1980களின் இறுதிப்பகுதியில் இளையராஜா ஒரு வாரப்பத்திரிகையில் Johann Sebastian Bach பற்றி ஒரு சிறிய தொடரை எழுதினார். அதைப் படிப்பவர் எவருக்கும் அவருக்கு சங்கீத மும்மூர்த்திகளிடம் எவ்வளவு பிரேமையும், பக்தியும் மதிப்பும் உண்டோ அதற்கு இணையாக J.S. Bachம் ஒரு மஹானுபாவராக இராகதேவனாக அவரால் போற்றப்படுவது தெரியவரும். பின்னால் அக்கட்டுரைகளின் தொகுதி ஒரு சிறிய நூலாகவும் வெளிவந்ததுண்டு.

என் புலம்பெயர்வாழ்வின் ஆரம்பத்தில் அரசுதரும் உதவிப்பணத்தில் வாழ்ந்துகொண்டிருந்தகாலை ஒருநாள் பெர்லினில் Kiperts என்னும் பாரிய புத்தகக்கடையினுள் மேய்ந்துகொண்டிருந்தபோது அங்கே இசைநூல்களின் பகுதியில் J.S.Bach பற்றிய ஒரு அருமையான நூல் இருப்பதைக் கண்டேன். அட்டையில் அவரது ஓவியம் உள்ளே J.S. Bachன் பிறந்த மனை, அவர் படித்த பள்ளிக்கூடம், பயின்ற இசைக்கல்லூரி, பணிபுரிந்த Leipzig St.Thomas தேவாலயம், 300 கிமீட்டர்கள் கால்நடையாக நடந்து சென்று இசைநிகழ்ச்சி பார்த்த ஹம்பேர்க்கின் ஓபரா கலைக்கூடம் எனப் பல அரிய படங்களுடன் வழுவழுப்பான உயர்ந்த தாளில் செம்பதிப்பாக அந்நூல் பதிக்கப்பட்டிருந்தது. உடனே எனக்கு இந்நூலை இளையராஜா பார்க்க நேர்ந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்றுதான் தோன்றியது. விலையப் புரட்டிப் பார்த்தேன் 50 D.Marks என்றிருந்தது. அதை அனுப்புவதற்கும் இன்னொரு 50 D.Marks தேவைப்படும் என்பது தெரிந்ததுதான். அது இங்கே ஒரு மாதத்தை ஓட்டுவதற்குத் தேவையான தொகை. எனினும் அதை வாங்கி அவருக்கு விமான அஞ்சலில் அனுப்பிவைத்தேன். "பெற்றுக்கொண்டேன் நன்றி” என்று இரண்டு வார்த்தைகள் எழுதுவாரென்பது என் நியாயமான எதிர்பார்ப்பு. நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் எல்லாம் ஆயின. பதில் இன்றுவரை இல்லை.

சில ஆண்டுகளின் பின் முனைவர் வா.மு. சேதுராமன் தலைமையில் இயங்கும் பன்னாட்டுத்தமிழ் மன்றம் பெர்லினில் நடத்திய ஒரு மகாநாட்டுக்காக வந்திருந்த கவிஞர் இரவிபாரதி என்னுடன் சிலநாட்கள் தங்கினார். இவர் பாலுமகேந்திராவின் ‘மறுபடியும்’ படத்தில் ரோஹிணி பாடி ஆடும் ”ஆசை அதிகம் வைச்சு மனதை அடக்கி வைக்கலாமா என் மாமா” என்கிற பாடலை எழுதியவர். (எம்.கே.தியாகராஜா பாகவதரின் சகோதரரின் மகனாகிய இவர் திரு. மூப்பனாரின் காரியதரிசியாகவும் சிலகாலம் பணியாற்றியவர்) மூச்சுக்கு மூச்சு நம்மிடம் இளையராஜாவின் கொடியை உயர்த்திப் பிடித்தபடிக்கு இருந்தார். இளையராஜா மீது சற்றுகோபமாக இருந்த நான் அவரிடம் இளையராஜாவுக்கு Johann Sebastian Bachன் நூல் அனுப்பிவைத்த கதையைச் சொன்னேன். “அட நீங்க ஒண்ணு“ என்றுவிட்டுத் தன் கதையைச் சொனார் இரவிபாரதி:

“ஒரு நாள் இளையராஜாவிடமிருந்து வீட்டில் வந்து சந்திக்கும்படி போன் வந்தது என்றார்கள். ஏதோ இன்னொரு பாட்டு எழுதுற சான்ஸாக்குமென்று ஸ்கூட்டரை விரட்டிக்கொண்டு உடனே சென்றேன். விஷயம் என்னவென்றால் அவர்கள் வீட்டில் திருட்டுப்போயிருந்தது. அவர்கள் வீட்டின் உதவியாள் ஒருவர் (அவரும் திருச்சியைச் சேர்ந்தவர்) ஒரு இலக்ஷம் ரூபாய் பணத்தை (சரியான தொகையை இங்கே நான் தவிர்த்துள்ளேன்.) உருவிக்கொண்டு ஓடிவிட்டார். நாங்கள் பொலீஸுக்குப்போக விரும்பவில்லை. உங்கள் ஊர்க்காரர்தானே, நீங்கள், ஆளைப்பார்த்துப் பேசி, பணத்தை எப்படியாவது மீட்டுத்தந்துவிடுங்கள்’ என்றனர் அவரும் மனைவியுமாக.

திருடிச்சென்றவனிடம் பணத்தை மீட்பதாவது! எனக்குச் சற்றும் நம்பிகையில்லை. எனினும் ஒருதரம் முயன்றுதான் பார்ப்போமேயென்று தாமதமின்றி உடனே ஒரு வாடகைக்காரை வைத்துக்கொண்டு இன்னொரு நண்பனையும் கூட்டிக்கொண்டு திருச்சிக்குப் புறப்பட்டேன். அவனது வீட்டை ஒருவாறு கண்டுபிடித்து எமது வண்டியை தூரத்தில் நிறுத்திவைத்துவிட்டு கால்நடையாக அவனுடைய வீட்டுக்குப் போனோம். அவனோ வீட்டில் சமர்த்தாகச் சம்மணமிட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். என்னை அவனுக்கு முன்பே தெரியுமாதலால் எம்மைக் கண்டவுடன் ஆளுக்குச்சிறிது பதட்டம் உண்டானது தெரிந்தது. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தோம். என்னுடன் கூடவந்த நண்பரும் ஒரு காவல்துறை அதிகாரியைப் போலவே பார்வைக்கு வாட்டசாட்டமாக இருப்பார். சாப்பாடானதும் நாங்கள் அவனைத் தனியே அழைத்துப்போய் நைஸாக கதையைக் கொடுத்தோம். ’இளையராஜா சாருக்கு இன்னிக்கு உலகத்தில இருக்கிற செல்வாக்கு உனக்கு தெரியாததல்ல, உன்னை என்ன வேணுமானாலும் அவர் பண்ணலாம். இருந்தும் அவர் நல்ல மனுஷன். உன்னை உதைக்க வைப்பதையோ, ஆறேழு வருஷங்கள் உள்ள தள்ளிக் களி திங்க வைக்கிறதையோ அவர் விரும்பல. அவர் கேஸ் கோர்ட்னு எதுக்கும் போகமாட்டார். உன்னை மன்னிச்சுடுவார். பணத்தைக் கொடுத்திடுபா’ என்றோம். அவனுக்கு கண்கள் கலங்கியேவிட்டன. ’ஏதோ சபலத்துல செஞ்சுப்புட்டேன்…………. சார். கண்டவர் கண்ணிலும் படும்படிக்கு அவங்க பணத்தை அப்பிடிக் கேர்லெஸா போட்டுவைக்கலாமா’ என்று ஏதோ அவர்கள்தான் தவறு செய்தவர்கள் மாதிரிப் பேசினான். வீட்டுக்குள் போய் ஒரு ப்ரௌண் தாள் பையிலிருந்து பணத்தைக் கொண்டுவந்து தந்தவன் ‘ ஒரு முன்னூறு ரூபா எடுத்துப்புட்டேங்க ரயில் செலவுக்கு’ என்றான். பணத்தை மீட்டுவந்து கொடுத்தோமே மனுஷனுக்கு 'நன்றி’ என்றொரு வார்த்தைதான் சொல்லத் தெரியலை. எமது வண்டிச்செலவையோ பெட்ரோல் செலவையாவது கொடுக்கணும்னு தோணிச்சா. இன்றுவரை இன்னொரு படத்துக்கு ஒரு குத்துப்பாட்டு எழுதவாவது கூப்பிட்டிருப்பாரா?” என்று இப்படியாக முடித்தார்.

