கைலாசபதி குறித்த ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் அண்ணாரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்றான தேசிய சர்வதேசிய அரசியல் குறித்த அவரது பார்வையும், அவரது பங்களிப்பும் குறித்த முழுநிறைவான ஆய்வுக்கட்டுரைகள் வெளிவராமை துரதிஸ்டமான ஒன்றே. அமரர் சுபைர் இளங்கீரன் 'கைலாசபதியின் அரசியல்' என்ற கட்டுரையை எழுதியுள்ளார் என்ற போதிலும் அது ஒரு அறிமுகக் கட்டுரையாகவே அமைந்திருந்தது என்ற வகையில் இவ்விடயம் குறித்து எழுத வேண்டியது சமகாலத் தேவையாகும். கைலாசபதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய கலை இலக்கியப் பேரவை நான்கு நூல்களை வெளியிட்டது. (பன்முக ஆய்வில் கைலாசபதி - கட்டுரைத் தொகுதி, கைலாசபதியின் சமூக நோக்கும் பங்களிப்பும் - சி.கா செந்திவேல், பேராசிரியர் கைலாசபதியின் நினைவுகளும் கருத்துக்களும் - சுபைர் இளங்கீரன், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982) - க.கைலாசபதி) இவற்றுள் சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982) என்ற நூல் கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வையை அறிந்து கொள்வதற்குத் துணையாக அமைந்துள்ளது. இவ்வாறான சூழலில் பேராசிரியரின் அரசியல் பங்களிப்பு குறித்து போதுமான அளவு ஆய்வுகள் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அவை தொடர்பான ஆய்வுகள் வெளிவரவேண்டியது காலத்தின் தேவையாகும்.
பேராசிரியர் பகிரங்கமான அரசியல்வாதியாகவோ அல்லது கட்சி உறுப்பினராகவோ காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஆரம்பக் காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார் என்பதனை சுபைர் இளங்கீரன் நினைவு கூறுவார். மறுப்பறத்தில் பேராசிரியரின் செயற்பாடுகளும் சிந்தனைகளும் இந்துக் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலிருந்து இறக்கும் வரையில் நேர்மை மிக்க பொதுவுடமைவாதியாக இருந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
பேராசிரியரின் பத்தி எழுத்துக்களும் ஆய்வுகளும் எப்போதுமே உழைக்கும் மக்களின் தன்மானம் கலந்த மூச்சுக் காற்றினை பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கின்றன. கோடிக்கணக்கான மக்களின் விடுதலைக்கான தத்துவத்தை தமது சுயநலன்களுக்காக கைவிட்டவர்கள் - அவ்வாறு விட்ட பின்னர் சமூகத்தில் தமக்கான அங்கீகாரமும் தேவையும் ஏற்படுகின்றபோது அவர்கள் தமது தவறை தமக்கேற்றவகையிலான சித்தாந்தமாக மாற்றி நியாயப்படுத்துகின்றனர். இந்தப் பின்புலத்தில், சுயநலத்தினை ஆதாரமாகக் கொண்ட பொருளியல் வேட்கை, மனித குலத்தை கூறுபோடும் சாதியமைப்பு, பெண்ணை இழிவு செய்யும் பாதகக் கொடுமைகள், கலாசார வக்கிரங்கள் இவற்றுக்கு எதிரான போராட்டங்களுக்கான பலமான கோட்பாட்டுத் தத்துவத்தை உருவாக்குவதில் பேராசிரியரின் பணி விலைமதிப்பற்றது.
மனித சமூகத்தின் வளர்ச்சியை தூண்டும் சக்தியாக அதிகாரத்திற்கு எதிராகப் போராடும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே சமூகத்தை மாற்றியமைக்க முடியும். தமது அடிமை முறையிலிருந்து விடுபட்டு பொருளாதார ரீதியாகவும் ஆத்மார்த்த ரீதியாகவும் சுதந்திரப் பிரஜையாக வாழ முடியும். இந்த விடுதலையை அடைவதற்கு தொழிலாளர்கள்-விவசாயிகள் தங்கள் நலன்சார்ந்த கட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர சிந்தாந்தம் இன்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. அவ்வகையில் மிகவும் முன்னேறிய சித்தாந்தத்தையும் அது பெற்றிருக்க வேண்டும்.
