ஓர் இனத்தின் தாய் மண்ணைப் போலவே அம்மண்ணில் பாயும் ஆறுகளும், ஓடைகளும், ஏரி, குளம் போன்ற பிற நீர் நிலைகளும் அவ்வினத்தின் வரலாற்றோடும் பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்தவை ஆகும். வாங்கி விற்கும் வணிகப் பொருளாக இயற்கை வளங் களை முதலாளியம் மாற்றி அமைத்தது.

water_370இருந்தபோதிலும், தண்ணீர் என்பது நீண்ட காலம் தனிச் சொத்தாக மாறாமல் இருந்தது. அண்மைக் காலமாக தண்ணீரும் தனியார் மயமாகி வருகிறது. இப்போக்கின் உச்சமாக, தண்ணீரைத் தனியார் நிறுவனங்களின் உடைமை யாக மாற்றி விடும் கொள்கை அறிவிப்பை இந்திய அரசு இப்போது வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் நீர்வள அமைச்சகம் 31.1.2012 நாளிட்ட “தேசிய நீர் கொள்கை வரைவு 2012" (Draft  National Water Policy  2012) அறிவிக்கையை இந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தனது இணையத்தில் வெளியிட்டது. ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இக் கொள்கை வரைவின் மீது பொதுமக்கள் கருத்துக் கேட்டு சில நாளிதழ்களில் இந்திய அரசின் அறிவிப்பு வெளி யிடப்பட்டது. 29.02.2012க்குள் அரசுக்கு மின்னஞ்சல் வழியில் மக்கள் கருத்துகளை அனுப்ப வேண்டுமாம்.

அரசமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட தேசிய இன மொழிகளில் கூட இவ்வரைவு வெளியிடப்படவில்லை. கருத்துக் கேட்பு நடந்ததாக ஒரு நாடகத்தை தில்லி அரசு அரங்கேற்றுகிறது.

மக்களின் வாழ்க்கையில் தலைமுறை தலை முறையாக நீண்ட கால விளைவுகளை ஏற் படுத்தும் இக்கொள்கை வரைவை அனைத்துத் தேசிய இன மொழிகளிலும் வெளியிட்டு மாவட்டங்கள் தோறும் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தி விரிவான விவாதத்திற்குப் பிறகு உருவாக்குவதே சரியான சனநாயக முறையாக இருக்க முடியும். மாறாக எப்படியோ அவசர அவசரமாக இந்த “தேசிய நீர் கொள்கை 2012“ஐ அரசு அறிவிப்பாக வெளியிட்டுச் செயல்படுத்திவிட வேண்டும் என்பதில் தில்லி அரசு முனைப்பாக உள்ளது.

பொது வளம் (COMMON GOOD) என்ற நிலையில் உள்ள தண்ணீரைப் பொருளியல் வளம் (ECONOMIC GOOD) என மாற்றி வரையறுத்து, தண்ணீரை முற் றிலும் தனியார்மயமாக்குவதே இக் கொள்கை வரைவின் அடிப் படை நோக்கமாகும்.

தேசிய நீர்க் கொள்கை வரை வின் பத்தி 3.3 கீழ் வருமாறு கூறுகிறது.

“மனிதர்கள் உயிர் வாழ்வ தற்கும், சுற்றுச் சூழல் அமைப்பு கள் உயிர்ப்புடன் இருப் பதற்கும் தேவையான குறைந்த அளவு தண்ணீரைத் தவிர மற்ற தண்ணீ ரெல்லாம் பொரு ளியல் வளமாகப் பேணப்பட வேண்டும்”.

மக்கள் உயிர் வாழ்வதற்கும் சுற்றுச் சூழல் பாதுகாக்கப் படுவதற்கும் தேவையான குறைந்த பட்சத் தண்ணீர் அளவு என்ன என இக் கொள் கை வரையறுக்கவில்லை. இவ் வாறான நிலையில் ஆற்று நீரும் ஊற்று நீரும் மழை நீரும் முற்றிலும் தனியார் பெருங் குழுமங்களுக்கு வழங்கப்பட இக் கொள்கை வழிவகுக்கிறது.

