வெங்காலூர் என்பது இப்போது இடுகுறிப் பெங்களூரு என்றாகியுள்ளது.  பெயர் கன்னட வடிவில் இருத்தல் வேண்டும் என்பதைத் தவிர அப்பெயர் மாற்றம் உணர்த்தும் செய்தியொன்றுமில்லை.  அது, வெங்காளியூர் – வெம்மையான காற்று வீசும் ஊர் என்னும் பொருளையுடையது என்றார் பாவாணர்.  இங்கு வெம்மை வறள் என்னும் பொருளைக் கொண்டது.  ‘வீர் வீர் என்று என்று காற்று வீசுகின்றது’ என்னும் தமிழ் வழக்கைப் போலவே ‘பிரு காளி பீசுத்ததே’ (பெருங்காற்று வீசுகின்றது) என்று கன்னடத்தில் கூறப்படுகின்றது.  இங்கு இன்னொரு செய்தியையும் அறிதல் வேண்டும்.

 பெங்களூருவில் தொடர்ந்து வரும் பலருக்கு மூக்கடைப்பு, நீரொழுக்கு, தும்மல், தலைவலி, பின்னர் மூச்சிழுப்பு (Asthma) என்னும் தொல்லைகள் விட்டு நீங்காமல் வாட்டுகின்றன. வறண்ட காற்றினால் மூக்குச் சளிப்பை (Sinus Sae) உலர்தல், வீங்குதல், அழற்சியடைதல் என்னும் நிலைகள் உண்டாகின்றன. இத்தொல்லைகளை உடையோர் ஓசூரைத் தாண்டியபின் இவற்றிலிருந்து விடுதலை பெறுவதும், திரும்புங்கால் ஓசூரைக் கடந்தவுடன் இவை மீண்டும் பற்றிக் கொள்ளுதலும் கண்கூடான உண்மைகள் ஆகும். இது, வெங்காளியூர் என்று பாவாணர் கூறிய சொற்பொருளை உறுதி செய்கின்றது. கால், காள் இரண்டும் காற்றைக் குறிப்பனவே. வெங்காளியூருக்கு மட்டு மன்றிக் கருநாடக இடப்பெயர்கள் பலவற்றிற்கும் இவ்வாறு தமிழ்வழியாகவே உண்மைப் பொருளைக் காணமுடியும் என்பது ஒருநிலை.

முன்னை மூவேந்தரும் குறுநிலமன்னரும் ஆகிய தமிழரசர்தம் ஆட்சி ஏறத்தாழ தென்னிந்தியத் தீவக்குறை (தீபகற்பம்) முழுவதும் பரந்திருந்தது. அப்பகுதிகளில் உள்ள பழமையான இடப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களாகவே உள்ள வரலாற்றுப் பின்புலமுடைய இன்னொரு நிலையும் காணப்படுகின்றது. 1956இல், அண்டைப் பகுதி ஊர்களும் ஆறுகளும் மலைகளும் சேர்க்கப்பட்டு உருவாகிய அகண்ட (விசால) கருநாடக மாநிலத்தின் பழமையான ஊர்ப்பெயர்களும் இடப்பெயர்களும் - திரிபின்றியும், திரிபுற்றும் மொழி பெயர்க்கப்பெற்றும் உள்ள தமிழ்ப்பெயர்களாகவே உள்ளன. அவற்றிற் சில வருமாறு:

பழந்தமிழ்ப் பெயர்   இற்றைப் பெயர்

வானியாறு, வானவாறு       Honawar

நாகரூர்                                   சோமவாரப்பேட்டெ

மேற்கரை                               மர்க்கரா

வடகரை                                 படகரா

கரைஓரம்

(மேற்குக் கடற்கரை

ஓரத்தில் உள்ள ஓரூர்)          கார்வார்

பாழிக்கல், பாழிநகர்                        Bhatkal

குதிரைமலை,

குதிரைமூக்குமலை               குதுரெமுக

பாசனம்

(நீர்ப்பாசனம் உடைய ஊர்)            Hassana

சேரவாறு                               (Sharavathi)

பூவானி                                  கெப்பானி, கபினி

தோனக்கா                 Jog, Joag

வேளகம்                                 பெலகாம்

வியலூர்                                 Bailur

இடும்பில்                               உடுப்பி

நறவூர்                                    நறவுக்கல்லுபெட்ட

கோடுகூர்                              கோட்கூரு

எருமையூர், எருமைநாடு      மகிசபுரி, மைசூர்

குவளாலபுரம்                        கோலர

துவரைநகர், துவரைநாடு    Halebidu

மண்டையம்               மண்டியா, மாண்டியா

ஆனைக்கல்               ஆனெக்கல்லு

அரிசிக்கரை               அரிசிகரெ

ஏழில்மலை என்பது எலிமலை என்றாகி ‘மூசிக பர்வதம்’ என்றும், மேல் மலையின் பொருள் மேற்குமலை என்பது தெரியாமல் அதனை மேலும் ஒரு மலை எனப் பொருள் கொண்டு ‘சகயாத்திரி’ என்றும் வடமொழியில் பெயர்க்க முனைந்தவர்தம் முயற்சியை இகழ்ச்சிக்குறுநகை யால் ஒதுக்கிவிட வேண்டியுள்ளது. இவ்வாறே, இற்றைப் பிற திரவிட மாநிலங்களிலும் வடமாநிலங்களிலும் வரலாற்றுத் தமிழ்ப்பெயர்கள் காணப்படுவனவே. சில சான்றுகள்:

பண்டைத் தமிழ்ப்பெயர்      இற்றைப்பெயர்

கூபகத்தீவு                             கோவா

வேம்பாய்                               மும்பை

காளிகோட்டம்

(பாவாணர் கூறியது)           கொல்கத்தா

கடகம்                                    கட்டாக்

பாடலிபுரம்                பாட்னா

இந்தியாவுக்கு அப்பெயரைக் கொடுத்தது சிந்து என்னும் ஆறு. சிந்து என்பது மும்மைப் பிரிவு என்று பொருள்படும் தமிழ்ச் சொல்லேயாம்.

எனவே, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பழமையான ஊரும் நாடும் மலையும் ஆறும் என்பனவாகிய இடப்பெயர்களையும் அவற்றின் தமிழ்த் தொடர்பையும் அறிதற்கு முறையான இடப்பெயர் ஆய்வை மேற்கொள்ளுதல் வேண்டும். அதன்வழி பல தமிழுண்மை களை நிலைநாட்டும் வலிமையான சான்றுகள் வெளிப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

குமரிக்கடல் ஆய்வு போன்ற ஆழ்கடல் ஆய்வை மேற்கொள்வது தனிமாந்தர்க்கும் குழுவினர்க்கும் இயலாததாகும். ஆயின் நிலவழியான இடப்பெயர் ஆய்வை மேற்கொள்வது இயலக்கூடியதாகும்.

ஊர்சுற்றும் விருப்பம் உடையோர் சிலரும் பலரும் ஒருங்கிணைந்தும், ஆய்வு முறைகளை வகுத்துக்கொண்டும், இந்தியா முழுமையையும் தத்தம் ஆய்வுக்குரிய சிறுசிறு பகுதிகளாக ஒதுக்கிக்கொண்டும் இவ்வாய்வை மேற்கொண்டால் ஓரிரு திங்களிலேயே அது முற்றவும் கூடும்.

Pin It