உழைக்கும் மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கின்றபோது கட்சி ஸ்தாபனம் குறித்தும் அதனடியாக எழுகின்ற கட்சி இலக்கியம் குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகின்றது. கட்சி இலக்கியம் என்பது பாட்டாளி வர்க்க கட்சியை முதன்மைப்படுத்தியே படைப்பாக்கப்பட வேண்டும் என்பது அதன் நியதியாகும். கட்சியின் போராட்டங்களை சரியான திசை மார்க்கத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான தளம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இத்தகைய மக்கள் எழுச்சிக்காகவும் புரட்சிகர பணிக்காகவும் பரந்துபட்ட மக்களை விழிப்பு கொள்ளச் செய்வதும் அணிதிரட்டுவதும் கட்சி இலக்கியத்தின் பிரதான இலட்சியமாகும். மாறாக கட்சியை மிகைப்படுத்தி, கட்சி உறுப்பினர்களை புனிதர்களாகக் காட்ட முனைவது கட்சி இலக்கியமாகாது. அதே சமயம் கட்சியில் உள்ள சிறுசிறு முரண்பாடுகளை பிரதானமாக்கி அதனை வெகுசனத் தளத்திற்கு கொணர்ந்து கட்சியை சிதைப்பதும் கட்சி இலக்கியமாகாது. மாக்ஸிம் கோர்க்கியின் ‘தாய்’, யங்மோவின் ‘இளமையின் கீதம்’, நிக்கொலாய் ஒஸ்றோவஸ்க்கி ‘வீரம் விளைந்தது’ முதலிய படைப்புகள் கட்சி இலக்கியத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பேராசிரியரைப் பொறுத்தமட்டில் கட்சி இலக்கியம் பற்றி தாயகம்(1970களின் நடுக் கூற்றில்) சஞ்சிகையில் எழுதிய கட்டுரை இதனை தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது.
பேராசிரியர் கட்சிசார்ந்த கட்சிசரா பொதுவுடமைத் தோழர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். உதாரணமாக மு கார்த்திகேசன், கே.ஏ. சுப்ரமணியம், சுபைர் இளங்கீரன், நீர்வை பொன்னயன், என்.கே. ரகுநாதன், டொமினிக் ஜீவா, கே.டானியல், பிரேம்ஜி, செ.கணேசலிங்கம் என இப்பட்டியலை நீட்டிச் செல்லலாம்.
1960களில் வடக்கில் சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான பேராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகளும் ஏனைய ஜனநாயக சக்திகளும் இணைந்து முன்னெடுத்தனர்.
சகல ஓடுக்குமுறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற விஞ்ஞான தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தமை அதன் முற்போக்கான அம்சங்களில் ஒன்றாகும். மறுபுறத்தில் தமிழ் பிற்போக்கு சக்திகள் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு சிங்களப் பெருந்தேசியவாதம் மட்டுமே காரணமானது எனக் கொண்டு அதற்காக மட்டும் போராடுவதே பிரதானமானது என செயற்பட்ட போக்கானது, ஒருவகையில் ஐக்கியப்பட வேண்டிய சிங்கள நேச சக்திகளையும் விரோதியாகப் பார்த்ததுடன் தமிழ் மேட்டுக்குடியினரின் ஆதிகத்தை நிலைநிறுத்த முனைகின்ற பண்பாகவே அமைந்திருந்தது. அந்தவகையில் இவற்றுக்கு மாறாக இடம் பெற்ற மக்கள் போராட்டங்கள் எழுச்சிகள் அவர்களுக்கு அருவருக்கதக்கதாயிருந்ததுடன் அவர்களின் மூக்கை சிணுங்க வைத்ததில் வியப்பொன்றுமில்லை. இத்தகைய பேராட்டத்தில் சாதியம், அதன் தோற்றம், தமிழர் சமூதாயத்தில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேராசிரியர் அவர்கள் ஆழமான கட்டுரைகளை எழுதினார். கவிஞர் இ.முருகையனின் கோபுரவாசல் நாடகம் பற்றி எழுதிய “கோபுரவாசலும் புலைப்பாடியும்”, “போராட்டமும் வரலாறும்” ஆகிய கட்டுரைகள் கவனத்தில் கொள்ளத் தக்கவையாகும்.
