வழக்கமாக குழந்தைகளுக்கும் பள்ளி விடுமுறை இருக்கும்.  சனி, ஞாயிறு நாட்களில் மதியம் 11 மணி சமயம் அந்த பலூன்காரர் பல நிறங்களில், பல வடிவங்களிலான பலூன்களைக் கொண்டு வந்து அந்த சந்தையைச் சுற்றியுள்ள தெருக்களில் பலூன், பலூன் - பளபளப்பான பலூன் - புதுசு புதுசான பலூன் - தினுசுதினுசான பலூன் பட்டென்று வெடிக்காது...  புஸ்ஸென்று சுருங்காது...பெரிய பலூன்... சிறிய பலூன்... சட்டென்று வாங்குங்கள் சிறப்படையுங்கள்... பணம் கொடுத்து வாங்குங்கள் பெருமை கொள்ளுங்கள்...

பிள்ளைகளுக்கு அந்த பலூன்காரர் கையில் இருக்கும் பலூன்கள் எந்த அளவுக்குப் பிடிக்குமோ அதைவிட அதிகமாய் அவருடைய வாயிலிருந்து முத்துமணி ரத்தினங்களாய்ச் சிதறும் அலங்கார வார்த்தைகள் பிடிக்கும்.  அலங்கார வார்த்தைகள் மட்டுமல்ல, அவரிடமிருந்து அர்த்தம் செறிந்த வார்த்தைகளும் இயல்பாய், குழந்தைகள் மீது கொண்ட மெய்யன்போடு வெளிப்படும். எனவே, அந்த பலூன்காரரின் குரலைக் கேட்டதுமே அவர் நடந்துகொண்டிருக்கும் தெருவிலிருந்தும், அக்கம் பக்கத்துத் தெருக்களிலிருந்தும் ஏழெட்டு வயது முதல் பதினான்கு, பதினாறு வயது வரையிலும் கூடப் பிள்ளைகள் அவரைச் சூழ்ந்துகொண்டு பின் தொடர ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒரு ஊர்வலம் போல் அவரைத் தொடர்ந்து செல்வார்கள். பலப் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே அவரோடு செல்வார்கள். அவரும் தனக்குத் தெரிந்த பதில்கள், விவரங்களையெல்லாம் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறிக்கொண்டே வியாபாரத்தையும் கவனிப்பார். கையில் காசுள்ள பிள்ளைகள், பலூன் வாங்குவார்கள்.  சில பெரிய பிள்ளைகள் அப்படி பலூன்களை வாங்கி காசில்லாத சிறிய பிள்ளைகள் எவருக்கேனும் அவற்றைத் தந்து மகிழ்வார்கள். ஓரிரு மணி நேரங்கள் அலைந்து திரிந்து விற்ற பிறகு அந்தத் தெருக்களின் மையப்புள்ளியாய் அமைந்திருக்கும் ஒரு ஆலமர நிழலில் பலூன்காரர் அமர்ந்து கொள்ள, பிள்ளைகளும் அவரைச் சுற்றி அமர்ந்து கொள்வர். அவர்களில் ஒருவன் அல்லது ஒருத்தி ஓடிச் சென்று அருகிலிருக்கும் வீட்டிலிருந்து சொம்பு நிறைய தண்ணீரோ, நீர் மோரோ வாங்கிக் கொண்டு வந்து அவரிடம் தருவான். 

தாகம் தீர அவர் அதைக் குடிப்பதைப் பார்த்துப் பிள்ளை களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.  சில சமயங்களில் பலூன்காரர் அரிசிப்பொரி, வேர்க் கடலை, பட்டாணி என்று ஏதாவது கொண்டு வருவார்.  அதை அந்தக் குழந்தைகளில் சற்றே பெரியவனாக, பெரியவளாக இருப்பவர்களிடம் கொடுத்து மற்ற குழந்தைகளுக்குச் சரிசமமாகப் பங்கிட்டுத் தரச் சொல்வார்.  சில சமயங்களில் விற்காமல் தங்கிவிட்ட பலூன்களை ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு என்று அவரே பங்கிட்டுத் தருவார்.  பட்டாணியோ, பலூனோ எத்தனை குறைவான அளவேயானாலும் அந்த மனிதர் மேல் கொண்டிருந்த அன்பில் பிள்ளைகள் அதை அரிய சொத்து போல் இருகைகளையும் விரித்து வாங்கிக் கொள்வார்கள். பிறகு அவர்களுடைய கலந்துரையாடல் அல்லது கேள்வி - பதில் அமர்வு ஆரம்பமாகும்.