மனிதர்களுக்கும், சுற்றுச் சூழல் தூய்மைக்கும் தேவை யான குறைந்தபட்ச நீர் வழங்கல் கூட தனியார் கம்பெனிகளின் வழியாகவே நடத்தப்பட வேண் டும் என இக் கொள்கை வரைவு வரையறுப்பதிலிருந்தே நீர் வளம் முழுவதும் வணிகச் சரக்காக மாற்றப்பட இருக்கிறது என்பது தெளிவாகும். இக் கொள்கை வரைவின் பத்தி 13.4 இதனை உறுதி செய்கிறது.

“தண்ணீர் தொடர்பான பணி களில் அரசின் பாத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிய மைக் கப்பட வேண்டும். மக்களுக்குத் தண்ணீர் வழங்கும் பணியைத் தமது அடிப்படைக் கடமையாக அரசு மேற் கொள்ளக் கூடாது. தண்ணீர் தொடர்பான அனைத் துப் பணிகளும் சமூகத்திற்கு அல்லது தனியார் துறைக்கு மாற்றப்பட வேண்டும். இதனை ஒழுங்கு படுத்துவது கட்டுப் படுத்துவது ஆகிய பணிகள் மட்டு மே அரசின் கடமையாக இருக்க வேண்டும்“ எனக் கூறுகிறது.

இவ்வாறு தனியார் துறை மூலம் நீர் வழங்கல் நடக்கும் போது அதனை மக்களுக்கான சேவையாகக் கருதக் கூடாது என இக்கொள்கை வரைவு நிபந்தனை விதிக்கிறது.

இக்கொள்கை வரைவின் பிரிவு 7, தண்ணீருக்கு விலை வைப்பது பற்றிப் பேசுகிறது. ஒரு குவளை தண்ணீர் கூட காசில்லாமல் வழங்கப்படக் கூடாது என இப்பிரிவு வலியுறுத்துகிறது. “முழுச் செலவையும் திரும்பப் பெறுவது” (FULL COST RECOVERY) என்ற கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும் எனவும் கூறுகிறது.

“மானிய விலையிலோ விலை யின்றியோ மின்சாரத்தையோ தண்ணீரையோ வழங்கும் தற் போதைய நிலை உடன டியாக முற்றிலும் கைவிடப்பட வேண் டும். மானிய விலையிலோ இலவச மாகவோ நீரையும் மின்சாரத் தையும் கொடுப்பது அவற்றை வீணடிப்பதற்கு வழி வகுக்கிறது“ என இக் கொள்கை வரைவின் பத்தி 7.5 அரசைக் கடிந்து கொள்கிறது.

காசுள்ளவர்க்கே தண்ணீர் என்ற நிலை வரப்போகிறது.

தண்ணீர்த் திட்டங்கள் வேளாண்மையையும் குடிநீர் வழங்கலையும் முதன்மை இலட்சியமாகக் கொள்ளக் கூடாது. மாறாக பல்நோக்குத் திட்டங்களாக நீர் மேலாண் மைத் திட்டங்கள் மறுவரை யறை ஆக வேண்டும் என தேசிய நீர்க் கொள்கை வரை வின் பத்தி 9.5 அரசுக்குக் கட்டளையிடுகிறது.

இதன் பொருள் பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு முதலாளிய நிறுவனங்கள் மற்றும் விண்மீன் கேளிக்கை விடுதிகள் போன்றவற்றிற்கு நீர் வழங்கலைக் கூடுதலாக்க வேண் டும் என்பதாகும்.

தண்ணீர் தூய்மைக் கேடுகள் குறித்து இக் கொள்கை வரைவு சொல்வதை வைத்தே அரசு எந்தப் பக்கம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள் ளலாம். நடப்பில் உள்ள 2002 ஆம் ஆண்டு தேசிய நீர்க் கொள் கையானது (National Water Policy  2002) தூய்மைக் கேடு செய்பவர் தூய்மையாக் கலுக்கான முழுச் செலவையும் ஏற்க வேண்டும் (Polluter Pays) என நிபந்தனை விதித்தது. ஆனால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ள தேசிய நீர் கொள்கையானது நீர் நிலைகளைச் சாக்கடையாக்கும் தொழில் நிறுவனங்களைக் காப் பாற்றுவதாக அமைந்துள்ளது.