ஒருமுறை ஏ.ஆர்.ரகுமான் பிரபலமாகி வந்து கொண்டிருந்த நேரம் நட்புரீதியிலான ஒரு உரையாடலின்போது ஒர் நிருபர் கேட்டாராம் ”ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது? இளையராஜா அக் கேள்வியே காதில் விழாதாதிருக்கவும் அவர் திருப்பி மீண்டும் வேறுமாதிரி “கொஞ்சம் சரிசெய்தால் கேட்குபடி இருக்கும் என்று ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களில் எதையாவது நீங்கள் நினைத்ததுண்டா?" என்று கேட்கவும் "நான் ருசியான முழுச் சாப்பாடு போடுகிறவன் கண்ணா…… எங்கிட்ட பொப்கார்ன் பற்றிய பேச்செல்லாம் எதற்கு?” என்றாராம். இதை முழுவதாக நம்பலாம். காரணம் அவர் இந்த ’பொப்கார்ன் ’என்கிற வார்த்தைப் பிரயோகத்தை சிங்கப்பூரிலும் ஒரு மேடையில் செய்திருக்கிறார். ஞானியாகவே இருந்தாலும் இன்னொருவருடைய திறமையை ஒப்புக் கொள்வதில் தயக்கம். தன்னை ஒரு தலித்தென்று ஒப்புக் கொள்வதில் தயக்கம்.

இளையராஜா என்னதான் தன்னை ஒரு சித்தனாக மெஞ்ஞானியாக கற்பித்துக் கொண்டாலும் சனாதன வழிபாட்டுமுறைகள், ஆச்சார பூஜா புனஸ்காரங்களன்ன அவரது நடவடிக்கைகள் அவர் இன்னும் social-morals , Sociology சார்ந்த விஷயங்களில் பாஸாகவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. இல்லாவிடில் “ராஜா கையை வைத்தால் அது ராங்காப் போனதில்லை“ போன்ற எம்.ஜி.ஆர் பாணிப் பிரதிக்னைகளை எல்லாம் பண்ணியிருக்க முடியாது.

இசையும் ஒரு சமையல் முயற்சிபோலத்தான், நல்ல சமையல்காரர் என்பதற்காக அவர் சமையல் எப்போதும் அசத்தலாக அமைந்துவிடுமென்று இல்லை. எதிர்பார்க்கவும் முடியாது. மதுராந்தகத்தில் ஒரு பாட்டி யாழ்ப்பாணத்துப்பாணியில் அருமையான பாலப்பம் சுடுவாரென்று சொன்னார்கள். நாலு நண்பர்கள் சேர்ந்து ஐம்பது கி.மீ தூரத்துக்கு வாடகைக்கார் வைத்துக்கொண்டு போனோம். அன்று அவர் சுட்ட அப்பங்களின் சுவையோ மிகச் சாதாரணமாகவே இருந்தது.

நாட்டுப்புற இசையை அரங்கறியச் செய்த இம்மாமேதை திருவாசகம் சிம்பொனியைக்கூட அவர் ஒருவிதமாகச்செய்ய நினைத்து அதுவேறொரு விதமாக வந்துவிட்டதுபோலத்தான் படுகிறது. திருவாசகத்தின் உயிரே அதன் உருக்கந்தான். ஆனால் இத்தனை வாத்தியங்களையும் கலைஞர்களையும் வைத்துக் கொண்டு சிம்பொனியாக இசைத்ததில் அச்சாகித்தியத்தின் உருக்கமும் நெகிழ்வும் ரசமும் காணாமல் போய்விட்டன. இசை தனியாக நிற்கிறது. பரவாயில்லை ஆனாலும் அவர் இன்னும் ஒரு “நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மாவுக்காக” எமக்குத் தேவையானவராகவே இருக்கிறார். பத்மபூஷன் அன்ன லோகாயத விருதுகளை விடவும் உலக மக்கள் மனதில் தீராது ரீங்கரித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ வர்ணமெட்டுக்களை உற்பத்தி செய்தத‌னால் அவர்தம் மனதிலும் வாழ்ந்து நினைக்கப்படுபவர் என்பதுதான் அவருக்குப்பெருமை.

மானுட விழுமியங்களில் மறுக்கள் மாறுபாடுகள் உள்ள ராஜா எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும் சகித்துக் கொள்வோம். ஆனால் இசைஞானமும், வர்ணக் கற்பனைகளும், படைப்பூக்கமுமுள்ள இளையராஜா என்கிற ஜீனியஸ் எங்களுக்கு என்றுந்தேவையானவர், அவரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையும்.