அன்றும் அப்படித்தான் ஆரம்பானது.  எல்லாப் பிள்ளைகள் கைகளிலும் இரண்டிரண்டு பலூன்கள் இருந்தன.  அந்த பலூன்களை அந்தச் சிறு வியாபாரி அவர்களுக்குத் தரவில்லை.  மேலும் பலூன்கள் மட்டுமல்லாமல் அந்தக் குழந்தைகளின் சின்னஞ் சிறு தலைகளிலெல்லாம் வண்ண வண்ணக் காகிதத்திலும், அட்டையிலும், ஜிகினாத் தாள் களிலும் செய்யப்பட்ட கிரீடம் பொருத்தியிருந்தது.  அதை அணிந்திருந்த குழந்தைகள் முகங்களில் பொலிவும், பெருமிதமும் அழுத்தமாகப் படர்ந் திருந்தன.  அவ்வப்போது கையால் கிரீடத்தைத் தொட்டுப் பார்த்தபடி, நீவி விட்டபடி, சரி செய்த படி புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள் பிள்ளைகள்.  குழந்தைகளின் சிரிப்பைக் கண்டு நிறைவாக இருந்தது பலூன்காரருக்கு.  அந்தக் குழந்தைகள் எல்லோரையும் கனிவாகப் பார்த்தபடி, “எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்,” என்று தனக்குத் தானே கூறிக் கொள்வதாய் மெல்லிய குரலில் முனகினர்.

அதைக் கேட்டுக் குழந்தைகள் ஆரவாரமாகக் குதித்துக் கூச்சலிட்டுக் கைதட்டினார்கள்.  பலூன் ஐயா இதையே தான் அவர்களும் கூறினார்கள்.

எவர்கள்?”

இன்று பள்ளிக்கு வந்து இவற்றையெல்லாம் எங்களுக்கு வழங்கினர்களே.  தேர்தலுக்காக பள்ளிப் பிள்ளைகளை வீடுவீடாகச் சென்று கொள்கைப் பரப்புத் திட்டப் பதிவைத் தர வைக்க வேண்டுமென்று அனுமதி கேட்டு எங்கள் தலைமையாசிரியரிடம் பேசிய பிறகு ஒவ்வொரு வகுப்பாக வந்து இந்த பலூன்களையும் அட்டைக் கிரீடங்களையும் மாணாக்கர்களிடம் விநியோகித்தார்கள்.

ஒரு சிறுவன் ஆர்வமாகச் சொல்ல அவன் வகுப்புத் தோழி தொடர்ந்தாள்.

இந்தக் கிரீடத்தை அணிந்துகொண்டு, மன்னர் களாகவும், ராணிகளாகவும் நாங்கள் நகர்வலம் வர வேண்டும்.  ஊரும், நாடும் நலம் பெறுவதற்கான, வளம் பெறுவதற்கான நல்ல வாசகங்களை நாங்களே எங்கள் பலூன்களில் உத்தரவுகளாக எழுதி ஒட்டிக் கொண்டு வர வேண்டும்.  அதற்காகத் தான் ஆளுக்கு இரண்டு பலூன்கள் தந்திருக்கிறார்கள்

அப்படியா? சரி.  அது தான் ஏற்கனவே உங்களுக்கு பலூன்கள் கிடைத்தாயிற்றே.  பின், ஏன் என்னிடம் வந்திருக்கிறீர்கள்?”

பலூன்காரர் சிரித்துக்கொண்டேதான் கேட்டார்.  என்றாலும், குழந்தைகள் முகம் வாடி விட்டது.