தூய்மையைக் கெடுத்தவரே தூய்மையாக்க வேண்டும் என்ற பழைய நிபந்தனையைப் புதிய வரைவின் 6.3, 6.4 ஆகிய பத்திகள் தளர்த்திவிடுகின்றன. தூய்மையாக்கலுக்கும், தூய்மைக் கேடான நீரை மறு சுழற்சி செய்வதற்கும் ஊக்குவிப்பு வழங்கப்படும் என இப்பத்திகள் கூறுகின்றன. வலுவான ஒழுங்கு முறை விதிகள் கைவிடப்படும் நிலையில் இந்த ஊக்குவிப்பு என்பது தூய்மைக் கேடு செய் வதற்கான ஊக்குவிப்பாகவே அமையும்.

“தண்ணீர்“ என்பதை மாநில அதிகாரப் பட்டியலில் இருந்து அரசமைப்புச் சட்டத்தின் பொது அதிகாரப் பட்டிய லுக்கோ அல்லது இந்திய அரசின் அதிகாரத்திற்கோ கொண்டு செல்ல வேண்டும் என்றும், ஆறுகளை இந்திய அரசின் உடைமையாக்க வேண் டும் என்றும் இக் கொள்கை வரைவு கூறுகிறது.

இந்திய அரசு முன் வைத் துள்ள இந்த தேசிய நீர்க் கொள்கை மட்டுமின்றி தமிழ கத்தில் உள்ள பல்வேறு கட்சி களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருவதைப் பார்க்கி றோம். ஆறுகளைத் தேசிய மயமாக்குவது என்ற பெயரால் இந்திய அரசின் உடைமையாக் கிவிட்டால் மாநிலங்களின் நீர் உரிமை பறிக்கப்படும் ஆபத்து உண்டு.

குறிப்பாகத் தமிழ் நாட்டிற்கு இதனால் கடும் பாதிப்பு ஏற் படும். ஏற்கெனவே ஆற்று நீர் பங்கீட்டு இறுதி அதிகாரம் இந்திய அரசிடம் இருக்கும் போதே தமிழகத்திற்கு எதிராக இந்திய அரசு செயல்படுவதைக் கண்டு வருகிறோம். காவிரிச் சிக்கலிலும் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலிலும் நீதி மன்றத் தீர்ப்புகளைச் செயல் படுத்த வேண்டிய தனது சட்டக் கடமையைக் கைகழுவி விட்டு தமிழின எதிரிகளோடு இந்திய அரசு கைகோத்து நிற்பதைப் பார்க்கிறோம்.

இந்நிலையில் ஆற்றுநீர் முழு வதும் இந்திய அரசின் உடை மையானால் தமிழகத் திற்கு நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை. நீர் முற்றுகையில் முழுவதும் சிக்கி வறண்டு விட வேண்டியதுதான்.

இன்னொன்று, எந்த இயற் கை வளமும் மக்களின் பொது உரிமை என்ற நிலை யிலிருந்து அரசுடைமை என்று மாற்றப் பட்டால் அந்த வளம் தனியார் உடைமையாவதற்கு வழி திறந்து விடப்படுகிறது என்று பொருள். ஆற்று நீர் அரசுடைமை யானால் நாளைக்கு அது தனியாரிடம் விற்கப்படுவதற்கு அரசுக்கு அதிகாரம் வழங்கு வதாக அமையும்.

நீர் நிலைகளைப் பாது காக்கும் பொறுப்பு அரசிடம் இருக்கும் இன்றைய நிலையி லேயே தண்ணீர் தனியார் மயமாகி வருவது அதிகரித் துள்ளது. இப்போக்கை விரைவு படுத்தித் தண்ணீரை முற்றிலும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்ப டைப்பதையே தேசிய நீர் கொள்கை நோக்கமாகக் கொண் டுள்ளது.