- கருணாகரமூர்த்தி, பெர்லின்

More articles by பொ.கருணாகரமூர்த்தி

Comments

5 comments

5
srirasa
இளையராஜா தான் என்றில்லை, சமூகத்தில் பலரும் அப்படித்தான். கட்டுரையாளர் போன்றவர்கள் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாய் இருப்பதன் விளைவே இது போன்ற அனுபவங்கள். வாழ்க்கை அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! என்றாலும் நல்ல கட்டுரை. கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்! இது போன்ற கட்டுரைகள் "உருவார அழிப்பு" வகைமை சார்ந்தவையே! இளையராஜா என்கிற கலைஞனின் உருவாரத்தோடு இளையராஜா என்கிற மனிதனின் உருவாரத்தை மல்லுக்கட்ட விடுவதன் தேவை இப்போது என்ன வந்தது? ரகுமானின் உலகளாவிய வெளிச்சத்தில் இளையராஜா என்கிற கலைனைக் கருக்கிப் பார்க்கிற ஆசையா! எவ்வகைப் பட்ட அறிவை உற்பத்தி செய்யும் உடலிலிருந்து மலமும் உற்பத்தி ஆவதைக் கட்டுரையாளர் அறிய மாட்டாரா என்ன?
k.sivagnanam
ரஜினிகாந்த் சினிமாவில் அநீதியை அழிக்கிறார் என்றால் நிஜத்திலும் அப்படியே அழிப்பார் என்று நம்பிவிடுவார்கள் நம் ஆட்கள். அவரது நடிப்பை ஸ்டைலை ஆசை தீர ரசியுங்கள். ஆனால் அந்த ரசனை அவரது தனிப்பட்ட மனிதர் மீதான காதலாக பரிணமித்து, பின் வெறியாக மாறி அடடடா தமிழர்கள் தொடர்ந்து இதுபோன்ற தீங்குகளில் சிக்கிக்கொள்கின்றனர்.
இளையராஜாவை இசையின் வழிதான் நாம் அறிவோம். எனவே அவரது இசையைப் பற்றி மட்டும் பேசுவதே பொருத்தமாக இருக்கும். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உண்மையான ரசிகர்களுக்-கு அக்கரை இருக்காது. இளையராவை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற வெறியோ, அப்படிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவரிடம் ஒரு ஆட்டோ கிராப் வாங்கி வைக்க வேண்டும் என்ற நோக்கமோ இன்றி வெறுமனே அவரது இசையை மட்டும் வெறிபிடித்துப் போய் ரசிக்கும் பல ரசிகர்களை நான் அறிவேன். எந்த ஒரு கலைஞனையும் அவனது கலைக்காகப் பாராட்டுவோம் அல்லது திட்டுவோம். அவன் அதைத்தாண்டி நமக்கு ஒரு நெருக்கமான மனிதனாக அந்தக் கலைஞன் வரவேண்டியதில்லை. அப்படி வந்தால் அது வெறும் மாயைதானே ஒழிய அவன் உண்மையில் நமக்கு நெருக்கமானவன் அல்ல.
க.சிவஞானம்
Ananth
உணர்வு பூர்வமான கட்டுரை. திரு கருணாகர மூர்த்தி ஆகட்டும், வேறு யாராகட்டும், ஒரு அடிப்படை விஷயத்தை ரசிகர்களாகிய நாம் அனைவரும் மனதில் கொண்டால், எந்தக்கலைஞனும் தன்நிலை உணர்ந்து நடந்து கொள்வான். படைபுகளை மட்டும் ரசிப்போம். படைப்பாளிகளையல்ல.நாம் செய்யும் துதிகள்தான் கலைஞர்களது திமிரான போக்குக்குக் காரணமாகிறது. திரு சிவஞானம் சொல்வதை நான் அமோதிக்கிறேன்.

ஆனந்த்
கஜீப்.
,நேற்று தான் கீழே உள்ள கட்டுரையை வல்லிணம்.டாட்.கோமில் படித்தேன். இன்றைக்கு இப்படி ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது என்னுடைய துரதிர்ஸ்டமே. அப்படியே படி எடுத்து அப்பிவிட்டேன்.

இசை துறையில் ப‌ல‌கால‌மாக‌ ஈடுப‌ட்டு வ‌ந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள், இசை ஆர்வ‌லர்க‌ள், இளைய‌ராஜாவின் இசை பிரிய‌ர்க‌ள் என‌ ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கும் அண்மையில் வெளிவ‌ந்த‌ ப‌த்திரிகைச் செய்தி விய‌ப்பையும் ம‌கிழ்வையும் அளித்திருக்கும். ந‌ம‌து நாட்டின் 'அகி மியூசிக்' இசை நிறுவ‌ன‌த்திற்கு த‌ன‌து எல்லா இசை உரிம‌த்தையும் இசைஞானி இளைய‌ராஜா வ‌ழ‌ங்கியிருந்தார்.

ந‌ண்ப‌ர் அகில‌ன் அடைந்திருக்கும் ம‌க‌த்தான‌ வெற்றி இது. பொதுவாக‌ வெற்றிக‌ளுக்குப் பின்னே வ‌லி மிகுந்த‌ க‌தைக‌ள் இருக்கும். ஐந்து வ‌ருட‌ ந‌ட்பில் அகில‌னை ஓர‌ள‌வு அறிவேன். மிகுந்த‌ கூச்ச‌ சுபாவ‌ம் உடைய‌வ‌ர். அகி மியூசிக்கின் வ‌ள‌ர்ச்சி ப‌ற்றி எழுத‌ ப‌ணித்தேன். மிக‌வும் த‌ய‌ங்கினார். அது சுய‌புராண‌ம் ஆகிவிடுமோ என‌ ம‌றுத்தார். நெடிய‌ த‌ய‌க்க‌த்துட‌ன் பின்ன‌ர் எழுதி கொடுத்தார். ச‌ம‌கால‌த்தில் நாம் காணும் ஒரு வெற்றி அத‌ன் பிசு பிசுப்பு மாறாம‌ல் ஒலிக்கிற‌து. - ஆர்

அகி மியூஸிக் தொடங்கி இப்பொழுது ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இந்த ஐந்து வருடமும் மிகப்பெரிய போராட்டக் காலங்கள். இன்னமும்தான். எப்படி இந்த இசைக் கனவு எனக்கு நனவானது என்பது ஒரு சுவாரசியமான கதை. இளையராஜா அவர்களை தவிர்த்து சொல்லிவிட முடியாத கதை. இளையராஜாவை எனது வாழ்விலிருந்து அகற்ற முடியாது. அதேபோல் அகி மியூஸிக்கின் வளர்ச்சியையும், இளையராஜாவை தவிர்த்து என்னால் நினைவுக்கூற முடியாது.

எனக்கு இளையராஜாவின் இசை 90களில்தான் அறிமுகமாகியது. ஒரு தமிழனுக்கு இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை நான் விளக்கினால் அது இந்தக் கட்டுரையை வேறு தளத்திற்குக் கொண்டுப் போக நேரும். அதனால் அதை தவிர்க்கிறேன்.

90களில், அம்மா பள்ளிக்கு செல்ல தரும் பணத்தை பட்டினி கிடந்தும், சில சமயம் வீட்டிலிருந்து காலை சிற்றுண்டியை பள்ளிக்கு எடுத்துக் கொண்டு சென்றும், அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி, ஒரு வாரத்திற்கு ஒரு கேசட் என்று வாங்குவேன். அம்மா எப்பொழுதும் திட்டுவார். நாம் இருக்கும் நிலமையில் இந்த செலவு அவசியமா என்று. தினம் தினம் ஏச்சு. காசெல்லாம் இப்படி கரையுதே என்று. இத்தனைக்கும் வாரம் ரிங்கிட் மலேசியா 3.50 மட்டும்தான். மாதம் நான்கு கேசட். எனது பிறந்த நாள் அல்லது எதற்காவது யாராவது எனக்கு பரிசு தர எண்ணியிருக்கிறார்களா என்று முன் கூட்டியே கேட்டு, அப்படி ஆம் என்று பதில் வந்தால், ஒரு கேசட் வாங்கித் தரும்படி கேட்டுக்கொள்வேன். எனது வறுமையில், எனக்கு போதையாகவும் மதமாகவும் ஆகியிருந்தது இசை, அதிலும் இளையராஜாவின் இசை.

அம்மா ஒரு முறை படுமோசமாகத் திட்டிய போது, மனதுக்குள் ஒரு வைராக்கியம் எழுந்தது. எந்த இசைக்கு நான் இப்படி பணத்தையெல்லாம் அழிப்பதாக அம்மா சொல்கிறார்களோ அந்த இசையையே நான் காசாக்கிக் காட்டுகிறேன் என்று முடிவெடுத்தேன். இசை எனது பயணம் என்று என் ஆழ்மனதில் பதிந்து விட்டது. ஆனால் எந்த இசை திறனும் என்னிடம் இல்லை. பியானோ சில மாதங்களும், கர்நாடக வாய்பாட்டு சில மாதங்களும் வெவ்வேறு காலக்கட்டத்தில் படித்தேன். எனக்கு எப்பொழுதும் பொறுமையிருந்ததில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கூட, என்னை எழுத துன்புறுத்திக் கொண்டிருக்கும் நண்பர் நவீனின் முகம் வந்து வந்து போகிறது. இல்லையென்றால், இந்த அளவு பொறுமையும் வராது. அதனால் இசையைப் படிப்பது எனக்கு அலுப்பாக இருந்தது.