இவ்வாறே 1960களில் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட சர்வதேச ரீதியான தத்துவார்த்த முரண்பாடுகள், பிளவுகள் இலங்கை பொதுவுடமை இயக்கத்திலும் தாக்கம் செலுத்தக் கூடியவையாக அமைந்து காணப்பட்டன. பாராளுமன்ற பிரவேசத்தினூடாக உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற நிலைபாட்டினை இரசியாவும், புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்திய சீனாவும் இரு வேறுபட்ட முகாம்களாக பிரிந்து தத்துவார்த்த போராட்டங்களை நடாத்தின. இலங்கையில் மொஸ்கோ சார்பு அரசியல் நிலைப்பாட்டை பிரேம்ஜி ஞானசுந்தரம், டொமினிக்ஜீவா, கா.சிவத்தம்பி முதலானோர் ஆதரித்திருந்தனர். சீனத்தரப்பு புரட்சிகரமான அரசியல் நிலைப்பாட்டை நீர்வை பொன்னயன், கே.டானியல், என்.கே. ரகுநாதன், சுபைர் இளங்கீரன், முகமது சமீம், சுபத்திரன், யோ.பெனடிக்பாலன், செ.யோகநாதன் முதலானோர் ஆதரித்திருந்தனர். இந்தப்பிரிவில் பேராசிரியர் சீனத்தரப்பையே ஆதரித்திருந்தார் என்பதை அவரது சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய தத்துவார்த்தப் போராட்டங்கள் இடம்பெற்றிருந்த காலத்தில் கைலாசபதி கலாநிதி பட்டத்திற்காக புலமை பரிசில் பெற்று இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைகழகத்தில் கற்றுக் கொண்டிருந்தார். இக் காலச் சூழலில் பேராசிரியரின் தெளிவான தீர்க்கமான அரசியல் நிலைபாட்டினை உருவாக்குவதில் பேராசிரியர் ஜார்ஜ் தொம்சனுக்கு முக்கிய இடமுண்டு. இத்தகைய நிலைப்பாட்டினை ஏற்றிருந்த பேராசிரியர் அதனை பகிரங்கப்படுத்திக் கொள்ளவில்லை. அவ்வம்சமும் அக்காலத்தின் தேவையாக இருந்தது.
மக்கள் இலக்கியத்தில் நாட்டங்கொண்டு முற்போக்கு சங்கத்தில் அங்கம் வகித்த சகலரும் மார்க்சியவாதிகள் அல்லர். அதேசமயம் மார்க்சிய சிந்தனையை ஏற்றுக் கொள்ளாதவர்களும் சில முற்போக்கு இலக்கிய படைப்புகளை படைத்துள்ளனர். அவ்வாறே பலவிதமான அரசியல் சித்தாந்த நிலைப்பாடுகளுக்கு மத்தியிலும் அவர்களுடனான நேச முரண்பாட்டை பகை முரண்பாடாக மாற்றிக் கொள்ளாதது பேராசிரியரின் தீட்சண்யமிக்க அரசியல் பார்வைக்கு தக்க எடுத்துக்காட்டாகும். அவர் இறுதிவரை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்திருந்தார். அவ்வாறே மல்லிகை சஞ்சிகையிலும் தொடர்ந்து எழுதி வந்தார். இத்தகைய ஐக்கிய முன்னணி கோட்பாட்டை நடைமுறையிலும் தமது எழுத்திலும் பின்பற்றிய பேராசிரியர் மார்க்சிய விரோத எழுத்தாளர்களுக்கு எதிராக தீவிரமாகப் போராடினார். மு.