திருமணம்

தென்னிந்தியப் பெண் மக்கள் திலகம்; பெண் மக்களுக்கு ஒரு வழிகாட்டி; பொதுஜன ஊழியர்கள், தலைவர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர்; அன்பும், நாணமும், அடக்கமும், அஞ்சாமையும் ஒருங்கே அமையப் பெற்ற அன்னையார் ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள்.

இவருடைய வாழ்க்கைச் சரிதம் பெண்மக்களுக்குப் பெரும் படிப்பினையை ஊட்டக்கூடியது; ஆண்மக்களுக்கும் அவ்வாறே சாதாரண வாழ்க்கையையுடைய நடுத்தரக் குடி. ஈ.வெ.ரா.வின் அன்னையாருக்கு உறவினர்.

periyar_nagammaiyarஈ.வெ.ரா. தமது இளம் பருவத்திலேயே நாகம்மாளைச் சந்தித்திருந்தார். நாகம்மாளும் ஈ.வெ.ராவைச் சந்தித்திருந்தார். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அன்புகொண்டிருந்தனர். அன்னையார் இளம்பருவ விளையாட்டுப் பெண், வயது 12. ஈ.வெ.ரா.வுக்கு நல்ல வாலிபப் பருவம், வயது 19. ஈ.வெ.ராவின் தந்தையார் வெங்கட்ட நாயக்கர், பெரிய வைணவ மத பக்தர். பிரபல வியாபாரி; பெருந்தனவந்தர்; தமது மைந்தன் ஈ.வெ.ரா.வுக்கு மணம் புரிவிக்க எண்ணினார். செல்வக்குடியில் சம்பந்தம் பண்ணவேண்டும் என்பது அவரது ஆசை. அவர் கருத்து ஈ.வெ.ரா.வுக்குத் தெரிந்தது. ஈ.வெ.ரா.வோ நாகம்மாளே நான் விரும்பும் மனைவி என்றார். வேறொரு பெண்ணை விரும்பேன் என்றார். இவர் பிடிவாதத்தின் முன் தந்தையின் ஆசை நிலைக்கவில்லை.

நாகம்மையாரின் பெற்றோரும் அவருக்கு வேறு மணம் பேசினர். மணம் பேசப்பட்டவர் முதிர்ந்த வயதினர். இருமுறை மணமாகி இரு மனைவிகளையும் இழந்தவர். மூன்றாந்தாரமாகவே அன்னையாரைப் பேசினர். இச்செய்தியை அறிந்தார் அன்னையார். ஈ.வெ.ரா. வையே மணப்பேன்! அந்த முதிர்ந்த வயதினரை மணப்பதைவிட உயிர் விடுவேன்! என்று கூறினார். 12 வயதில் என்ன தைரியம்! என்ன உறுதி!

கடைசியில் ஈ.வெ.ரா.வுக்கும் அன்னையார்க்கும் மணம் முடிந்தது. சுமார் 38 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெருங் குடும்பத்தில் இவ்வாறு காதல் மணம் நிறைவேறியது.

இல்லற வாழ்வு

“நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான் தான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டிருந்தேனே அல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை. நான் சுயநல வாழ்வில் “மைனராய்'' “காலியாய்'' “சீமானாய்'' இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வில் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதரவாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்.''

“நாகம்மாள் உயிர்வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல; என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் உணர்ந்து வந்தேன்.''

மேலே கூறியவை, ஈ.வெ.ரா.வின் சொற்கள், அம்மையார் இறந்தபோது, பிரிவாற்றாது உள்ளம் வருந்திக் கூறிய உண்மையுரைகள்.

மனைவாழ்க்கையைப் பொறுத்த வரையிலும் அன்னையார் பழங்காலத்துப் பெண். தன் விருப்பப்படி கணவனை நடக்கச் செய்யும் நாகரிகப்பெண்ணல்லர். கணவன் எண்ணம் சரியோ தவறோ அதற்கு மாறுபடாதவர். அவர் செய்கை எதுவாயினும் அதற்குத் துணை செய்பவர்.