பிறகு இசை வியாபாரத்தில் கால் வைக்கலாம் என்று முடிவு பண்ணினேன். அது சுத்தமாக எனக்கு பரீட்சயம் இல்லாதது. எனது மனதில் தோன்றும் அத்தனை உணர்வுகளையும் இசையாக வெளிக் கொண்டு வருவது, நிறைய இசைத் தொகுப்புகளை வெளியிடுவது என்று கனவு கண்டேன். அது கனவு என்பதைவிடவும் ஆசையாகவே அதிகம் வளர்ந்து வந்தது. எல்லா துன்பங்களுக்கும் ஆதாரம் ஆசைதான் என்று புத்தர் கூறியது அப்பொழுது நினைவுக்கு வரவில்லை. கனவுகள் கண்டிருக்கிறேன், இளையராஜாவுடன் பேசுவதுபோல், இளையராஜாவின் இசையை வெளியிடுவதுபோல். இங்கு கனவு என்று நான் சொல்வது அப்துல் க‌லாம் குறிப்பிடும் க‌ன‌வு அல்ல‌. சாதார‌ண‌மாக‌த் தூங்கும் போது வந்தக் கனவைதான். அது ஆழ்மனத்தின் ஆதீத ஆசையின் வெளிபாடு என்பதும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய வறுமையான குடும்ப நிலையில் இதெல்லாம் சாத்தியம் ஆகக் கூடிய ஒன்றா என்ற சந்தேகத்தை என் மனம் எப்பொழுதுமே எழுப்பி வந்திருக்கிறது.

அந்தக் காலக்கட்டத்தில் இளையராஜா அவர்களைப் பற்றி திரு. வீ. செல்வராஜ் எழுதிய ஞானவித்து என்ற கட்டுரை, இசை சார்ந்த தேடல்களில் என்னை மும்முரப்படுத்தியது. அந்தக் கட்டுரைதான் ஒருவகையில் இளையராஜாவின் இசையை நான் தேடிப்போகக் காரணமாக இருந்தாலும், இளையராஜாவின் பேட்டிகள் எல்லா வகையான இசைகளையும் நான் தேடி செல்ல, ரசிக்க என்னை உந்தியது. ஒரு பேட்டியில் அவர், 'இசைஞானிகள் என்று இன்று எவரும் இல்லை. தியாகராஜ சுவாமிகள் போன்றவர்களோடு முடிந்து விட்டது. நாம் எல்லோரும் அவர்கள் இட்ட பிச்சையில்தான் வாழ்கிறோம்' என்றார். அது எனது அடுத்தக் கட்டத்திற்கு வழிவகுத்தது. சினிமா இசையிலிருந்து எனது செவிகளை அகற்றி எனது இசைத் தரிசனத்தை விசாலமாக்க உதவியது அவருடைய அந்தப் பேட்டி. இசைஞானி என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், தியாகராஜரையும் முத்து சுவாமி தீட்சதரையும் ஞானி என்கிறாரே, யார் அவர்கள் என்றும் என்ன பாடல் இசையமைத்தார்கள் என்றும் தேடிப்போய், கர்நாடக இசையை விரும்ப ஆரம்பித்தேன். மற்றொரு பேட்டியில் பாக்கையும் (Bஅஷ்) மோசாட் (Mஒழர்ட்) பற்றியும், அவர் குறிப்பிட்டதைப்பற்றிப் படித்து சில காலங்கள் மேலைநாட்டு சாஸ்தீரிய சங்கீதத்தில் ஆழ்ந்துப்போனேன்.

சட்டென்று நிகழவில்லை எதுவும். முதன் முதலில் கேட்டபோது, அது கர்நாடகமோ, மேலை சங்கீதமோ, கேட்ட சில நிமிடங்களில் உறங்கிவிடுவேன். மிகப்பெரிய இழுவையாகவும் அறுவையாகவும், அலுப்புத் தட்டுவதுமாகவே இருந்தது. இளையராஜாவின் இசைக்கு உருகிப் போயிருக்கிறோம் ஆனால் அவரோ வேறொரு இசையை போற்றுகிறாரே, அப்படி என்ன மேன்மைகள் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் கேட்டேன். பின்னாளில் எல்லா இசைக்கும் எனது செவியும் மனமும் இம்மூன் (இம்முனெ) ஆகிவிட்டது.

பிறகு எனது கனவுகளை நினைவாக்க சில முன்முயற்சிகள் தொடங்கினேன். எம். நாசீர் என்ற மலாய் இசை கலைஞருடன் வேலை செய்தது, அதன் காரணமாக வர்னர் மியூசிக்கில் (Wஅர்னெர் Mஉசிச்) வேலைக் கிடைத்தது என்று தொடர்ந்தது எனது பயணம். வ‌‌ர்னரில் சேர்ந்த இரண்டாவது வருடமே இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. காப்புரிமை பற்றிய விழிப்புணர்வை இந்திய படைப்பாளிகளிடம் ஏற்படுத்தி, காப்புரிமை மூலமாக இசைத்துறையின் இன்னொரு தொழில் வாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கிட வர்னர் முயற்சிகள் செய்தது. அதற்கு அதன் மலேசிய சீன முதலாளிகள் தலைசிறந்தப் படைப்பாளிகளாகத் தேர்ந்தெடுத்தது இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும். அந்தப் பயணத்தில் நானும் ஒரு ஆள். அப்பாய்ண்ட்மெண்ட் ஏற்படுத்தி தந்ததும் நான் தான். இந்தியாவில் வர்னர் தொடங்கப்போகும் நிறுவனத்தில் நான் மிக உயர்ந்தப் பதவியில் அங்கம் பிடித்துவிட வேண்டும் என்று அதிகமாக வேலைகள் செய்து, எனது அதிகாரத்திற்கு வெளியேயும் வேலை செய்து, வர்னர் எதிர்ப்பார்க்காத பல உதவிகளையும் செய்து தந்தேன்.

இளையராஜாவை வர்னரின் சார்பாக, ஆசியா வர்னரின் ஒரு சீனத் தலைமை இயக்குனருடன் 2001இல் சந்தித்தேன். சின்ன, கட்டையான, கருப்பான தேகம். இத்தனை பிரமாண்ட இசை இந்த உடம்புக்குள் இருந்தா வருகிறது. என்னால் நம்ப முடியாத தோற்றம். தாடியும் உருத்தராச்சமுமாக ஒரு வகையில் கொஞ்சம் அந்நியமாக தெரிந்த உருவம். வர்னர் அதற்கு முன்பாகவே ஏ.ஆர். ரஹ்மானுடைய திருடா திருடா, இந்திரா போன்ற படப்பாடல்களை மலேசியாவில் அதுவும் ஏ.ஆரை வரவழைத்து வெளியீடு செய்திருந்ததால் அவர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏ.ஆராகத்தான் இருந்தது. ஆனால் அந்த எண்ணங்களையெல்லாம் வர்னர் இளையராஜாவை சந்தித்த ஓரிரு நிமிடங்களில் கைவிட்டிருந்தது. இளையராஜாவின் தி மியூசிக் மெசய்யா என்ற இசையின் ஒரு சில நிமிட இசை, வர்னர் தலைமை இளையராஜாவை ஆச்சரியத்துடன் பார்க்கவைத்தது.