தளையசிங்கம், க.நா.சுப்ரமணியம் தொடர்பில் இவரது எழுத்துக்கள் முக்கிமானவையாகும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இடதுசாரி அடையாளங்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் சிலர் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறுவதற்கும் தமது அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்வதற்கும் அத்தத்துவத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். தமது சமூக அந்தஸ்த்தை உயர்த்திக் கொண்ட பின்னர் பிற்போக்கான வியாபார நோக்கங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டது மட்டுமன்று ஒரு காலத்தில் தாங்கள் எந்த வர்க்கத்திற்கெதிராக போராடினார்களோ அந்த வர்க்கத்தினருடன் சமரசம் செய்து கொண்டு கூடிக் குழாவுவது மாத்திரமன்று அந்த வர்க்கத்தினருக்கு சாமரை வீசி சேவகம் செய்வதை இலங்கை இடதுசாரி வரலாற்றில் காணக்கூடியதாக உள்ளது. இத்தகைய சிதைவுகள் குறித்து பேராசிரியர் தமது புனைப்பெயரில் எழுதிய கட்டுரையில் கூறுகின்ற பின்வரும் வரிகள் முக்கியமானவை "இந்த நாட்டில் தொழிலாளர் இயக்கமும் மார்க்சிய இயக்கமும் முளைவிடத் தொடங்கிய காலம் முதல் ரொட்சியவாதம் உடன்பிறந்தே கொல்லும் வியாதிபோல் இடதுசாரி இயக்கத்தின் ஏகோபித்த வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றது. ரொட்சியவாதத்தை அதன் பிறப்பிலேயே நன்கு அறிந்த ஸ்டாலின் அது இடதுசாரி இயக்கத்திற்குள் ஊடுருவியுள்ள முதலாளித்துவக் கண்ணோட்டத்தின் வெளிப்பாடு என்று சரியாகக் குறிப்பிட்டார். புpலிப் குணவர்த்தனா முதல் கொல்வின் ஆர் டி சில்வா வரை ரொட்சிசவாதிகள் இலங்கையில் நமக்குக் காட்டி வந்தது நிற்கும் 'சாதனை' என்ன? பேச்சில் அதிதீவிரவாதமும் நடைமுறையில் படுமோசமான சரணாகதியுமாகும்." இவ்வகையில் இலங்கை இடதுசாரி வரலாற்றில் நவீன திரிபுவாதமாக அமைந்த ரொட்சிய வாதம் குறித்தும் அதன் வர்க்கத்தன்மை, விளைவுகள் குறித்தும் கைலாசபதி சுட்டிக்காட்ட தவறவில்லை.
அவ்வாறே, மார்க்சிய விரோத எழுத்தாளர்கள் என்றுமே முற்போக்குவாதிகளாக இருந்ததில்லை என்பதில் தெளிவானதோர் நிலைபாட்டினையே கொண்டிருந்தார் என்பதும் இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கதொன்றாகும். மார்க்சியக் கோட்பாட்டை யதார்த்த சூழலுக்கு ஏற்றவகையில் பொருத்திப் பார்த்து அந்த தளத்தில் உறுதியான இலக்கியம் படைக்க வேண்டும் என்பதில் பேராசிரியர் தெளிவானதொரு நிலைப்பாட்டினை கொண்டிருந்தார்.