இரவு நேரங்களில் ஈ.வெ.ரா. அந்நாட்களில் வெளியில் சென்று விடுவதுண்டு. “எங்கே ராமசாமி'' என்று சிலசமயங்களில் ஈ.வெ.ரா.வின் தந்தையார் அன்னையாரைக் கேட்பார்களாம். உடனே அன்னையார், தமது மாமனார் கோபத்துக்குத் தன் கணவர் ஆளாகாத வண்ணம் “தூங்குகிறார்கள்'' என்று பதில் சொல்லுவார்களாம். ஈ.வெ.ரா. படுத்திருப்பதுபோல அவருடைய படுக்கையில் ஒரு தலையணை மீது போர்வை போர்த்தப்பட்டிருக்குமாம். ஈ.வெ.ரா. “சென்றிருக்கும் இடத்திற்கு'' நல்ல பக்குவமான உணவுகளை வீட்டார் அறியாமல் ஆள்மூலம் அனுப்புவார்களாம். ஈ.வெ.ரா. கேட்கும்பேõதெல்லாம் தடை கூறாமல் உடனே தான் அணிந்திருக்கும் நகைகளை எடுத்துத் தருவார்களாம்; தான் தரிக்கும் ஆடைகளையும் தூக்கிக் கொடுப்பார்களாம். இவைகள் எதற்காகவென்று அன்னையாருக்குத் தெரியும். இக்காலப் பெண்கள் இதற்குச் சம்மதிப்பார்களா? எவ்வளவு பதிபக்தி.

ஈ.வெ.ரா. அவர்கள் சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த பிறகும் அன்னையாரின் குணமும் செயலும் அன்று கண்டதற்கு அழிவில்லாமலே இருந்தன. பெண்கள் சுதந்திரம், விடுதலை என்ற விஷயத்தில் ஈ.வெ.ராவின் பேச்சு தலைகீழ்ப்புரட்சியை உண்டாக்கி விடும். அவர் பேச்சைக் கேட்ட தம்பதிகள் இருவரும் சமஉரிமையுடன் வாழ்ந்தால்தான் ஒற்றுமையாக வாழ்க்கை நடத்த முடியும். ஒருவரை ஒருவர் அடக்கி ஆள நினைப்பார்களானால் அவர்கள் வாழ்க்கை நீடித்திருக்க முடியாது. இப்பேச்செல்லாம் அன்னையாரின் பழங்குணத்தை மாற்ற முடியவில்லை. இக்காலத்திலும் நமது அன்னையார் ஈ.வெ.ராவின் அடிமைப்போல் தான் நடந்து வந்தார்கள். சிறிதும் மாறுபட்டு நடந்ததில்லை. அன்னையார் எக்காலத்திலும் தனக்கென்ற தனித்த சுகதுக்கங்களை விரும்பியவரல்லர். ஈ.வெ.ராவின் சுகதுக்கங்களையே தனது சுகதுக்க வாழ்வாகக் கொண்டிருந்தார்கள்.

அரசியல் வாழ்வு

பின்னாளில் ஈ.வெ.ரா.சொந்த வாழ்வைத்துறந்து பொதுநல வாழ்வில் ஈடுபட்டார். அன்னையாரும் கூடவே அச்சேவையில் இறங்கினார். ஈ.வெ.ரா. பொதுநல வாழ்வில் சிறப்படைந்ததற்கு காரணம் அன்னையாரே. அன்னையாரின் பூரண உதவியின்றேல், ஒத்துழைப்பின்றேல் ஈ.வெ.ரா. சிறப்படைந்திருக்க முடியாது; இது மறுக்கமுடியாத உண்மை.

1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தது. ஈ.வெ.ரா.வும் அதில் அதிதீவிரமாக ஈடுபட்டார். அன்னையாரும் தமது சுகவாழ்வைத் துறந்தார். விலையுயர்ந்த நகைகளைத் துறந்தார். மெல்லிய பட்டாடைகளை வெறுத்தார். முரட்டுக் கதராடை உடுத்தினார். நாம் தேசத்தின் ஏழை மக்களின் நன்மைக்கு உழைக்கின்றோம். ஆதலால் நாமும் எளியார் போலவே ஆடையணிகள் பூணவேண்டும் என்னும் கருத்தையே மேற்கொண்டார். அஞ்சாமல் வெளிவந்தார். தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வழிகாட்டியாக முன்வந்தார். ஒத்துழையாமை இயக்கம் வலுவடைந்தது. அரசாங்கத்துக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பலத்த போராட்டம் இச்சமயத்தில் அன்னையார் முன்னணியில் நின்று போராடினார். இது தமிழ்நாட்டில் ஒரு பெருங்கிளர்ச்சியை உண்டாக்கிற்று. இதனால் அனேக பெண் மக்களும் தைரியமாக இப்போரில் கலந்துகொள்ள முன்வந்தனர்.