ஒரு சிறுமி கோபமும், வருத்தமுமாய் அவரை நெருங்கி வந்து கேட்டாள்.  உங்களைப் பார்க்க வருவது பலூனுக்கு மட்டும்தானா? எங்கள் மீது என்றும் அன்பு வைத்திருக்கிறீர்கள் என்ற காரணத் தினால் தானே... எப்பொழுதும் எங்கள் மீது அன்பு வைத்திருப்பவரையும் ஏதோ ஒரு நாள், அதுவும் தேவைப்பட்ட நேரத்தில் மட்டும் எங்கள் மீது அன்பு காட்டுபவரையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத அளவு நாங்களொன்றும் பலூனுக்காகப் பல்லிளிப்பவர்கள் அல்ல.

அந்தச் சிறுமியின் ஆதங்கத்தில் விளைந்த ஆத்திரத்தைக் கண்டு பலூன்காரர் முகத்தில் நெகிழ்ச்சி தோன்றியது.  அவளுடைய வருத்தத்தைப் போக்க வேடிக்கையாகக் கேட்டார்.  ஆக, கிரீடங்கள் அணிந்துகொண்டிருக்கிறீர்கள்.  எனவே நீங்கள் எல்லாம் மன்னர்கள், ராணிகள்... அப்படித் தானே...?!”

இப்பொழுது பின்வரிசையிலிருந்து சற்றே பெரியவனாகக் காட்சியளித்த ஒரு மாணவன் வேகமாக முன்னோக்கி வந்தான்.

அதெப்படி ஐயா? கிரீடம் அணிந்துவிட்டால் மட்டும் நான் மன்னனாகிவிட முடியும், என்ன? எனக்கு அரியணை வேண்டும், செங்கோல் வேண்டும், அரசவை வேண்டும், சாமரர்கள் வேண்டும்...

மூச்சுவிட அவன் நிறுத்தியவுடன் இன்னொருவன் தொடர்ந்தான்.  மந்திரிகள் வேண்டும், படை வீரர்கள் வேண்டும், தளபதிகள் வேண்டும்... படைக் கலன்கள் வேண்டும்...

இன்னொருத்தி தொடர்ந்தாள்.  மிக முக்கிய மாக சாம்ராஜ்யம் வேண்டும், அதிகாரம் வேண்டும், எதிரிகள் வேண்டும்...  குடிமக்கள் வேண்டும்...

இவையெல்லாம் இருந்துவிட்டால் நீங்கள் மன்னர்களாகவும், ராணிகளாகவும் ஆகி விடுவீர்கள்! அப்படித்தானே?” - பலூன்காரர் குறுஞ்சிரிப்போடு கேட்டார்.

ஆனால், அவர் கேட்ட விதமே பட்டியலிடப் பட்ட விஷயங்களின் போதாமையைப் பிள்ளை களுக்கு உணர்த்திவிட்டன.

ஹா, மிக முக்கியமான ஒன்றை நாம் மறந்து விட்டோம்,” என்று ஒரு பையன் தன் தலையில் லேசாகத் தட்டிக் கொண்டு தன் ஞாபக மறதிக்காய் தன்னைத்தானே கடிந்து கொண்டவனாய்  உரக்கக் கூவினான்.  நாட்டை வளமாக வைத்திருப்பவரே, குடிமக்களை அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, கல்வி - கேள்வியில் சிறந்தவராய் அவர்களை வளர்ச்சிப் போக்கில் வழி நடத்து பவரே ஆளத் தகுதி வாய்ந்த மன்னர்.

குடிமக்களுக்குப் பெற்றோராய், புரவலராய், நல்ல நண்பராய், காட்சிக்கு எளியராய், கடுஞ் சொல் அற்றவராய் இருப்பவரே சிறந்த மன்னர்.

பசி, பட்டினி, பஞ்சம், சுரண்டல், பாது காப்பின்மை, கலவரம், குரூரம், வன்முறை ஆகிய பலவற்றிலிருந்தும் தன் குடிமக்களைக் காத்திருப் பவரே சிறந்த அரசரும், அரசியுமாவர்.

குழந்தைகள் அத்தனை ஆர்வமாய்க் கூறியதைக் கேட்டு பலூன்காரரின் முகம் பூரித்தது.