இவ்விடயம் ஒருபுறமிருக்க, பேராசிரியரின் அரசியல் நிலைப்பாட்டினை அது சார்ந்த நடைமுறையின் குறுகிய வரம்புக்குள் நிலைநிறுத்தி தமது அரசியல் லாபத்திற்கும் சுயநலத்திற்காகவும் பயன்படுத்துவோர் சிலர் அவரை தமக்கேற்ற வகையில் மறுவாசிப்பு செய்து கொள்வது தற்செயல் நிகழ்ச்சியல்ல
"எங்கள் நாட்டு இடதுசாரி அரசியிலில் ஒரு சாபக்கோடு, யாராவது ஒரு படிப்பாளியை அல்லது உயர் பதவியிலிருப்பவரை, அவர் எங்களோடுதான் நிற்கிறார் என்று சாயம் பூச முற்படும் தந்திரோபயம். கைலாசபதியின் மார்க்ஸிய நிலைப்பாட்டினைக் களங்கப்படுத்துவதற்கு இப்படியும் இடையூறுகள். கைலாசபதி போஸ்டர் ஒட்ட வரவில்லை. எங்களுடன் வாங்கில் இருந்து பிளேன் டீ குடிக்கவரவில்லை என்று அவரைச் சிறுமைப்படுத்தக் கூடாது. அது உரைகல் அல்ல. மார்க்சிச அணி பெரும் பரப்பைக் கொண்டது. தொழிலாளர், விவசாயிகள், புத்திஜீவிகள், நடுத்தரவ வர்க்கத்தார் இப்படி. கைலாசபதி ஒரு புத்திஜீவியின் பங்குக்கு அதிகமாகவே தன் பணியை ஆற்றியவர்.”(என்.கே.ரகுநாதன், கட்டுரையாசிரியர், 1996, எங்கள் நினைவுகளில் கைலாசபதி, மல்லிகைப்பந்தல் யாழ்ப்பாணம், ப. 46)
பேராசிரியர் கைலாசபதி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தவர். அவர் எப்போதும் எழுதிக் கொண்டேயிருப்பவர். அரசியல் கட்சிகள், சிறு அரசியல் குழுக்கள் நடாத்தும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் கேட்டால் நடைமுறை அரசியல், சீர்கேடுகள் கருத்துக்கள் பற்றி எழுதி வழங்குவது அவரது முக்கிய பண்புகளில் ஒன்றாக அமைந்திருந்தது என என்.கே. ரகுநாதன் நினைவு கூறுவார். பேராசிரியரின் இத்தகைய பண்புகளை மறுத்து அவர் தம்முடன் மாத்திரமே உறவுக் கொண்டிருந்தார் எனவும் அவர் எடுத்த முடிவுகள் யாவும் எமது அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெற்றே எடுத்தார் என பிரகடனப்படுத்துவதும், இத்தகைய கூற்றுக்களை ஆதாரமாகக் கொண்டு கைலாசபதியின் தவறுகளுக்கு மேற்குறித்த நபர்களின் கூட்டு முடிவுகளுக்கும் உறவு கற்பிக்கின்ற இராம.சுந்தரம் போன்றோர் அவரது சிந்தனைகளை நிலை நிறுத்துவது அவர் வலியுறுத்தி நின்ற தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளிடையிலான ஐக்கிய முன்னணி கோட்பாட்டை நிராகரிப்பதாக அமையும்.
பேராசிரியர் கைலாசபதி கலை இலக்கியம் தொடர்பாக எவ்வாறு பல விடயங்களை கற்றுத்தேர்ந்தாரோ அவ்வாறே அரசியல் விடயங்களையும் அவர் தொடர்ந்து படித்து வந்தார். இது தொடர்பில் நண்பர்களுடன் விவாதித்து தெளிந்த நிலைப்பாட்டினை உருவாக்குவதிலும் பேராசிரியரின் பணி கணிசமானது. இது தொடர்பில் செ.கணேசலிங்கனின் பின்வரும் கூற்று முக்கியமானது.
"எப்பொருள் பற்றியும் எவருக்கும் வேண்டும் விபரங்கள் எந்தெந்த நூல்களில் கிடைக்கும் அந்நூல்களை எங்கே அல்லது எவரிடம் பெறலாம் என்பதை எளிதில் கூறிவிட வல்லவர் கைலாசபதி. அவர் பலதுறை நூல்களையும் இரவு பகலாகச் சேர்வின்றிப் படிப்பவர். அண்மையில் வெளியான இலக்கிய விமர்சன நூல் தொடக்கம், புதிதாக வந்த யுத்த நாவல்கள் வரை ஒன்றுவிடாமல் தேடிப்படித்து விடுபவர். கலை இலக்கியத்தோடு உலக அரசியல் நிகழ்ச்சிகளையும் ஆழ்ந்து கவனிப்பவர். நண்பர்களிடையே அரசியல் விமர்சனம் செய்வார். வங்காளத்தில் ஜோதிபாசு பொலீஸ் பகுதி அமைச்சரானார் என்று அவரிடம் தெரிவித்தால் வரலாற்றில் இடதுசாரிக் கூட்டாட்சிகள் ஏற்பட்டு பொலிஸ் பகுதியையும் நிர்வாகித்த கூட்டாட்சிகள் யாவற்றையும் கையிலே விரல் மடித்து ஒவ்வொன்றாகச் சொல்லி எதிர்காலம்பற்றியே விளக்கம் கூறிவிடுவார்."
