கோவை, சூன் 24 - கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குத் தலைமை வகித்து முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது “தொன்மையிலும் தனித்தன்மையிலும் முதன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் உலக மொழி மட்டுமல்ல - உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

முதல்வர் கலைஞர் அவர்களின் தொடக்க விழாத் தலைமையுரை வருமாறு:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினைத் தொடங்கி வைத்து, “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி விருது” வழங்கி, விழாப் பேருரையாற்ற வருகை தந்திருக்கும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களே!

தடைக் கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு தமிழகத்தின் மீதும் - தமிழ்நாட்டு மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும் - பற்றின் காரணமாகவும் வருகை தந்துள்ள தங்களுக்கு உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு மலரை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்க வருகை தந்திருக்கும் மேதகு தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களே!

தமிழக அரசின் நிதியமைச்சர் இனமானப் பேராசிரியர், தமிழகத்தின் துணை முதலமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே!

உலகில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கே வருகைதந்திருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, ஆய்வறிஞர்களே, கவிஞர்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் அன்பர்களே! என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!

கோவையில் நடைபெறுகின்ற இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடை திறந்த வெள்ளமெனத் திரண்டு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தையும், உள்ளம் நிறைந்த வரவேற்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி தீரத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சைத் தரணியிலே; கருக்கலிலே கண் விழிக்கும் திருக்குவளை என்னும் சிற்றூரில், கவிபுனையும் கற்பனைத் திறனும், தமிழிசை ஆற்றலும், வேளாண்மை நாட்டமும் மிகுந்த முத்துவேலருக்கும் அஞ்சகத்தம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்து,

14 வயதினிலே - “வீரத்தமிழ் கொஞ்சும் நாட்டிலே” எனும் அணி வகுப்புப் பாடல் இயற்றி, தமிழ் வாழ்க, தமிழர் வெல்க என்று புலி, வில், கயல் பொறித்த கொடி பிடித்து, தமிழ் மாணவர் பட்டாளத்திற்குத் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுடன் பேரணி நடத்தி;

அதே வயதில், “திராவிடர் விழித்துக் கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. பெரும்பாலான திராவிடர் வீறுகொண்டெழுந்து விட்டனர். நாட்டைக் காப்பாற்றவும், கலை நாகரிகத்தைக் காக்கவும் கச்சை கட்டிவிட்டனர்” என்ற முன்னுரையோடு, ‘செல்வச்சந்திரா’ என்ற நாடகத்தை எழுதி;

17 வயதில் ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற ஓர் அமைப்பினைத் தோற்றுவித்து; அதன் ஆண்டு விழாவுக்கென, “கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக் கூட்டத்தை!” என்ற பாடல் வரிகளைப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமிருந்து வாழ்த்தாகப் பெற்று;

‘திராவிட நாடு’ தொடக்க இதழ் ஒன்றில், ‘இளமைப் பலி’ என்ற கட்டுரை எழுதி, அறிஞர் அண்ணா அவர்களின் கவனத்தைக் கவர்ந்து;

20 வயதில் ‘சேரன்’ என்ற புனை பெயரோடு, ‘முரசொலி’ இதழைத் தொடங்கி, “கிழவன் கனவு” எனும் சீர்திருத்த சிறுகதையினை வழங்கி; அன்னைத் தமிழுக்கு இயன்ற வழியனைத்தும் அணிகலன்கள் பல சூட்டியிருக்கிறேன்.

பின்னர், தந்தை பெரியார் அவர்களின் அரவணைப்பிலும், அறிஞர் அண்ணா அவர்களின் அன்பிலும் நனைந்து, வளர்ந்து; தமிழையே தோன்றாத் துணையாகவும், தோளேந்திய ஆயுதமாகவும் கொண்டு - கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திரைப்படம், அரசியல் எனப் பல்வேறு துறைகளிலும் பணி புரிந்து - ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாத போதும், தமிழ் அன்னைக்கு இயன்ற வழியனைத்தும், முனைந்து இடையறாது பணியாற்றி, அணி மணிகள் பலவும் தேடிக் கொணர்ந்து சூட்டிவரும் எனக்கு;

கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கும், அதன் தொடக்க விழாவிலே தலைமையேற்பதற்கும் கிட்டிய வாய்ப்பினைப் பெருமையாகக் கருதுகிறேன்.

