள்ளைப் பூங்கொத்தில்

செஞ்சாயம் பூசுகிறது

மனைவிகளை மகிழ்வூட்டவும்

இரத்தம் சிந்தவும் தூண்டும்

பூக்கள் வெவ்வேறு செடிகளில்

பூத்திருக்க வேண்டும்

- அனுஜன்யா