அந்த வகையில் சர்வதேச அரசியல் என்கின்ற போது பேராசிரியர் மேலோட்டமான அவதானிப்பை கொண்டிருக்கவில்லை. வரலாற்றுப் பார்வை வர்க்கச் சார்பு என்ற வகையில் உற்று நோக்கி அதன் ஒளியிலே சர்வதேசம் பற்றி கருத்து கூற தலைப்பற்றிருப்பதைக் காணலாம்.
செம்பதாகை பத்திரிகையில் சர்வதேசவிவகாரங்களை ஒரு பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதி வந்தது போன்றே இலங்கை விவகாரங்களையும் வேறு ஒரு தனிப்பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதிவந்தார். இரண்டுமே புனை பெயர்களில் எழுதப்பட்டமையால் செம்பதாகை ஆசிரியர் குழுவோடு தொடர்பானவர்களுக்கு வெளியே எவருக்கும் இவற்றை கைலாசபதியே எழுதுகிறார் என்பது தெரிந்திருக்கவில்லை. இன்று அவரது சர்வதேச விவகாரங்கள் தொடுக்கப்பட்டுள்ளமையால் அறிய முடிவது போல உள்ளூர் விடயங்களில் அவரது கருத்தைப் பலரும் அறியாமல் போய்விட முடிகிறது. குறிப்பாக தமிழ்த் தேசியம் தொடர்பான அவரது நிலைப்பாட்டை அறியாமலே அவர் முற்றாகவே தமிழ்த்தேசியத்தை நிராகரித்தார் என சொல்லியும் எழுதியும் வருகிற போக்கு காணப்படுகிறது.
சிங்கள தரகு - பெரு முதலாளிவர்க்கக் கூட்டாக இருந்தபடி அமெரிக்க மேலாதிக்கச் சார்பும் இஸ்ரேல் சோசலிச ஆதரவும் உடையதாக இருந்த வலதுசாரி தமிழ்த் தேசியத்தை கைலாசபதி தொடர்ந்தும் மேற்படி உள்ளூர் விவகாரம் பற்றி எழுத்துக்களில் கண்டித்து, அம்பலப்படுத்தி வந்திருக்கிறார். அதேவேளை எழுபதுகளில் பிற்பாதியிலிருந்து தனது மறைவுவரை எழுச்சிபெற்றுவந்த இளைஞர்களது விழிப்புணர்வை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்று ஆதரித்து எழுதிவந்தார். அப்போது இளைஞர் இயக்கங்களிடையே மார்க்சியத் தேடலும், லெனினது சுயநிர்ணயம் குறித்த ஆழ்ந்த கற்றலும், சோஷலிச நாட்டமும், இவை பற்றிய ஜனநாயகப்பூர்வமான விவாதங்களும் காணப்பட்டன. அத்தகைய இடது சாரித் தமிழ்த்தேசியச் சொல்நெறியை அவர் ஆதரித்து வளர்த்தெடுக்கவல்ல எழுத்தாக்கங்களை தொடர்ந்து செம்பதாகையில் பதிவு செய்துள்ளார். பின்னாலே வலது சாரி தமிழ்த்தேசியமே மேலாதிக்கம் பெற்ற போதிலும் அவரது மறைவு வரை அதை முறியடித்து இளைஞர் எழுச்சியின் இடது சார்பான தமிழ்த் தேசியம் முன்னேற முடியும் எனும் நம்பிக்கை இருந்து வந்தது.