இதுவரை உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடைபெற்றிருக்கினறன. முன்னர், நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்பொழுது நடைபெறுகிற இந்த மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை “உலத் தமிழ் மாநாடுகள்” இப்பொழுது நடைபெறுவது “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”.

“உலகத் தமிழ்ச் செம்மொழி” என்பதில் உள்ள மூனறு சொற்களும் பொருள் பொதிந்தவை மட்டுமல்ல; பொருத்தமானவையும் ஆகும். தமிழ் உலக மொழி மட்டுமல்ல; உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், ஞானமுதல் மொழி தமிழே என்று நிறுவிக்காட்டியிருக்கிறார்.

தமிழே - உலக முதல் தாய்மொழி

மூலத் தாய்மொழிச் சொற்கள் உலக மொழிகளில், சொல் வடிவில், உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரியாமல் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக உலக மொழிகளில் உள்ள அம்மா, அப்பா எனும் உறவுப் பெயர்கள்; நான், நீ, அவன் எனும் மூவிடப் பெயர்கள்; நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கைப் பெயர்கள் போன்றவை தமிழோடு மிகவும் நெருக்கம் கொண்டவையாக உள்ளன. தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால் தமிழே உலக முதல் தாய்மொழி எனும் தகுதியைப் பெறுகிறது.

உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழ்; வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலையான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலைத் தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என அறியலாம்.

கி.மு. 10ஆம் நூற்றாண்டில் வாழ்நத அரசனாகிய சாலமனுக்கு தமிழகக் கப்பல்கள் மயில் தோகையையும், யானைத் தந்தத்தையும், வாசனைப் பொருள்களையும், கொண்டு சென்றன. வடமொழியில் வேதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதை ஆய்வறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்து அறிவித்தார். இதிலிருநது வடமொழிக்கு முன்பே தமிழ் இருந்தது என்பதை அறியலாம். வால்மீகி இராமாயணத்தில் தென்னகத்தை ஆண்ட மூவேந்தர்களைப் பற்றிய குறிப்பும், பாண்டியரின் தலைநகரான கபாடபுரம் பற்றிய குறிப்பும் உள்ளன. இது லெமூரியா கண்டத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்த கபாடபுரம் பற்றியதாகும் எனக் கருதப்படுகிறது.

கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்திரகுப்த மௌரியரின் அமைச்சரான சாணக்கியர் தன் அர்த்தசாஸ்திரத்தில் கபாடபுரத்தில் முத்துக்குளித்தலைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். கி.மு. 350 இல் வாழ்ந்த வடமொழி இலக்கணப் பேரறிஞரான காத்தியாயனார் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பாரதப் போர் பற்றி வரும் குறிப்பில், புறநானூற்றில் பாண்டவர் ஐந்து பேருடன், 100 துரியோதனாதியர்களும் போரிட்டபோது அந்த இருபக்கப் படைகளுக்கும் பெருஞ்சோறு கொடுத்த காரணத்தால் உதியஞ்சேரலாதன் - சேரன் பெருஞ்சோற்று தியன் சேரலாதன் என்று அழைக்கப்பட்டார். பாரதப் போர் நடைபெற்ற காலம் கி.மு. 1500 எனப்படுகிறது. அப்படியானால் இந்தச் சேரனின் காலம் கி.மு. 1500 ஆக இருக்க வேண்டும். இவையனைத்தும் தமிழ் இனத்தின் தொன்மையையும், தமிழ் மொழியின் தொன்மையையும் புலப்படுத்தும்.

