ஆவணம் 1

காமிக்ஸ§க்குச் சித்திரத்தின் தரம் மிக முக்கியம். கதை என்னதான் விறுவிறுப்பாக இருந் தாலும், artwork  சரியில்லை என்றால் அதற்கு மதிப்பு குறைவுதான். 

நாம் ஓவியத்திற்குக் கொடுக்கும் மதிப்பை ஓவியருக்குக் கொடுக்கிறோமா என்று கேட்டால் அது சந்தேகமே.  தமிழில் எழுத்தாளர்கள் அறியப்படும் அளவிற்கு ஓவியர்கள் அறியப்படவில்லை.

பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதத்தை எழுதியது கல்கி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தத் தொடர்களுக்கு அற்புதச் சித்திரங்கள் வரைந்த மணியம், வினு, மணியம் செல்வன் மற்றும் பத்மவாசனை வாசகர்கள் ஞாபகம் வைத்திருப்பதில்லை.  பதிப்பகங்களும் தொடர்கதைகளைப் புத்தகங்களாக வெளியிடும்போது ஒவ்வொரு வாரமும் வந்த அழகிய சித்திரங்களை ஒதுக்கித் தள்ளிவிடுகின்றன.

இந்தநிலை ஆங்கிலத்தில் இல்லை. Secret Agent Corrigan  என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது ஓவியர் Al Willamson  தான். பிறகுதான் கதை எழுதிய Archie Goodwin. அது போலவே Cisco Kid தொடருக்கு வரைந்த Jose Luis Salinas, கதை எழுதிய Rod reedஐ விட அதிகம் மதிக்கப் படுகிறார். Hermann [Bernard Prince], Jean Giraud [Blueberry] என்று எழுத்தாளர்களை மிஞ்சிய ஓவியர்கள் பலரைச் சொல்லலாம்.

ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஓவியர்களுக்குச் சவால்விடும் அளவிற்குத் தமிழிலும் சிறந்த ஓவியர்கள் இருக்கிறார்கள்.   ஓவிய நுணுக்கங்கள் தெரியாவிட்டாலும், ஒரு ரசிகனின் பார்வையில் அவர்களைப் பற்றி சில  வரிகள்.

1. செல்லம்:

வாண்டுமாமா மற்றும் முல்லை தங்கராசனின் பல கதைகளுக்கு  இவர்தான் ஓவியர். இவரது ஓவியங்கள் நம் உற்றார், உறவினரை ஞாபகப்படுத்துவது போலிருக்கும்.  உதாரணத்திற்கு பலே பாலு மற்றும் சமத்துச் சாரு.

இவர்  வரைந்த சித்திரக்கதைகள்:

பட்பட் பட்டாபி (கல்கி), கனவா நிஜமா (கல்கி), ஓம், க்ரீம், க்ரைம் (கல்கி), வீடியோ வரை காத்திரு (கல்கி), ராஜ யோகம் (கல்கி), வேலைக்குப் போகும் பெண் (கல்கி), நந்து சுந்து மந்து (கோகுலம்), பலே பாலு (கோகுலம்), பலே பாலு, பாட்டில் பூதம் (கோகுலம்), மர்ம மாளிகையில் பலே பாலு (கோகுலம்), சமத்துச்சாரு (கோகுலம்), ரத்னபுரி ரகசியம் (கோகுலம்), சிறுத்தைச் சிறுவன் (பூந்தளிர்), புலி வளர்த்த பிள்ளை (பூந்தளிர்), குஷிவாலி ஸ்கூலில் ஹரீஷ் (பூந்தளிர்), நடராஜுவின் கண்டுபிடிப்புகள் (குமுதம்), மியாவ் மீனா (குமுதம்), பிளான் பட்டாபி (குமுதம்), கடல் கன்னி (குமுதம்), குண்டு பூபதி (குமுதம்-விமலா என்ற பெயரில்), அண்ணா சாமி (தினமணிக் கதிர்), ஹலோ இந்திரஜித் (தினமணிக் கதிர்), ஜாக்பாட் ஹவுஸ் (தினமணிக் கதிர்), கடற்கரை பங்களா (தினமணிக் கதிர்), செவ்வாய் தேசம் (குங்குமம்), மஞ்சம் முழுக்கத் தங்கம் (சாவி), மதி காமிக்ஸ் உள்ளிட்ட முல்லை தங்கராசனின் பல சித்திரக் கதைகள்.