இத்தகைய உள்ளுர் விவகாரம் சார்ந்த பக்கம் தொகுத்து வெளியிடப்படாமை பெரும் துரதிஷ்டமாகும். அது வெளிவராதவரை அவர் தமிழ்த்தேசியத்தை முழுதாகவே நிராகரித்தார் என்ற தவறான பார்வையும் நீடிக்கவே செய்யும். அதன் வரவு காலத் தேவையாகும். கைலாசபதியை மதிப்பிடுவதற்காக மட்டுமல்லாமல் தமிழ்த்தேசியத்தின் இரு வழிப்பாதை மோதுகையின் தோற்றமும், எழுச்சியும் - வீழ்ச்சியும் பற்றி அறிந்து கொள்ளவும் அது அவசியமானதாகும்.
ஈழத்தில் அறுபதுகளில் சாதிய எதிர்ப்புப் போராட்டம் தேசியத்தின் வடிவமாக இருந்தது போன்று எழுபதுகளில் தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டமும் முனைப்பு பெற்றுக் காணப்பட்டது. இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர். இதன்காரணமாக தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த அணியினை நாடவேண்டி இருந்தனர். இடதுசாரிகள் இந்த ஜனநாயக சக்திகளை வென்றெடுக்கக் கூடியவாறு சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தபக்கமாய் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத்திருப்பார்களாயின் இந்த ஜனநாயக சக்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும்.
பிரதான முரண்பாடு என்பது பிரதானமற்றதாகச் செல்வதும் பிரதானமற்றது பிரதானமாக மாறுவதும் வரலாற்று நியதி. இந்த முரண்பாடுகளின் தாற்பரியத்தை உணராதவர்களின் கையிலிருந்து வரலாறு நழுவிடும் என்பது யதார்த்த நியதி. இந்தவகையில் இன்று நேர்மையுடன் மக்களுடன் செயற்பட்டு வருகின்ற முற்போக்கு மாக்ஸியர்கள் தமது கடந்தகாலம் குறித்து ஆரோக்கியமான சுய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.
இன்று இலங்கையின் அரசியல் போக்குகளை அவதானிக்கின்றபோது ஒர் உண்மை புலனாகாமற் போகாது. இடதுசாரிகள் என்ற முத்திசையுடன் தனிமனிதவாதம், தனிமனித முனைப்பு என்பன காரணமாக சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் உணர்ச்சி அடிப்படையில் தகர்த்து அதனூடாக தனக்கான அங்கீகாரத்தைத் தருமாறு மன்றாடி நிற்கின்ற ஆராய்ச்சி மணிகளையும் எந்திரவியலாளர்களும் ஆர்பரித்து நிற்கின்ற இன்றைய நாளில் மக்கள் அரசியல்வாதிகளும் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்களும் தாக்குதல்களுக்குட்படுவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. இதனாற் போலும் “பதர்கள் இருக்க நெல்லைக் கொண்டு போனானே” என கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் பாடியிருக்க வேண்டும்.
இதனை மனதில் கொண்டு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியது நமது கடமையாகும். கைலாசபதி வெறும் நாமம் மட்டுமல்ல; அவர் ஒரு இயக்க சக்தி. அதனை மார்க்சிய முற்போக்கு அறிஞர்கள் விளங்கிக் கொள்ளும் விதமும் தமதாக்கிக் கொள்ளும் விதமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க முடியும், இருக்கவேண்டும்.
- லெனின் மதிவானம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
thesamnet.co.uk/?p=22539
"நியாயப்படி பார்த்தால் கைலாசபதிக்கு அன்றைய யாழ் வளாக தலைவர் பதவி கிடைத்திருக்கவே முடியாது. சிரேஷ்ட அடிப்படையிலும் அறிவு மற்றும் திறன் அடிப்படையிலும் கைலாசபதி கடைசியிலேயே இருந்தார். தனிநாயகம் அடிகளார் (1913-1980). சீ.ஜே.எலியேசர் (1918-2001). சின்னப்பா அரசரட்ணம்.(1930 - 1998) ஜெயரட்ணம் வில்சன் (1928-2000) போன்றவர்களின் திறமைகளோடும் சாதனைகளோடும் ஒப்பிடுகிறபோது கைலாசபதியினுடைய வை மிகச் சாமானியமானவை. மேற்கூறிய பேராசிரியர்கள் சர்வதேச ரீதியாக தங்களை நிலை நிறுத்தியவர்கள் . கைலாசபதி எழுதிய நூல்கள் அவர் வாழ்நாட்காலத்தி லேயே நிராகரிக்கப்பட் டன. Literary cognition இல்லாத இலக்கிய விமர்சகராக இருந்ததும் காய்தல் உவத்தல் இல்லாத புலமையாளராக இருப்பதற்குப்பத ில் மார்க்ஸிய சித்தாந்த ஓதுகைக்கு(Marxi st indoctrination) ஆட்கொள்ளப்பட்டவ ராக இருந்ததும் கைலாசபதி ஒரு academic ஆக தோல்வியடைந்தமைக ்கான காரணங்கள்.
