வெற்று உளறல்

பல மொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு ‘உலகமயமாக்கல்’ என்ற கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. இதற்குத் தமிழும் தப்பவில்லை. உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான் நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும் என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய தேவை இல்லை. ‘உலகமயமாக்கல்’ போக்கினாலேயே ஆங்கிலத்தின் பின் நடக்கிறேன், அப்போதுதான் இந்த உலகில் நானும் பிழைக்க முடியும்’ என்பது வெற்று உளறல். தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் நாடுகளாகச் சப்பானும் சீனாவும் இல்லையா? எனவே எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் பிறங்கடையை (சந்ததியை) நரபலி இடுவதற்குச் சமம்.

- அசுகோ பர்ப்போலா, பின்லாந்து

 தமிழ் மீது கொண்ட காதலால்...

 இதுபோன்ற ஒரு மாநாட்டு வேளையில் தமிழை நினைவு கொள்கிறீர்கள். பிறகு மறந்து போவீர்கள்தானே? இங்கேயே பார்த்துவிட்டேன். என்னோடு தெளிவான தமிழில் பேசுகையில் பல பெண்களுக்குச் சிரிப்பும் வெட்கமும் வருகிறது. ஏன் இந்தத் தயக்கம். முறைப்படி எனக்குத்தான் சிரிப்பு வரவேண்டும். தமிழகத்திலிருந்து ஒளி பரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பெண்களும் ஆண்களும் நாள்தோறும் தமிழ்க் கொலை புரிதலைப் பொறுக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் அந்தச் சிதைக்கப்பட்ட தமிழ்தானே மனத்தில் பதியும்? ஆகவே வளமான தமிழ் வாழும் இடமாக உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். நான் சீன இனத்தைச் சேர்ந்தவள். தமிழ் மீது கொண்ட காதலால்தான் என் பெயரைக் கலையரசி என்று மாற்றியுள்ளேன். எவ்வளவு இனிமையான பெயர்!

- கலையரசி, சீனா

வெட்கக்கேடு

 தமிழகப் பள்ளிகளில் கட்டாயத் தமிழ்க் கல்வி வந்துள்ளதாக அறிகிறேன். தமிழ்நாட்டிலேயே தமிழில் படிப்பதைக் கட்டாயமாக்க வேண்டிய நிலை வந்தது வெட்கக்கேடு. இருந்தாலும் தாழ்வில்லை. இன்று தொடங்கியிருக்கும் கல்விச் செலவு எந்த ஒரு அரசியல் மாற்றத்தினாலும் மாறக்கூடாது. சில நேரங்களில் உணவைக் குழந்தைகளுக்குத் திணித்து ஊட்டுகிறோமே அது போலத்தான் இதுவும். நாள்பட நாள்பட இந்த உணவு பிடித்துப் போகும்.

- திமிடா, செருமனி

 எதைச் சாதித்துவிட்டன...

“நிலாச்சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். அம்புலி மாமாவில் தொடங்கி ஆனை, அரிமா என்று ஆயிரம் கதைகள் அழகு தமிழில் உண்டு. பிள்ளைப் பருவத்தில் இருந்தே தமிழோடு இணைந்து குழந்தைகள் நடந்தால் அவர்களும் வளர்வார்கள். தமிழும் தானாக வளரும்.ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ச்டாரும், ரெயின் ரெயின் கோ அவே-வும் இத்தனை ஆண்டுகளாக நமக்கு எதைச் சாதித்துத் தந்துவிட்டன - தமிழை அழித்ததைத் தவிர!”

- உல்ரிச்சு நிக்கோலசு, செருமனி

 ஊடகங்களின் பங்கு...

 ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு முதன்மையானது. தமிழர்களைச் சென்றடைய வேண்டிய செய்திகளைச் செந்தமிழில் இல்லாவிட் டாலும் நடைமுறைத் தமிழிலாவது தர வேண்டும். இங்கு ஆங்கிலக் கோலாண்மை நிரம்பி வழிகிறது. எனவே, இனி வரும் காலங்களில் இனிய தமிழோடு மக்களைச் சந்திக்கலாமே!”

- சைமன், நெதர்லாந்து

 ஒவ்வொரு நாளும்...

