எலிகளின்
சுரண்டல்கள் சுதந்திரமானவை!

இப்போதெல்லாம் தேங்காய் சில்லுகளைத் தேடி
எங்களூர் எலிகள் போவதேயில்லை
தப்பித் தவறி பொறிக்குள் புகுந்துவிட்டாலும்
அதன் முன் கம்பிகளைக் கடித்துக் குதறி
வெளியேறிவிடும் சாமர்த்தியமும்
அவற்றுக்கு உண்டு

இருட்டு வந்தால் இன்பமாய் அலைவதும்
வெளிச்சம் வந்தால்
குளிர்பதனப் பெட்டிக்குப் பின்
புகுந்து கொள்ளவும் அவற்றால் முடிகிறது

அதன் அட்டகாசம் அதிகம்...
அபிதான சிந்தாமணியைக் கரும்பிக்
குதறியிருக்கிறது காகிதக் குப்பையாக...

பொறியில் மாட்டிய எலியை
இரும்பு வாளித் தண்ணீரில்
மூழ்கடித்துக் கொன்ற மகத்தான
மான்மியம் அப்பாவினுடையது

வாய் கட்டிய கோணிக்குள்
பொறியின் மரக்கதவைத் திறந்துவிட்டு
விறகுக் கட்டையால்
எலியை அடித்துக் கொல்வார்
பட்டுக்கோட்டை மாமா...

சுரண்டித் தின்னும் எலிகளுக்கு மத்தியில்
இற்றுப்போன மரச்சட்டங்களால் ஆன
எலிப்பொறி மட்டும் என்ன செய்துவிட முடியும்?

மாற்றுக்காய்
மருந்து வாங்கி வைத்தாலும்
தின்று செரித்துவிட்டு
மறுநாளே அட்டகாசம் செய்கிறது...

பூனைகள் புறமுதுகிட்டு ஓடுகிற வரைக்கும்
எலிகள்தானே எஜமானர்கள்!

என்ன செய்ய? எரிச்சலிருந்தாலும்
எலிகளோடு வாழப் பழகிக்
கொள்ள வேண்டியதுதான்!

- முனைவர் ச.மகாதேவன்

Pin It