2.  ராமு:

நகைச்சுவை சித்திரத் தொடர்களில் இவர் வரையும் கதாபாத்திரங்களைப் பார்த்தாலே சிரிப்பு வரும்.  உதாரணம் சிதம்பர ரகசியம். மர்மத் தொடர்களில் பயங்கரத்தை அழகாகக் கொண்டுவருவார்.  கல்கண்டு இதழில் ஓவியர் வர்ணம் அவர்களுக்குப் பிறகு இவர்தான் ஆஸ்தான ஓவியர்.

இவர்  வரைந்த சித்திரக் கதைகள்:

சிதம்பர ரகசியம் (கல்கி), இனி ஒரு சதி (கல்கி), ஆசைகள் மடிவதில்லை (கல்கி-சூர்யா என்ற பெயரில்), மூன்று மந்திரவாதிகள் (கல்கி), பாடுவோம் பாப் மியூசிக் (கல்கி), கட்சி மாறும் பட்சி (கல்கி), ஒற்றர் ஜாக்கிரதை (கல்கி), ஜாங்கோ ஜக்கு (கல்கி), காணாமல் போன அழகி (குமுதம்), கண்ணை இழந்தாலும் (குமுதம்-திலீப் என்ற பெயரில்), ஒரு ட்யூன், ஒரு ஸ்பூன், ஒரு கொலை (குமுதம்), கொலை வருகிறது (குமுதம்), நீயா (தினமணி கதிர்), வந்தனா எங்கே (தினமணி கதிர்).

3.  ஜெயராஜ்:

கதாபாத்திரங்களை அழகாக வரைய இவரை அடித்துக் கொள்ள யாருமில்லை. சுஜாதாவின் கணேஷ்-வசந்த் மற்றும் பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி-சீதாப்பாட்டிக்கு உருவம் கொடுத்தது இவர்தான்.

இவர் வரைந்த  சித்திரக் கதைகள்:

அப்புசாமியின் கலர் டிவி (குமுதம்), காதல் காவலர் அப்புசாமி (குமுதம்), அவள் எங்கே (குமுதம்), நடு வானத்தில் (குமுதம்), இரட்டை வால் இரண்டு (குமுதம்), மீரா (தினமணிக் கதிர்), இரவில் ஒரு குரல் (தினமணிக் கதிர்), தசாவதாரம் (ஆனந்த விகடன்), திக்குத் தெரியாத வீட்டில் (ஆனந்த விகடன்), நட்சத்திரமில்லா இரவு (சாவி)

4. வினு:

கல்கி வார இதழில் பல தொடர்களுக்கு இவர்தான் ஓவியர். ராஜாஜி (ராமாயணம், மகாபாரதம்), கல்கி, நா.பார்த்தசாரதி, அகிலன், சோமு, ர.சு. நல்ல பெருமாள் எனப் பல எழுத்துலகப் பிரம்மாக்களின் கதைகளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு வரைந்திருக்கின்றார்.

இவர் வரைந்த சித்திரக் கதைகள்:

ஆளப் பிறந்தவன் (கல்கி), மரகதச் சிலை (கல்கி), 007 பாலு (கல்கி), சரணம் கணேசா (கல்கி), வெற்றிவேல் வீரவேல் (கல்கி), வீர விஜயன் (கல்கி), நரி வேட்டை (கல்கி), ஜெய் ஹனுமான் (கோகுலம்), பூதத் தீவு (கோகுலம்), ஆனந்தி எழுதிய பல சித்திரக் கதைகள் (கோகுலம்)

5. வர்ணம்:

குமுதத்தில் ஆரம்பகால சித்திரத் தொடர்களில் இவரது திறமையைக்  காணலாம். தமிழ்வாணனின் சங்கர்லாலுக்கு இவர்தான் உருவம் கொடுத்தார்.

இவர்  வரைந்த சித்திரக் கதைகள்:

போதுமே சோதனை (குமுதம்), புதிருக்குப் பெயர் ரஞ்சனா (குமுதம்), காதல் அழைக்கிறது (குமுதம்), சேற்றின் சிரிப்பு (குமுதம்), ஆறாவது விரல் (குமுதம்), தங்கச் சாவி (குமுதம்), பதினெட்டாம் நாள் (குமுதம்), கண்ணாடி மாளிகை (குமுதம்)

மாயா, விஜயா, ரமணி, மணியம் செல்வன், மருது, அரஸ் போன்றோரும் சித்திரத் தொடர்களுக்கு அற்புத ஓவியங்கள் வரைந்திருக்கின்றனர்.