ஆங்கிலத்தில் பேசினால்தான் மதிப்பு என்ற இழிநிலை இன்றைய இளவட்டங்களின் நடுவில் புதைந்து இருக்கிறது. மிகக் கீழான நோய் இது. வணக்கம், மிக்க நன்றி என்கிற சொற்களில் இல்லாத மதிப்பும் உவகை யுமா ஆங்கில மொழியில் இருக்கிறது. என் தாயோடும் தந்தையோடும் கதைக்கையில் ஆங்கிலம் எதற்கு என்பதுதான் எனது கேள்வி. நடைமுறை வாழ்க்கையில் பெரும்பான்மையான செய்திகளைத் தமிழ்ப் படுத்துங்கள். அதாவது தமிழிலேயே கதையுங்கள். ஒவ்வொரு நாளும் தமிழோடு வாழ்வோம், தமிழனாய் வாழ்வோம்.

- தாமசு லேமன், செருமனி

 காலத்துக்கு ஏற்றபடி...

 குமுகாயத்துக்கு எந்த ஓர் உணர்வை யும் அழுந்த ஊட்டுவதில் ஈடு இணை யில்லாத வலிமை, கலை இலக்கியத்தில் தான் இருக்கிறது. பட்டிதொட்டியில் தொடங்கிப் புதுநாகரிக நகரம் வரை தமிழ் மொழியின் நங்கூரத்தை அழுத்திப் பாய்ச்ச நல்ல தமிழில் இனிய இலக்கியங்கள் தேவை. காலத்துக்கு ஏற்றபடி புதுவகை இலக்கிய வடிவங்கள் உடனடியாகத் தமிழில் வேண்டும். அது சுவையுடன் இருத்தல் வேண்டும்.

- பிருந்தா பெர், கனடா

 தமிழில் இருந்து மீளமுடியாது

 உங்கள் மொழியைப் படிக்க உருசிய நாட்டில் எத்தனையோ பேர் ஆர்வமாக வருகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்கும், பணம் கிடைக்கும் என்று அவர்கள் வரவில்லை. தமிழ் மொழியைப் படித்தால் சுவையாக இருக்கிறது, அதன் அனைத்துப் பாடல் களும் மாந்த நேயம் பேசுகின்றன, மாந்தத் தன்மையை உணர்த்துகின்றன என்பதால் தான் அதைப் படிக்கிறார்கள். இப்படிப் பட்ட ஆர்வத்துடன் தமிழ் கற்க வந்த மாணவர் ஆனவுடன்தான் நான் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன். ஆளுக்கு ஓர் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் பாருங்கள். அதன் பிறகு உங்களால் தமிழில் இருந்து மீள முடியாது. வேலைக்காக, பணத்துக்காக இல்லாமல் இலக்கியம் படியுங்கள்.

- அலெக்சாண்டர் துபியான்சுகி, உருசியா

 மொழி சார்ந்த...

இது போன்ற மாநாடுகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ 15 ஆண்டு களுக்கு ஒரு முறையோ நடத்தினால் மட்டும் போதாது. தமிழ் ஆய்வு மாநாடு களைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமாக மட்டுமே மக்களிடம் மொழி சார்ந்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இவையே மொழிக்கு உந்து ஆற்றலாக அமையும். இது போன்ற நிகழ்வுகள் வெறும் விளம்பரங்களாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கவேண்டும்!

- கிரிகோரி சேம்சு, பிரிட்டன்

 இப்படி ஒரு வளம்...

நான் முதலில் வடமொழியைக் கற்றவன். அதன் பிறகுதான் தமிழைப் படித்தவன். உங்களது மொழியில் அனைத்துத் தன்மை களுமே இருக்கின்றன. இப்படி ஒரு வளம் வேறு எந்த மொழிக்கும் இல்லை. இந்திய அரசு எழுதிக் கேட்டபோது தமிழைச் செம்மொழியாக ஏன் ஆக்க வேண்டும் என்பதைப் பல்வேறு அடிப்படைகளுடன் எழுதி அனுப்பியவன் நான். இதுபோன்ற வரலாற்றையும் மொழி வளத்தின் தன்மையையும் மற்ற நாடுகளில் இருக்கும் மொழியியல் அறிஞர்கள் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. எப்படிப்பட்ட வரலாற்றுக்கு வளத்துக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று நீங்கள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தால் போதாது. அதை உலகமும் ஒப்புக்கொள்ளும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும். அதைச் செய்தால் தமிழகத்துக்கு வெளியில் இருந்து எங்களைப் போன்ற ஆர்வலர்கள் தமிழ்த் தொண்டு ஆற்றக் கிளம்பி வருவார்கள்.!

- சியார்சு ஆர்ட், அமெரிக்கா

தொகுப்பு : வெற்றி

Pin It