இளையராஜாவுடன் புகைப்படம் எடுக்ககூடாது, ஆட்டோகிராப் வாங்கக்கூடாது என்று எனக்கு கட்டளையிட்டிருந்தவர், இளையராஜா இசையமைக்கும் வேகத்தைப் பார்த்து வியந்து அவருடன் நான் படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார் வர்னர் ஆசியாவின் தலைமை இயக்குனர் திரு. கே சி லோவ் (K C ளொந்). ஆனால், அந்த வருட இறுதியிலேயே எனது அத்தனைக் கனவும் இடிந்து விழுந்தது. வர்னரின் ஆசியாவின் பல அலுவலகங்கள் மூடப்பட்டன. செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகு அமெரிக்காவின் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி பலரை வேலையில் இருந்து நீக்கியது நிறுவனம். மலேசியாவிலிருந்து மட்டும் 30 பேரை வேலை நிறுத்தம் செய்தது. ஆனால் என் வேலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்றாலும், எனது சொந்த இசை நிறுவனம் தொடங்கும் வேலைகளில் நான் மும்முரமாக ஈடுபட எனக்குள் ஒரு பொறியை அது ஏற்படுத்தியிருந்தது. பிறரின் தலைமையில் நல்ல வருமானத்தில் வேலை செய்தாலும், அவர்களுக்கு வேண்டாம் என்று தோன்றும் போது தூக்கி எறிந்து விடுவார்களே என்ற எண்ணம் மேலோங்கியது.

வியாபாரம் சார்ந்த எல்லா பயிற்சிகளிலும் கலந்து கொண்டேன். ஏறக்குறைய 40 தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள், உறவினர்கள் என்று எனது வியாபாரத் திட்டங்களை காட்டி முதலீடு தேடிவந்தேன். அவமானங்கள்தான் மிஞ்சியது. அசிங்கப்பட்டேன். பல வருடங்கள் மன உளைச்சலில் இருந்தேன். பணம் அற்றவன் தொழில் பற்றி நினைப்பது தவறு என்று எனக்கு விளங்கியது. மூலதனம் இல்லாது தொழில் என்பது சாத்தியமற்றதாய் இருந்தது. தினம் தினம் காலையில் காரில் வர்னருக்கு வேலைக்கு செல்லும்போது இளையராஜாவின் 'அம்மா ஜனனி, சரணாலயம் நீ, என் ஆன்மாவின் சங்கீதம் நீ அருள் நீ' என்ற பாடல் மட்டுமே எனக்கு மந்திரமும், பிரார்தனையுமாக இருந்தது.

யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என்று எனது நட்பு வட்டங்களைக் கூட நான் விட்டுவைக்கவில்லை. எனது இசைக் கனவிற்கு முதலீடு செய்ய முடியாத நிலைதான் எல்லோரிடமும். இளையராஜாவை அதுவரை அணுகாததற்கு காரணம் அவர் முன்னமே பலரால் தொழில் ரீதியாக ஏமாந்து நட்டம் அடைந்திருக்கிறார் என்று அவருடைய நெருங்கிய வட்டங்கள் கூறியிருந்ததோடு, அவர் உதவுவார் என்பது இந்த ஜென்மத்தில் நடக்காத ஒன்று என்று கூறினார்கள்.

2004 இல் இளையராஜா ரமணர் கான ரதம் என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார், அது திருவண்ணாமலையில் மட்டுமே கிடைக்கும் என்று சில நண்பர்கள் மூலமாக கேள்விப்பட்டேன். அவரிடம் ஏன் முயற்சி செய்துப் பார்க்ககூடாது என்று தோன்றியது. பெரும் தயக்கத்துக்குப் பிறகு அவரிடம் பேசினேன். பிரசாத் ஸ்டியோவிற்கு போன் செய்து, ரமணர் இசைத்தொகுப்பைப் பற்றிக் கேட்டபோது, அது ரமணாஸ்ரமத்தின் நிதிக்காக அவரால் தயார் செய்து தரப்பட்டது என்றும், அதைக்கொண்டு அவர்கள் ஆஸ்ரமத்தின் பலத்திட்டங்களுக்கு நிதி திரட்டிக்கொள்வார்கள் என்றும் கூறினார்.

தயங்கி தயங்கி சொன்னேன், 'சொந்த இசை நிறுவனம் தொடங்கப் பல வருடங்களாக முயற்சிக்கிறேன். எனக்கு முதலீடு செய்யும் அளவுக்கு பண வசதியில்லை. முதலீட்டாளர்களும் புதிய, அனுபவம் இல்லாதவனுக்கு எப்படி முதலீடு செய்வது என்று அஞ்சுகிறார்கள். நீங்கள் இந்த ஆல்பத்தை எனக்கு கொடுத்தால் அதையே மூலதனமாகக் கொண்டு நான் என் கனவை அடைவேன்' என்றேன். சத்தியமாக இதில் இருப்பதுபோல் தெளிவாகவும் நிதானமாகவும் வார்த்தைகள் வரவில்லை. எனக்கு பேசுவதில் எப்பொழுதும் சில அசெளகரியங்கள் இருப்பதுண்டு, வார்த்தைகள் தெளிவில்லாமல் வரும்.

'சரி, ஆனால் ஒரு தொகையை முன்பணமாக ரமணாஸ்ரமத்திற்கு தந்துவிட்டு அவர்களிடமிருந்து நீங்கள் அதன் மாஸ்டர் காப்பியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு தர முடியும்?' என்றார். நான் எதிர்பார்க்காத ஒன்றுபோல் மனம் குதித்தது. மலேசிய ரிங்கிட் பத்தாயிரம் என்றேன். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு அழைக்கிறேன் என்றேன்.

இப்பொழுது இந்த வாய்ப்பைக் காரணம் காட்டி முதலீடு தேடினேன். ரமணரின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட அதே சமயம் எனக்கு வழிகாட்டியாகவும் என் நலவிரும்பியாகவும் இருக்கும் டாக்டர் சண்முக சிவா அவர்கள் உதவ முன்வந்தார். பிறகு நிறுவனம் அமைப்பது, சிடி தயாரிப்பது, விநியோகம் என்று எல்லா செலவுகளும் மலைப்போல் தெரிந்தது. மீண்டும் இளையராஜாவிற்கு போன் செய்து, பத்தாயிரம் வெள்ளி எனக்கு சிரமமாக உள்ளது. ஐந்தாயிரம் வெள்ளி தருகிறேன் என்றேன். வேறெதுவும் சொல்லாமல் சரி என்றார்.