இந்திய அரசு முன் வைத் துள்ள 2012 கொள்கை வரைவு உண்மையில் இந்திய ஆட்சியாளர்களின் சிந்தனை யில் உதித்த ஒன்று அல்ல.

இக் கொள்கை வரைவு தண்ணீர் வள ஆதிக்கத்தை விரும்பும் பன்னாட்டு பெரு நிறுவனங்களின் நிழல் ஆட் களால் உருவாக்கப் பட்ட கொள்கை வரைவு ஆகும்.

“தேசிய நீர் ஆதாரத் திட்ட வரைவு ஆய்வு - சீர்திருத்தத் திற்கான திசை வழிகள்“ (National Water Resources Frame Work Study-Road Maps for Reforms) என்ற அறிக்கையை உலக வங்கியின் கீழ் இயங்கும் ”நீர் ஆதாரக் குழு 2030” (2030 Water Resources Group) என்ற அமைப்பு இந்திய அரசின் திட்டக் குழுவிற்கு வழங்கியது. நீர் ஆதாரக் குழு 2030 என்ற இந்த ஆய்வு அமைப்புக்கு நிதி வழங்குபவை பெப்சி, கோக், கார்கில், யூனிலிவர், மெக்கன்சி ஆகிய பன்னாட்டுப் பெருங்குழுமங்கள் ஆகும்.

கடந்த 2011 அக்டோபர் 11 அன்று இந்தியத் திட்டக் குழுவிற்கு மேற்சொன்ன நீர் ஆதாரக் குழு அளித்த “திசை வழி அறிக்கை“தான் சொல் மாறாமல் அப்படியே “தேசிய நீர்க் கொள்கை 2012“ என்ற தலைப்பில் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

கோக், பெப்சி, கார்கில் போன்ற பன்னாட்டுக் குழு மங்கள் தண்ணீர் வணிகத்திலும் வேளாண்மை மற்றும் உணவுப் பொருள் வணிகத்திலும் கோ லோச்சி வருபவை. அவர்களது நிதி ஆதரவு பெற்ற ஆய்வுக் குழு அறிக்கை அப்படியே இந்திய அரசின் கொள்கை வரைவாக வெளி வந்திருப்ப திலிருந்தே இக்குழுமங்க ளுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் இடையில் உள்ள ஒட்டுண்ணி வலைப் பின்னல் தெளிவாகும்.

இந்த ஆட்சியாளர்களின் கைகளில் உள்ள நீர் ஒழுங்கு முறை அதிகாரமும் இக்குழு மங்களின் வணிகக் கொள் கைக்கு துணை செய்வதாகவே அமையும் என்பது உறுதி.

இந்திய அரசின் “தேசிய நீர் கொள்கை 2012“ சொல்லுக்குச் சொல் எதிர்க்கப்பட வேண்டிய மக்கள் பகை கொள்கையாகும். வரைவு நிலையிலேயே இது முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

தமிழ்த் தேசப் பொதுவு டைமைக் கட்சி இந்திய அரசின் இவ்வரைவைக் கைவிடக் கோரி 24.02.2012 அன்று கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு உழவர் அமைப்புகள் நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்ட சமூக அமைப்புகளும் இயக்கங்களும் எதிர்ப்புக் கடிதங்களை அனுப்ப வேண்டும் .

அது மட்டும் போதாது. நீர் வளத்தை முற்றிலும் பன்னாட்டுக் குழுமங்கள் கைகளுக்குக் கைமாற்றி விடும் இந்திய அரசின் தேசிய நீர் கொள்கை 2012 ஐ எதிர்த்து அனைத்து முனைகளிலும் மக்கள் இயக்கங்கள் போராடவேண்டும்.

Comments

1 comment

1
alagu vignesh
பொலிவியாவில் நடந்த Cochabamba water wars தான் நினைவுக்கு வருகிரது...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.