“எல்லா நாடுகளோடும் உனக்கு
நல்லுற விருந்தால்
இத்தனைப் பெரிய பெரும்படை
உனக்குத் தேவையா?”
“எப்போது தூங்குவேன் என்றே
என்னை விழுங்க ஒருவன்
எல்லையில் காத்திருக் கின்றான்
நான் விழிப்புடன் இருக்கத்
தேவை யில்லையா’?”
“இணக்க மில்லாமல்
நீயே சொந்தமாய்
வகுத்துக்கொண்ட எல்லை உன்
தேசியப் பெருமை என்றுநீ
எண்ணி மகிழலாம். ஆனால்
எல்லைகள் அரசியலாளரால்
வரையப் படுபவை அல்ல;
மக்களால் அமைபவை
மக்கள் உணர்வை
மதித்திடல் இன்றி
என்னடா நாடு?
என்னடா தேசியம்?”
“அடடா, உன்னை
யாரென்றோ நினைத்தேன்.
நீ நாட்டுப் பகைவன்!
இரண்டகன்!
எதிரி நாட்டின்
கைக் கூலிதானடா!
யாரங்கே, காவலர்?
ஓடிவா ருங்கள்!
இரண்டகன் இவனைச்
சிறையில் இடுங்கள்.
நாடு புனிதம் அடையும்.”
- ம.லெ.தங்கப்பா