ஆனால் ஒரு சில நாட்களில் அதுவும் சிரமம் என்றுத் தெரிந்தது. பிறகு மறுபடியும் அவருக்கு போன் செய்து 'மன்னிக்கனும் ஆயிரம் வெள்ளிதான் என்னால் கொடுக்க முடியும், என்னால் பணம் புரட்ட முடியவில்லை' என்றேன். சிரித்துக் கொண்டே 'சரி, வாங்க பார்த்துக்கலாம்' என்றார். மறுநாள் பெரிய சந்தேகத்தினால் திரும்பவும் அழைத்தேன். 'சரி, வாங்க பார்த்துக்கலாம் என்றால் என்ன அர்த்தம், எனக்கு பயமா இருக்கு, வந்த பிறகு, பத்தாயிரம் வெள்ளியில் இருந்து ஆயிரம் வெள்ளிக்கு குறைத்து என்னை கேவலப்படுத்துகிறீர்களா, இதெல்லாம் சரிவராது என்று கூறி வெறும் கையோடு அனுப்பி விடுவீர்களா? பயண செலவுகள் நட்டமாகிவிடும் என்று பயமாய் இருக்கிறது' என்று தயங்கியபடி கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, 'வர சொல்லி விட்டு, காரணம் சொல்லி உங்களை திருப்பி அனுப்புவது, அவமானப்படுத்துவது போன்றது. நான் அதை செய்ய மாட்டேன், பயப்படாமல் வரவும்' என்றார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கிளம்பினேன். அகி மியூஸிக் என்ற பெயரை திடீரென முடிவு செய்தேன். என்னுடைய வியாபாரத்திட்டதில் நான் தொடங்கப் போகும் நிறுவனத்திற்கு யாழ் ரெக்கார்ட் என்றுதான் பெயரிட்டு இருந்தேன். நிறுவனம் தொடங்க ஏற்பாடு ஆனதும் அகி மியூசிக் என்று சிந்தையில் தோன்றியது. பதிவிற்கு ஏற்பாடு செய்துவிட்டு, அவரை சந்தித்தேன். அகி மியூசிக்கின் திட்டத்தையும் எவ்வளவு ராயல்டி வரும் சாத்தியங்கள் உள்ளது என்பதையும் நான் தயாரித்திருந்த வியாபார திட்டத்தைக்காட்டி விளக்கினேன். எனக்கு வியாபாரம் தெரியாது, நீங்கள் சொல்வதுபோல் நடந்துக்கொண்டால் போதும் என்றார். பணத்தை ரமணாஸ்ரமத்தில் கொடுத்துவிட்டு அங்கிருந்து மாஸ்டர் ஆடியோ கேசட்டை வாங்கிக்கொள்ளும்படியும், இது ரமணருக்காக செய்தது தனக்கு பணம் வேண்டாம் என்றும் கூறிவிட்டார். நிறுவனத்தில் பங்குதாரராக நீங்கள் ஆவதென்றால் அதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றேன். அதையும் மறுத்துவிட்டார்.

நான் ரமணாஸ்ரமம் சென்றேன். எனக்கு திருவண்ணாமலைப் பற்றித் தெரியாது, ரமணரைப் பற்றித் தெரியாது. இப்பொழுது நினைத்தால் இளையராஜாவின் 'அண்ணாமலையெனை தன்னால் அழைத்தது, சொன்னால் அதிசயம் அம்மா அம்மா' பாடல்தான் நினைவுக்கு வருகிறது. திருவண்ணாமலை சேர்ந்ததும் ரமணாஸ்ரமத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்தான சில நிமிடங்களில் ரமணாஸ்ரம தலைவருக்கு இளையராஜா போன் செய்து, 'அந்த கேசட்டை ரமணர் சமாதியில் வைத்து பூஜை செய்து அகிலனிடம் கொடுங்கள்' என்று கூறிவிட்டு, என்னிடம் 'ரமணரிடம் ஆசீர்வாதம் பெற்று இதை நீங்கள் தொடங்குங்கள்' என்று கூறிவிட்டார். ரமணாஸ்ரமம் எனக்கு வேறு சில அனுபவங்களைத் தந்தது. இங்கு அதை சொல்வது தேவையில்லை என்று நினைக்கிறேன்.

சென்னை திரும்பியதும், சினிமாக்காரர்களைப் பற்றி பரவியிருந்த ஒரு மோசமான கருத்து எனது மனதிலிருந்து விலகியிருந்தது. அந்த நம்பிக்கையில் இளைய‌ராஜாவிட‌ம், வர்னர் மியூசிக்கில் இருந்து நாங்கள் வந்தபோது நீங்கள் போட்டு காண்பித்த இசையையும் தர முடியுமா என்று கேட்டு வேறு ஒரு திட்டத்தைக் காட்டினேன். 'இரவு வீட்டுக்கு வாங்க, தருகிறேன்' என்று வழியனுப்பி விட்டார். 5 நிமிடம் மட்டுமே இருந்தது அந்த சந்திப்பு. பெரும்பாலான அவருடனான எனது சந்திப்பு அதிக பட்சம் 15 நிமிடங்கள் தான்.

இரவு அவரது வீட்டில் நவராத்திரி பூஜை. 10.30 மணி வரை அவர் வரவில்லை. எனக்கு பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. திடீரென்று வந்தவர் என்னை பார்த்து எதுவும் பேசவோ, புன்னகைக்கவோ இல்லை. நேரே மாடிக்கு சென்றார். கொஞ்ச நேரத்தில் கையில் ஒரு கேசட்டுடன் கீழ் இறங்கி, பூஜை அறை நுழைந்தவர், ஆராத்தி காட்டி என் கையில் கொடுத்தார். நான் அவரிடம் ஆசீர்வாதம் பெற்று அதை வாங்கிக் கொண்டேன். எனது முதல் வெற்றி என்று மனம் கொண்டாடியது.

அவரைப் பலர் ஆணவக்காரர், கோபக்காரர் என்று பலவாறு என்னிடம் குறைக்கூறியிருக்கிறார்கள். உங்களின் மூலம் இப்பொழுது பணம் பண்ணப் பார்க்கிறார், என்றெல்லாம் நகைத்திருக்கிறார்கள். எதுவும் இல்லாமல் சென்ற, அவருடன் எந்த நெருங்கிய உறவோ, நட்போ இல்லாத எனக்கு, யாரிடமிருந்தும் சிபாரிசோ, அறிமுகமோ இல்லாத எனக்கு நம்பிக்கைத் தந்து, ஆல்பம் தந்து என் கனவுகளுக்கு வழியமைத்துக் கொடுத்த அந்த இளையராஜா, நான் கேள்விப்படாத, படித்திராத, இளையராஜா.

ஓஒ

மார்ச், 2005 இல் நான் மீண்டும் சென்னை சென்றேன். ரமணாஸ்ரமத்திற்கு ராயல்டி தரவும், கொஞ்சம் சீடிகள் தரவும். அதுவரையில் திருவண்ணாமலை கோவிலுக்குள் நான் நுழைந்ததில்லை. முதல் முறை சென்ற போதுக்கூட அவசரமாக ரமணாஸ்ரமம் சென்று அவசரமாக சென்னை திரும்பி விட்டேன். அன்று ஏழுமலை என்ற ரமணாஸ்ரம நண்பர் என்னை வற்புறுத்தி திருவண்ணாமலை கோவிலுக்கு அழைத்தார். இவ்வளவு தூரம் வந்து தமிழ் நாட்டின் பிரபலமான கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலையை தரிசிக்காது செல்வது பெரிய இழப்பு என்றார்.

