பெரியார் கொள்கைகளை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்த கழகத்தின் மூத்த தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடைபெற்றுக் கொண்டார். அவரது விருப்பப்படி அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள இரங்கல் செய்தி:

mettupalayam ramachandranதிராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் (83) அவர்கள் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 17.05.26 ஞாயிறு காலை 04.30 மணியளவில் காலமானார்.

தோழர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்கள் மூத்த பெரியார் தொண்டர் ஆவார்.தந்தை பெரியாரை நேரில் சந்தித்தவர்.தன் வாழ்நாள் முழுவதும் பெரியார் கொள்கைகளை பரப்பி அதனை தன் சொந்த வாழ்விலும் கடைபிடித்து செயல்படுத்திய கொள்கைப் பற்றாளர் ஆவார். மிகவும் துணிச்சலாக செயல்படக்கூடியவர். மிகவும் சுறுசுறுப்பானவர்.வயதான நிலையிலும் ஒரு இளைஞரை போல பெரியார் பணி செய்வதில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் உடையவர்.அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் தோழமை உணர்வு பாராட்டி அரவணைத்து அழைத்துச் சென்றவர். தன்னை சந்திக்க வருபவர்களிடமெல்லாம் பெரியார் குறித்தும், திராவிடர் இயக்க வரலாற்றுச் சம்பவங்களையும் செய்திகளையும் நினைவூட்டி இடையறாது பேசி வந்தவர்.

மேட்டுப்பாளையத்தில் மதவாத சக்திகளுக்கு எதிரான பரப்புரையில் தாக்குதலை நேர் கொண்டு சந்தித்து அவர்களின் இடையூறை முறியடித்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டவர். இப்படியான ஆற்றல்மிகு செயல்வீரரை இழந்திருப்பது திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு பேரிழப்பு ஆகும்.தோழர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழரின் இன இழிவு ஒழிப்புப் பணியை தொடர்ந்து தொய்வின்றி முன்னெடுத்துச் செல்வோம்.அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான இறுதி மரியாதை ஆகும்.

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் முடிவடைந்து விட்டார் என்ற செய்தி என்னை மிகவும் கலங்க செய்துவிட்டது. மிகுந்த மன அழுத்தத்துடன் இந்த பதிவை நான் வெளியிடுகிறேன்.

திராவிடர் கழக காலத்தில் இருந்து பெரியார் கொள்கையை தனது வாழ்க்கையாக சுமந்து கொண்டு பயணித்த தீவிர பெரியார் தொண்டர். என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் உறவு கொண்டவர்; மாதத்திற்கு இருமுறையாவது அலைபேசியில் அழைத்து என்னிடம் பேசுவது அவரது வழக்கம்; அந்த உரையாடல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும்; அத்தனையும் இயக்கத்தில் பழைய வரலாறுகள் தொடர்புடையதாகவே இருக்கும் பழைய நினைவுகளை அசைபோடுவதற்கு இயக்கத்தில் எனக்கு கிடைத்த ஒரே தோழர் அவராகவே இருந்தார்.

அவரோடு உரையாடி இயக்க வரலாறுகளை மலரும் நினைவுகளாக பேசுவதில் மிகுந்த மன ஆறுதலும் உற்சாகமும் இருவருக்குமே கிடைக்கும். இயக்கத்தின் பேச்சாளர்கள் திருவாரூர் தங்கராசு, திருச்சி செல்வேந்திரன் ஆகியோரோடு நெருக்கமாக பழகியவர்.

மன்னார்குடியில் பெரியார் நடத்திய தமிழ்நாடு விடுதலை மாநாட்டில் அவர் பங்கேற்றதை நினைவு கூறுவார். கடந்த கால பெரியார் இயக்க வரலாறுகளோடு பயணித்த பெருமைமிக்க பெரியார் தொண்டர்களின் மிச்சமாக அவர் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இருந்து வந்தார்.

பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தில் இந்த தீவிர பெரியாரியவாதி தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களோடு தன்னை தகவமைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தார். அண்மையில் அவரது மகனின் அகால மரணம் மிகப் பெரும் துயரம் அதில் கடுமையான உளப்பாதிப்புக்கு உள்ளானார். ஆனாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு கொள்கை உணர்வுகளே ஆறுதல்களை வழங்கியது. பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்தபோது மேட்டுப்பாளையத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்தார். கொள்கை எதிரிகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பணியாற்றினார். இந்து முன்னணிகளின் சலசலப்புகளை எதிர்கொண்டு மேட்டுப்பாளையத்தில் அவர் நடத்திய பொதுக்கூட்டத்தை இப்போதும் மறக்க முடியாது! மேட்டுப்பாளையத்தில் அனைத்துக் கட்சி தோழர்களாலும் மதிக்கப்பட்டவர். அவருக்கான நட்பு வட்டாரம் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். நிறைய நூல்களைப் படிப்பார் படித்துக் கொண்டிருக்கும் போது அது தொடர்பான கருத்துக்களை உடனே அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பகிர்ந்து கொள்வார்.

சேலத்தில் கழகம் நடத்திய மாநில மாநாட்டில் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கலந்து கொண்டார். எனக்கு இப்போது வயது 80; அவரது வயது 83. மாணவப் பருவத்தில் இருந்து இயக்க உணர்வோடு நான் வளர்ந்தவன். அந்த உணர்வுகளையும் வரலாறுகளையும் எனது வயதை ஒத்த அவரோடு பகிர்ந்து கொள்வதிலும் உரையாடுவதிலும் உற்சாகமும் மன அமைதியும் கிடைத்தது. இனி அந்த உணர்வுகள் இல்லாமல் போய்விட்டதே! என்று கவலைப்படுகிறேன் எனது புகழ் வணக்கத்தை கண்ணீரோடு அர்ப்பணிக்கிறேன்!.

கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

கோவை மாவட்டக் கழகத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் இன்று (17.05.2026) கோவை அரசு மருத்துவமனையில் மறைவுற்றார் என்ற செய்தி பெரும் துயர் கொள்ள செய்தது.

யாருக்கும் எந்த நிலையிலும் தன் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத கொள்கை வைரம் அவர். சிறியவராக இருந்தாலும் தந்தை பெரியார் போன்று வாங்க என மரியாதையாக அழைக்கும் பண்பு கொண்டவர். மன்னார்குடியில் பிறந்தாலும் தன் பெயருக்கு பின்னால் மேட்டுப்பாளையம் என்ற தான் வாழ்ந்த ஊரையே அடையாளமாக்கியவர் சாதாரண தோழர்களையும் மேடையில் பேச வைக்க மேடை போட்டு கொடுத்து அழகு பார்த்தவர். திராவிடர் இயக்கத் தலைவர்கள் அனைவரிடமும் பழகியவர்.

கழகம் சார்பில் பரப்புரைப் பயணம் அவர் பகுதிக்கு செல்லும் பொழுது எல்லாம் சிறப்பான ஏற்பாட்டை இளைஞர் போன்று செய்து முடிக்கும் கடமை தவறா பெரியார் தொண்டர். அகவை முதிர்வு காரணமாக மறைவுற்றாலும் ஏற்க மனமில்லை

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவரை அவரது இல்லத்தில் சந்தித்தபோது புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தந்தை பெரியாருடன் அய்யா இராமசந்திரன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பின்பகுதியில் இருக்குமாறு எடுங்கள் என்றார். எப்பொழுதும் கொள்கை பேசும் வேழம் தன் பரப்புரையை முடித்துக் கொண்டார். இனி என்று காண்போம் அய்யா இராமச்சந்திரனை! கொள்கை மாறா தலைவனை கொள்கைக்கு புறம்பான செயலின்றி அவர் கனவை நிறைவேற்றுவதே குடும்பத்தார் இயக்கத் தோழர்கள் அனைவரும் அவருக்குச் செய்யும் இறுதி வணக்கமாகும். கொள்கை மாவீரருக்கு புகழ் வணக்கம்!

அவரது மறைவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை 5.00 மணி அளவில் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இராமச்சந்திரன் உடலிற்கு புகழ் வணக்கம் செலுத்தினார்.

இராமச்சந்திரன் அவர்களின் விருப்பப்படி அவரின் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலோடு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு தோழர் இராமச்சந்திரன் அவர்களின் உடல் கொடையாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, கழக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராஜன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.

- பெ.மு. செய்தியாளர்