பேரறிஞர்களான ஜான் மார்ஷல், ஈராஸ் அடிகள், சர் மார்ட்டிமர் வீலர், கமில் சுவலபில் போன்றோர் திராவிடர்களே “சிந்துவெளி நாகரிகத் தோற்றத்தின் உரிமையாளர்கள்” எனவும், அவர்களின் மொழி திராவிட மொழிதான் எனவும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிடப் பண்பாடு. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிந்துவெளிக் குறியீடுகளைப் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம் என்று கடந்த 40 ஆண்டுகளாகச் சிந்துவெளிப் பண்பாட்டு வரிவடிவங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் டாக்டர் ஐராவதம் மகாதேவன் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் அயல்நாட்டு வாணிகர்கள்: சிலப்பதிகாரம் கூறும் சான்று

இன்று “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது” பெறும் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலோ - சிந்துவெளிப் பண்பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தவை என்னும் கருதுகோளை ஆய்வுச் சான்றுகளோடு முன்வைத்து, அத்துறையில் தொடர்ந்து அரும்பணியாற்றி வருகிறார். சிந்துவெளியினர் திராவிட மொழி பேசுபவர்களே என்பதற்கான தகுந்த ஆதாரங்களை அவர் விரிவாகக் கூறியுள்ளார்.

அகநானூறு, புறநானூறு போன்ற கடைச் சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது; தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது. சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழர்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பயணம் செய்து, உச்சயினி, கலிங்கப்பட்டினம், காசி, பாடலிபுரம் முதலான இடங்களிலும், கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா), தக்கோலம், கிடாரம், சாவகம் (கிழக்கிந்தியத் தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்று வாணிகம் செய்தார்கள்.

தமிழக வாணிகர் அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே, அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்திற்கு வந்து வாணிகம் செய்தார்கள். அக்காலத்தில், வாணிகம் செய்தார்கள். அக்காலத்தில், வாணிகத்திலே உலகப் புகழ் பெற்ற காவிரிப் பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே, அயல் நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு மொழிகளைப் பேசிய மக்கள் தங்கியிருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

‘பயனற வறியா யவனர் இருக்கையும்

 கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்

 கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்’

- என்று சிலப்பதிகாரமும்;

‘மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

 புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்

 முட்டாச் சிறப்பிற் பட்டினம்’

- என்று பட்டினப்பாலையும் எடுத்துரைக்கின்றன.

மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழி தமிழ் என்பதை உலக அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்

தமிழ்நாட்டிற்கு வடமேற்கிலிருநது வந்த அராபிய வாணிகரும், யவனர்களும், சேரநாட்டின் முசிறித் துறைமுகத்திற்கு வந்து வாணிகம் செய்தனர். இத்தகைய வாணிகத்தின் மூலமாகவும், பல்வேறு மொழிகளின் தொடர்புகளின் காரணமாகவும், தமிழ், உலக நாடுகளில் எல்லாம் அறியப்பட்ட மொழியாயிற்று, அதன் தொன்மையாலும், தனித்தன்மையாலும், முதன்மைச் சிறப்பினாலும், தமிழ் - உலக முதல் தாய் மொழியாக - உலகத் தமிழாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மொழி செம்மொழியாகக் கூறப்படுவதற்கு இன்னின்ன தகுதிகள் வேண்டுமென்று வரையறுக்கப்பட்டுள்ளது. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுவுநிலைமை, தாய்மைத் தன்மை, மொழிக்கோட்பாடு, இலக்கிய வளம், உயர் சிந்தனை, பண்பாடு, கலை, பட்டறிவு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்தான், அது செம்மொழியாகும். இந்த பதினோரு தகுதிகளை மட்டுமல்ல; இந்தத் தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான், தமிழ்மொழி என்பதை, தமிழகத்திலே உள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, இந்தியாவிலே பிற மாநிலங்களிலே உள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

தமிழ் செம்மொழியே என முதன்முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர் அவர்கள் ஆவார்கள். தமிழ்ச் செம்மொழி என்று முதன்முதலில் சொன்ன வெளி நாட்டவர் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஆவார்கள். அயர்லாந்து நாட்டில் “ஷெப்பர்ட்ஸ் காலனி” என்ற இடத்தில் வாழ்ந்த இவர் அங்கிருந்து குடி பெயர்ந்து, தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில் தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர். அந்த அளவிற்கு மண்ணின் பற்று, மொழியின் பற்று கொண்டவராக அவர் விளங்கி

னார். தமிழ்ச் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தலைநகர்த் தமிழ்ச்சங்கங்கள் போன்ற அமைப்புகளும், சென்னைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் உள்ளிட்ட தமிழகத்திலே உள்ள பல்கலைக்கழகங்களும், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், முனைவர் ச. அகத்தியலிங்கம், முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் ஜான் சாமுவேல், மணவை முஸ்தபா, முனைவர் அவ்வை நடராசன், முனைவர் பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித் குமார் சாட்டர்ஜி, டாக்டர் கமில் சுவலபில், டாக்டர் ஜார்ஜ் எல்ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.