அப்பொழுது நான் வைணவத்தில் அதிக நம்பிக்கையும் பிடிப்பும் உள்ளவன். மறந்தும் பிற தெய்வம் தொழாதவன். எனக்கு வர மனமில்லை என்று சொல்ல மனம் வரவில்லை. அவரின் அன்பு வற்புறுத்தல் அத்தகையது. முதல் முறைவந்தபோதும் அவர் இதுபோல் வற்புறுத்தி, பிறகு மலையை சுற்றிப் பார்க்க ஒப்புக்கொண்டேன். காரிலேயே சுற்றிவிட்டு வந்துவிட்டேன். இன்றோ முதல் முறையாக திருவண்ணாமலை கோவிலுக்குள் செல்கிறேன். எனக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. உள்ளே அழைத்து பெரிய லிங்கத்தின் முன் அமர சொன்னார்கள். அனைத்தும் எனக்கு வேடிக்கையாகவும் பொருளியலாகவும் தெரிந்தது. ஆனால் சிவ லிங்கத்தின் முன் அமர்ந்தவுடன், காரணம் தெரியாமல் கண்கள் நனைந்தன. இதுவரை எங்கெல்லாமோ, யார் யாரிடமோ நான் தேடிய அன்பு இங்கே கல்லாய் இறுகிப் போய், இத்தனை நாள் என் வரவிற்காக காத்திருப்பது போல் இருந்தது. என்னால் விளங்கிக் கொள்ள‌ முடியாத உணர்வு. எல்லாவற்றுக்கும் காரணம் தேடும் மனம், என் கண்ணீருக்கு அறிவியல் அல்லது உளவியல் காரணம் காண முடியாமல் திணறியது.

இத்தனை உணர்வுகளையும் நான் முன்னமே அனுபவித்திருக்கிறேன், இதே போல் கண்ணீர் விட்டிருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயமாக என்னால் உணர முடிந்தது. சட்டென்று என் சிந்தை முழுவதும் பரவியது ஹவ் டு நேம் இட் என்ற இசையின் நாதம். திருவண்ணாமலையில் நான் உணர்ந்தது 10 வருடங்களுக்கு முன் ஹவ் டூ நேம் இட் என்ற இசையை நான் முதல் முறை கேட்ட போது எழுந்த அதே உணர்வு நிலை. அது ஏன் என்ற காரணம் எனக்கு விளங்கவில்லை. ஆனால் அந்த அனுபவம் இளையராஜாவின் மீதான விளக்கமுடியாது சில நம்பிக்கைகளையும் மரியாதையையும் என்னுள் உருவாக்கியது. மதம், கடவுள் என்று நான் கொண்டிருந்த அத்தனை நம்பிக்கைகளையும் கட்டுடைத்து விட்டது. ஏதோ ஒரு சக்தி என்னிலிருந்து இந்த இசையை வெளிக்கொண்டுவருகிறது என்று அவர் எப்பொழுதும் கூறுவது அர்த்தம் நிறைந்ததாய் நான் உணர்ந்த நாள் அது.

பிதற்றத் தொடங்கியிருக்கிறான் அகிலன் என்று பலர் நினைக்ககூடும். ஆனால் இன்னமும் இந்த அனுபவம் என்னால் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. முற்பிறவி தொடர்பு, ஆன்மீகம் என்றெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. பல வருடங்கள் மறந்துபோன இசை ஏன் என் நினைவிற்கு வரவேண்டும்? பரீட்சயம் இல்லாத சைவ தள‌த்தில் நான் ஏன் அளவிட முடியா அன்பால் அரவணைக்கப்பட வேண்டும்? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இளையராஜாவின் ஆன்மீகம் போலியல்ல, அவரின் திருவண்ணாமலை பயணமும் அவர் ஏற்றுக்கொண்ட தோற்றமும் நாடகமல்ல என்பதை நான் நம்பத் தொடங்கிய, எனக்கு விளங்கத்தொடங்கிய நாட்கள் அவை.

ஓஒ

இளையராஜாவின் குரு ரமண கீதம், இத்தாலி இசைப் பயணம், திருவாசகம், மியூசிக் மெசய்யா, அம்மா பாமாலை என்று 3 வருடத்தில் மொத்தம் 6 ஆல்பங்கள் மட்டுமே வெளியிட்டிருந்தேன். காரணம், பெரிய முதலீடு இல்லாமல் வரும் பணத்தை அலுவலக நிர்வாகத்திற்கு செலவு செய்வதும், வியாபாரத்திற்காக வாங்கிய கடனை செலுத்துவதிலும், மீதப் பணத்தில் ஆல்பம் வெளியிடுவதும், இப்படிதான் எனது தொழில் போய் கொண்டிருந்தது. திருவாசகத்தைக் கூட மிக சொற்ப முன்பணத்திற்குதான் இளையராஜா தந்தார். தமிழ் மையத்தின் அனுமதியோடு, அகிலன் தான் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையோடு. அதற்கும் டாக்டர் சண்முகசிவாதான் எனக்கு உதவி செய்தார். 2006ல் ஏ.ஆரின் காட்பாதரையும் ரிலீஸ் செய்திருந்தேன்.

2007க்குள் வியாபாரத்தை விஸ்தாரமாக்க இயலாமல், முதலீடும் இல்லாமல், குடும்பம் நடத்த போதிய வருமானமும் இல்லாம், பொருளாதாரம் மோசமாகி, கடனாகி, மீண்டு வர முடியாத அளவு நான் நிலைகுலைந்து போனேன். தன்முனைப்பு அற்று, விரக்தியடைந்திருந்தேன். எனது வாழ்வின் இருண்ட காலங்கள் அவை. குடும்பத்திலிருந்து தனித்து விட்டேன். உறவினர்கள் கூடி அவமானப்படுத்தினார்கள். மனைவியுடன் விவாகரத்துக்கும் முயற்சி செய்தேன். எல்லோராலும் நம்பிக்கை இழக்கப்பட்டு கைவிடப்பட்டவனாகவே இருந்தேன். ஒன்றரை வருடங்கள் இளையராஜாவிற்கு ராயல்டி எதுவும் தரவில்லை. காரணம் சொல்லி வந்தேன். மே மாதம் சிங்கப்பூர் வந்திருந்தவர் என்னை தொடர்புக்கொள்ள முடியாமல் இரண்டு நாட்களுக்குப் பிறகு மலேசியாவில் உள்ள அவருடைய சில தொடர்புகள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு, கோபித்து கொண்டு, உடனே என்னை சிங்கப்பூர் வந்து அவரைப் பார்க்கச் சொன்னார். எனக்கு அவரிடம் என் நிலையை விளக்க மனமில்லை.

சிங்கப்பூர் போகும் போது எனது போதாத நேரம் அவரை பார்ப்பதாக இருந்த நேரத்தைவிட மூன்று மணி நேரம் தாமதமாக சென்றேன். அவரைச் சந்தித்து, என்னால் இந்த சில காலமாக ராயல்டி தர முடியவில்லை, காரணம் சில பணப் பிரச்சனைகள் என்றேன். அவர் என் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எனது இயலாமையை முடிந்தளவு மறைத்தேன். முடிந்த அளவு அகி மியூசிகின் நம்பகமான சில திட்டங்களை விளக்கி அது நமக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்று விளக்கினேன். எனது தோல்வி அவரை என் மீது நம்பிக்கை இழக்க செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். ஏதும் பேசாமல் என்னையே பார்த்திருந்தவர், பிறகு வழியனுப்பிவிட்டார். அன்று அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.

