ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதலர்களுக்கு புகலிடமும் பாதுகாப்பும் தரும் கிராமம் எஸ்.பட்டி.  இளவரசனை ஜாதி வெறி பலி கொண்ட அதே தர்மபுரியில்தான் இந்த கிராமமும் இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பட்டிகள் உருவாக வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆச்சரியமான காதல் கிராமம் ஒன்று இருக்கிறது. 1500 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் ஏராளமானவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதைவிட அதிசயம் என்னவென்றால், பல்வேறு பகுதிகளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 200 ஜோடிகளின் உண்மைக் காதலை உணர்ந்து, அந்த கிராமத்தில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த அதிசய காதல் கிராமத்தின் பெயர் எஸ்.பட்டி. தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காதல் திருமணங்களுக்கும், கலப்புத் திருமணங்களுக்கும் அடையாள சின்னமாக விளங்கி வரும் எஸ்.பட்டியில் இதுவரை நூற்றுக்கணக்கான காதல் திருமணங்கள் நடந்துள்ளன. அந்த காதல் தம்பதிகள் சமூக இடர்பாடுகளை எல்லாம் கடந்து வெற்றிகரமாக வாழ்ந்து, காதலை ஜெயிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் இதில், ‘ஹைலைட்’!

“காதல் ஒரு அற்புதமான உணர்வு. சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளையும், வேறுபாடுகளையும் கடந்து மனிதர்களை ஒருங்கிணைக்கும் சக்தி காதலுக்கு உண்டு” என்கிறார்கள், இந்த கிராமத்தில் வாழும் காதல் தம்பதிகள்.

“பொதுவுடைமை கொள்கைகளின்மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக உருவான சுயமரியாதை உணர்வு, கல்வியறிவின் மூலம் கிடைத்த சிந்தனை மாற்றம் ஆகியவைகளே நாங்கள் காதல் திருமணங்களை ஆதரிக்க மூலகாரணமாக இருக்கின்றன” என்கிறார்கள், இந்த கிராமத்து படித்த இளைஞர்கள்.

எஸ்.பட்டியில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்கள். பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிபவர்களும் அதிக அளவில் இருக்கிறார்கள். கணிசமானவர்கள் விவசாய பணிகளையும் செய்து வருகிறார்கள்.

இந்த கிராமத்து முதல் காதல் கலப்பு திருமண இணையர்: ஆண்டி-துளசியம்மாள். 85 வயதான ஆண்டியும், துளசியம்மாளும், இப்போது கொள்ளு பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

பெரியவர் ஆண்டி சொல்கிறார்:  “சுதந்திரத்திற்கு முன்பு இந்தப் பகுதியில் வசித்தவர்களுக்கு சிறிதும் படிப்பறிவு  இல்லை. ஆண்கள் தலைமுடியைகூட வெட்டாமல் ஜடையுடன் சுற்றி திரிவது வழக்கம். சுதந்திரம் கிடைத்த ஆண்டில் இந்த ஊரில் தொடங்கப்பட்ட பள்ளிக்கு ஆரூரை சேர்ந்த அப்பாத்துரை என்பவர் ஆசிரியராக வந்தார். சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருந்த அந்த காலகட்டத்தில் ‘சுயமரியாதையுடன் வாழ  வேண்டும். அடிமை மனப்பான்மை இருக்கக் கூடாது’ என்ற சிந்தனையை இந்த கிராம மக்களிடையே ஏற்படுத்தினார். அதனால் தலைமுடியை வெட்டிக் கொள்ளும் பழக்கம் இளைஞர்களிடம் ஏற்பட்டது. அப்பாத்துரைதான். அந்த காலத்தில் எங்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்” என்றார்.

உங்களுக்கும் துளசியம்மாளுக்கும் எப்படி காதல் அரும்பியது?

“துளசியம்மாள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடைய வீட்டில் நான் விவசாய வேலைகளை செய்து வந்தேன். அப்போது எனக்கும், துளசியம்மாளுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 1955ஆம் ஆண்டு துளசியம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி என்னை திருமணம் செய்து கொண்டார். நாங்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டபோதும், என்னுடைய குணம் குறித்து தெரிந்து இருந்ததால் எனது மாமனார் குடும்பத்தினர் எங்களுக்கு எந்தவித இடைஞ்சலும் செய்யவில்லை.

அந்த காலத்தில் நான், எனது மனைவியுடன் தெருக்களில் நடந்து சென்றால், ‘காதல் திருமணம் செய்தவர்கள்’ என்று கூறி கைத்தட்டி வரவேற்பார்கள்.

60 ஆண்டுகளாக மனைவியின் குடும்பத்தினருடன் சுமூக உறவு வைத்திருக்கிறேன்” என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார், அந்த கிராமத்தின் முதல் காதலரான பெரியவர் ஆண்டி.

எஸ்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் முத்து 20 ஆண்டுகளுக்கு முன்பு, அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வனிதாவை காதலித்து கலப்பு திருமணம் செய்தவர்.