இப்பொழுது இன்னொரு சிறுவன் கேட்டான்.  ஐயா, எங்கள் பள்ளியைக் கட்டியவரின் கட்சிக் காரர்கள்தான் இன்று அவர் சார்பில் எங்கள் தலைமையாசிரியரை வந்து பார்த்து இந்தக்

கிரீடங்களையும், பலூன்களையும் விநியோகித்து நாளை மன்னர்களாக எங்களைப் பாவித்து நாடு வளம் பெறத் தேவையான கட்டளை வாசகங்களை, உத்தரவுகளாக அவரவர் பலூன்களில் பலூனுக் கொன்று என்ற அளவில் எழுதிவரச் சொல்லி யிருக்கிறார்கள்.  ஆனால், அவர்களையும் கண்டித்து நாங்கள் எழுதினால் பொறுத்துக்கொள்வார்களா?”

அந்தச் சிறுவனின் அறிவு பூர்வமான கேள்வியைக் கேட்டு பலூன்காரர் அவன் தலையில் அன்போடு வருடியவாறே இவ்வாறு கூறினார்.

திறமையான மன்னர்கள் மக்களுக்கு நல்லதே கூறுவார்கள்.  சமூகத்திற்கு நன்மை பயக்கும் உத்தரவுகளை சுயநலம் கருதியோ, அரசவையில் உள்ள, குடிமக்கள் மத்தியில் உள்ள யாருக்கேனும் பயந்தோ எடுத்துச் சொல்லாமல் இருக்கமாட்டார்கள்.  எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை நீதி நேர்மை தவறாத, செங்கோல் வழுவாத மன்னராக, ராணியாகப் பாவித்து உங்கள் குடிகள் மீது உண்மையான அக்கறையோடு, யார் என்ன சொல் வார்களோ என்ற பயமின்றி உங்களுடைய உத்தரவு களை அவரவர் பலூன்களில் எழுதிக்கொண்டு நாளை ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்.  உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மறுநாள் தத்தம் பலூன்களில் எழுதி ஒட்டப் பட்ட வாசகங்களோடு வந்து நின்ற பிள்ளைகளில் பலருடைய வாசகங்கள் அவர்களுடைய பெற்றோர் களால், வீட்டுப் பெரியவர்களால், வகுப்பாசிரியர் களால் வழக்கமான பழமொழிகளும், சொல் வழக்குகளுமாக அமைந்திருந்தன.

மாதிரிக்கு இரண்டு:

மன்னர் நாமே; ஆள்வோம் நலமே!

அரசன் எவ்வழி - குடிகள் அவ்வழி!

பலூன்காரரோடு பேசிய பிள்ளைகளின் வாசகங்கள் மட்டும் வித்தியாசமாகத் தெரிந்தன.  அந்தப் பிள்ளைகளை, அவர்களின் வாசகங்களை ஊர்வலத்தில் இடம்பெற அனுமதிப்பதா, வேண்டாமா என்று பள்ளிப் பொறுப்பாளர்களிடையே கார சாரமான விவாதம் நடந்துகொண்டிருந்தது.  அந்த வாசகங்களில் சில இங்கே தரப்பட்டுள்ளன.

1. அட்டைக் கிரீடம் எமக்கு; ஆயிரங்கோடி பெறும் அணிமகுடம் உமக்கா?

2. மக்களிடம் மெய் அக்கறை.  அதுவே அரச முத்திரை.

3. மக்கள் மன்னர்களாகலாம்; மந்தைகளாகலாகாது.

4. மக்களைத் தட்டிக் கேட்கலாம் மன்னர், வெட்டிச் சாய்க்கலாகுமோ?

5. எமக்கு உணவளித்தல் உம் கடமை; அதற்காய் உம்மை நீரே பாராட்டுதல் மடமை.

6. அரையடி குடிசைக்குள் என்னை அரசாளச் செய்து அடிவானம் வரை நீளுகின்றன உம் எல்லைகள்.

7. நாளைய மன்னர்கள் நாங்கள் என்கிறீர்.  இன்றேன் எம்மை மதிப்பழக்கிறீர்?

8. மன்னராயிருத்தல் பெருமை பீற்றிக் கொள்ள அல்ல.  மக்களைப் பேணும் மாபெரும் பொறுப்பேற்றுக் கொள்ள.

9. கொளுத்தும் வெயிலில் எங்கள் வீதி ஊர்வலம்; குழந்தைத் தொழிலாளர் கொடுமையை ஒழிப்போம்!

Pin It