பிறகு மலேசியாவில் ஜொகூருக்கு கிளம்பி இரவு அங்கு தங்கினேன். சிங்கப்பூரில் தங்க பணமில்லை. முடிந்தது எனக்கும் அவருக்குமான உறவு என்று நினைத்தேன். மறுநாள் காலையில் என்னை அழைத்து, மீண்டும் ஹோட்டலுக்கு வரும்படி கூறினார். எனக்கு விளங்கவில்லை. போனேன். மீண்டும் இரண்டு மணி நேரம் தாமதம். எனக்கும் இளையராஜாவிற்கும் இருக்கும் உறவு இன்றோடு முடிந்தது என்பது உறுதியானது போல் இருந்தது. எனது கடைசி நம்பிக்கையும் விட்டுப் போனது. நான் அவரை சந்தித்தபோது, அவர் மதியம் சாப்பிடாமல் காத்திருந்தார். கூட இருந்த இரண்டு பேர் என்னை ஏதோபோல் பார்த்தார்கள். உங்களுக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறேன் என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு போனார். வழியில் காரில் வந்த அவருடைய நண்பரிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு இவரிடம் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். உங்கள் தொழிலில் இவர் முதலீடு செய்வார் என்று கூறினார். அந்த நண்பரும் பல கேள்விகள் கேட்டு இறுதியில் முதலீடு செய்ய சம்மதித்தார். உணவு முடிந்து ஹோட்டலுக்கு சென்றபின், 'உங்களுக்கு என்னால் ஆன உதவி, நீங்கள் முன்னுக்கு வருவதை பார்க்கனும்' என்று சுருக்கமாக சொல்லி கிளம்பிட்டார். என் கண்கள் ஈரமாகியது. நான் சம்பாதித்த எல்லாவற்றையும் இழந்திருந்தேன். எல்லோருடைய நம்பிக்கையையும் இழந்திருந்தேன். குடும்பமும் என்னை கைவிட்டிருந்தது. எந்த நம்பிக்கையில் இளையராஜா எனக்கு இந்த உதவியை செய்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. இன்னும் என்னிடம் அவர் எந்த காரணத்தால் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அதிலும் நான் எனது நிலைப் பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. என்னிடம் ஏன் இந்த தனிப்பட்ட அக்கறை என்று மனம் பலமிழந்து நின்றிருந்தேன்.

இளையராஜாவின் முன்பு எல்லாவற்றிற்கும் ஒத்துக்கொண்ட அந்த நண்பர், பல்வேறு காரணங்களை சொல்லி முதலீடு செய்வதை தவிர்த்து வந்தார். அதை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தி விட்டு, வேறு வழிகளில் முயற்சித்து வந்தேன். இது நடந்த ஒரு ஐந்து மாதங்களுக்குப் பிறகு எனது அலுவலகத்தையும் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் வந்துவிட்டது. வேலையாட்களை எல்லாம் நிறுத்தினேன். நான் மட்டும் தனிமையில் எனது அலுவலகத்தில் இருண்டுப் போய் இருந்தேன். 31 டிசம்பர் 2007. வருடத்தின் கடைசி நாள். வியாபாரத்திலிருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைத்தேன். எங்காவது போய் ஒளிந்து கொள்ளலாம் போலிருந்தது. போராடியது போதும் என்று தோன்றியது. கேப்பிடலிஸத்தின் (Cஅபிடலிச்ம்) நிதர்சணமாய், பணக்காரர்கள் மட்டுமே பணம் பண்ண முடியும் என்று நம்பத் தொடங்கினேன். அப்பொழுது ஒரு குரியர் வருகிறது. தனது எல்லா உரிமத்தையும் அகி மியூசிக்கிற்கு ஒப்படைத்து ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் இளையராஜா. என் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு நாள் அது. எந்த முன் பணமும் செலுத்தவில்லை. அவர் அறிமுகப்படுத்திய முதலீட்டாளரும் மறுத்திருந்த நிலையில், என்னை தூக்கிவிடுவது போல் ஒரு குரியர், அவரிடமிருந்து. மரணப் படுக்கையில் இருந்தவனுக்கு முதலுதவிப் போல் இருந்தது. நிமிர்ந்து மீண்டு வர இன்னொரு வாய்ப்பு. ஒருமுறை அவரை சந்தித்து, ஒவ்வொரு முறையும் எனது வாழ்வின் முக்கியமானத் தருணங்களில் அவருடைய இசைதான் என்னை ஆட்கொண்டது, நிதானப்படுத்தியது என்றபோது. 'எல்லாம் ரமணரிடமிருந்துதான் வருகிறது. என்னுடைய இசையால்தான் என்று நீங்கள் கருதினால், அந்த இசையும் ரமணரிடமிருந்து வருவதுதானே. நான் ஒரு கருவிதான்' என்றார். இதில் நான் எதையும் எனது கற்பனையில் எழுதவில்லை. நிகழ்ந்தவை. நான் பார்த்த இளையராஜாவின் இன்னொரு முகம். நான் பழகிய, மீடியாக்களுக்குத் தெரியாத இன்னொரு மனம்.

ஜெயமோகனிடம் ஒரு முறை அகி மியூசிக் உருவானதை நான் கூறிய போது, சினிமாத் துறையில் இளையராஜாவிற்கு மட்டும்தான் இப்படியொரு முகம் இருப்பதாக தான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று இயக்குனர் பாலாவின் அனுபவத்தை சொன்னார். நடிகர் நாசரும் அவருடைய அவதாரம் படம் பணமில்லாது முடங்கிய போது, பணம் பெறாமல் இசையமைத்ததை தி மியூசிக் மெசைய்யா வெளியீட்டு விழாவில் கூறினார்.

இன்று அகி மியூசிக் அடைந்திருக்கும் உயரம், கிடைத்திருக்கும் வெளிச்சம், இளையராஜா என்ற ஒருவரை கொண்டே அடையப்பட்டது. இன்றைய சினிமா சூழல் பலப் படைப்பாளிகளை வியாபார ரீதியாக முன்னிறுத்தினாலும், இசையில் இளையராஜாவின் இடம் இன்னும் யாராலும் நெருங்க முடியாத உச்சத்தில் நிரந்தரமாக இருக்கிறது. இசை மேதமையில் மட்டுமல்ல, வியாபார ரீதியாகவும்.

இத்தனை வருடங்கள் தாண்டியும் தமிழ் மனங்களை அரவணக்கும் ஒரு இசையென்றால் அது இளையராஜாவின் இசையாக தலைமுறைகள் தாண்டி இன்றுவரை நீண்டு வருவதற்கு காரணம், அவரால் வெளிப்படையாக வெளிக்காட்டப்படாமல் இருக்கும் அன்புதான். அதுதான் அவரது இசையின் ஆதாரமாக இருந்து வருகிறது. எனது முந்தைய ஒரு கட்டுரையில் தமிழர்கள் அவர்களுடைய அடையாளங்களை இளையராஜாவின் இசையில் மீட்டெடுக்கிறார்கள் என்றேன். ஆனால் உணர்வு நிலையில் இருந்து யோசிக்கும் போது, இளையராஜாவின் இசை நம்மை அரவணைக்கிறது, ஆறுதல் அளிக்கிறது என்றுதான் சொல்ல தோன்றுகிறது, பலரும் சொல்வதும் இதைதான். அதுதான் அவருடைய நிஜ இயல்ந்ந்
tvs
அய்யா, நமக்காக இளையராஜா இசை அமைக்கரவில்லை. அவர் பிழைப்பு அவருக்கு.
நின்னைச் சரணடைந்தேனையும், நேத்து ராத்திரியையும் ஒரே மன நிலையில் இளையராஜாவால் வெளிப்படுத்த முடியும்.

ரசிக மனோபாவத்தின் அப்பாவித்தனமே உங்களிடம் வெளிப்படுகிறது.

இது போன்ற கட்டுரை எழுதி கீற்று பக்கங்களை வீணடிக்காதீர்கள்.
நன்றி.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.