1921 ஆம் ஆண்டில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் வெகு மும்முரமாக நடைபெற்றது. அரசாங்கத்தாரால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஈ.வெ.ரா.வும் அவர் தொண்டர்களும் தடையை மீறினர்; கைது செய்யப்பட்டனர். மறுநாள் அன்னையார் ஈ.வெ.ராவின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளுடன் புறப்பட்டார். அரசாங்கத்தின் தடையுத்தரவை மீறினார். ஈரோட்டில் பெருங்கொந்தளிப்பு. தமிழ்நாட்டில் பெருங்கிளர்ச்சி. அரசாங்கத்துக்குப் பெருந்திகைப்பு. உடனே தடையுத்தரவை நீக்கினர் அரசாங்கத்தார். அன்னையாரையும் அவர் தோழர்களையும் கைது செய்யாமல் விட்டனர். கைது செய்திருந்தால் ஈரோட்டின் நிலைமை எப்படியாகி இருக்கும் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும்.

அச்சமயம், மறியல் சம்பந்தமாக அரசாங்கத்துடன் சமாதான ஒப்பந்தப் பேச்சு நடந்தது. சர். சங்கரநாயர் தலைமையில் ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. இதற்கு மாளவியா மகாநாடு என்று பெயர், இம்மகாநாட்டில் திரு. காந்தியார், முக்கியமாக ஈரோட்டு மறியலையே குறிப்பிட்டார். ஈ.வெ.ரா. நாகம்மாளின் அபிப்பிராயம் தெரிந்தே முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

1920 ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகள் அன்னையார் எல்லாக் காங்கிரஸ்களுக்கும், அரசியல் மகாநாடுகளுக்கும் கணவருடன் தவறாமல் போய் வருவதுண்டு. அவர் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினராயிருந்திருக்கிறார்.

வைக்கம் சத்தியாகிரகம்

ஒத்துழையாமை இயக்கம் மறைந்தது. 1924 ஆம் ஆண்டில் வைக்கம் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஈ.வெ.ரா. ஈடுபட்டார். நாகம்மையாரும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். தமிழ்நாட்டிலிருந்து பல பெண்களையும் வைக்கத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போராட்டத்தில் கேரளப் பெண்களும் உற்சாகத்துடன் சேரும்படி செய்தார். தமது கணவர் கைதியான பிறகும், காங்கிரசின் உதவி கிடைப்பதற்கு முன்பும் தனித்து நின்று அப்போராட்டத்தை அஞ்சாமல் நடத்தினார். வைக்கத்தில் தமது வெற்றிக் கொடியைப் பல மாதங்கள் பறக்கும்படி செய்தார். அவர் சேனாதிபதியாக இருந்து வைக்கம் தெருக்களில் பெண்கள் படையை நடத்திச் சென்ற காட்சி சமூக ஊழியர்களைத் தட்டியெழுப்பியது. கொடிய சூரிய வெப்பத்திற்கும், பெருத்த மழைக்கும் பின் வாங்காமல் கோவில் வாசற்படி முன்பு அவர் நின்று சத்தியாக்கிரகம் செய்த காட்சி எல்லோருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டது; அப்போரில் ஈடுபடும்படி செய்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்ச்சியை அதிகமாகக் கிளப்பி விட்டது. வைதீகர்களின் மனத்திலும் பெருந்திகிலை உண்டாக்கிற்று.

இதுவரை உலகில் நடந்த சத்தியாக்கிரகங்களில் வெற்றி பெற்றது என்று சொல்லக்கூடியது வைக்கம் சத்தியாக்கிரகம் ஒன்றேயாகும். இவ்வெற்றிக்குக் காரணம் நமது அன்னையாரே.

"வீட்டின் ஒரு மூலையில் பேடெனப் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார் தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்துவான் வேண்டி வைக்கம் சத்தியாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகைமாலையும் சூடினார்'' என்று திரு.வி.க. முதலியார் அவர்கள் கூறியிருப்பது உண்மை! உண்மை!! உண்மை!!!

Pin It