6. ரமணி வரைந்த சித்திரக் கதைகள்:

பவழத் தீவு (கல்கி), ஓநாய்க் கோட்டை (கல்கி), அவள் எங்கே (கல்கி), டயல் ஒன் நாட் நாட் (கல்கி), சிலையைத் தேடி (கல்கி), வீராதி வீரன் (கல்கி), ஷீலாவைக் காணோம் (கோகுலம்), கொலையாளி நஞ்சப்பா (தினமணிக் கதிர்).

7. மாயா வரைந்த சித்திரக் கதைகள்:

ஓடும் டாக்சியிலே (ஆனந்த விகடன்), பார்வை ஒன்றே போதுமே (ஆனந்த விகடன்), வசந்தி என் காதலி (ஆனந்த விகடன்),  டிடெக்டிவ் ரகுநாத் (ஆனந்த விகடன்), பொன்மகள் பூமா (ஆனந்த விகடன்), பொன்னின் நிழல்(ஆனந்த விகடன்-கோமதி என்ற பெயரில்), ஜமீன்தார் மகன் (ஆனந்த விகடன்)

8. புஜ்ஜாய் வரைந்த சித்திரக் கதைகள்:

பழைய பங்களா (ஆனந்த விகடன்), ஒற்றன் 4ஒ-1 (கல்கி), நான் அவனில்லை (தினமணிக் கதிர்), பைரவன் (தினமணிக் கதிர்), விஷமக் கொடுக்கு ரங்கு (தினமணிக் கதிர்), தங்கப் பட்டிணம்   உள்ளிட்ட பல சித்திரக்கதைகள் (ரத்னபாலா)

9. விஜயா வரைந்த சித்திரக் கதைகள்:

அன்பே அகிலா (கல்கி), 007 பாலு (கல்கி), அம்புலிக்கு அப்பால் (கல்கி)

10. அரஸ் வரைந்த சித்திரக் கதைகள்:

கவுண்டமணி - செந்தில் (குங்குமம்), ரஜினி (குங்குமம்), ஒரு ராத்திரி ஒரு காதலி (சாவி), கிஷ்கிந்தா காண்டம் (‘சாவி)

11. பாலாஜி வரைந்த சித்திரக் கதைகள்:

சூப்பர் தும்பி (தினமணிக் கதிர்), புலிகள் (தினமணிக் கதிர்)

12. மணியம் செல்வன்: அறிவின் விலை ஒரு கோடி (கல்கி)

13. கோபுலு:    டாக்டர் கீதா (ஆனந்த விகடன்)

14. சாரதி:    இன்ஸ்பெக்டர் ராஜவேல் (ஆனந்த விகடன்)

15. லதா:   மேலே இருப்பது சொர்க்கம் (குமுதம்)

16. மருது:   நோவா (குமுதம்)

17. சிம்பு தேவன்:   கிமுவில் சோமு (ஆனந்த விகடன்)

18. சசி:   கடலோர கொலைகள் (கல்கி)

19. கரோ:  பொன்னர் சங்கர் (குங்குமம்)

20. மகேஷ்:   அம்மாவைத் தேடி (கோகுலம்)

குறிப்பு: சித்திரத் தொடர்களில் கல்பனா, மணியம், மாருதி, நி.ரி. மூர்த்தி முதலான தலை சிறந்த ஓவியர்களின் கைவண்ணத் தைப் பார்க்க முடியவில்லை.

இதில் அனைத்துக் கதைகளும் பட்டியலிடப் பட்டிருக்கின் றன என்று சொல்ல முடியாது. புத்தகப் புதை யலை மேலும் மேலும் தேடி எடுக்க ஆசைதான்.  ஓவியர்கள் மறைந்தாலும், அவர்கள் வரைந்த ஓவியங்கள் மறையாது! ஓவியங்களை நாம் மறந்தாலும் ஓவியர்களை மறக்கக் கூடாது!

Comments

1 comment

1
Raja Rajamani
dear sir, i too used to read vikatan and used to look forward to doctor geetha and vaathiaar vedapuri. do you by any chance know where we can get copies of it. i am willing to buy or pay to xerox a copy. i tried vikatan and they told me it was too old and they do not have back copies. thank you. rajamani ([email protected])

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.