தமிழ்ச் செம்மொழி: சோனியா காந்தி எனக்கு எழுதிய கடிதம்

எனினும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வந்த அந்தக் குரல்; காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய் கவனிப்பாரற்றுப் போயிற்று. ஆனால், அரசியல் வானில் துருவ நட்சிகத்திரம் போன்று, மத்தியில் தியாகத் திருவிளக்காம் திருமதி சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலிலும், டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தது. அதற்குப் பின்னர்தான்; தமிழைச் செம்மொழியெனப் பிரகடனப்படுத்த வேண்டுமென்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. 12-10-2004 அன்று தமிழ்ச் செம்மொழி என்ற பிரகடன அறிவிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

அந்த நேரத்தில் திருமதி சோனியா காந்தி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில்:

Dear Thiru Karunajidhiji,

I have received your letter of 28th October.
I am glad that all the formalities for declaring Tamil as a Classical Language have now been completed. This is an achievement for all the consistutents of the UPA Government, but particular credit goes to you and your party.”

கடிதமல்ல செப்பேடு!

அதாவது, தமிழைச் செம்மொழியாக ஆக்குவதற்குத் தேவைப்பட்ட முறையான சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து அது நிறைவேறிவிட்டது. இந்தச் சாதனைக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் காரணம் என்றாலும் கூட, குறிப்பாகவும், சிறப்பாகவும், நீங்கள்தான் இதற்குக் காரணம். உங்கள் தலைமையிலே உள்ள திராவிட முன்னேற்றக் கழகம்தான் இதற்குக் காரணம் என்று சோனியா காந்தி அவர்கள் எழுதியிருந்தார்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதனை நான் ஒரு கடிதமாக அல்ல; காலாகாலத்திற்கும், இன்னும் நூறாண்டு காலம், இருநூறாண்டு காலத்திற்கும், பிறகு என் கொள்ளுப் பேரன் எடுத்துப் படித்து, நம்முடைய தாத்தா கட்டிக் காத்த செப்பேடு இது என்று பாராட்டுகின்ற அளவிற்கு ஆக வேண்டுமென்ற ஆர்வமும் நம்பிக்கையும் உள்ளவன் நான்.

ஒரு நூற்றாண்டுக் காலமாக எழுப்பப்பட்டு வந்த குரல் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசத் தொடங்கியதற்குப் பிறகு, தமிழ்ச் செம்மொழி என்ற பிரகடன அறிவிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டதையொட்டி, நடைபெறுகிற முதல் மாநாடு இது என்பதால், தமிழின் பெயரால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற திருப்பெயரில் இந்த மாநாடு கோவை மாநகரிலே நடைபெறுகிறது.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகும், இளமையும், அணுவளவேனும் குறையாமல் இந்த அவனியிலே வாழ்ந்துவரும் தமிழ் மொழியை, இனி எதிர்காலத்திற்கான தேவைகளை மதிப்பிட்டு - கணினித் தமிழ், அறிவியல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழி முறைகளை வகுத்திடவும், இலக்கியம் ஒப்பிலக்கியம், மொழியியல், மொழி பெயர்ப்பியல், வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்படுத்திடவும், சிந்துசமவெளி முதல் ஆதிச்ச நல்லூர், கொடுங்கடல் கொண்ட குமரிக்கண்டம் வரை தொல்லியல் துறையில் இதுவரை மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மேலும் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுத்திடவும்; இந்த மாநாடு இப்போது கொங்குபூமியிலே நடைபெறுகிறது.

“வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு

 குடக்குப் பொருப்புவெளிக் குன்று - கிடக்கும்

 களித்தண் டலைமேவு காவிரிசூழ்நாட்டு

 குளித்தண்டலையளவும் கொங்கு”

என்று ஒரு காலத்தில் கொங்குநாட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்டிருந்தன. தமிழகத்தின் சரித்திரத்தில் - சங்ககாலம் தொடங்கி இன்றுவரை - தனி இடம் பெற்றிருப்பதும் - என்னை முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக அனுப்பி வைத்ததுமான குளித்தலை உள்ளிட்டதும் - கொங்கு நாடாகும். ஆம், குளித்தண்டலையளவும் கொங்கு.