வனிதா சொல்கிறார்: “எங்கள் காதலுக்கு மிகப் பெரிய எதிர்ப்பு இருந்தது. இருந்தபோதிலும் இந்த கிராமத்தினர் அளித்த ஆதரவே எங்கள் வாழ்க்கை நிலைக்கக் காரணம். எங்கள் மூத்த மகளுக்கு தற்போது திருமணமாகிவிட்டது. எவ்வளவோ காலம் கடந்துவிட்டது. ஆனாலும் கலப்பு திருமணம் செய்துகொண்ட ஒரே காரணத்தால எனது அம்மா இறந்த போது இறுதி சடங்கில் என்னை அனுமதிக்கவில்லை. காதல் திருமணம் செய்ததால் எனக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு அது...” என்றார்.

பி.காம். படிக்கும் இவர்களின் மகள் முத்தமிழ், “எனது அம்மாவின் குடும்பத்தினர், காதல் திருமணத்தை ஏற்காவிட்டாலும், எனது பெற்றோர் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்” என்று மகிழ்ந்தார்.

எஸ்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்ட தாரியான ரவியை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த சுகன்யா.  தங்களுக்குள் காதல் அரும்பிய கதையை சுகன்யா விளக்குகிறார்...

“காஞ்சிபுரம் கல்லூரியில் படித்தபோது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. பெரும் எதிர்ப்புகளை மீறி எங்கள் திருமணம் நடந்தது. எதிர்ப்புகளை சமாளித்தபோது சிரமங்கள் ஏற்பட்டாலும், நாம் விரும்பிய வாழ்க்கை நமக்குக் கிடைத்திருக்கிறது என்பதை நினைக்கும்போது இன்னல்கள் பெரிதாக தெரிவதில்லை. எனது பெற்றோர் வீட்டில் இருந்ததைவிட இங்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த கருணாகரனின் மனைவி மைதிலி கூறுகையில்,“7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். காதல் வாழ்க்கையில் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்வது மிகவும் அவசியம். சின்னச் சின்ன விஷயங்களிலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்தான் காதல் கடைசி வரை நிலைக்கும்” என்று தத்துவார்த்தமாக சொன்னார்.

இதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரனை காதலித்து திருமணம் செய்த அழகம்மாள், “காதலித்து திருமணம் செய்து கொண்டால் மட்டும் போதாது, எதிர்ப்புகளை சமாளித்து நாலு பேர் மதிக்கும் அளவிற்கு வாழ பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்வது மிக அவசியம்” என்று அனுபவரீதியான கருத்தை எடுத்து வைத்தார்.

எஸ்.பட்டியைச் சேர்ந்த தூயமல்லி என்ற பெண்ணை, பரமகுடியைச் சேர்ந்த தேவராஜன் என்ற ஆசிரியர் 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்புத் திருமணம் செய்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் இறந்து விட்டார்கள். அவர்களின் மகள்களான தமிழரசி, சுடரொளி இருவரும் எஸ்.பட்டியிலேயே வசித்து வருகிறார்கள். தமிழரசி கல்லூரியிலும், சுடரொளி 10ஆம் வகுப்பும் படிக்கிறார்கள்.

சுடரொளி சொல்கிறார்... “எனது தந்தையும், தாயும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள். அவர்களது முற்போக்கு சிந்தனை எங்களை பெருமைப்பட வைக்கிறது. உண்மையான காதல் வேற்றுமைகளை அகற்றுகிறது. பெற்றோர் இறந்த நிலையிலும், இந்த கிராமத்தினர் என்னையும், எனது அக்காவையும் தங்கள் குழந்தைகள் போல் பாவித்து எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள்” என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

தனியார் கல்லூரி ஆசிரியர் நெபுகாத் நேச்சர் உண்மைக் காதலர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது பற்றி நம்மிடம் பேசினார். “1500 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் 60 ஆண்டுகளாக தொடர்ந்து காதல் மற்றும் கலப்புத் திருமணங்கள் நடந்து வருகின்றன. கம்யூனிச கொள்கைகள் இந்த கிராம மக்களிடையே வேரூன்றி இருப்பதே இதற்கு முக்கிய காரணம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்களை வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த ஆண்கள் காதல் திருமணம் செய்து இருக்கிறார்கள்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்யும் பலர் அடைக்கலம் தேடி இந்த கிராமத்திற்கு வருகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து, காதல் திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு அடைக்கலம் தந்து பாதுகாப்பு அளிக்கிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்துவிதமான உதவிகளை செய்கிறோம். அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு சமாளிக்கிறோம். இந்த கிராமத்திற்கு அடைக்கலம் தேடி வந்தவர்களில் இதுவரை 200 காதல் இணையர்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறோம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மைக் காதலுக்கு மரியாதை செய்து வருகிறோம்” என்றார்.

நன்றி: ‘தினத்தந்தி’ ஞாயிறு மலர், 5.7.2015

Comments

1 comment

1
raj
is it shelter of kidnobed girls ? kidnaping inthe name of kathal(intercourse).

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.