சு. வித்தியானந்தன் கைலாசபதியின் பல்கலைக்கழக ஆசிரியரும் கைலாசபதியைவிட சீனியரும். இருந்தும் கைலாசபதி குருவை விஞ்சிய சீடப்பிள்ளையாக பேராதனைப் பல்கலைக்கழகத்தி ல் தமிழ்ப்பேராசிரி யர் பதவிக்கு வித்தியானந்துடன ேயே போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கைலாசபதிக்கே தனக்கு நியாயப்படி யாழ் வளாகத்துக்கான தலைவர் பதவி கிடைக்காது என்பது நன்கு தெரிந்திருந்தது . ஆனால் கைலாசபதி குதிரை வியாபாரத்திலும் (Horse trading) அரசியல் காய் நகர்த்தல்களிலும ் மிக வல்லவராக இருந்தார். இடதுசாரி கூட்டு சுதந்திரக்கட்சி ஆட்சியிலிருந்த போது இடதுசாரித் தொடர்புகள் மற்றும் அமைச்சர் குமாரசூரியர் என்பவர்களைப் பயன்படுத்தி புகுந்து விளையாடலானார். 1974 ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கைலாசபதியும் சிவத்தம்பியும் புறக்கணித்தனர். ஜனநாய அடிப்படையில் மாநாட்டுக் குழுவினர் அதனை யாழ்ப்பாணத்தில் நடாத்துவது என்று தீர்மானித்தனர். அதனைப் புறக்கணித்து தான் கலந்து கொள்ளாததையெல்லா ம் ஒரு துரும்புச்சீட்ட ாகப் பயன்படுத்தி அதேயாண்டு ஆகஸ்டில் யாழ் வளாகம் திறக்கப்பட்டபோத ு தலைவர் பதவியை அடித்துப்பறித்தார்.
கைலாசபதி வெளிப்பூச்சுக்க ுத்தான் மார்க்ஸிஸ்ட். உள்ளுக்குள் தடித்த சைவ வெள்ளாளர் என்பதையும் யாழ் இந்துக் கல்லூரியிலிருந் து வந்தவர் என்பதையும் பயன்படுத்தி அரசியல் செய்தவர். 2006 ம் ஆண்டுக்கு முதல் சைவ வேளாளர் அல்லாத எவரையும் பல்கலைக்கழக கவுன்சில் துணைவேந்தராக சிபாரிசு செய்ததில்லை.
முதற்கோணல் முற்றும்கோணல் என்ற அடிப்படையில் முற்றிலும் ஒரு அரசியல் நியமனமான கைலாசபதியின் வளாகத் தலைவர் பதவியிலிருந்தே யாழ் பல்கலைக்கழக சீர்கேடு ஆரம்பிக்கிறது. கைலாசபதி ஒரு நன்கு அறியப்பட்ட ஸ்திரி லோலர்(womanizer ) அவரது மாணவிகளாக இருந்து பின்னாட்களில் விரிவுரையாளர் பேராசிரியர் ஆன பெண்களோடு அவருக்கு இருந்த உறவுகளையும் பல்கலைக்கழக சமூகம் நன்கு அறிந்தே இருக்கிறது. மேலும் மேலிடத்தில் உள்ளவரே இவ்வாறு நடந்துகொள்ளும்ப ோது கீழிடத்தில் உள்ளவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்ய அவர்கள் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையேற்படும்."
RSS feed for comments to this post