தமிழகத்தில் பாரி, ஓரி, காரி, பேகன், ஆய், அதியன், நள்ளி என்னும் எழுவரை மட்டும் வள்ளல்கள் என வரையறுத்துக் கூறினர் சங்ககாலத்துச் சான்றோர்கள். இவ்வெழுவர்க்குப் பின்னர், அவ்வெழுவர் போல ஈதற்கு யான் உளேன் என்ற வள்ளல் குமணனோடு, சங்ககால வள்ளல்கள் எண்மராவர். அவ்வெண்மரில், பேகன், அதியமான், ஓரி, குமணன் ஆகிய நால்வர் கொங்கு நாட்டினர். அதுமட்டுமல்ல, கடிய நெடுவேட்டுவன், நன்னன், பூந்துறை, ஈந்தூர்க்கிழான், கொண்கானங் கிழான், விச்சிக்கோ, தாமான் தோன்றிக்கோன், மோகூர்ப்பழையன் ஆகிய சங்ககாலத் தலைவர்களும், பழையக் கோட்டைச் சர்க்கரை, மும்முடிப் பல்லவராயர், காடையூர்க் காங்கேயர், கொற்றை வேணாடுடையார், மசக்காளி மன்றாடியார், வணங்காமுடி வாணராயன், காளிங்கராயன், பாரியூரான், உலகுடையான், அகளங்கன், இம் முடிச்சோழியாண்டான், தீரன் சின்னமலை, கொல்லி மழவன் போன்ற பிற்காலச் சங்கத் தலைவர்களும் கோலோச்சிய பூமி கொங்கு பூமி.

பைந்தமிழ் வளர்த்த கொங்கு பூமி

அஞ்சி அத்தை மகள் நாகையார், அதியன் விண்ணத்தனார், அந்தி இளங்கீரனார், ஆலத்தூர்க்கிழார், ஆவியார், இரும்பிடர்த் தலையார், எருமை வெளியனார், கருவூர்க் கண்ணம்பாளனார், கருவூர்க்கிழார், கருவூர்க்கோசனார், கருவூர்ச் சேரமான் சாத்தனார், குடவாயிற் கீரத்தனார், கொல்லிக் கண்ணனார், செங்குன்றூர்க்கிழார், பெருந்தலைச் சாத்தனார், பொன்முடியார் போன்ற சங்ககாலப் புலவர்கள் பாடிப் பைந்தமிழ் வளர்த்த பூமி இந்தக் கொங்கு பூமி.

இத்தகைய புலவர்களும், புரவலர்களும், தன்னேரிலாத் தலைவர்களும் உலாவிய புகழுக்கும், பெருமைக்கும் உரியது கொங்குபூமி. அதன் கோலமிகு மாநகரம் கோவை. அந்த மாநகரில் அனைத்து வகையிலும் அழகும், பொருத்தமும் நிறைந்த இடத்தில் - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குகிறது. மாநாட்டினைத் தொடங்கி வைத்திட, பெண்ணின் பெருமைக்கும், இந்திய மண்ணின் பெருமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிடும் மேதகு குடியரசுத் தலைவர் திருமதி. பிரதிபா தேவிசிங் பாட்டீல் நமது அன்பான அழைப்பினையேற்று இங்கே வருகை தந்திருக்கிறார்கள். மாநாட்டுச் சிறப்பு மலரை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்கிட மேதகு தமிழக ஆளுநர் எனது மேன்மைமிகு நண்பர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள் இங்கே வந்திருக்கின்றார்கள். உங்களோடு இணைந்து, அவர்களை வரவேற்று, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்கவிழாத் தலைமையுரையினை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

(நன்றி : “முரசொலி”, 24-6-2010.)

Comments

1 comment

1
puniyaa
எனக்கு இந்த கட்டுரை என் படிப்புக்கு மிக உதவியாக இருந்தது. மிக நன்ரி.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.