அம்முவுக்கு தற்போது எழுபது
வயதாகி விட்டது.
அவள் தன் ஒற்றை நாயுடன்
தனியே வசிக்கிறாள்.
யாருமற்ற அவளது தெருவில்
கொஞ்சமாய் உதிர்ந்துகிடக்கின்றன
முன்பிருந்த மரத்தின் சருகுகள்.
எப்போதும் வாசற்கதவின் திறப்புச்சத்தத்திற்காக
காத்திருக்கிறாள்.
அவளறியா பொழுதுகளில் உள்நுழைகின்ற
சர்ப்பங்கள் அவளது வீட்டை
நகர்த்திக்கொண்டே இருக்கின்றன.
பெருநகரத்தின் வாசல் வரை நகர்ந்துவிட்ட
வீட்டினுள் நீண்ட மௌனத்தில்
உறைந்திருக்கிறாள்.
அடர்ந்த அந்தியொன்றில் தன்னுடல்
சர்ப்பத்தை போன்றிருப்பதை உணர்கிறாள்.
அப்போது அவளது நாய் இறந்துகிடந்தது.
தவழ்ந்து தவழ்ந்து வெளியேறியவள்
நகரத்தில் சந்திக்கும் முதல் மனிதன்
மீது உமிழ்கிறாள்.
அன்றிரவு அம்மு தன் நாயுடன்
தோளில் வீடொன்றை சுமந்து சென்றதை
வியந்து பார்த்தன
பெருநகர சர்ப்பங்கள்.

- நிலாரசிகன்

Pin It